Tuesday, 3 October 2017

93.திருப்புகழ் -87. திருச்செங்கோடு


93. திருப்புகழ் -87. திருச்செங்கோடு


திருச்செங்கோடு அர்த்தநாரீஶ்வரர் சன்னிதி முகப்பு மண்டபம்.
By Booradleyp1 (Own Work) CC BY-SA3 Creativecommons via Wikimedia commons.

ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 87வது தலம் திருச்செங்கோடு. இது கொடிமாடச் செங்குன்றூர் என தேவாரகாலத்தில் பிரசித்திபெற்றிருந்த அரிய தலமாகும் இங்கு சம்பந்த ஸ்வாமிகள் ஒரு அருமையான பதிகம் பாடியிருக்கிறார்.

வெந்தவெண் ணீறணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்தண வும்விரலா ளொருபாக மமர்ந்தருளிக்
கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தண னைத்தொழுவார் அவல மறுப்பாரே.


அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே.


அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார் புகலிந்நகர் பேணும்
தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன்
கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்றூ ரேத்தும்
நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே.


இங்கு மலை மேலும் கீழும் கோவில்கள் இருக்கின்றன. மலைமேல்  
அர்த்தநாரீஶ்வரர், ஆதிகேசவப் பெருமாள், செங்கோட்டுவேலவர் சன்னிதிகள் உள்ளன. அருணகிரிநாதர் செங்கோட்டுவேலவர்பால்- நாகாசல வேலவர்பால் அதிக ஈடுபாடுடையவர்.  திருச்செங்கோடு வேதங்கள் பூஜித்த தலம் என்பதைக் கந்தரந்தாதியில் சொல்லியிருக்கிறார். இது அர்த்தநாரீஶ்வரர்  தலம் என்பதை 
"பெரியோனும் தலைவியும் பக்கத்தொக்க இருக்கும் சயிலம்" 
என காஞ்சி நகர் திருப்புகழில் பாடியிருக்கிறார். "தெய்வத் திருமலை செங்கோடு" என  அலங்காரத்தில் சொல்கிறார். இத்தலத்தை  "செங்கோடு, செங்கோடை, செங்குவடு, நாகமாலை, நாககிரி, காளக்கிரி, உரகசிகரி, சர்ப்ப கோத்ரம், சர்ப்பகிரி,  சர்ப்பப்பொற்றை, பணிசயிலம், புஜக கோத்திரி" என்று பல பெயர்களால் சிறப்பிக்கிறார். இங்கு விசேஷ அனுக்ரஹம் பெற்றார் போலும்! 

" அருணையில்  இடைக்கழியில்  உரககிரியில்  புவியில்
       அழகிய செருத்தணியில்      வாழ் கற்பகாடவியில்
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
        அறியென இமைப்பொழுதில்  வாழ்வித்த வேதியனும்"

என வேடிச்சிகாவலன் வகுப்பில் பாடுகிறார்.


   கந்தரலங்காரம், கந்தரந்தாதி ஆகிய பாடல்களில் மிகவும் போற்றிப் பாடியிருக்கிறார்.  உன்னைத் தொழ நாலாயிரம் கண் கொடுக்கவில்லையே அந்தப் பிரம்மன் என்றும்,  நமக்குத் துணை  செங்கோடன் மயூரம் என்றும் அலங்காரத்தில் பாடுகிறார்.

மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
 மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியிற்
 சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று கண்டுதொழ
  நாலா யிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே.



செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.




விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மைகுன்றா
 மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த
  பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி
  வழிக்குத் துணைவடி வேலுஞ்செங் கோடன் மயூரமுமே.


( இது ரக்ஷைப்பாடலாக இருக்கிறது.)







இங்கு நம் ஸ்வாமிகள் 21 திருப்புகழ் பாடல்கள் பாடியிருக்கிறார். ஒவ்வொன்றும் அருமையானது.

அருள் வேண்டல்

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
வம்பார் கடம்பை       யணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
வம்பே தொலைந்த       வடிவேலா

சென்றே யிடங்கள் கந்தா எனும்பொ
செஞ்சேவல் கொண்டு       வரவேணும்


செஞ்சாலி கஞ்ச மொன்றாய் வளர்ந்த
செங்கோ டமர்ந்த         பெருமாளே.


