25. திருப்புகழ் 23. கரியவனகர்
அருணகிரிநாதர் சீர்காழியிலிருந்து கிளம்பி அடுத்து தரிசித்த தலம் அருகிலுள்ள கரியவனகர். இது 'கொண்டல் வண்ணன் குடி' என்னும் தலமாக இருக்கலாம் என்பது தணிகைமணியவர்களின் கருத்து. இன்று இது கொண்டல் வள்ளுவகுடி என வழங்கப்படுகிறது. கொண்டல் என்பது தான் முருகன் கோவில் அமைந்திருக்கும் இடம். வள்ளுவகுடி அடுத்துள்ள கிராமம். அங்கு சிவன் கோவில் உள்ளது.
இந்த ஊரின் பெயரே விசித்ரமானது! கரியவனகர்= கரியவன் நகர்! கரியவன் = திருமால். ப்ரணவத்தின் பொருள் அறியாத ப்ரம்மனை முருகன் சிறையிட, உலகமே கலங்கியது. அப்போது திருமால் முருகனிடம் சென்று ப்ரம்மனை விடுவிக்க வேண்டினார். இதைக்குறித்து இந்த தலம் திருமால் பெயரில் 'கரியவனகர் ' என வழங்கப்படுகிறது. 'கொண்டல்' என்பதும் மேகம்- கரிய நிறம். எனவே 'கொண்டல் வண்ணன் குடி '. அருணகிரி நாதரும் இதை நினைத்துப் பாடுகிறார் போலும்:
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்குலாவும் குன்றுறை குறமகள் மணவாளா
திருந்த வேதம் தண்தமிழ்தெரிசெய்த புலவோனே
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே
விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே.
கொண்டல் முருகன் இந்தச் சுற்று வட்டாரத்தில் மிகவும் கீர்த்திபெற்ற மூர்த்தியாகும். பலருக்கு குலதெய்வமாக விளங்குபவன். ப்ரார்த்தனைத் தலமாகவும் இருக்கிறது. பழனிக்கு வேண்டிக்கொண்டவர்கள் , அங்கு போக இயலாவிட்டால், இங்குவந்து அந்த ப்ரார்தனையைச் செலுத்தலாம் என்று சிலர் நம்புகிறார்கள். அதனால் இப்பதி "கீழ்ப்பழனி " எனவும் வழங்கப்படுகிறது. இது பிற்காலத்தில் சேர்ந்த பெருமை போலும்!
கொண்டல் என்னும் பெயர்வரும் ஒருபாடல் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் தேவாரத்தில் வருகிறது. அங்கு அவர் " கொண்டல் நாட்டுக் கொண்டல் " என்று குறிப்பிடுகிறார். அவர் காலத்தில் இது அவ்வளவு பெருமை பெற்றிருந்தது போலும்!
அண்டத்து அண்டத்தின் அப்புறத்தாடும் அமுதன் ஊர்
தண்டந் தோட்டம்தம் டங்குறை தண்டலை ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ்கழிப்பாலை கடற்கரை
கொண்டல் நாட்டுக் கொண்டல் குறுக்கை நாட்டுக் குறுக்கையே.
என இங்கு கொண்டல் வைப்புத்தலமாக வருகிறது.
இங்கு வந்த நம் ஸ்வாமிகள் ஒரு திருப்புகழ் பாடுகிறார்.
அளிசுழ லளகக் காடு காட்டவும்
விழிகொடு கலவித் தீயை மூட்டவும்
அமளியில் முடியப் போது போக்கவும் ...... இளைஞோர்கள்
அவர்வச மொழுகிக் காசு கேட்கவும்
அழகிய மயிலிற் சாயல் காட்டவும்
அளவிய தெருவிற் போயு லாத்தவும் ...... அதிபார
இளமுலை மிசையிற் றூசு நீக்கவும்
முகமொடு முகம்வைத் தாசை யாக்கவும்
இருநிதி யிலரைத் தூர நீக்கவும் ...... இனிதாக
எவரையு மளவிப் போய ணாப்பவும்
நினைபவ ரளவிற் காதல் நீக்கியென்
இடரது தொலையத் தாள்கள் காட்டிநின் ...... அருள்தாராய்
நெளிபடு களமுற் றாறு போற்சுழல்
குருதியில் முழுகிப் பேய்கள் கூப்பிட
நிணமது பருகிப் பாறு காக்கைகள் ...... கழுகாட
நிரைநிரை யணியிட் டோரி யார்த்திட
அதிர்தரு சமரிற் சேனை கூட்டிய
நிசிசரர் மடியச் சாடு வேற்கொடு ...... பொரும்வீரா
களிமயில் தனில்புக் கேறு தாட்டிக
அழகிய கனகத் தாம மார்த்தொளிர்
கனகிரி புயமுத் தார மேற்றருள் ...... திருமார்பா
கரியவ னகரிற் றேவ பார்ப்பதி
யருள்சுத குறநற் பாவை தாட்பணி
கருணைய தமிழிற் பாடல் கேட்டருள் ...... பெருமாளே.
[ பாடல் கௌமாரம்.காமிலிருந்து . அவர்களுக்கு நன்றி.]
முதல் நான்கு அடிகளில் பொதுமகளீர் இளைஞர்களை எப்படி மயக்கி காசு பறிக்கிறார்கள் என்பதைச் சொல்கிறார்.
பின்வரும் அடிகளில் அசுரர்களோடு நிகழ்ந்த போரின் போது நடந்த போர்க்கள நிகழ்ச்சிகள் வருகின்றன. பெருத்தசேனகளைக் கூட்டிவந்த அசுரர்களை வேல்கொண்டு ஸம்ஹாரம் செய்தான் முருகன். அங்கு ஓடிய ரத்த ஆறும் நிணமும் பேய்களுக்கும், கழுகுகளுக்கும் பருந்துகளுக்கும் காக்கைகளுக்கும் நரிக் கூட்டங்களுக்கும் களிப்பூட்டின. பலவான் முருகன் ஏறிய மயிலும் செருக்குடையதானது! பொன்மேரு போன்ற புயத்தில் பொன்மாலையும் முத்துமாலையும் அணிந்து முருகன் விளங்குகிறான்!
இத்தகைய முருகன், பார்வதி அருளியவன் கரியவனகரிலிருந்து நமக்கு அருள் புரியவேணும்! நமது இடர்கள் தொலைய அவன் தாள்கள் தரவேணும்!
இடரது தொலையத் தாள்கள் காட்டி நின் அருள்தாராய்!
நாம் தமிழில் பாடுவதை அவன் கருணையுடன் கேட்பான் !
www.bashaa.net
All Kondal photos are taken by us. Devotees may use them freely.
Very good posting regarding KOndal Murugan Temple
ReplyDelete