24. திருப்புகழ். 22: சீர்காழி
PHOTO COPYRIGHT: dhanasekarangm.
அருணகிரிநாதர் தரிசித்த 21வது தலம் சீகாழி என்னும் சீர்காழி யாகும். இது ஶ்ரீ ஞானசம்பந்தப் பெருமான் அவதரித்த தலம். நமது நாதர் சம்பந்தரை முருகனாகவே கண்டு தம் வழிபடு கடவுளாகக் கொண்டவர். சம்பந்தருக்கு மேல் தெய்வமில்லை என்னும் கருத்தை உடையவர். இதை கந்தரந்தாதி 29ம் பாடலில் ஆணித்தரமாகச் சொல்கிறார்.
திகழு மலங்கற் கழல்பணி வார்சொற் படிசெய்யவோ
திகழு மலங்கற் பகவூர் செருத்தணி செப்பிவெண்பூ
திகழு மலங்கற் பருளுமென் னாவமண் சேனையுபா
திகழு மலங்கற் குரைத்தோ னலதில்லை தெய்வங்களே
திகழும் அலங்கல் கழல் பணிவார் சொற்படி செய்ய
விளங்குகின்ற மாலையை அணிந்த தனது திருவடியை வணங்குவோர் திருவாக்கின்படி நடக்க
ஓதி கழுமலம் கற்பகவூர் செருத்தணி செப்பி வெண்பூதி
வேதத்தை தேவாரமாகத் தமிழில் ஓதி அருளியவரும், தான் அவதாரம் செய்த சீர்காழியையும், தான் காத்தருளிய அமராவதி நகரையும், தான் உறையும் திருத்தணிப் பதியையும் வணங்கிப் போற்றி திரு வெண்ணீற்றினை ,
கழும் மலம் கற்பு அருளும் என்னா அமண் சேனை யுபாதி
மும்மலத்தையும் போக்கும் [மலம் கழும் ] பரம்பொருள் இதுவே என்று நம்பும் கற்புடையவை கொடுத்தருளும் என்று நினையாத சமணர் கூட்டங்களை வருத்தமான
கழு மலங்கற்கு உரைத்தோன் அலது இல்லை தெய்வங்களே
கழுவிலேற்றி கலக்கமுற்று அழியும்படி வாதிட்ட சம்பந்தப் பெருமான் [ ஆகிய குமாரக்கடவுளைத் ] தவிற பிற தெய்வங்கள் இல்லையாம்.
murugan.org.
[ திருப்புகழ் வழியில் வழிபடும் முருகன்அடியார்கள் காலையில் எழுந்ததும் திருநீறு அணியும்போது " கழுமலம், கற்பகவூர், செறுத்தணி" என்று ஓதி, பின்னர் "ஆறுமுகம், ஆறுமுகம் ஆறுமுகம்" என்று ஆறு முறை கூறி, பிறகு,
"நீறதிட்டு நினைப்பவர் புத்தியில்
நேசம் மெத்த அளித்தருள் சற்குரு
நீலம் உற்ற திருத்தணி வெற்புறை பெருமாளே "
என்ற திருப்புகழ் வரிகளை ஓதி திரு நீறு அணியவேண்டும் என்பது ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகளின் அறிவுரையாகும்.]
அருணகிரிநாதருக்கு சம்பந்தர் மீதிருந்த ஈடுபாட்டினால் இத்தலத்தில் நீண்ட நாட்கள் தங்கி 14 அருமையான பாடல்களைப் பாடினார். இவற்றில் சம்பந்தர் பற்றிய பல செய்திகளைச் சொல்கிறார்.
ஸ்வாமி ப்ரம்மபுரீஶ்வரர், தோணியப்பர், சட்டை நாதர் என வழங்கப்படுகிறார். அம்பாள் திருநிலை நாயகி, ஸ்திர சுந்தரி, பெரியநாயகி. இங்குள்ள ப்ரம்மதீர்த்தக் கரையில்தான் அம்பாள் ஸம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டியது.
