Wednesday, 4 October 2017

95.திருப்புகழ்-89. பாண்டிக்கொடுமுடி


95.திருப்புகழ் -89. பாண்டிக்கொடுமுடி


Photo thanks:Tamil Heritage Foundation.

ருணகிரிநாதர்  தரிசித்த 89வது தலம் திருப்பாண்டிக் கொடுமுடி. இன்று கொடுமுடி எனப்படுகிறது. கொடு முடி = பெரிய மலைச் சிகரம்! இங்கு ஸ்வாமி கொடுமுடி நாதர். கொங்கு நாட்டில் காவிரிக்கரையில் அமைந்த அருமையான தலம், பல புராணச்சிறப்புக்களைக் கொண்டது. மூவராலும் பாடப்பெற்ற தலம். [ இது முக்கியமான தலம்- இதுவரை, ஏறத்தாழ பாதி தூரம் -தெற்கு நோக்கிப் பாய்ந்து வந்த காவிரி இங்கு கிழக்கு நோக்கித் திரும்புகிறது! இன்று காவிரி வரண்டு கிடக்கிறது. உண்மையில் எந்தத் தலமோ, கோவிலோ, நதியோ , குளமோ பழைய உயர்ந்த நிலையில் இல்லை. ]

சம்பந்தர் :

தனைக்கணி மாமலர் கொண்டு தாள் தொழுவாரவர் தங்கள்
வினைப்பகையாயின தீர்க்கும்  விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்
நினைத்தெழுவார் துயர் தீர்ப்பார்  நிரைவளை மங்கை நடுங்கப்
பனைக்கைப் பகட்டுரி போர்த்தார்  பாண்டிக்கொடுமுடியாரே.

போகமும் இன்பமும் ஆகிப் போற்றி என்பார் அவர் தங்கள்
ஆகம் உறைவிடமாக  அமர்ந்தவர் கொன்றையினோடும்
நாகமும் திங்களும் சூடி நன்னுதல் மங்கைதன்  மேனிப்
பாகம் உகந்தவர் தாமும்  பாண்டிக்கொடுமுடியாரே.

கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுண் ஞானசம்பந்தன்
பலமல்கு வெண்டலை யேந்திப்  பாண்டிக்கொடுமுடி தன்னைச்
சொலமல்கு பாடல்கள் பத்தும்  சொல்லவல்லார் துயர் தீர்ந்து
நலமல்கு சிந்தையராகி  நன்னெறி எய்துவர் தாமே.

அப்பர் :


சிட்டனைச்  சிவனைச்செழுஞ் சோதியை
அட்ட மூர்த்தியை ஆல நிழலமர்
பட்டனைத் திருப் பாண்டிக் கொடுமுடி
நட்ட னைத்தொழ நம்வினை நாசமே.
  
தூண்டி யசுடர் போலொக்குஞ் சோதியான்
காண்டலுமெளி யன்னடி யார்கட்குப்
பாண்டிக் கொடுமுடி மேய பரமனைக்
காண்டு மென்பவர்க் கேதுங் கருத்தொணான்.
  
நெருக்கி யம்முடி நின்றிசை வானவர்
இருக்கொ டும்பணிந் தேத்த விருந்தவன்
திருக்கொ டும்முடி யென்றலுந் தீவினைக்
கருக்கெ டும்மிது கைகண்ட யோகமே.


சுந்தரர்:

மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
    பாத மேமனம் பாவித்தேன்
பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற
    வாத தன்மைவந் தெய்தினேன்
கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
நற்ற வாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே

.
இட்ட னுன்னடி ஏத்து வார்இகழ்ந்
    திட்ட நாள்மறந் திட்டநாள்
கெட்ட நாள்இவை என்ற லாற்கரு
    தேன்கி ளர்புனற் காவிரி
வட்ட வாசிகை கொண்ட டிதொழு
    தேத்து பாண்டிக் கொடுமுடி
நட்ட வாஉனை நான்ம றக்கினுஞ்
    சொல்லும்நா நமச்சி வாயவே

கோணி யபிறை சூடி யைக்கறை
    யூரிற் பாண்டிக் கொடுமுடி
பேணி யபெரு மானைப் பிஞ்ஞகப்
    பித்த னைப்பிறப் பில்லியைப்
பாணு லாவரி வண்ட றைகொன்றைத்
    தார னைப்படப் பாம்பரை
நாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை
    சொல்லு வார்க்கில்லை துன்பமே

எத்தகைய அருட்பாடல்கள் ! அற்புத வாக்கு !
.
Photo: Tamil Heritage Foundation. Thanks


 இங்கு வந்த நம் அருணகிரிநாதர் இரு பாடல்கள் பாடியிருக்கிறார்.

இருவினைப் பிறவிக்       கடல்மூழ்கி
இடர்கள்பட் டலையப்      புகுதாதே

திருவருட் கருணைப்       ப்ரபையாலே
திரமெனக் கதியைப்        பெறுவேனோ

அரியயற் கறிதற்            கரியானே

அடியவர்க் கெளியற்       புதநேயா

குருவெனச் சிவனுக்       கருள்போதா

கொடுமுடிக் குமரப்          பெருமாளே.

மிக எளிய  பாடல்!
இருவினை = பாவ,புண்ணியம். இரண்டுமே பிறவிப் பெருங்கடலுக்கு   வித்தாகும்.
  "அறம் பாவமென்னும் அருங்கயிறு " என்பார் மணிவாசகர். இதையெல்லாம் விட்டு, இறைவன் அருள் ஒன்றையே ஸ்திரமானதென நாடவேண்டும் 
இதையே பகவான் கீதையில்  [ 18.66 ]சொல்கிறார்.. தர்மாதர்மங்களைப்பற்றிய சிந்தையை விட்டு என் ஒருவனையே பற்றிக்கொள் என்கிறார்.

மாந்தர்க் கமரர்கள் வேந்தற் கவரவர்
வாஞ்சைப் படியருள்             வயலூரா

வான்கிட் டியபெரு மூங்கிற் புனமிசை
மான்சிற் றடிதொழு             மதிகாமி

பாந்தட் சடைமுடி யேந்திக் குலவிய
பாண்டிக் கொடுமுடி           யுடையாரும்

பாங்கிற் பரகுரு வாங்கற் பனையொடு
பாண்சொற் பரவிய             பெருமாளே.



 மாந்தர், வேந்தர், அமரர்- ஒவ்வொரு வர்கத்தினருக்கும் ஒவ்வொரு விதமான  ஆசை!  பகவான்  நாம் விரும்புவதை அளிப்பவர். 'அடியவர்  இச்சையில்  எவை எவை உற்றன, அவை தருவித்தருள் பெருமாளே ' என்று வேறு இடத்தில் பாடுகிறார். அதனால் நாம் எதைக் கேட்கிறோம் என்பதில் ஜாக்ரதையாக இருக்கவேண்டும் !  இங்கு பெண்ணாசை விலகவேண்டும் என வேண்டுகிறார்.

மூவர் தேவாரத்தின் கருத்தும்  அருணகிரிநாதர் பாடலில் இருப்பதை ஊன்றிப்படித்தால் உணரலாம் !



Nermai-Endrum.com


No comments:

Post a Comment