Sunday, 4 June 2017

92.திருப்புகழ் - 86. ராஜபுரம் [ராசீபுரம்]


92.திருப்புகழ் - 86. ராஜபுரம் [ராசீபுரம்]




அருணகிரிநாதர்  சேலத்திலிருந்து  ராஜபுரம் என்னும் தலத்திற்கு வருகிறார். 86வது தலம். இது  இன்று ராசீபுரமாகிவிட்டது! இங்குள்ள கோவில் பற்றிய தகவல்  எதுவும் கிடைக்கவில்லை. இங்கு ஸ்வாமி ஆறு முகங்களுடன் இரு தேவிமார் சமேதராக இருக்கிறார் என தணிகைமணியவர்கள் எழுதியிருக்கிறார். ஒரு படமும் கிடைக்கவில்லை.


ராசீபுரம் சமீபகாலங்களில்  ஆர்.கே. நாராயண், ஆர்.கே.லக்ஷ்மண் அவர்களால்
உலகில் பலரும் கேள்விப்பட்ட ஊராகியது. மைசூரிலும் (சென்னையிலும்) மும்பையிலும் வசித்தாலும், புகழ் சொந்த மண்ணுக்கே சேரும்!






இங்கு ஒரு திருப்புகழ் பாடல் இருக்கிறது.


சங்கு வார்முடி பொற்கழல் 
பொங்கு சாமரை கத்திகை
தண்டு மாகரி பெற்றவன்            வெகுகோடிச்

சந்த பாஷைகள் கற்றவன்
மந்த்ர வாதிச துர்க்கவி
சண்ட மாருத மற்றுள                   கவிராஜப்

பங்கி பாலச ரஸ்வதி
சங்க நூல்கள் விதித்தப்ர
பந்த போத முரைத்திடு                 புலவோன்யான்

பண்டை மூவெழுவர்க்கெதிர்
கண்ட நீயுமெ    னச்சில
பஞ்ச பாதகரைப் புகழ்                     செயலாமோ ;

வெங்கை யானை வனத்திடை
துங்க   மாமுத     லைக்குவெ
ருண்டு மூலமெ   னக்கரு                  டனிலேறி

விண்ப ராவஅ டுக்கிய
மண்ப ராவஅ  தற்குவி
தம்ப  ராவஅ டுப்பவன்                        மருகோனே

கொங்க ணாதித ரப்பெறு
கொங்கி நூடுசு கித்திடு 
கொங்கின் வீரக  ணப்ரிய                குமராபொற்

கொங்கு லாவுகு றக்கொடி
கொங்கை யேதழு  விச்செறி
கொங்கு ராஜபு ரத்துறை                   பெருமாளே

பஞ்ச  பாதகரைப் புகழ் செயலாமோ !


தன்னுடைய விருதை எடுத்து ஓதும்  சங்கம் என்ன,நீண்ட கிரீடம் என்ன, பொன்னாலான  வீரக் கழல் என்ன,மேலெழுந்து விளங்கும் சாமரங்கள் என்ன,விருதுக்கொடி என்ன, பல்லக்கு என்ன,குதிரை என்ன, யானை என்ன என்று இவையெல்லாம் கொண்டவன்,


பல கோடிக்கணக்கான அழகிய பாஷைகளைக் கற்றவன்,மந்திர வாதத்தில் வல்லவன், [ஆசு, மதுரம், சித்ரம், வித்தாரம் என்னும்] நான்கு  வகைக் கவிகளிலும் வல்லவன், சண்டமாருதம் போலப் பேச வல்லவன்,  மற்றும்


'கவிராஜ பங்கி ' , 'பால சரஸ்வதி' என்னும் பட்டங்களை உடையவன். சங்க நூல்களில் சொல்லப்பட்ட பிரபந்த  அறிவுரைகளை எடுத்து ஓதவல்ல புலவன் நான் -


பழைய  [ முதல், இடை, கடை எனும் ]  மூவேழு  (3x7=21 ) வள்ளல்களுக்கு ஒப்பானவன் நீ  என்றெல்லாம் சொல்லி, ஐம்பெரும் பாதகங்களைச் செய்தவரையும் புகழ்கின்ற செயல் பொருந்துமா? [இத்தகைய செயல் ஒழியவேண்டும்,]


விரும்பத்தக்க துதிக்கையை உடைய யானையாகிய கஜேந்திரன், ஜலத்திலே  உயர்ந்த, பெரிய முதலைவாய்ப்பட்டு பயந்து, "மூலமே" எனக்கூச்சலிட்ட போது


கருடன் மீது ஏறி,  விண்ணுலகம் போற்றவும்,  அடுக்கடுக்காயுள்ள பதினான்கு உலகம் போற்றவும், அந்தந்த உலகத்துக்கு நன்மை பெருகும்படி  உதவுபவனான திருமாலின் மருகனே !


