Sunday, 12 March 2017

78.திருப்புகழ் 72.திருவையாறு -2


78.திருப்புகழ் 72.திருவையாறு -2




திருவையாறில் அருணகிரிநாதர் பாடிய  ஒரே பாடல்தான் கிடைத்திருக்கிறது.
வீடு பேற்றை வேண்டிப் பாடுகிறார்.

வீடு பெற 

கரிய மேனிய னானிரை யாள்பவன்
     அரிய ராவணை மேல்வளர் மாமுகில்
     கனகன் மார்பது பீறிய வாளரி           கனமாயக்

கபடன் மாமுடி யாறுட னாலுமொர்
     கணையி னால்நில மீதுற நூறிய
     கருணை மால்கவி கோபக்ரு பாகரன்    மருகோனே


திரிபு ராதிகள் தூளெழ வானவர்
     திகழ வேமுனி யாவருள் கூர்பவர்
     தெரிவை பாதியர் சாதியி லாதவர்         தருசேயே

சிகர பூதர நீறுசெய் வேலவ
     திமிர மோகர வீரதி வாகர
     
    திருவை யாறுறை தேவக்ரு பாகர        பெருமாளே.

இடர்படு   மாயப்

பரவை மீதழி யாவகை ஞானிகள்
     பரவு நீள்புக ழேயது வாமிகு
     பரம வீடது சேர்வது மாவது               மொருநாளே




கரிய நிறத்தினன், பசுக்கூட்டத்தை மேய்த்து ஆள்பவன், பாம்பணையின்மேல் துயிலும் கரிய முகில், ஆகிய திருமால், பொன்னிறத்தவனாம் ஹிரணியனுடைய மார்பைக்கிழித்த  நரசிங்கம், பலமான மாயங்களில் வல்ல -



கபடனாம் ராவணனுடைய பெரிய முடிகள் பத்தும் ஒரே பாணத்தால் தரையில் விழுந்து தூளாக்கிய கருணை நிறைந்த திருமால், வாலி என்னும் குரங்கைக் கோபித்து அழித்து,க்ருபைக்கு இடமானவனான திருமாலின் மருகனே !



திரிபுர அஸுரர்கள் பொடியாகுமாறு, தேவர்கள் விளங்கும் பொருட்டு, திரிபுராதியர்மேல் கோபித்து, தேவர்களுக்கு மிக அருள் செய்தவர், தேவிக்குத் தன் உடலில் பாதி கொடுத்தவர், ஜாதி என்பதே இல்லாதவர் -ஆன சிவபிரான் தந்த குழந்தையே !



சிகரங்களை உடைய க்ரவுஞ்ச மலையைத்  தூளாக்கி அழித்த வேலனே !அஞ்ஞான இருளைப் போக்கவல்ல வீர சூர்யனே ! திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் தேவனே ! க்ருபாகர மூர்த்தியே ! பெருமாளே !



துன்பத்திற்கு இடமான மாயக் கடலிலே அழியாதபடி, ஞானிகள் போற்றுகின்ற பெரும்புகழ் பெற்ற சிறந்த மோக்ஷ வீட்டைச் சேர்வதும். அதற்குத் தகுந்தவனாவதுமான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா !




ப்ராகாரத்தில்...



ஸப்தஸ்தானம்


ஐயாறப்பர் திருவையாறு
ஆபத்சகாயேஸ்வரர் திருப்பழனம்
சோற்றுத்துறை நாதர் திருச்சோற்றுத்துறை
வேதபுரீஶ்வரர்திருவேதிகுடி
பிரமசிரக்கண்டீசுவரர் திருக்கண்டியூர்
புஷ்பவனேஸ்வரர் திருப்பூந்துருத்தி
நெய்யாடியப்பர் தில்லைஸ்தானம்

இந்த 7 கோயில்களும் சேர்ந்து  ஸப்தஸ்தானம் எனப்படும். ஒவ்வொரு வருஷமும் சித்திரை மாத க்ருஷ்ணபக்ஷ  விசாக நக்ஷத்திரத்தில்  ஸ்வாமியும் அம்பாளும் திருவையாற்றிலிருந்து பல்லக்கில் கிளம்பி ஒவ்வொரு தலமாக பிற  ஆறு தலங்களுக்கும் சென்று , ஏழு மூர்த்திகளும் மறு நாள் திருவையாறு அடைவர். அங்கு விழாமுடிந்தவுடன் பிற தல மூர்த்திகள் தம்மிடங்களுக்குத் திரும்புவர்.  இங்கு அருணகிரிநாதர்  ஸப்தஸ்தானம் பற்றியும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.




ஸப்தஸ்தானத்தில் பல்லக்கு, மக்கள் வெள்ளம் !


திருப்புகழ் எப்போதும் ஓத



அரிய கானக மேவு குறத்திதன்
     இதணி லேசில நாளு மனத்துடன்
     அடவி தோறுமெ வாழி யல்பத்தினி         மணவாளா

அசுரர் வீடுகள் நூறு பொடிப்பட
     உழவர் சாகர மோடி யொளித்திட
     அமரர் நாடுபொன் மாரி மிகுத்திட       நினைவோனே

திருவின் மாமர மார்ப ழனப்பதி
     அயிலு சோறவை யாளு துறைப்பதி
     திசையி னான்மறை தேடி யமுற்குடி       விதியாதிச்


சிரமு மாநிலம் வீழ்த ருமெய்ப்பதி
     பதும நாயகன் வாழ்ப திநெய்ப்பதி
     திருவை யாறுட னேழு திருப்பதி              பெருமாளே.


