23. திருப்புகழ் -21. மயேந்திரப்பள்ளி
FROM:naavaapalanigotrust.com.
அருணகிரிநாதர் தரிசித்த அடுத்த -20வது- தலம் மயேந்திரப்பள்ளி என்னும் மஹேந்திரப்பள்ளி. இந்த்ரன் பூஜித்ததனால் இந்தப்பெயர் வந்தது.
ஸ்வாமி பெயர் சோமசுந்தரர் என்னும் திருமேனி அழகர். அம்பாள் பெயர் வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை. இங்கு ஸுப்ரஹ்மண்யர் ஒருமுகம், நான்கு கைகளுடன், வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.
திருஞானசம்பந்தர் பாடிய தலம். அவர் பதிகத்தில் இத்தலத்தின் செழுமையையும் வளமையையும் பலவாறு புகழ்ந்திருக்கிறார். இன்று இதை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!
திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை அடியிணை பணிமினே.
கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் திருந்தடி பணிமினே.
நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.
சந்திரன் கதிரவன் தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தவெம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந் துய்மினே.
வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம்பந்தன் சொல்
நம்பரம் இதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.
பூஜைக்கு கைகளில் மலர்களை ஏந்திவருவது போல, கடல் அலைகள் முத்துக்களைக் கரையில் கொண்டு சேர்க்கின்றனவாம்! [நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் சித்திரப் புணரி சேர்த்திட] சூரிய சந்திரனும், ப்ரம்மாவும் இந்த்ரனும் வழிபட்ட இத்தலத்தில் வேத மந்த்ர ஒலி மிகுந்திருந்ததாம்! மேகத்தைத் தொடும் கோபுரங்களும் எழிலார்ந்த மாளிகைகளும் தாமரை மலர்ந்திருந்த குளங்களும் வண்டுசூழும் பூந்தோட்டங்களும் இருந்தனவாம்! இதை இன்று கற்பனைதான் செய்து பார்க்கவேண்டும்!
எத்தனை அழகான நந்தி தேவர்!
இத்தலத்தில் நம் ஸ்வாமிகள் ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார்.
வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல
வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன்
கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர்
கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ
அண்டரு டன்தவ சேந்து மாதவர்
புண்டரி கன்திரு பாங்கர் கோவென
அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை
அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா
செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
யென்பணி யன்கன சாம்பல் பூசிய
செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகோனே
திங்கள்மு கந்தன சாந்து மார்பின
ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.
முதல் நான்கு அடிகளில் பொது மகளிரின் வஞ்சனைச் செயல்களை விளக்கி, அதில் விழலாகாது என எச்சரிக்கிறார். இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேணும்.
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் பொதுமகளிரை நாடும் வழக்கம் மிகப் பரவலாகவே இருந்தது. இதைச் சங்க நூல்களில் மிகத்தெளிவாகப் பார்க்கலாம். இதை எந்தச் சங்க இலக்கியமும் கண்டித்ததாகத் தெரியவில்லை. திருக்குறள் போன்ற நீதி நூல்களில்தான் இது கண்டிக்கப்படுகிறது. அருணகிரிநாதர் இதைப் பலபாடல்களில் பலவாறு கண்டிக்கிறார். முதலில் பார்த்தால் பெண்களின் வர்ணனை போலிருக்கும் , ஆனால் அதை இகழ்ந்து பேசுவது பின்னால் புரியும். அருவருப்பு உணர்ச்சியே மிகும்.
பொதுவாக, ஆண்-பெண் கவர்ச்சியின் மேல்தான் உலகமே இயங்குகிறது. [பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ - திருச்சாழல், மாணிக்கவாசகர்.]பெரியவர்கள் அதைக் கண்டித்துப் பேசுவார்கள்- ஆனால் அவர்கள் கண்டிக்கும் முறை வித்தியாசப்படும். ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்:
தருணஸ்தாவத் தருணீ ஸக்த:
வாலிபர்களுக்கு பருவப்பெண்களிடம் கவர்ச்சி உண்டாகிறது
நாரீ ஸ்தனபர நாபீ தேஶம்
மாகா த்ருஷ்ட்வா மோஹாவேஶம்.
ஏ தன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்
பெண்களின் ஸ்தனங்களையும் நாபிப் பிரதேசத்தையும் பார்த்து, மதிமயங்கி ஆவேசத்தை அடையாதே. இதெல்லாம் மாமிசம்., கொழுப்பு ஆகியவற்றின் வேறுபட்ட வடிவங்களே. இதை அடிக்கடி மனதில் நினைத்துப் பார்.
அருணகிரிநாதர் இதையே நமக்கு அடிக்கடி நினைவூட்டுகிறார்.."மாம்ஸ வஸாதி விகாரம் " என்பதை பலவாறு விளக்குகிறார். குறிப்பாக,அன்றையதமிழ் நாட்டினருக்கு இந்த எச்சரிக்கை அவசியமாக இருந்தது,
சமீப காலத்தில் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் " காமினி- காஞ்சனம்" ஆகியவையே மாயையின் உருவம் என எப்போதும் எச்சரித்து வந்தார்.