கொங்கண ரிஷியாகிய முதல்வரால் தரப்பட்ட கொங்கு நாட்டில், சுகமாயிருக்கின்ற பூந்தாதுக்கள்  உள்ள மாலை அணிந்த வீரனே ! பதினெண் கணங்களும் பிரியப்படுபவனே ! குமரனே !


அழகிய நறுமணம் வீசும் வள்ளியின் மார்பை அணைந்த பெருமாளே !கொங்கு மண்டலத்தில் உள்ள ராஜபுரத்தில் அமர்ந்த பெருமாளே !
பஞ்ச பாதகரைப் புகழலாமா?


அந்தக் காலத்தில் பெரிய புலவர்கள் எத்தனை செருக்குடனும் மிடுக்குடனும் உலவி வந்தனர் என்பது தெரிகிறது.  கல்வி கேள்விகளில் எவ்வளவு சிறந்திருந்தும், வயிறு வளர்க்க ஈனர்களையே புகழ்ந்து காலம் ஓட்டினர். இத்தகைய பிழைப்பு தனக்கு வேண்டாம் என்கிறார் அருணகிரியார்.

கொங்கண சித்தர் என்று ஒருவர் இருந்ததாகவும் , அவர் தாமிரத்தை தங்கமாக ரசவாதம் செய்து வழங்கி வந்தார் எனவும் ஒரு கதை வழங்கிவருகிறது. அவருக்கும் கொங்கு நாட்டிற்கும் சம்பந்தம் இருந்தது போலும்!


from: You Tube.




ராசீபுரத்தில் புலவர்களைப் பற்றிப் பாடியதிலும் ஒரு அதிசயப் பொருத்தம் இருக்கிறது. நம்காலத்தில்  ராசீபுரத்தைச் சேர்ந்த  ஆர்.கே. நாராயண், ஆர்.கே.லக்ஷ்மண் இருவரும் புலவராக இல்லாவிட்டாலும் இலக்கியத்துறையில் உலகமே புகழும் அளவிற்கு சாதனை புரிந்தனர்.  "திறமையான புலமையெனில் வெளி நாட்டார் அதை வணக்கஞ்செய்தல் வேண்டும் " என்ற பாரதியாரின் கோட்பாட்டுக்கு எடுத்துக்காட்டாக  இருந்தவர்கள். ஆனால் பண்டைய புலவர்கள் போன்று செருக்குற்றுத் திரியவில்லை!







Saturday, 3 June 2017

91.திருப்புகழ் -85. சேலம்


91. திருப்புகழ் - 85. சேலம்



அருணகிரிநாதர்  இப்பொழுது கொங்கு நாட்டிலுள்ள தலங்களைத் தரிசித்து வருகிறார். சோழ நாட்டில் தலங்கள் காவிரிக்கு இரு கரையிலும் அருகருகே இருந்தன. கொங்கு நாடோ மலைப்ரதேசம். கொல்லிமலை, தீர்த்தமலை, கொங்கணகிரி என்று சற்று  தூரமாகவே இருக்கின்றன. அதுவும் நாதர் காலத்தில் காட்டுப் பிரதேசமாகவும் இருந்திருக்கவேண்டும். இன்றும் அத்தகைய பகுதிகளைக் காணலாம். இத்தகைய இடங்களைப் பற்றித்  திருமுருகாற்றுப்படையில் வருகின்றது. ஆனால் முன்னேற்றம்  என்ற பெயரில்  மலைகள் மட்டமாகின்றன; காடுகள் மறைந்துவருகின்றன. எல்லா ஊர்களும் பொலிவிழந்து வருகின்றன.

கொங்குநாட்டு மலைகளில் ஒன்று- வெள்ளியங்கிரி. கோயமுத்தூர்.
Photo: tamil.nativeplanet.com. thanks.