சலச மேவிய பாத நினைத்துமுன்
     அருணை நாடதி லோது திருப்புகழ்
     தணிய வோகையி லோத எனக்கருள்       புரிவாயே




நெருங்குதற்கு அரிய வள்ளிமலைக்காட்டில் இருந்த குறத்தி தந்து  தினைப்புனத்துப் பரண்மீது சில நாளும், சந்தனக்காடு, செண்பகக் காடு முதலிய காடுகள் தோறும் மனம்வைத்து ஆசையுடன் உலவின  பத்தினித் தெய்வமான வள்ளியின் மணவாளனே !


அசுரர்களின் இருப்பிடங்கள் எல்லாம் பொடிப்பொடியாக, அசுரர் பயந்து கடலினுள் ஒளிந்துகொள்ள, தேவர்களின் நாட்டில் பொன்மழை மிகவும் சொரிய, நினைந்து உதவியவனே !


லக்ஷ்மீகரம் பொருந்திய மாமரங்கள் நிறைந்த திருப்பழனம், உண்பதற்கு உரிய திருச்சோற்றுத்துறை, நாங்கு வேதங்கள் திசைகள்தோறும் தேடியடைந்த திருவேதிகுடி, 


பிரமனுடைய உச்சித்தலை கிள்ளப்பட்டு பெரிய பூமியில் விழுந்த நகரமாம் திருக்கண்டியூர்,  தாமரையின் நாயகனாம் சூர்யன் பூஜித்து வாழ்ந்த  ஊராகிய திருப்பூந்துருத்தி,  திருநெய்த்தானம், திருவையாறு ஆகிய ஏழு தலங்களிலும் வாழும் பெருமாளே !


தாமரைக்கு ஒப்பான உமது திருவடியைத் தியானித்து, முன்பு திருவண்ணாமலைப் பிரதேசத்தில் நான் ஒதிய  சந்தப்பாவாம் திருப்புகழை உள்ளம் குளிர, மகிழ்ச்சியுடன் எப்போதும் ஒதும்படியான பாக்யத்தை எனக்கு  நீ அருளுவாயாக !

அருணை நாடதில் ஓது திருப்புகழ் என்றதால், இவர் அருணைப் பதியிலே  நீண்ட நாட்கள்  வாழ்ந்திருக்கவேண்டும் என்பது தெரிகிறது.

 jaghamani.blogspot.com Thanks.






Saturday, 11 March 2017

77.திருப்புகழ் 71.திருவையாறு -1


77.திருப்புகழ் 71. திருவையாறு -1


திருவையாறு ஐயாறப்பர் கோயில் கோபுரம்.
ByVivek4thamarai.Own work. CC BY-SA 3.0 Creativecommons via Wikimedia Commons.

நாம்  அருணகிரிநாதருடன் செய்யும்  இத்தல தரிசனம் ஏட்டளவில்தான். ஆனாலும் ஒன்றை ஒன்று மிஞ்சும் படியான தலங்கள் ! இன்று இந்த தலங்களில் எதுவும் பழஞ்சிறப்புடன் இல்லை.  இருப்பதையும் திருப்பணி என்ற பெயரில் கெடுத்து வருகிறார்கள். இருந்தாலும் அவற்றை நினைப்பதே ஒரு புண்ணியம்தான். அதனால்தான் பெரியவர்கள் 'க்ஷேத்ரக்கோவை ' என்று ஸ்தலங்களின் பெயரைவைத்தே பாடியிருக்கிறார்கள்.

சோழவள நாடு சோறுடைத்து !

தஞ்சைச் சீமை- சோழ நாடு- நம்மை மலைக்கவைக்கிறது. "சோழவள நாடு சோறுடைத்து " என்பார்கள். சோறு என்பது வெறும் உணவைக்குறிக்க வில்லை.[ இன்று இப்பகுதியில் நீர்வளம் குன்றி நெல் சாகுபடிக்கே திண்டாடுகிறார்கள். ] இங்கு சோறு என்பது மோக்ஷம் -வீடு பேறு ! காவிரியின் இரு கரையிலும் பிற இடங்களிலும் அவ்வளவு ஸ்தலங்கள். கோயில்கள் ! அவ்வளவு பெரியவர்கள் வந்து பாடிப் பரவியிருக்கிறார்கள் ! அதையெல்லாம் படித்தாலே நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் வருகிறது! அதுவே புண்ணியம்தான் ! அதுவே ஒரு சாதனை (ஆன்மீக முயற்சி ) தான் !