சம்பந்தர் தனக்குப் பாலூட்டியது யார் என்பதைத் தன் தந்தைக்குக் காட்டுதல்! பழைய பெரியபுராணப் பதிப்பில் கண்ட படம்.
அருகாத
கார்காழில் நெஞ்சக் கவுணியர்க்குப் போதமருள்
சீர்காழி ஞானத் திரவியமே
என்று பாடுகிறார் வள்ளலார் ஶ்ரீ ராமலிங்க ஸ்வாமிகள்.
சீர்காழித் தலத்திற்கு 12 பெயர்கள் உள்ளன. ப்ரம்மபுரம், வேணுபுரம், புகலி, வெங்குரு, தோணிபுரம், பூந்தராய், சிரபுரம், புறவரம், சண்பை, சீகாழி (ஶ்ரீ காளி) கொச்சைவயம், கழுமலம் என்பவை அவை. ஒவ்வொரு பெயருக்குப் பின்னாலும் ஒரு பெரிய வரலாறே அடங்கியிருக்கிறது. சம்பந்தப் பெருமான் இப்பன்னிரு பெயர்களிலும் பதிகம் பாடியிருக்கிறார். நமது ஸ்வாமிகள் ஏழு பெயர்களை வைத்துப் பாடியிருக்கிறார்.
சிலைநுதல் கயல்விழி செஞ்சொல் வானவி
திரிபுரை பயிரவி திங்கள் சூடிய
திகழ்சடை நெடியவள் செம்பொன் மேனியள் ...... சிங்கமேறி
திரள்படை யலகைகள் பொங்கு கோடுகள்
திமிலையொ டறைபறை நின்று மோதிட
சிவனுட னடம்வரு மங்கை மாதுமை ...... தந்தவேளே
மலைதனி லொருமுநி தந்த மாதுதன்
மலரடி வருடியெ நின்று நாடொறு
மயில்பயில் குயில்கிளி வம்பி லேகடி ...... தொண்டினோனே
மழைமுகில் தவழ்தரு மண்டு கோபுர
மதிள்வயல் புடையுற விஞ்சு காழியில்
வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் ...... தம்பிரானே.
முனிவற நினதருள் தந்தென் மாலை .......... முனிந்திடாதோ
இது சீர்காழியில் முதலில் அமைந்துள்ள பாடலின் ( அலைகடல் சிலை மதன்) பின் நான்கு அடிகள்.
முருகன் உமைபாலன். "பெற்றும் உகந்தது கந்தனையே " என்று சம்பந்தரே பாடுகிறார். இங்கு முதலில் உமையம்மையைச் சொல்கிறார். அம்பாளைப் பற்றிப் பாடும்போதெல்லாம் அருணகிரி நாதரின் சொல்வீச்சு அற்புதமாக அமையும்.
சிலை நுதல் கயல்விழி செஞ்சொல் வானவி == வில்போன்ற நெற்றி, மீன் போன்ற கண்கள். செம்மையான சொல் உடைய வானவர் தேவி,
த்ரிபுரை, பயிரவி == மும்மூர்திகளுக்கும் மூத்தவள், சிவபத்னியாகிய பைரவி
திங்கள் சூடிய திகழ் சடை நெடியவள்== சந்திரனைச் சூடிய ஒளிமிக்க சடையுடைய பெரிய நாயகி
செம்பொன் மேனியள்
சிங்கமேறி == சிம்ஹ வாஹனத்தை யுடையவள்
திரள் படை அலகைகள் = = பேய்கள் கூட்டம் சூழ்ந்தவள்
பொங்கு கோடுகள் == பொங்கும் ஒலியெழுப்பும் ஊது கொம்புகள்
திமிலையொடறைபறை நின்று மோதிட == திமிலை, பறை முதலிய வாத்யங்கள் மிகுந்த ஆரவார ஒலியெழுப்ப
சிவனுடன் நடம்வரு மங்கை மாதுமை == சிவபிரானுடன் போட்டி நடம் செய்யும் மங்கை, மாது, உமாதேவியார்
தந்த வேளாகிய கந்தன், மலையில் சிவமுனிவர் தந்த மாதுவான வள்ளிக்கு, மயில் குயில் கிளி ஆகியவற்றை ஓட்டிப் பணி செய்தவன்! மேகங்களை முட்டும் கோபுரங்கள் உள்ள சீர்காழியில் கவுணியர் குலத்தில் (கௌண்டின்ய கோத்ரத்தில்)வந்த ஒப்பற்ற மைந்தனே! தேவர்கள் தம்பிரானே!