நம் ஸ்வாமிகள் அடுத்து வந்த 85வது தலம் சேலம். இன்றைய தமிழகத்தின் பெரிய நகரங்களில் ஒன்று. இது மலையால் சூழப்பட்ட பிரதேசம். "சைலம்" என்பதன் திரிபே சேலமாக ஆயிற்று என்பார்கள். இங்கு சுகவனேஶ்வரர் ஆலயம் மிகப் பழமையானது. ப்ரம்மாவின் சாபத்தால்  முனிவர் ஒருவர் கிளி [சுகம் ] வேடமடைந்து இங்கு தவம்செய்ததால் இது சுக வனம். இங்குள்ள ஸ்வாமிக்கும் "சுகவனேஶ்வரர் " என்ற பெயர் வந்தது. இதையே சொந்த ஊராகக்  கொண்டிருப்பவர்கள்   தங்கள் குழந்தைக்கு  சுகவனம், சுகவனேஶ்வரன் என்று பெயர்வைப்பது முந்தைய வழக்கமாக இருந்தது. இத்தலத்தை சில பிரச்சினைகளுக்குப் பரிகாரமாக  ஜோதிடர்கள்  சொல்வார்கள். ஆனால் "முற்றத்து முல்லைக்கு மணமில்லை " என்றபடி, அருகிலிருப்பவர்கள் பிற தலங்களை நாடுவார்கள் !
சேலத்தில் பல மாரியம்மன் கோவில்களும் பிரசித்தமானவை.

அருணகிரிநாதரின் திருப்புகழ் ஒன்று இத்தலத்துக்கு உரியதாக இருக்கிறது.


பரிவுறு நாரற் றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற்                  றதனாலே

பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல்தனி யோசைத்                தரலாலே

மருவியல் மாதுக்  கிருகயல்  சோரத்
தனிமிக வாடித்                               தளராதே

மனமுற வாழத் திருமணி மார்பத்
தருள்முரு   காவுற்                         றணைவாயே;

கிரிதனில் வேல்விட் டிருதொளை யாகத்
தொடுகுமரா முத்                            தமிழோனே

கிளரொளி நாதர்க்  கொருமக நாகித்
திருவளர் சேலத்                             தமர்வோனே

பொருகிரி சூரக் கிளையது மாளத்
தனிமயி லேறித்                               திரிவோனே

புகர்முக வேழக் கணபதி யாருக்
கிளையவி  நோதப்                          பெருமாளே.

அருள் முருகா உற்றணைவாயே !

இது அகத்துறையில்  [ மதுர, நாயக-நாயகி பாவத்தில் ] அமைந்த பாடல். இது பக்தியின் பெருநிலையாகும். மிகப் பெரியவர்களுக்கே இன்னிலை கூடும்.



அன்பினால் உற்ற இரக்கம் சற்றும் இல்லாமல்,  நிலவு நெருப்பை வீசுவதாலும்,  பொதிய மலையிலிருந்து வீசும் தென்றல் காற்று  வந்து மேலே படுவதாலும், 


குளிர்ந்த சோலையில் குயில் கூவுவதாலும், புல்லாங்குழல் ஒப்பற்ற இன்னிசையைத் தருவதாலும்,


தனிமையில் வாடும் இந்தப்பெண் தனது  மீன்போன்ற இரு கண்களும் சோர்வுறும்படி தளர்ந்து  வாட்டமுறாமல்,


மனம் ஒருமைப்பட்டு நிம்மதியாக வாழும்  பொருட்டு , உனது அழகிய ரத்தின மாலையணிந்த மார்பிடத்தே , அருள்வடிவாகிய முருகா நீவந்து  அணைந்தருளுவாயாக.


க்ரௌஞ்ச மலைமீது வேலாயுதத்தைச் செலுத்தி, அது பெரும் தொளைபட்டு அழியும்படிச்  செய்த  குமரனே ! முத்தமிழ்ப் பெருமாளே !


பேரொளிச் சொரூபனாம்  தேவனாகிய  சிவபெருமானுக்கு ஒப்பற்ற பிள்ளையாகி,  லக்ஷ்மீகரம் பெருகி ஓங்கும் சேலம் என்னும் பதியில் வீற்றிருப்பவனே !


போருக்கு எழுந்த எழுகிரியும் சூரனும்  அவன் சுற்றத்தினரும் இறந்துபட, 
ஒப்பற்ற அந்தச் சூரனாம் மயில்மீது ஏறி  உலகை வலம் வந்தவனே !


புள்ளியை உடைய முகத்தைக் கொண்ட யானையின்  திருமுகத்தைக் கொண்ட கணபதிப் பெருமாளுக்கு இளைய பெருமாளே ! அற்புதப் பெருமாளே !