திருவையாறு அருணகிரிநாதர் தரிசித்த 71 வது ஸ்தலம். திரு+ ஐ +ஆறு : இங்கு காவிரியும் அதன் நான்கு கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு, குடமுருட்டி ஆகியவையும் பிரிகின்றன. இது மிகப்பெரிய கோயில். பிரமிக்க வைக்கும்.  காவிரிக்கரையில் காசிக்குச்  சமமாக வைத்து எண்ணப்படும் 6 தலங்களில் ஒன்று [ மற்றவை : திருவெண்காடு, சாயாவனம், மாயவரம், திருவிடைமருதூர், ஸ்ரீவாஞ்சியம்.] ஸ்வாமி  பஞ்சநதீஶ்வரர், ஐயாரப்பர், ப்ரணதார்திஹரன். அம்பாள் தர்மஸம்வர்த்தினி, த்ரிபுரசுந்தரி.

இங்கு சம்பந்தர் 5 பதிகங்களும், அப்பர் 12 பதிகங்களும், சுந்தரர் ஒருபதிகமும் பாடியிருக்கிறார்கள். அப்பர் இங்கிருந்தே கயிலைக் காட்சி பெற்றார்.
நம் ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ  ஸ்வாமிகள் வாழ்ந்ததும் இந்த தலம்தான்.






வில்வம்- ஸ்தல விருக்ஷம்

சம்பந்தர்



புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
      அறிவு அழிந்திட்டு  ஐம்மேலுந்தி
அலமந்த போதாக அஞ்சேலென் றருள்செய்வான்
      அமருங்கோயில்
வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர
      மழையென்றஞ்சிச்
சிலமந்தி யலமந்து மரமேறி முகில்பார்க்குந்
      திருவையாறே.

ஓதி யாருமறி வாரிலை யோதி யுலகெலாம்
சோதி யாய்நிறைந் தான்சுடர்ச் சோதியுட் சோதியான்
வேதி யாகிவிண் ணாகிமண் ணோடெரி காற்றுமாய்
ஆதி யாகிநின் றானுமை யாறுடை யையனே.


இரண்டு பாடல்களையும் சேர்ந்து படிக்க ஒரு அருமையான கருத்து வருகிறது. நமது ஐம்பொறிகளும் புலன்களும்  கெட்டு அறிவும்  அழியும் அந்த நாளில், ஐம்பூதங்களாகவும் நின்ற ஐயாரீசன் நம்மைக்காப்பான் என்கிறார்  சம்பந்தர்!

அப்பர்



மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்

சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம்
முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி
சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர்
அந்தி வண்ணமு மாவரை யாறரே.

ஓசை யொலியெலா மானாய் நீயே
    உலகுக் கொருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலா மானாய் நீயே
    மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே
    பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலா மானாய் நீயே
    திருவையா றகலாத செம்பொற் சோதீ

சுந்தரர்


எங்கே போவே னாயிடினும்
    அங்கே வந்தென் மனத்தீராய்ச்
சங்கை யொன்று மின்றியே
    தலைநாள் கடைநா ளொக்கவே
கங்கை சடைமேற் கரந்தானே
    கலைமான் மறியுங் கனல்மழுவும்
தங்குந் திரைக்கா விரிக்கோட்டத்
    தையா றுடைய அடிகேளோ !


.ஸ்ரீ த்யாகராஜர்



ஸத்குரு ஸ்ரீ த்யாகராஜ ஸ்வாமிகள்  பஞ்ச நதீஶ்வரர் மீது 4 க்ருதிகளும் தர்மஸம்வர்த்தனி மீது 8 க்ருதிகளும் பாடியிருக்கிறார். மாதிரிக்கு ஒன்று.

ஸாரங்க  ராகம்.

ஏஹி த்ரிஜகதீஶ  ஶம்போ மாம்
பாஹி பஞ்ச நதீஶ

வாஹினீச ரிபு நுத ஶிவ ஸாம்ப
தேஹி  த்வதீய  கராப்ஜாவலம்பம்

கங்காதர தீர நிஜர ரிபு
புங்கவ ஸம்ஹார
மங்கள கர புர பங்க வித்ருஸ
ஸுகுரங்காப்த ஹருதயாப்ஜ
ப்ருங்க ஶுபாங்க   ......ஏஹி த்ரிஜகதீஶ


(இன்னும் இரு சரணங்கள் உண்டு)

மூவுலகிற்கும் ஈசனே வருக ! சம்போ ! பஞ்சநதீஶ்வரனே!என்னைக் காத்தருள்.
சமுத்திரத்தை ஆசமனம் செய்த அகஸ்திய மஹரிஷியால்  வணங்கப்பெறும் சிவபெருமானே ! உனது தாமரைக் கையினால் எனக்கு ஆதரவு அளிப்பீராக !


நீ கங்கையணிந்தவன் . தீரன். தேவ சத்ருக்களின் தலைவர்களை வதைத்தவன். நன்மை புரிபவன்.முப்புரம் எரித்தவன். மானைக் கையிலேந்தியவன். பக்தரின் இதயத்தாமரையை வட்டமிடும் வண்டு. சுப  சரீரமுடையவன்.

கல்யாணி ராகம்

சிவே பாஹிமாம்  அம்பிகே
ஶ்ரிதஃபல தாயகி

கவேர  ஜோத்தர தீர வாஸினி
காத்யாயனி  தர்மஸம்வர்த்தனி

ஸ்வபாவ மௌ நீ ப்ரபாவமு
மஹானுபாவுராலைன பாரதிகி  பொகட
அபாராமையுண்ட் பாவஜரா -
தி பாமனே நெந்த  பாக்யதாயகி......சிவே  பாஹிமாம்.