கோபம் இல்லாமல் என்மீது அருள் கொண்டு, என்னுடைய மயக்கத்தை கோபித்து நீக்கக் கூடாதா?
இந்தப் பாடலில் கவுணியன் சம்பந்தனாக வந்தது முருகனே என்பதை தெளிவாகச் சொல்கிறார்.
தம்மிடம் கோபம் கூடாது; ஆனால் தம்மிடம் உள்ள குற்றத்தை கோபித்தாவது நீக்கவேண்டும் என்பது நயமான வேண்டுகோள்! "Hate the sin, not the sinner" என்று முதிய கிறிஸ்தவ அறிஞர்கள் சொல்வார்கள்! முருகன் அடியார்களிடம் முனிய அறியாதவன் ( கோபிக்க இயலாதவன்) என்று வேறொரு இடத்தில் சொல்கிறார் நாதர்.
சீகாழி என்பது ஸ்ரீகாளி என்பதன் மருவிய பெயராகும். சிவனுடன் வாக்குவாதம் செய்து போட்டியிட்டு நடனமாடிய பாவம் தீர இங்கு வந்து தவம் செய்ததால் இப்பெயர் அமைந்தது.
ஸ்ரீ சம்பந்தர் எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றினார் என்ற செய்தியை நான்கு பாடல்களில் சொல்கிறார்.
சேனக்குரு கூடலிலன்று ஞானத்தமிழ் நூல்கள் பகர்ந்து
சேனைச் சமணோர் கழுவின் கண் மிசையேற (770)
திய்யாரக்கழு வேறிட 771
பங்க வீரியர் புறிதலை விரகினர்
மிஞ்சு பாதகர் அற நெறி பயனிலர்
பந்த மேவிய பகடிகள் கபடிகள் ..........நிலைகேடர்
பண்பிலாதவர் கொலைசெயு மனதினர்
இங்கெணாயிரர் உயரிய கழுமிசை
பஞ்ச பாதகர் முனைகெட அருளிய ..... பெருமாளே 773
கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்க 778
சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்பதை சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமணர்கள் கழுவேறவேண்டும் என்பது ஸம்பந்தர் கோரிய தண்டனையல்ல. அதை அவர் முன்னின்று நடத்தவும் இல்லை.அது சமணர்கள் தாங்களாகவே விதித்துக்கொண்ட சபதம். அதன்படி வாதில் அவர்கள் தோற்றதும், சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு தாங்களாகவே கழுவேறினார்கள்.
சேனக்குரு== சமண முனிவர்கள் 'சேனன்' என்று முடியும் பெயர்கள் தாங்கி இருந்தவர்கள்.
சம்பந்தர் பாலப்பருவத்தினர். (778) அவர் ஊருக்குள் வரும்போது "முத்தமிழாகரன்" என்ற விருது ஊதுவார்கள்.
முத்தமிழாகரனே புகழ்
தெய்வீகப்பரமா குருவேயென..... விருதூத 771
சம்பந்தர் பாடிய பாடல்கள் ஞானத்தமிழ்ப் பாடல்கள். அவை வேதக் கவிகள்.
ஞானத் தமிழ் நூல்கள் பகர்ந்து 770
வேதக் கவிதரு காந்த பால கழுமல பூந்தராய
கவுணியர் வேந்த 778
சம்பந்தர் பாடிய பாடல்கள் சமணரைக் கலக்கின.
