96.திருப்புகழ்- 90.திருப்பராய்த்துறை
wikimapia
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 90வது தலம் திருப்பராய்த்துறை. இது தாருகாவனம் எனப்படும். அரிய சிவலீலைகளில் ஒன்று நடந்த இடம். இங்கு ஒரு காலத்தில் இருந்த ரிஷிகள் வேதத்தின் கர்மகாண்டத்திலேயே சித்தமுடையவர்களாகி, 'கர்மமே எல்லாம், சாமி தேவையில்லை' எனச் செருக்குற்று நின்றனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான் பிக்ஷாடனராகிவந்தார். அவருக்கெதிராக இந்த ரிஷிகள் செய்த மந்திர தந்திரங்கள் பலிக்கவில்லை. கன்மம் பயனில்லாததைக்கண்ட ரிஷிகள் செருக்கு நீங்கி பரமனைப் பணிந்தனர். சிவன் கருணையினால் அவர்களுக்கு உபதேசம் செய்தார்..
இதை நம்காலத்தில் ஸ்ரீ ரமணரின் அடியாராகிய முருகனார் நன்கு பாடியுள்ளார்.
தாரு வனத்தில் தவஞ்செய் திருந்தவர்
பூருவ கர்மத்தால் உந்தீபற
போக்கறை போயினர் உந்தீபற
கன்மத்தை அன்றிக் கடவுள் இலையெனும்
வன்மத்த ராயினர் உந்தீபற
வஞ்சச் செருக்கினால் உந்தீபற
**************
கன்ம பலன் தரும் கர்த்தர் பழித்துச்செய்
கன்ம பலம் கண்டார் உந்தீபற
கர்வமகன்றனர் உந்தீபற
காத்தருளென்று கரையக் கருணைக்கண்
சேர்த்தருள் செய்தனன் உந்தீபற
சிவனுபதேசமிது உந்தீபற.
இந்த இடத்தில் ஸ்ரீ ரமணபகவானே உபதேசமாகப் பாடியுள்ளார்.
கன்மம் பயன்தரல் கர்த்தனது ஆணையால்
கன்மம் கடவுளோ உந்தீபற
கன்மம் சடமதால் உந்தீபற.
வினையின் விளைவு விளிவுற்று வித்தாய்
வினைக்கடல் வீழ்த்திடும் உந்தீபற
வீடு தரலிலை உந்தீபற
[ பகவான் உபதேசம் முழுதும் "உபதேச உந்தியார் " என்ற செய்யுள் வடிவில் இருக்கிறது. மேலும் அறிய ஸ்ரீ முருகனார் எழுதிய " ஸ்ரீ ரமண சந்நிதி முறை " நூலைப் பார்க்கவும். ]
இத்தகைய மகத்தான சிவலீலை நடந்த இடம் திருப்பராய்த்துறை. இது காவிரியின் தென் கரையில் இருக்கிறது. ஸ்வாமி தாருகவன நாதர். இக்கோவிலின் கல்வெட்டில் இத்தலம், "உத்தம சீவிச் சதுர்வேதிமங்கலத்துத் திருப்பராய்த்துறை" என்றும்; ஸ்வாமி பெயர் "பராய்த்துறை மகாதேவர் " என்றும்; "பராய்த்துறைப் பரமேஶ்வரன் " என்றும் குறிக்கப்படுகிறது.
இங்கு சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.
சம்பந்தர்
நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை
கூறுசேர்வதொர் கோலமாய்ப்
பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை
ஆறுசேர்சடை யண்ணலே.
கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர்
பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை
அந்தமில்ல வடிகளே.
செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச் செல்வர்மேற்சிதை யாதன செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ் செல்வமாமிவை செப்பவே. |
கரப்பர் கால மடைந்தவர் தம்வினை
சுருக்கு மாறுவல் லார்கங்கை செஞ்சடைப்
பரப்பு நீர்வரு காவிரித் தென்கரைத்
திருப்ப ராய்த்துறை மேவிய செல்வரே.
போது தாதொடு கொண்டு புனைந்துடன்
தாத விழ்சடைச் சங்கரன் பாதத்துள்
வாதை தீர்க்கவென் றேத்திப் பராய்த்துறைச்
சோதி யானைத் தொழுதெழுந் துய்ம்மினே.
அரக்க னாற்ற லழித்த அழகனைப் பரக்கு நீர்ப்பொன்னி மன்னு பராய்த்துறை இருக்கை மேவிய ஈசனை யேத்துமின் பொருக்க நும்வினை போயறுங் காண்மினே. தேசம டங்கலு மேத்து மைப்புய லாயநெ டுந்தகை வாழ்த்த வச்சிர தேகமி லங்கிய தீர்க்க புத்திர முதல்வோனே தீரனெ னும்படி சாற்று விக்ரம சூரன டுங்கிட வாய்த்த வெற்புடல் தேயந டந்திடு கீர்த்தி பெற்றிடு கதிர்வேலா மூசளி பம்பிய நூற்றி தழ்க்கம லாசனன் வந்துல காக்கி வைத்திடு வேதன கந்தையை மாற்றி முக்கண ரறிவாக மூதறி வுந்திய தீக்ஷை செப்பிய ஞானம்வி ளங்கிய மூர்த்தி யற்புத மூவரி லங்குப ராய்த்து றைப்பதி பெருமாளே. .....உழ லாக்கை யிற்றிட யோகமி குந்திட நீக்கி யிப்படி நீயக லந்தனில் வீற்றி ருப்பது மொருநாளே தேசம் முழுதும் மெச்சும் கரிய மேக நிறத்தினனான பெருந்தகையாகிய திருமால் வாழ்த்தவும், அழியாத திருமேனி படைத்த பூரணனாகிய சிவபெருமானின் மகனே, முதல்வனே ! வீரன் என்னும் பேர்பெற்றிருந்த விக்ரமனே, சூரன் நடுங்க, வரத்தினால் அவன் பெற்றிருந்த அவனது மலைபோன்ற உடல் தேய்ந்து ஒழியும்படி, போரை நடத்தி புகழடைந்த ஒளிவீசும் வேலனே ! வண்டுகள் மொய்க்கும் நூறு இதழ்களைக்கொண்ட தாமரையி வீற்றிருப்பவனும், உலகங்களைப் படைத்துள்ளவனுமான வேதம் ஓதும் பிரம்மனுடைய ஆணவத்தை நீக்கி, முக்கண்ணராகிய சிவபெருமான் தெரிந்துகொள்ளும்படி பேறறிவு பொருந்திய உபதேச மொழியைச் சொன்ன ஞான ஒளி வீசும் மூர்த்தியே ! அற்புத மும்மூர்த்திகளும் விளங்குகின்ற திருப்பராய்த்துறைப் பதியில் வீற்றிருக்கும் பெருமாளே. மிகவும் சுழன்று வேதனைப்படும் இந்த உடலில்,கலங்காத சிவ யோக நிலை எழ, என்னைக் கெட்ட நெறியின்று விலக்கி, இந்தக் கணமே நீ என்னுடைய மனதில் வீற்றிருக்கும் ஒப்பற்ற நாள் வருமா? முருகனைப் பாடும் நாதரின் சமரசம் வியக்கவைக்கிறது! தேசம் அடங்கலும் ஏத்தும் மைப்புய லாயநெ டுந்தகை என திருமாலைப் புகழ்கிறார். அற்புத மூவர் என மும்மூர்த்திகளைப் புகழ்கிறார்! அருமையான பாடல். பாடிப் பணிவோம். |
No comments:
Post a Comment