(மேலும் இரு சரணங்கள் உண்டு.)

பார்வதி தேவியே ! அம்பிகே !தஞ்ச மடைந்தவர்களுக்கு (கோரிய ) பலன்களை அளிப்பவளே !என்னைக் காத்தருள்.


காவேரி நதியின் வடகரையில் கோவில் கொண்டவளே ! காத்யாயனி ! தர்மசம்வர்த்தனி !


இயற்கையாய் அமைந்துள்ள உன் மஹிமையைப் புகழ்வது, கலைமகளான ஸரஸ்வதிக்கே பாரமாக இருக்கையில், நான் எம்மாத்திரம் !மன்மதனை எரித்த சிவபெருமானின் நாயகியே ! (என்னைக் காத்தருள்.)


இவ்வாறு பல அருளாளர்களாலும் பாடப்பெற்ற தலம். இங்கு அருணகிரியார் பாடிய பாடலை அடுத்துப் பார்க்கலாம்.



. 
  

Friday, 10 March 2017

76.திருப்புகழ் 70. காவளூர், தஞ்சை


76. திருப்புகழ்  70.காவளூர், தஞ்சை
ருணகிரிநாதர்  சுவாமிமலையிலிருந்து கிளம்பி அடுத்து தரிசித்த தலம் (69) காவளூர். திருக்கருகாவூரிலிருந்து போகலாம். சிறிய கிராமம். கோயில் கற்கோயிலாகக்கூட இல்லை. ஆனால் மூர்த்தி மிகவும் கீர்த்திவாய்ந்தவராக, வரதராக இருந்திருக்கவேண்டும்.  அதனால் தான் அருணகிரிநாதர் பார்த்துப் பாடியிருக்கிறார். 


வருமானமில்லாத கோயில் - கண்டுகொள்ளுமா அரசுத்துறை ?
படம்: ullolipayanam.blogspot.in

கோயில் ஒரு கட்டுமலையின்மேல் அமைந்திருக்கிறது.வேறு எந்த விவரமும் தெரியவில்லை. இங்கு ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார். "மானை நேர்விழி " என்று தொடங்கும் பாடல். பெண்மோகம் ஒழிய வேண்டும் என்று பாடுகிறார்,

சானகீ  துயரத்தில் அருஞ்சிறை
     போன போது தொகுத்த  சினங்களில்
     தாப சோப மொழிப்ப  இலங்கையும்         அழிவாகத்

தாரை மானொரு சுக்கிரிபன்  பெற
     வாலி வாகு தலத்தில் விழுந்திட
     சாத வாளி  தொடுத்த  முகுந்தனன்             மருகோனே


கான வேடர்  சிறுக்குடிலம்  புன
     மீதில் வாழி தணத்தி  லுறைந்திடு
     காவல் கூரு  குறத்தி   புணர்ந்திடு               மணிமார்பா

காவு லாவிய பொற்கமுகின் திரள்
     பாளை வீச  மலர்த் தடமுஞ் செறி
     காவளூர் தனில் முத்தமிழுந் தெரி          பெருமாளே.


மோக  விபத்தும் ஒழிந்துனை                  யடைவேனோ.

பதங்களை இப்படிப் பிரித்துக் கொண்டால் அர்த்தம்  எளிதாக விளங்கும்.
ராமாயண நிகழ்ச்சிகளை இரு பத்திகளில் சொல்கிறார்.


தஞ்சைப்பதி

அங்கிருந்து அருணகிரியார் தஞ்சைப்பதி வருகிறார். (70). சரித்திரப் புகழ்பெற்ற இடம். ஆனால் பெரிய தலமல்ல. சரித்திரப் புகழ் இருந்தாலும்  புராணச்சிறப்பு எதுவும் இல்லை. ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயில், கலைச்சிறப்பு மிக்கது. ஆனால் நாம் கொண்டாடும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய எதனாலும் சிறப்பு பெறவில்லை. ராஜராஜன் என்றொரு  சோழன் ஆண்டதெல்லாம் பழங்கதை. சென்ற ஐந்து நூற்றாண்டுகளில் விஜயநகர ஆளுகைக்குட்பட்ட நாயக்கர்களும், பிறகு ஏற்பட்ட மராட்டிய அரசும்தான் இந்தப் பகுதிகள் முகம்மதியர் வசம் விழாமல் தடுத்தன. நம் கோயிலும் குளங்களும் பிழைத்தன. ஆனால் இவர்களால் ஐரோப்பியர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆர்காட்டு நவாபும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியும்  தஞ்சாவூரின் செல்வத்தை எப்படிக் கொள்ளையடித்தனர் என்பதை Romesh Chander Dutt  எழுதிய  Economic History of India என்ற புத்தகத்திலிருந்து  தெரிந்துகொள்ளலாம்.


புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில்.

இங்கு நம் சுவாமிகள் 3 பாடல்கள் பாடியிருக்கிறார்.