அணைத்தருள்வாயாக.

சிறிய பாடல்தான் ஆனால் அற்புதமான பாடல்.
திருமணத்தடை உள்ளவர்களுக்கும், புத்திரப்பேற்றுக்கும் உரிய பரிகாரத்தலமாக  சேலத்தைச்  சொல்கிறார்கள். அதற்கேற்றமாதிரி அருணகிரி நாதர் "அணைவாயே " என்று அகத்துறையில் பாடியிருக்கிறார். காரிய சித்திக்காக விக்ன விநாயக மூர்த்தியையும் நினைவுகூறுகிறார் ! 

"அத்துயரதுகொடு சுப்பிரமணிபடும் அப்புனமதனிடை யிபமாகி
அக்குறமகளுடன் அச்சிறு முருகனை அக்கண மணம் " அருளிய பெருமானல்லவா!


படங்கள்: சேலம் தேவா, நன்றி.


Friday, 2 June 2017

90. திருப்புகழ் - 84.கொங்கணகிரி


90.திருப்புகழ் - 84.கொங்கணகிரி





இத்தலம்  கோயமுத்தூர் மாவட்டம் சோமானூருக்கு அருகில் உள்ளது.  இப்போது இதை வட்டமலை என்கிறார்கள்.  இது அருணகிரிநாதர் தரிசித்த 84வது தலம்.

இங்கு ஒரு மிக அருமையான  திருப்புகழ் பாடியிருக்கிறார்.



ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம் அகற்றிவளர்
   அந்திபகல் அற்றநினை                 வருள்வாயே


அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தி  உனை
   அன்பொடுது திக்கமனம்              அருள்வாயே


தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற
   சந்திரவெ ளிக்கு வழி                 அருள்வாயே


தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர்
   சம்ப்ரமவி தத்துடனெ                அருள்வாயே


மங்கையர்சு கத்தைவெகு இங்கிதம்என்  உற்றமனம்
  உன்றனை நினைத்தமைய                    அருள்வாயே


மண்டலிகா ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி
   வந்தணைய புத்தியினை                        அருள்வாயே


கொங்கில் உயிர் பெற்றுவளர் தென்கரையில்   அப்பர் அருள்
    கொண்டு உடல் உற்றபொருள்                         அருள்வாயே


குஞ்சரமு கற்கிளைய கந்தன்  என வெற்றிபெறு
   கொங்கணகி ரிக்குள்வளர்                               பெருமாளே.




ஐந்துகரங்களை உடைய வினாயக மூர்த்தியை ஒத்த மனத்தையும், ஐம்புலன்களையும் நீக்கி  [விலக்கி, அடக்கி], அதன் பலனாகக் கிடைக்கும் இரவு பகல் அற்ற நிலையை  அருள்புரிவாயாக.


இந்தப்பூமியில் பெருகி வளரும் செந்தமிழால்  உன்னை அன்புடன் போற்றித் துதிக்க விரும்பும் மன நிலையை  அருள்புரிவாயாக.


நிலைத்துள்ளதான தவநிலை உணர்ச்சியைத்தந்து, அடிமையாகிய நான் முக்தி நிலையைப் பெறவேண்டி, சந்திரவெளியைக் காணும்படியான வழியைக்காட்டி அருள்புரிவாயாக.


பல்லக்கு, பெருமை, கௌரவம், இவற்றை எட்டுத்திக்கில்  உள்ளவர்களும் மதிக்கும்படியாக , சிறப்பு ஓங்கும் வகையில் அருள்புரிவாயாக.


பெண்சுகமே  இனிது   என்று  நினைக்கும் என் மனம் , உன்னை நினைத்து நிலையாய் அவ்வண்ணமே இருக்க  அருள்புரிவாயாக.


நாட்டு அதிகாரிகள் இரவும் பகலும் வர, அவர்களுக்கு பதுகாப்பு தருவதாக வேண்டி, அவர்கள் என்னை வந்து நெருங்க, அவர்களுக்கு வேண்டிய சுபரக்ஷை தரவல்ல புத்தியை எனக்கு அருள்புரிவாயாக.


கொங்கு தேசத்தில் உயிர் மீளப்பெற்று, உடல் வளரப்பெற்று, தென்கரை  நாட்டுத்  திருப்புக்கொளியூர்- அவிநாசி அப்பராம் சிவபிரானது திருவருளைப்பெற்று,  முதலையுண்ட பாலனுடைய உடலில் உயிர் பொருந்திவந்த   ரகசிய  நிகழ்ச்சிப்பொருள்களை எனக்கு அருள்புரிவாயாக.


