26. திருப்புகழ் 24.திருமண்ணிப்படிக்கரை
பா. ஜம்புலிங்கம். (Own work) CC BY-SA 4. creative commons via wikimedia commons.
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த தலம் திருமண்ணிப்படிக்கரை.
தற்போது இது இலுப்பைப்பட்டு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. வைத்தீஶ்வரன்கோயிலுக்கு அருகிலுள்ளது. தலமரம் இலுப்பை.
ஸ்வாமி பெயர் நீலகண்டேஶ்வரர், படிக்கரை நாதர். அம்பாள் பெயர் அமிர்தகரவல்லி, மங்கள நாயகி. இங்கு பாண்டவர்கள் வனவாசத்தின் போது வந்து தங்கினர். பாண்டவர்கள் ஒவ்வொருவரும் ஒரு லிங்கம் ஸ்தாபித்து வழிபட்டனர். அந்த ஐந்து லிங்கங்களும் உள்ளன. திரௌபதி வழிபட்ட வினாயக மூர்த்தியும் உண்டு. தலபுராணத்தில் இச்செய்திகள் வருகின்றன.
இங்கு ஸுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பதிகம் பாடியிருக்கிறார்.
முன்னவன் எங்கள்பிரான் முதற்காண்பரி தாயபிரான்
சென்னியில் எங்கள்பிரான் திருநீலமி டற்றெம்பிரான்
மன்னிய எங்கள்பிரான் மறைநான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
பன்னிய எங்கள்பிரான் பழமண்ணிப் படிக்கரையே.
இக்கோவிலின் வடக்குப் ப்ராகாரத்தில் முருகன் சன்னிதி அமைந்துள்ளது. ஓருமுகம், நான்கு கைகள். இரு தேவியருடன் நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். இங்கு வந்த நாதர் ஒரு திருப்புகழ் பாடுகிறார். ஆனால், ஏனோ அவருக்கு வயலூர் நினைவு வருகிறது!
அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
டழைத்திடப் படச் ........சிலகூறி
அரைப்பணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
தணைத்தி தழ்க்கொடுத் .........தநூராகத்
துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
குளக்க ருத்தினிற் ..........ப்ரமைகூரா
துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
துனைத் திருப்புகழ்ப் ..........பகர்வேனோ
தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
றடப்பொ ருப்பெடுத் ..........தணையாகச்
சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
றரித்த ரக்கர்பொட் ...........டெழவேபொர்
செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
செயித்த வுத்தமத் ........திருமாமன்
திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
திருப்படிக்கரைப் ...........பெருமாளே
இங்கு நம் ஸ்வாமிகள் முதல் மூன்று அடிகளில் பொதுமகளிர் காசுபறிக்கச் செய்யும் இழிவைச் சொல்கிறார்.
செருக்குமிக்க குரங்குப்படைகளின் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப்போட்டு அணைகட்டி-
கடலைக் குறுக்கே அடைத்து, அந்த அணையின் வழியாகச் சென்று, அங்கிருந்த அரக்கர்கள் பொடியாகும்படிப் போர்செய்து-
வீரம் மிக்க அம்பைச்செலுத்திப் படவைத்த வெற்றிகொண்ட மேலான அழகிய மாமனாகிய திருமாலும்-
திருமிக்க தகப்பனாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே!
முத்தமிழ்ப் பெருமாளே ! திருப்படிக்கரை த் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !
வயலூர் என்னும் தலத்தினைப்போற்றி யுரைத்து, உனைத்துதித்து திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்வேனோ !
NASA satellite photo of Rama Sethu.
தருக்கு மற்கடம்: செருக்கு மிக்க குரங்குகள். ராமருடன் வந்த குரங்குகள் சாதாரணமானவை அல்ல. அவை தேவ அம்சம் பொருந்தியவை, அதனால் துடுக்கும், மிடுக்கும் வீரமும் பலமும் மிக்கவை. இவ்வளவு சிறப்புகள் உள்ள இடத்தில் செருக்கு சேர்வதில் என்ன ஆச்சரியம்! எந்த குரங்குகள் எந்த தேவ அம்சம் பெற்றவை என்பதை வேறொரு பாடலில் கூறுகிறார்.
"திருப்புகழில் செய்ப்பதியாகிய வயலூரை வைத்துப் பாடு" என்பது முருகன் அடிகளாருக்கு அருளிய நிலையாகும். இதை விநாயகர் துதியிலேயே [பக்கரை ] சொல்லிவிட்டார். ஆனால் இத்தலத்தில் வயலூரை நினைவுகூரக் காரணம் தெரியவில்லை. அவருக்கு ஏதேனும் கனவு வந்தது போலும் என்கிறார் தணிகைமணி யவர்கள்.
ராமரைக் கம்பரும், ஆழ்வார்களும் பல அடியார்களும் வியந்து போற்றிப் பாடியிருக்கிறார்கள். ஆனால் நம் அருணகிரிநாதரின் வாக்கில் தனி விசேஷம்! மூன்று அடிகளில் சேதுபந்தனத்தையும் அரக்கர் அழிவையும் அற்புதமாக வர்ணிக்கிறார்!
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி!
naachiyaar.blogspot.in/2015
முருகன் அடியார் அவன் மாமன் மாயவனின் பெருமையைப் புகழ்ந்து பாடுவது எவ்வளவு பெருந்தன்மை மிக்க செயல்! அருணகிரிநாதரின் பக்தர்களாகிய நாம் பெருமைப்படலாம், பின்பற்றவும் செய்யலாம்!