மாதர் மாயை அகல

அஞ்சன வேல்விழி  மடமாதர்
      அங்கவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறுமா உன தடிசேர
      விம்பதாய் அருள்  அருளாதோ
நஞ்சு அமுதாஉணும் அரனார்தம்
     நன் குமரா உமை அருள் பாலா
தஞ்செனவாம்  அடியவர் வாழத்
     தஞ்சையில் மேவிய  பெருமாளே.

பிரமை தீர

அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்
     தஞ்சவே    மணிக்     குழைவீசும்

அங்கணாரிடத்   தின்ப சாகரத்
     தங்கி மூழ்கும் இச்சையினாலே

எம்பி ரான்  உனைச் சிந்தி யாதொழித்து
     இந்த்ரசால   இப்பிரமை தீர


இங்கு வாவெனப் பண்பி னால்  அழைத்து
     எங்குமான   மெய்ப்பொருள் தாராய்


கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
     கொண்டல் போல்குழற்           கனமேருக்

குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
     கொண்ட கோலசற்           குணவேலா


சம்பராரியைக் கொன்ற தீவிழிச்
     சம்பு போதகக்                         குருநாதா

சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
     தஞ்சை மாநகர்ப்              பெருமாளே



எளிய பாடல்.
கிராதி = வேடர்குலப்பெண்
சம்பராரி = மன்மதன்
சம்புபோதகன் = ஸ்வாமிநாதன்
எங்குமான  மெய்ப்பொருள் = அங்கிங்கெனாதபடி எங்கும்  பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்பார் தாயுமானவர். எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே என்பார் அப்பர். மெய்ப்பொருள் எங்கும் இருந்தாலும் சில இடங்களில் அதை விசேஷமாக உணர்கிறோம். பசு உடலில் பால் இருந்தாலும் மடியில் தானே பெறுகிறோம் ? சில கோவில்கள் அத்தகைய சிறப்புப் பெற்றவை.  நேரடி தெய்வ அனுபவம் பெற்றவர்களுக்கே 'எங்கும் மெய்ப்பொருள் ' என்ற உணர்வு வரும். அதையே இங்கு அருணகிரிநாதர் வேண்டுகிறார்.

ஞானம் பெற

இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
     சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
     னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன்        மருகோனே

எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
     கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
     வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு          கதிர்வேலா


சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
     முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
     தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு                          மணிமார்பா

சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
     கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
     தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த                     பெருமாளே.


மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
     மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
     வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க                        வருவாயே



தஞ்சைப்பெரிய கோயில் -இன்னொரு தோற்றம்.


இந்த்ர லோகத்துக் கற்பக விருக்ஷத்தை பூமிக்குக் கொண்டுவந்தவரும், பாஞ்சஜன்யம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவரும், ஆதிகேஶவன் என்னும் கீர்த்தி பெற்றவரும், சூரியன் போன்று ஒளிவீசும் கௌஸ்துப மணியை  மார்பில் அணிந்துள்ளவரும் , வீர பராக்ரமரும் ஆகிய திருமாலின் மருகனே !


எட்டுத்திக்கிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முழுதும் நிறைந்து விளங்கும் கந்தனே!  தாருகனும் அவன் சேனையும் முற்றும்  தூள்பட்டு அழிய  ஜெயித்து பெரும்புகழ்கொண்ட ஒளிபரப்பி விளங்கும் ஒளி வேலனே !


சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக் கொண்டவள், பூவுலகை உண்ட நாரணி, விஷத்தை உண்டவள் , அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞானபூரணனாம் வேளே ! வள்ளி துயில் கொள்ளும் அழகிய மார்பனே!


அதிவேகம் கொண்டதும் நீல நிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரைமீது  விளங்கி, பிரமன் -இந்த்ரன் வீற்றிருந்து வாழும் பதிகளாகிய மனோவதி, அமராவதி ஆகியவற்றிலும் மேம்பட்டதான  தஞ்சை என்னும் பெரும் பட்டணத்தில் உள்ள ராஜகோபுரத்தில்  அமர்ந்தருளும்  பெருமாளே !


மாதர்களுடன் அனுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புக்கள் எல்லாம் குலைந்து, தொலைந்து போகும்படி, ஞானவித்தையை அடியேனுக்குத் தந்து, நீயும் வண்டுகள் மொய்க்கும் கடப்ப மாலைவிளங்க சற்றே என்முன் வருவாயே !
திருமாலையும் அம்பாளையும் அருமையாகப் பாடுகிறார். இங்கு கோபுரத்தமர்ந்த பெருமாளே என்பதால் இத்தலத்தில் வேறு தனிக்கோயில் எதுவும் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது. மனோவதி, அமராவதி ஆகிய வற்றைக்காட்டிலும் சிறந்தது என்பதால் அருணகிரியார் காலத்தில் தஞ்சை பெற்றிருந்த செல்வச்செழிப்பும் பிற சிறப்புக்களும் புலனாகும்.


clip-art.library.com. Thanks




Tuesday, 7 March 2017

75.திருப்புகழ் 69. சுவாமிமலை -2


75.திருப்புகழ் 69. சுவாமிமலை -2






ஸ்வாமிமலை : முருகன் சிவபிரானுக்கு ப்ரணவ உபதேசம் செய்ததை நினைவுபடுத்தும் திருத்தலம். அதனால் இங்கு பெருமான்  ஸ்வாமிநாதன் ஆனார். தகப்பன் சாமி, புத்ர குருக்கள் என்றெல்லாம் பெயர்கள் வழங்குகின்றன. இந்த தலத்திற்கும் குருமலை, சுந்தராசலம், தாத்ரீகிரி முதலிய பெயர்கள் இருக்கின்றன. [ தாத்ரி- நெல்லி. இங்கு நெல்லியே தல மரம்.]