யானைமுகப் பெருமான் கணபதிக்கு இளையவனாம் கந்தவேள் என ஜயப்புகழ் பெற்ற பெருமாளே !
கொங்கணகிரியில் அமர்ந்த பெருமாளே !





எத்தனை அருமையான விஷயங்களை எத்தனை அருமையாகச் சொல்கிறார்! 

ஐங்கரனை ஒத்த மனம் அகலவேண்டும் என்கிறார் ! இது ஆச்சரியமாகத் தோன்றும். ஐந்துகரமுடைய பிள்ளையார், தான் இருந்த இடத்திலேயே  [தந்தையை வலம் வந்ததால் ] அகில அண்டங்களையும் அந்த க்ஷணத்திலேயே  சுற்றிவந்தவரானாரோ, அதுபோல நம் மனமும் இருந்த இடத்திலேயே அகில புவனத்திலும் சஞ்சரிக்க வல்லது. மனதிற்கு அத்தகைய வேகம் இருக்கிறது.  அதனால் அந்த மனம்  [ஐம்புலன்கள் ] அடங்கவேண்டும் ! மனதை அடக்காவிட்டால் சன்மார்கம் தெரியாது!

இந்தக் கருத்தை வேறு இடங்களிலும் சொல்கிறார்.

" திகிரி  வருமொரு செலவினில் எழுபது
செலவு வரு  மனம் "
[ குயவனது சக்கரம் ஒரு சுற்று சுற்றி வருவதற்குள்  என் மனம்  எழுபது சுற்று சுற்றுகிறது  ] எனவும் ( பகிர நினைவொரு );

"ஒருகால் ,திரிகையில் ஆயிரக்கோடி சுற்றோடும் திருத்துளமே " எனவும் பாடியுள்ளார் [கந்தரந்தாதி -34 ].


செந்தமிழால் பாடித்துதிக்கவேண்டும் என்று வேண்டுகிறார். சம்ஸ்கிருதமும், தமிழும் சிவபிரான் அருளியவை. " தமிழ்ச்சொலும்  வடசொலும் தாள் நிழற் சேர " என்பார்  சம்பந்தர். நான்மறை வல்ல ஞானசம்பந்தரானாலும், அவர்பாடிய தமிழ்ப்பாடல்களைப் பாடிப்  பேறு பெறுங்கள் என்பார். .

" நான்மறை நாவன்  நற்றமிழ்க்கு இன்துணை.....இசையொடுகூடிய பத்தும் வல்லார்போய்  வெந்துயர் கெடுகிட " எனவும்,

"ஞான சம்பந்தன் தமிழ்மாலை பண்ணியல்பால்  பாடிய  பத்தும் இவை வல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே "  எனவும் ,

"செந்தமிழ் பத்தும் வல்லார் திருவோடு  புகழ்மல்கு தேசினரே ", எனவும்


இவ்வாறெல்லாம் பாடுவார்.
 சம்பந்தரை குரு, தெய்வமாகக் கொண்ட அருணகிரியாரும் செந்தமிழால் போற்றுங்கள் என்கிறார்.

அக்காலத்தில் பெரும்புகழ் பெற்ற புலவர்கள் பல விருதுகளுடன் தடபுடலாக வெளியில் போவார்கள். இதை நாலாவது அடியில் சொல்கிறார்.

இரவு பகல் அற்ற நிலை, சந்திரவெளி என்பவை  சிவயோக நெறியின் சங்கேத மொழிகள். இவற்றை  யோக அனுபவம் உள்ளவர்களிடம்  கேட்டு அறியவேண்டும். வெறும் மொழியறிவோ, புத்தக அறிவோ  ஆபத்தானது, [இவை பற்றி ஸ்ரீ க்ருபானந்த வாரியார் விளக்கியிருக்கிறார்.]

அருணகிரிநாதரின்  வாழ்நாளிலேயே அவரிடம் ஆசிவேண்டி  அரசரும், அரசாங்கத்திலிருந்த அதிகாரிகளும் வந்தவண்ணமிருந்தனர் என்பது இப்பாடலிலிருந்து தெரிகிறது. ஆனால் அடக்கமாக அதற்கான புத்தியை முருகனிடம் கேட்கிறார் !