பறிதலையரும் நின்று கலங்க விரும்பிய தமிழ் கூறும் 775.
பகவான் என்ற சொல்லுக்கு ஆறு இலக்கணங்கள் சொல்வார்கள். இந்தப் பாடலில் முருகனுடைய சலிகை முதலான பதினாறு லக்ஷணங்களைச் சொல்கிறார் நமது நாதர் ஸ்வாமிகள்! சம்பந்தர் பாண்டியனுடைய ஜுரப்பிணியைத் தீர்த்ததையும், பாண்டி நாட்டில் திருநீறு பரவச் செய்ததையும் சொல்கிறார்.
ஒரு பாடலில் (769) யார்யார் நரகத்திற்குப் போவார்கள் என்பதைச் சொல்கிறார்.
அரகரா எனாமூடர் திருவெணீறிடா மூடர்
அடிகள் பூஜியா மூடர் .......கரையேற
அறிவு நூல்கலா மூடர் நெறியிலே நிலாமூடர்
அறம் விசாரியா மூடர் .......நரகேழிற்
புரள வீழ்வர்.
யார் நரகத்தில் புகுவர் என்பதை வேறு ஒரு பாடலிலும் ( கோடை நகர்-711) சொல்லியிருக்கிறார்.
தோழமை கொண்டு சலஞ்செய் குண்டர்கள்
ஓதிய நன்றி மறந்த குண்டர்கள்
சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள் .....பெரியோரைத்
தூஷண நிந்தை பகர்ந்த குண்டர்கள்
ஈவது கண்டு தகைந்த குண்டர்கள்
சூளுறவென்ப தொழிந்த குண்டர்கள் .......தொலையாமல்
வாழனினைந்து வருந்து குண்டர்கள்
நீதியறங்கள் சிதைந்த குண்டர்கள்
மானவகந்தை மிகுந்த குண்டர்கள் ........வலையாலே
மாயையில் நின்று வருந்து குண்டர்கள்
தேவர்கள் சொம்கள் கவர்ந்த குண்டர்கள்
வாதை நமன்தன் வருந்திடுங்குழி ......விழுவாரே.
இரு பாடல்களில் யாக்கை நிலையாமையைப் பற்றிச் சொல்கிறார்.
ஊனத்தசை தோல்கள் சுமந்த காயப்பொதி மாய மிகுந்த
ஊசற்சுடு நாறு குரம்பை ...... மறைநாலும்
ஓதப்படு நாலு முகன்ற னாலுற்றிடு கோல மெழுந்து
ஓடித்தடு மாறி யுழன்று ...... தளர்வாகிக்
கூனித்தடி யோடு நடந்து ஈனப்படு கோழை மிகுந்த
கூளச்சட மீதை யுகந்து ...... புவிமீதே
கூசப்பிர மாண ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்கள்
இதிலிருந்து விடுபட முருகன் கழலிணை அருள் வேண்டும்.
அகன்று கோலக்கழலே பெற இன்று அருள்வாயே 770
எப்படிப்பட்ட உயர்ந்த வாழ்வும் முடிவில் ஒருபிடி சாம்பராகி விடும்.
தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால
தினகர னேய்ந்த மாளி ...... கையிலாரஞ்
செழுமணி சேர்ந்த பீடி கையிலிசை வாய்ந்த பாடல்
வயிரியர் சேர்ந்து பாட ...... இருபாலும்
இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை
புழுககில் சாந்து பூசி ...... யரசாகி
இனிதிறு மாந்து வாழு மிருவினை நீண்ட காய
மொருபிடி சாம்ப லாகி ...... விடலாமோ 778
இதிலிருந்து விடுபட கழுமலர் பூந்தராய கவுணியர் வேந்தன் கழலினை நாடவேணும்.
இதே கருத்தை கந்தரலங்காரப் பாடலிலும் சொல்லுகிறார்.