பாடலின் பின் நான்கு அடிகளில் முருகனின் பெருமையை விளக்குகிறார்.
தேவர்கள், தபஸ்விகள், ப்ரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் (சூராதி அஸுரர்களால் ) வருந்த, அவர்களை அஞ்சாதீர்கள் எனும்படிச் சென்று
மிக்க வீரத்துடன், அசுரர்கள் உடல் ஒடுங்கி மாளும்படியும், கடல்கள் வறண்டுபோகவும், எட்டு மலைகளும் தூளாகும்படியும், யமனும் பாசக்கயிற்றை வியப்புடன் அங்கு வீசவும், வேலாயுதத்தைச் செலுத்தியவனே!
சடையில் பூச்செண்டுடன் பாம்பு, கங்கை, சந்திரன், எலும்பு ஆகியவற்றை அணிந்தவன், பெருமை மிகுந்த திருநீற்றைப் பூசியுள்ள சிவந்த தேகத்தினன், ஆகிய சிவனது குமாரனே ! சிவந்த நிறமுடையவனே! வேலனே !முருகோனே!
சந்திரன் போன்ற திருமுகத்தையும், சந்தனம் பூசிய மார்பையும் உடையவளும், என் உள்ளத்தில் வாழ்பவளுமான வள்ளியுடன் மனம் மகிழ்ந்து மயேந்திரப்பள்ளியில் வீற்றிருக்கும் பெருமாளே !
பெண்கள் மயலில் உழலாமல் இருக்கவேண்டும்.
நமது புராணங்களில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு அஸுரனை மாய்க்க ஒவ்வொரு தெய்வம் அவதாரமெடுத்ததாக வரும். அப்போது அந்தந்த தெய்வங்களையே பெரிதாகச் சொல்வார்கள். ஏனெனில், அஸுரர்களும் கடினமான தவங்களைச் செய்தே தெய்வங்களிடமிருந்தே வரம் பெற்றவர்கள். வரம் கொடுத்த தெய்வமே அவர்களைத் தண்டிக்க முடியாது, அதனால் வேறு உருவில்தான் (வேறு தெய்வமாகத்தான்) தண்டிக்க வேண்டும். அப்படி நேரும்போது எல்லாதெய்வங்களும் ஒத்துழைப்பதாகவே வரும்.
இங்கு ப்ரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் அஸுரர்களால் துன்பப்பட்டார்கள், முருகன் வேல் எய்து அஸுரர்களை மாய்த்தான் என்பதால், ப்ரம்மா, விஷ்ணுவுக்கு குறைவு நேர்ந்ததாக நினைக்கக் கூடாது.
ஸுப்ரஹ்மண்யரின் அவதாரம் சூர ஸம்ஹாரத்திற்காக நிகழ்ந்தது. இதை அருணகிரிநாதரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:
வெங்காள கண்டர்கைச் சூலமும் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமும் சூரன் குலங்கல்லி
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீஜயித் தருளெனத் தேவருடன்
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே
தனி ஆண்மைகொண்ட நெடுவேல்
[வேல் விருத்தம்]
இங்கே வார்தைகளைக் கவனிக்க வேண்டும்.
சிவன் கைச்சூலம் வெல்லாது.
திருமாயன் வெற்றிபெரும் சுடர் ஆழி = பெருமை மிகுந்த விஷ்ணுவின் ஆயுதமாகிய என்றும் வெற்றியை அடையும் ஒளிபொருந்திய சக்கரம்!
இங்கு விஷ்ணுவையும் அவர் சக்ராயுதத்தையும் எப்படிப் போற்றிச் சொல்லியிருக்கிறார்! ஆனால் அதுவும் சூரனை வெல்லாது!
இந்த்ரனுடைய வஜ்ராயுதமும் வெல்லாது!
அதனால், சூர ஸம்ஹாரத்திற்கென்றே வந்தவர் ஸுப்ரஹ்மண்யர்! இது நமது அறிவுக்கு எட்டாத சூக்ஷ்மம். இவர்தான் தேவஸேனாபதி என்ற பட்டத்தைப் பெற்றவர் ! அதனால்தான் கீதையில் ஸ்ரீ பகவான் ஸேனாதிபதிகளுக்குள் நான் ஸ்கந்தன் [ ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த: 10.24 ]என்று சொல்கிறார்!
ஒரே பரம்பொருள்தான் நமது நன்மைக்காக இத்தனை வடிவங்களையும் தாங்கி வருகிறது என்று உணர்பவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை!

இந்தத் தலத்துடன் அருணகிரி நாதரின் யாத்திரையில் ஒரு கட்டம் நிறைவுபெறுகிறது, இங்கிருந்து அவர் சீர்காழிக்கு வருகிறார். அதுமுதல் அடுத்த யாத்திரை தொடங்குகிறது.
No comments:
Post a Comment