ஏழாவது அடியில் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் சரித்திரத்திலிருந்து ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறார். அவிநாசியில்  ஒரு பிராமணச் சிறுவனை  ஒர் ஏரியில் முதலை விழுங்கிவிட, சில வருஷங்களுக்குப் பிறகு  அங்கு வந்த சுந்தரர், விஷயம் அறிந்து, பதிகம்  பாடி அந்த முதலை அந்தப்பிள்ளையை  மீண்டும் தரச்சொன்னார் ! அந்த முதலையும் அப்பிள்ளையைக் கக்கியது. 
"வெங்கரா உண்ட பிள்ளையை நல்குமே " என  இந்த நிகழ்ச்சி சுந்தரரின் துதிப்பாடலில் வருகிறது. இந்த நிகழ்ச்சி எதனால் கைகூடியதோ அந்த ரகசியப்பொருளைத் தனக்கும் அருளவேண்டும் என்று கேட்கிறார், 
அருணகிரிநாதர்.

வேண்டுகோள் மயமான அருமையான பாடல். இங்கு வந்த சிலவற்றை வேண்ட நமக்கு அருகதை இல்லை. ஆனால் இந்த அருமையான பாடலைக் கற்று மகிழலாம்.


suespottedterracegarden,blogspot.in. Thanks.

89.திருப்புகழ் - 83.கனககிரி.


89.திருப்புகழ் - 83. கநகமலை


[ கனகமலை படம் கிடைக்கவில்லை. அதனால் பழநி மலைப் படம் இங்கு ]


கனகமலை  அருணகிரிநாதர் தரிசித்த 83வது தலம். கனககிரி-கனகமலை என்று குறைந்தது மூன்று இடங்களாவது இருக்கின்றன . கோயம்புத்தூருக்கு அருகேயுள்ள  கிணத்துக்கடவு, ஈரோடுக்கு அருகில் உள்ள எழுமாத்தூர், போளூருக்கு அருகில் உள்ள தேவிபுரம் என மூன்று இடங்கள். எங்கும் மலை பெரிதாக இல்லை- சிறு குன்றுதான். இதில் அருணகிரிநாதர்  பாடிய இடம் கிணத்துக்கடவு என தணிகைமணி அவர்கள் எழுதியிருக்கிறார். இங்கு அருணகிரியாரின் திருப்புகழ் ஒன்று இருக்கிறது.


அரிவையர்கள் தொடருமின்பத்
துலகுநெறி மிக மருண்டிட்
டசடனென மனது நொந்திட்                           டயராமல்

அநுதினமு முவகை மிஞ்சிச்
சுக நெறியை விழைவு கொண்டிட் 
டவ நெறியின் விழையு மொன்றைத்          தவிர்வேனோ;

பரிதிமதி நிறைய நின்ற
தெனவொளிரு முனது துங்கப்
படிவமுக மவைகள் கண்டுற்                       றகமேவும்

படர்கள் முழுவது மகன்றுட்
பரிவினொடு துதி புகன்றெற்
பதயுகள மிசை வணங்கற்                           கருள்வாயே.

செருவிலகும் அசுரர் மங்கக்
குலகிரிகள்  நடுநடுங்கச்
சிலிசிலென வலைகுலுங்கத்                      திடமான

செயமுதவு மலர் பொருங்கைத்
தலமிலகு மயில் கொளுஞ்சத்
தியை விடுதல் புரியு முன்பிற்                     குழகோனே

கருணைபொழி கிருபை முந்தப்
பரிவினொடு கவுரி கொஞ்சக்
கலகலென வருக டம்பத்                             திருமார்பா

கரிமுகவர் தமையனென்றுற்
றிடுமிளைய குமர பண்பிற்
கநககிரி யிலகு கந்தப்                                பெருமாளே