அன்பாக வந்து உன்றாள் பணிந்து
ஐம்பூத மொன்ற         நினையாமல்


குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி
குன்றா மலைந்து      அலைவேனோ





கந்தா அரன்றன் மைந்தா விளங்கு
கன்றா முகுந்தன்         மருகோனே

கன்றா விலங்க லொன்றாறு கண்ட
கண்டா வரம்பை         மணவாளா

செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு
திண்டோள் நிரம்ப        அணிவோனே


திண்கோ டரங்க ளெண்கோ டுறங்கு
செங்கோட மர்ந்த            பெருமாளே.


மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
மங்காம லுன்ற                 னருள்தாராய்




பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
பண்போனு கந்த           மருகோனே

பண்சார நைந்து நண்போது மன்பர்

பங்காகி நின்ற                    குமரேசா

செண்டாடி யண்டர் கொண்டாட மன்றில்
நின்றாடி சிந்தை               மகிழ்வாழ்வே


செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடு கின்ற
செங்கோட மர்ந்த         பெருமாளே.


கொந்தார ரும்பு நின்தாள்ம றந்து
 குன்றாம லுன்ற          னருள்தாராய்



அடியாருடன் இணக்கம்



திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
     திண்டாட வென்ற ...... கதிர்வேலா

ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
     செங்கோட மர்ந்த ...... பெருமாளே.


வினையேனும்

உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும்
     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே


உரவொடு புனைதர நினைதரு மடியரொ
     டொன்றாக என்று ...... பெறுவேனோ



இவ்வாறு ஒவ்வொரு பாடலும் அருள் வேண்டுவதாகவே  அமைந்திருக்கிறது

பிழைப்புக்காகத் தகுதியில்லாதவரைப் பாடும்  நிலை கூடாது!

தகுதியில்லாதவரைப் பாடும் புன்குணம்  நீங்கவேண்டும் என்று ஒரு பாடலில் வேண்டுகிறார். இது அந்தக்காலத்தில் புலவர்கள் பட்ட பாட்டையும்  காட்டுகிறது!

கரும்போற் கரும்போர்க் குளங்காட் டிகண்டேத்
 துசெங்கோட் டில்நிற்குங்               கதிர்வேலா

இடம்பார்த் திடம்பார்த் திதங்கேட் டிரந்தேற்

றிணங்காப் பசிப்பொங்                கனல்மூழ்கி

இறுங்காற் கிறுங்கார்க் கிரும்பார்க் குநெஞ்சார்க்
கிரங்கார்க் கியற்றண்                          டமிழ்நூலின்

உடம்பாட் டுடன்பாட் டியம்பாத் தயங்காத்
துளங்காத் திடப்புன்                          கவிபாடி

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் புகன்றேத்
துறும்பாற் குணக்கன்                      புறலாமோ


ஞானம் வேண்டிப் பாடும் ஒரு அழகிய பாடல்:


காலனிடத் தணுகாதே  காசினியிற் பிறவாதே
சீல அகத்திய ஞான   தேனழகைத் தருவாயே
மாலயனுக் கரியானே   மாதவரைப் பிரியானே
நாலுமறைப் பொருளானே  நாககிரிப் பெருமாளே.

[ அகத்தியருக்கு உபதேசித்தது போன்று தனக்கும் ஞானோபதேசம் தரவேண்டும் என  வேண்டுகிறார்.]

ஒரு பாடலில் அம்பாளை அழகாகப் பாடுகிறார்; ராமாயண , பாகவத நிகழ்ச்சிகளை  அருமையாகச் சொல்கிறார்.

சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழை
தோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல
தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலை
தோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்
தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபை
தோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும்       விந்தையோனே


திரிசூலத்தை ஏந்தினவள், எனது தாய், கவுரி, ஆசையை  அறுப்பவள்,  குழையும் தோடும் பூண்டு  விளையாடும் சிவகாம சுந்தரி,  நல்ல விபூதியை அணிந்து ஆள்பவள். திகம்பரி, அழகிய காளி,  ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் நொன்று துதிக்கும்  பரிசுத்தமான தாய், மூங்கில் போன்ற தோளை உடையவள், ஆகிய பார்வதியைப்  பங்கில் உடைய , கிருபை நிறைந்தவராய் உள்ள  சிவபிரானது குழந்தை என்றே பெரிய உலகத்தார் புகழும் விசித்திர வள்ளலே!




மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகு
வாலியும் பாழிமர மோடுகும் பாகனனு
மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடு
 மாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்
மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிரு
மார்பகன் காணமுடி யோனணங் கானமதி           யொன்றுமானை



மாலியவான் இறக்கவும். ஒப்பற்ற ஹிரண்யன் சாகவும்,  வலிமிகுந்த வாலியும், பருத்த மராமரமும் அழியவும், கும்பகர்ணனும், கடலும்,  பயங்கரமான வலிமை கொண்டிருந்த ராவணனும் அழியவும்,  அம்பைச்  செலுத்தியவன், அழகிய மேக நிறத்தினன்,  மனமகிழ்ச்சியுடன்  இடையர் பெண்களுடன் கூடி விளையாடியவன், லக்ஷ்மியை மார்பில் தாங்கியவன்,  பொன்முடி தரித்தவன்,  ஆகிய திருமாலின் மகளான  அறிவு நிறைந்த தேவசேனையை  [ மணந்தவனே ]

அற்புதத் திருப்புகழ்
 நம் ஸ்வாமிகள் காலத்திலேயே  அவருடைய பாடல்கள்  பிரபலமாக இருந்தன, இதை அவரே ஒரு பாடலில் சொல்கிறார். இத்தகைய அருமையான பாடல்களைப்பாட அருள்செய்த முருகனின் கருணையை வியக்கிறார்!

பத்தர்க ணப்ரிய நிர்த்தந டித்திடு
பட்சிந டத்திய                 குகபூர்வ

பச்சிம தட்சிண வுத்தர திக்குள
பத்தர்க ளற்புத         மெனவோதுஞ்

சித்ரக வித்துவ சத்தமி குத்ததி
ருப்புக ழைச்சிறி         தடியேனுஞ்

செப்பென வைத்துல கிற்பர வத்தெரி
சித்தவ நுக்ரக                     மறவேனே

பூர்வ, பஶ்சிம, தக்ஷிண, உத்தர =   கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நாலு திக்குகளில் உள்ள பக்தர்களும் திருப்புகழை அற்புதம் என மெச்சினர்!



maragadham.blogspot.in.

திருநீலகண்டத்  திருப்பதிகம்
இங்கு 
 சம்பந்தர் இங்கு தங்கியிருந்தபோது, மக்களை குளிர் ஜுரம் வாட்டியது. அது நீங்க அவர்  "திருநீலகண்டப் பதிகம்" என்ற அற்புதப் பதிகம் பாடினார். இதில் நீலகண்டத்தின்மீது ஆணையிட்டுச் சொல்கிறார் ! அதிலிருந்தே இப்பதிகத்தின் மஹத்வம் புரியும்!

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர் 
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே 
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம் 
செய்வினை வந்தெமைத்  தீண்டப்பெறா திருநீலகண்டம்

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும் 
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்


இவ்வாறு நமது ஸ்வாமிகளும் அவர் ஸ்வாமியெனப் போற்றிய சம்பந்தரும் பாடிய அருமையான பாடல்களைக் கற்று  மகிழ்வோம்!



குறிப்பு:  சென்ற நூற்றாண்டில் சென்னை மாகாணம் முழுவதும் திருப்புகழைத் தீவிரமாகப் பாடிப் பரப்பிய ஸ்ரீ வள்ளிமலை ஸ்வாமிகள் திருச்செங்கோடு ஆண்டவன் அருளால் பிறந்தவரே ! அவருக்கு பெற்றோர் இட்டபெயர் அர்த்தநாரி  என்பதே!



No comments:

Post a Comment