பொருபிடி யுங்களி றும்விளை யாடும் புனச்சிறுமான்
தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம்
இருபிடி சோறுகொண் டிட்டுண் டிருவினை யோமிறந்தால்
ஒருபிடி சாம்பருங் காணாது மாய உடம்பிதுவே.
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி வேறில்லையே.
இவை பலகாலும் சிந்தித்தற்குரிய கருத்துக்கள்.
சீர்காழியின் பல பெயர்கள்
காழியில் வருமொரு கவுணியர் மைந்த தேவர்கள் தம்பிரானே
புகலிமேவி வாழ்தேவர் பெருமாளே
காழிப்பதி மேவியுகந்த பெருமாளே
பிரமாபுர செய்காழிப்பதி வாழ் முருகா சுரர் பெருமாளே
சண்பை மாநகருறையும் ஒரறுமுக
சண்பையம்பதி மருவிய அமரர்கள் பெருமாளே
கொச்சைவாழ் முத்தமிழ்ப் பெருமாளே
கழுமல பூந்தராய கவுணியர் வேந்த தேவர் பெருமாளே
இப்படிப் பலவாறு காழிப்பதியையும் அதன் காவலனையும் போற்றிப் பரவுகிறார்.
அருணகிரி நாதர் வேண்டுவன
மோக மாமாயை கழலுமாறு
நாயேனும் விழலனாய் விடாதே நின் அருள் தாராய். 769
ப்ரபஞ்ச மாயக்கொடு நோய்கள் அகன்று
கோலக்கழலே பெற இன்று அருள்வாயே 770
நானொரு பாதகன்
மெய்யா எப்படியோர் கரை சேர்வது
செய்யா அற்புதமே பெற ஓர்பொருள் அருள்வாயே 771
கொட்டான கூனுக்கா எய்த்தேனித்
தீதத்தைக் களைவாயே 772
[ கொட்டான ==கொள் தானத்துக் காகவும்
ஊனுக்கா === இந்த உடலுக்காகவும்
எய்த்தேன் = அலைந்து இளைத்தேன்
இத்தீதத்தைக் = இத்தீமையைக் களைவாயே ]
மிடிமையுங்கெட நின் அருள் கூர்வாய் 774
பொருள் தேடி யலைந்து, வீணர்களிடம்போய், அவர்களை
இந்திரன், சந்திரன் என்று புகழ்ந்துபேசி நாணி நிற்கும் நிலை
மாறவேண்டும் 777
அடிகள் அருணகிரி நாதர் இப்படி மனமுருகி வேண்டுகிறார்!
நாம் நம் முகத்தைஎங்கே கொண்டுபோய் வைத்துக் கொள்வது!
நம் குற்றங்குறைகளை தம்மீது ஏற்றிச் சொல்வது
பெரியோர்களின் வழக்கு.
779ம் பாடலில் கந்தபுராணம் முழுவதையும் சொல்லிவிடுகிறார்!
780, 781ம் பாடல்களில் அருளை வேண்டுகிறார்.
குமுதப் பொற் பாதச்சேவையில் அருள்வாயே
அழலது கொதித்ததுவரு கடை நாளில்
அணுகினமன் எற்றமயல் கொளும் அநிலை சித்தமுற
அவசமொடணைத்தருள வரவேணும்
[நெருப்புபோல் கோபத்துடன் எமன் வரும் அக்கடைசி நாளில்,
நீ மனதுவைத்து பரவசத்துடன் என்னை அணைத்தருள வரவேணும்.]
முருகன் தனக்குத் தரிசனம் தந்து சக்ஷு தீக்ஷை அளித்ததையும் சொல்கிறார்.
ஒளிதிகழ் இசைகூரும்
தண்டை நூபுர மணுகிய இருகழல்
கண்டு நாளவ மிகையற விழியருள்
தந்த பேரருள் கனவிலும் நனவிலும் மறவேனே 773

[ இங்கு குறிப்பிட்ட பாடலின் எண்கள் தணிகைமணியவர்களின் பதிப்பில் உள்ள எண்கள்.]
No comments:
Post a Comment