பதயுகள மிசை வணங்கற்கு அருள்வாயே







மாதர்களைத் தொடர்ந்து செல்லும் சிற்றின்பத்து உலக நெறியில் அதிக மோகம் கொண்டு, அசடன் எனப் பிறர் கூற, மனம் வேதனைப்பட்டுச் சோர்வு அடையாமல் -
தினந்தோறும் களிப்பு மிக்கு, சுகவழியிலே விருப்பம்கொண்டு நடந்து, பாவ வழியிலேயே  செல்லும் அந்த ஒரு புத்தியை  விலக்கமாட்டேனா !
சூர்யன், சந்திரன் இரண்டும் பூரண ஒளியுடன் நின்றதை ஒப்ப, விளங்குகின்ற உனது பரிசுத்தமான வடிவுள்ள திருமுகங்களைக் கண்டு,
துயர் முழுதும் நீங்கப்பெற்று,  உள்ளத்தில் அன்புடன் உன்னைத் துதித்து, ஒளிபொருந்திய உனது இரு திருவடிகளை வணங்குவதற்கு அருள்புரிவாயக!
போரில் விளங்கின அசுரர்களின் பெருமை குறைய,சிறந்த மலைகளெல்லாம் நடுநடுங்க, சிலிசிலுவென்று கடல் கலங்க,
பலமுள்ளதும், வெற்றியை உதவுவதுமான மலர்போன்ற திருக்கரத்தில் விளங்கும் கூர்மைகொண்ட சக்திவேலைப் பிரயோகிக்கும் பெருமை வாய்ந்த இளையோனே !
கருணைபொழியும் அருளே முந்துவதால் அன்புடன் பார்வதி கொஞ்சி நிற்க, கலகலவென்று தண்டை ஒலிக்க, வரும் கடம்பணியும் திருமார்பனே !
யானைமுகக் கடவுளைத் தமையனாக வாய்க்கப்பெற்ற இளைய குமாரனே ! அழகுடன் கனககிரியில் வீற்று விளங்கும்  கந்தப் பெருமாளே !
உன் இரு பாதத்தை வணங்க அருள்வாயே !

எளிய, இனிய பாடல். 



பழனியில் உள்ள இடும்பன் மலை.
Photo: Dinamalar. Thanks.




Thursday, 1 June 2017

88. திருப்புகழ்- 82. தீர்த்தகிரி


88.திருப்புகழ் -82. தீர்த்தகிரி



ருணகிரிநாதர் தரிசித்த 82வது தலம் தீர்த்தகிரி என்னும் தீர்த்தமலை. இது இன்றைய தர்மபுரி மாவட்டத்தில் ஹரூர்  அருகே இருக்கிறது. புராதனமான தலம். மலைமேலும் அடிவாரத்திலும் கோவில்கள் இருக்கின்றன.  ஸ்வாமி  தீர்த்தகிரீஶ்வரர், சுயம்பு மூர்த்தி. அம்பாள் வடிவாம்பிகை. சோழர்களும்  விஜயநகர  அரசும் பணிசெய்திருக்கிறார்கள். இந்த  ஊர் தேரும் பிரசித்திபெற்றது. இந்தப் பகுதியில் சித்தர்கள் பல உருவில் இருப்பதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. இக்கோவிலில் பல தீர்த்தங்கள் இருக்கின்றன. அவற்றில்  முக்கியமானது ராமதீர்த்தம்.. ராமர் ராவண வதத்திற்குப் பிறகு ப்ரஹ்மஹத்தி தோஷம் போவதற்காக இங்கு வந்து வழிபட்டதாக  நம்பிக்கை. பெரிய பாபம் செய்தவர்கள் இங்கு  ராமதீர்த்தத்தில் நீராடவிடாதபடி குரங்குகள் நீரைத் தடுக்கும் என்பதைப் பலர் கண்டிருக்கிறார்கள்.

இங்கு அருணகிரிநாதர் ஒரு அரிய  திருப்புகழ் பாடியிருக்கிறார்.

பாட்டிலுருகிலை கேட்டுமுருகிலை
கூற்று வழிவரு பார்த்து முருகிலை
பாட்டை  யநுதின மேற்று மறிகிலை          தினமானம்-

பாப்ப ணியனருள்  வீட்டை விழைகிலை
நாக்கி னுனிகொடு ஏத்த அறிதலை
பாழ்த்த  பிறவியி லேற்ற மனது நல்               வழிபோக

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
யேட்டின் விதிவழி  யோட்ட மறிகிலை
பார்த்து மினியொரு வார்த்தை  அறைகுவ       னிது கேளாய்-

வாக்கு முனதுள நோக்கு மருளுவ
னேத்த புகழடி யார்க்கு  மெளியனை
வாழ்த்த இருவினை நீக்கு முருகனை                 மருவாயோ;

ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
பூட்டி திரிபுர மூட்டி மறலியி
னாட்ட மறசர ணீட்டி மதனுடல்                           திரு நீறாய்

ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
யாட்டின் முகமதை நாட்டி மறைமக
ளார்க்கும் வடுவுற  வாட்டு முமையவ                 னருள்பாலா

சீட்டை எழுதி வையாற்றில் எதிருற
ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
சீற்ற மொடுகழு வேற்ற அருளிய                           குருநாதா

தீர்த்த எனதகம் ஏட்டையுடன்  நினை
ஏத்த அருளுடன் நோக்கி அருளுதி
தீர்த்த மலை நகர் காத்த சசிமகள்                         பெருமாளே





தன் மனதுக்குப் புத்தி கூறுவதாக அமைந்த பாடல்.