பிறவி நீத்திடும் தாரகத் துருவமாம்
தலைமை எய்திய ஏரகத் தறுமுகன் 

என்ற கந்தபுராண வாக்கால் இதன் பெருமை விளங்கும். யோக வழியில் இது அனாஹத க்ஷேத்ரம் என்பார்கள்.

முருகனைச் சபையில் அழைக்க

இங்கு அருணகிரியார் அற்புத வாக்கால் அருமையான பாடல்கள் பாடியிருக்கிறார். சில பாடல்கள் அவருடைய வாழ்க்கை நிகழ்சிகளைக் கூறுவதாக இருக்கின்றன. ப்ரபுட தேவ ராஜன் சபையில் சம்பந்தாண்டானோடு வாதுபுரிந்த சமயத்தில் முருகனை வரவழைக்கப் பாடிய பாடல்:

தொந்தத் திகுகுட தகுகுட டிமிடிமி
     தந்தத் தனதன டுடுடுடு டமடம
     துங்கத் திசைமலை யுவரியு மறுகச            லரிபேரி

துன்றச் சிலைமணி கலகல கலினென
     சிந்தச் சுரர்மல ரயன்மறை புகழ்தர
     துன்புற் றவுணர்கள் நமனுல குறவிடு          மயில்வேலா


கந்தச் சடைமுடி கனல்வடி வடலணி
     யெந்தைக் குயிரெனு மலைமகள் மரகத
     கந்தப் பரிமள தனகிரி யுமையரு                    ளிளையோனே

கஞ்சப் பதமிவர் திருமகள் குலமகள்
     அம்பொற் கொடியிடை புணரரி மருகநல்
     கந்தப் பொழில்திகழ் குருமலை மருவிய          பெருமாளே.


எந்தத் திகையினு மலையினு முவரியி
     னெந்தப் படியினு முகடினு முளபல
      எந்தச் சடலமு முயிரியை பிறவியி                       னுழலாதே

இந்தச் சடமுட னுயிர்நிலை பெறநளி
     னம்பொற் கழலிணை களில்மரு மலர்கொடு
     என்சித் தமுமன முருகிநல் சுருதியின்                 முறையோடே

சந்தித் தரஹர சிவசிவ சரணென
     கும்பிட் டிணையடி யவையென தலைமிசை
     தங்கப் புளகித மெழஇரு விழிபுனல்                    குதிபாயச்

சம்பைக் கொடியிடை விபுதையி னழகுமு
     னந்தத் திருநட மிடுசர ணழகுற
     சந்தச் சபைதனி லெனதுள முருகவும்                
 வருவாயே


 சல்லரி, பேரி என்னும் வாத்யங்கள்  உயர்ந்த திசைகளும்,  மலைகளும்,  கடல்களும், கலங்கும்படி நெருங்கி  தொந்தத் திகுகுட டிமிடிமி டுடுடுடு   டமடம என்றிப்படி யெல்லாம் ஒலியெழுப்ப,


முழங்கும் மணி கலின் கலின் எனச் சப்திக்க, தேவர்கள் பூமலர் சிந்த, பிரமன் வேதத்தைச் சொல்லிப் புகழ, அசுரர்கள் துன்பமடைந்து எமன் உலகை அடைய செலுத்திய கூரிய வேலாயுதனே !


மணம் பொருந்திய சடைமுடியையும், நெருப்பு போன்ற திருவுருவத்தையும், வெற்றியையும் கொண்ட சிவபிரானுக்கு உயிர்போன்ற மலைமகள், பச்சை நிறத்தி,சந்தனமாதிய நறுமணம் பூசியவள், ஆகிய உமாதேவி அருளிய இறைவனே !
தாமரைப்பீடத்தில் அமர்ந்துள்ள திருமகள், குலமகள், அழகிய பொற்கொடிபோன்ற இடையை உடைய லக்ஷ்மி  மணந்துள்ள திருமாலின் மருகனே ! நல்ல மணம்வீசும் குருமலை என்னும் சுவாமிமலையில் அமர்ந்துள்ள பெருமாளே !


எல்லாத் திசைகளிலும், மலைகளிலும், கடலிலும், பூமியிலும் விட்டின் உச்சி, மலை உச்சி என்று இப்படி பல இடங்களிலும் வசிக்கின்ற பலவகையான எந்த உடலிலும் வாழும்  பிறப்புக்களிலும் நான் உழன்று திரியாமல் -


இந்த உடலில் இருக்கும்போதே என் உயிர் நிலை பெறுவதற்காக, உனது தாமரையன்ன தாள்களில்  மணமுள்ள மலர் சாத்தி, என் சித்தமும் மனமும் உருகி, சிறந்த வேதங்களில் சொல்லிய படியே,


உன்னைச் சந்தித்தும், "ஹர ஹர, சிவ சிவ சரணம் " என்று நான்  கும்பிட்டும் வழிபட, நீ உன் இணையடிகளை என் தலைமிசை பொருந்த, என் உடல் புளகிதம் அடைய, இரு கண்களிலும் ஆனந்தக்கண்ணீர் அருவி நீர்போலக் குதித்துப் பாய -


மின்னல்கொடி போன்ற இடையை உடைய தேவஸேனையின் அழகு முன்னே விளங்க, திரு நடமிடும் உனது திருவடி அழகுடன் பொலிய, இந்த அழகிய சபையில் எனது உள்ளம் உருகவும் வந்தருள்வாயாக !

இதில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்கிறார். நாம் அனாதிகாலமாக இந்தச் சம்சாரத்தில்  பிறந்து- இறந்து உழன்று வருகிறோம். நாம் பிறக்காத இடமில்லை, நாடில்லை, இனமில்லை, குலமில்லை, ஜாதியில்லை. நாம்  எடுக்காத உடலில்லை, பேசாத மொழியில்லை. இதையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மொழி, இனம், நாடு ஆகியவற்றைக் காரணம் காட்டி யாரேனும் விவேகிகள் பூசலிடுவார்களா ?

பாத தரிசனம் பெற்றது

இத்தலத்தில் அருணகிரியார் முருகனின் பாததரிசனம் பெற்றார் என்பதை ஒருபாட்டில் சொல்கிறார் :

முதுமாமறைக்குள் ஒரு மாபொருட்குள்
மொழியே உரைத்த  குரு நாதா !
தகையாதெனக்குன்  அடிகாண வைத்த 
தனியேரகத்தின் முருகோனே !     [சகமாயை ]

இப்படி ஒவ்வொரு பாட்டிலும் உயர்ந்த பொருட்களைப் பாடியிருக்கிறார். 


ஏரகத்திறைவன்- அமரர் சில்பியின் கைவண்ணம்.

வேண்டுதல்கள்


சிவசமய அறுமுகவ திருவேரகத்திலுறை பெருமாளே
அசடனை உன் அடியே வழுத்த அருள் தருவாயே !

நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ்  பெருமாளே
அமலை அடியவர் கொடிய வினைகொடும்
அபயமிடுகால்   அறியாயோ !

திருமால் தனக்கு மருகா அரக்கர்
சிரமே துணித்த பெருமாளே !
பிழையே பொறுத்துன் இருதாளில் உற்ற
பெருவாழ்வு பற்ற   அருள்வாயே !

சுபானமுறு ஞானத் தபோதனர்கள் சேரும்
சுவாமிமலை வாழும் பெருமாளே !
அடியேனும் சுவாமியடிதேடும் 
அநாதிமொழி ஞானம் தருவாயே !
இதாமெனிருபோதும்  சதாவின் மொழியால் இன்று
யானும் உனை ஒதும்படி பாராய் !

திறமாதவர்க்கனிந்து உன் இருபாதபத்மம் உய்ந்த
திருவேரகர்த்தமர்ந்த பெருமாளே !
அடியேனுதைத்த புன்சொல் அதுமீது  நித்த முந்தன்
அருளே தழைத்துகந்து வரவேணும் .

திரளாமணிக்குலங்கள்  அருணோதயத்தை வென்ற 
திருவேரகத்தமர்ந்த   பெருமாளே !
பொற்சதங்கை தருகீத வெட்சி துன்று முதிராத
நற்பதங்கள் தருவாயே !

வளைகுலம் அலங்கு காவிரியின் வடபுறம் சுவாமி
மலைமிசை விளங்கு தேவர் பெருமாளே !
பரிவுகொடனந்த  கோடி முனிவர்கள் புகழ்ந்து பாட
பருமயிலுடன் குலாவி  வரவேணும்.

அடைவொடுலகங்கள் யாவும்  உதவி  நிலைகண்ட பாவை
அருள்புதல்வர் அண்டராஜர்    பெருமாளே!
இசையொடு புகழ்ந்த போது நழுவிய ப்ரசண்டர் வாசல்
இரவுபகல் சென்று வாடி யுழல்வேனோ 

சேவேறுமீசர் சுற்ற மாஞான  மோனபுத்தி
சீராகவேயுரைத்த குரு நாதா !
நீவேறெனாதிருக்க நான்வேறெனாதிருக்க 
நேராக வாழ்வதற்கு உன் அருள் கூர
நீடார் ஷடாதரத்தின்  மீதே பராபரத்தை
நீ காண் என ஆவனைச்சொல்  அருள்வாயே !

சூதமிகவளர்  சோலைமருவு சுவாமிமலை தனில் உறைவோனே
சூரனுடலற வாரிசுவறிட வேலைவிடவல பெருமாளே !
காலன் எனையணுகாமல் உனதிரு காலில் வழிபட அருள்வாயே !