மனமே ! நீ பாட்டின் பொருள் அறிந்து உருகுவதில்லை
பாட்டையும் பாட்டின் பொருளையும் சொல்லக்கேட்டும் உருகுவதில்லை.
யமன் வரும் வழியைக்கண்டும் ( இறைவனிடம் பக்தியாய்) உருகுவதில்லை.  கஷ்டங்களை தினந்தோறும் அனுபவித்தும்  உண்மைப் பொருளை நாடி அறிகின்றாயில்லை.


நாள்தோறும் பாம்பை அணிந்துள்ள சிவபிரான் அருளும் வீட்டின்பத்தை  நீ விரும்புவதில்லை. நாவின் நுனிகொண்டு பிரானைப் போற்ற அறியவில்லை. பாழ்படும் இந்தப் பிறப்புக்களிலேயே ஈடுபடுகின்ற  மனமே! நீ நல்லவழியே போகமாட்டேன் என்கிறாய்.


உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விடுகின்றாயில்லை. ஏட்டில் எழுதியுள்ள தலைவிதி எந்த வழியாக ஓடுகின்றது என்பதையும் நீ அறியவில்லை. [இப்படி நீ இருப்பதைப் ] பார்த்து [சும்மா இருக்க முடியாமல் நான் ] இனி ஒரு வார்த்தை சொல்லுகிறேன், இதைக் கேட்பாயாக.


அவனது திருப்புகழை ஓதி அவனை ஏத்தினால், உனக்கு நல்ல வாக்கையும், உனது மனதில் நல்ல எண்ணத்தையும் அருள்புரிவான். அதனால் அடியாருக்கு எளியவனை,  தன்னை வாழ்த்துவோருடைய இருவினையையும் விலக்கும் முருகனை நீ சிந்திப்பாயாக.


உலகையே ஆட்டிவைப்பவரான கூத்தப்பிரான், வடக்கிலுள்ள மேருமலையை வில்லாக வளைத்து அதில் வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கட்டி, திரிபுரத்திலும் தீயை மூட்டி, யமனுடைய நோக்கம் அழியும் படி காலை நீட்டி (உதைத்து),  மன்மதனுடைய  உடலை சாம்பலாக ஆக்கி,


தக்ஷனுடைய யாகத்தைக் குலைத்து, தக்ஷனுக்கு ஆட்டின் முகத்தைப் பொருத்தி, மறைமகளாம் சரஸ்வதிக்கும் காயம்  உண்டாகும்படிச் செய்த  உமைகணவன் அருளின பாலனே !


"வாழ்க அந்தணர் " என்னும் திருப்பாசுரம் எழுதின சீட்டை (ஏட்டை) வைகை ஆற்றில் வெள்ளத்தை எதிர்த்து வர  ஓட்டியும், நெருப்பில் இட்ட ஏடு [ எரியாமல் ] பச்சை நிறத்துடன் இருக்கும் படி காட்டியும், சமணரிடம் கோபித்து  அவர்களைக் கழுவேற வைத்து அருளின குருநாதனே !


பரிசுத்தனே! என் மனம் விருப்புடன் உன்னை ஏத்தும்படி நீ அருள் செய்து, என்னைக் கண்பார்த்து அருளுவாயாக !. 
தீர்த்தமலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே !
இந்த்ராணியின் மகள் தேவசேனையின் பெருமாளே !


என்னை அருளுடன் பார்ப்பாயாக !





எத்தனை அருமையான பாடல்!
அருணகிரிநாதர் தன் மனதுக்குச் சொன்னதாக அமைந்த இந்தப்பாடல் நம் எல்லோருக்காகவும் சொன்னதுதான்.
இதில் சிவனுடைய திருவிளையாடல்கள் சிலவற்றைச் சொன்னதுடன் , முருகனே சம்பந்தராக வந்தார் என்பதையும் தெளிவாகச் சொல்கிறார்.

இதில் வரும் கடைசி அடி " தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை ......பெருமாளே " என்பதை தினமும் நாம் நீராடும்போது சொல்லவேண்டும் என்பது ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள் சொன்ன அறிவுரையாகும்.



photos taken from various blogs. Thanks to all of them.