மிக  நிலாவெறித்த அமுதவேணி நிற்க
விழை சுவாமிவெற்பி லுறைவோனே !
விரைய ஞான வித்தை யருள் செய் தாதை கற்க
வினவ ஒதுவித்த பெருமாளே !
இடைவிடா டெடுத்த பிறவி வேரறுத்து
உன் இனிய தாள் அளிப்ப தொரு நாளே !

சுராதிபதி மாலயனுமாலொடு  சலாமிடு
சுவாமிமலை வாழும் பெருமாளே !
சிவாயமெனு நாமம் ஒருகாலும் நினையாத
திமிராகரனை வாவென்  றருள்வாயே 
திரோத மலமாறும் அடியார்கள் அருமாதவர்
தியானமுறு பாதம் தருவாயே !

குளிகை யுயர்ந்த கோபுர மளிகை பொனிஞ்சி சூழ்தரு
ஸ்வாமிமலை நின்றுலாவிய   பெருமாளே !
உன் வாரிஜ பதங்கள் நாயடியேன் முடிபுனைத்து போதக
வாசகம் வழங்கியாள்வதும் ஒரு நாளே !

இங்கே ஒரு பாடலில்  "சலாம் " என்ற முகம்மதியர் சொல் வருகிறது. இதனால் அருணகிரியார் காலத்தில் முகம்மதியர் ஆதிக்கம்  இருந்தது என்பது தெரிகிறது.



தந்தைக்கு முன்னம் தனிஞான வாளொன்று சாதித்தருள்
கந்தச் சுவாமி- குருமலை ஞான தேசிகன் !

தத்துவம், மொழி கடந்த நிலை பெற

காவேரி வடகரைச் சாமிமலையுறை தம்பிரானே !

ஆனாத பிருதிவிப் பாச நிகளமும்
     மாமாய விருளுமற் றேகி பவமென
     வாகாச பரமசிற் சோதி பரையைய        டைந்துளாமே

ஆறாறி னதிகமக் க்ராய மநுதினம்
     யோகீச ரெவருமெட் டாத பரதுரி
      யாதீத மகளமெப் போது முதயம          நந்தமோகம்


வானாதி சகலவிஸ்த் தார விபவரம்
     லோகாதி முடிவுமெய்ப் போத மலரயன்
      மாலீச ரெனுமவற் கேது விபுலம         சங்கையால்நீள்

மாளாத தனிசமுற் றாய தரியநி
     ராதார முலைவில்சற் சோதி நிருபமு
     

     மாறாத சுகவெளத் தாணு வுடனினி          தென்றுசேர்வேன்.



விடுதற்கரிய மண்ணாசை என்னும் விலங்கும், மஹாமாய அஞ்ஞான இருளும் ஒழிந்து, ஒன்றுபட்ட நிலை என்று சொல்லும்படி, ஆகாச பரம அறிவுச் சோதியான பராசக்தியை அடைந்து, நினைப்பை விட்டு


முப்பத்தாறு தத்துவங்களுக்கும் மேற்பட்டதாய், முற்பட்டதாய்,  என்றும் யோகீசர் எவரும் எட்டாததான மேலான துரிய நிலைக்கு மேற்பட்ட நிலையினதாய், உருவமில்லாததாய், எப்போதும் தோன்றி நிற்பதாய், அளவற்ற வசீகரம் வாய்ந்ததாய்,


வான் முதலான   சகல விரிவுள்ள வாழ்வுப்பொருளாய், லோகத்தின் ஆதியாயும் முடிவாயும் நிற்பதாய், உண்மை அறிவாய், தாமரை  மலரில் வீற்றிருக்கும் பிரமன், திருமால், ஈசன் என்பவர்க்கு மூலகாரணமாய்  நிற்கும் பெருமை கொண்டதாய், அச்சம் இல்லாது நீடித்து,


இறத்தல் இல்லாது தானே மெய்யாம் தன்மை உற்றதாய், அரியதாய், சார்பொன்றும் இல்லாததாய், அழிவிலாததாய், நிலையான  ஜோதியாய், ரூபம் அற்றதாய், மாறுதல் இல்லாததான சுக வெள்ள நிலைப்பொருளாம் சிவத்துடன் நான் இனி என்று சேர்வேன் !

குருமலையின் மருவு குரு நாத உம்பர்தம் பெருமாளே !
கருணைபொழி கமலமுக மாறுமிந்துளந்
     தொடைமகுட முடியும் ஒளிர் நூபுரஞ்சரண்
     கலகலென மயிலின்மிசை ஏறிவந்துகந்து எனை ஆள்வாய். 


ஏம வெயிற் பல வெற்பினில்   
நற்பதினாலுலகத்தினில் உற்றுறு பக்தர்கள்
ஏது  நினைத்ததும் மெத்த  அளித்தருள்  இளையோனே !

   

முருகனே நமக்குக் கற்பகத் தருவாய் இருக்கிறார்! " வேண்டும் அடியார் புலவர் வேண்ட  அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே !" என்று வேறு ஒரு பாடலில் சொன்னார். 
இப்படி அருமையான வாக்குகள் நிறைந்த பாடல்கள். 
பல பகுதிகள் மனப்பாடம் செய்து தினமும் பாராயணம் செய்யத் தக்கவை.