76. திருப்புகழ் 70.காவளூர், தஞ்சை
அருணகிரிநாதர் சுவாமிமலையிலிருந்து கிளம்பி அடுத்து தரிசித்த தலம் (69) காவளூர். திருக்கருகாவூரிலிருந்து போகலாம். சிறிய கிராமம். கோயில் கற்கோயிலாகக்கூட இல்லை. ஆனால் மூர்த்தி மிகவும் கீர்த்திவாய்ந்தவராக, வரதராக இருந்திருக்கவேண்டும். அதனால் தான் அருணகிரிநாதர் பார்த்துப் பாடியிருக்கிறார்.
வருமானமில்லாத கோயில் - கண்டுகொள்ளுமா அரசுத்துறை ?
படம்: ullolipayanam.blogspot.in
கோயில் ஒரு கட்டுமலையின்மேல் அமைந்திருக்கிறது.வேறு எந்த விவரமும் தெரியவில்லை. இங்கு ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார். "மானை நேர்விழி " என்று தொடங்கும் பாடல். பெண்மோகம் ஒழிய வேண்டும் என்று பாடுகிறார்,
சானகீ துயரத்தில் அருஞ்சிறை
போன போது தொகுத்த சினங்களில்
தாப சோப மொழிப்ப இலங்கையும் அழிவாகத்
தாரை மானொரு சுக்கிரிபன் பெற
வாலி வாகு தலத்தில் விழுந்திட
சாத வாளி தொடுத்த முகுந்தனன் மருகோனே
கான வேடர் சிறுக்குடிலம் புன
மீதில் வாழி தணத்தி லுறைந்திடு
காவல் கூரு குறத்தி புணர்ந்திடு மணிமார்பா
காவு லாவிய பொற்கமுகின் திரள்
பாளை வீச மலர்த் தடமுஞ் செறி
காவளூர் தனில் முத்தமிழுந் தெரி பெருமாளே.
மோக விபத்தும் ஒழிந்துனை யடைவேனோ.
பதங்களை இப்படிப் பிரித்துக் கொண்டால் அர்த்தம் எளிதாக விளங்கும்.
ராமாயண நிகழ்ச்சிகளை இரு பத்திகளில் சொல்கிறார்.
தஞ்சைப்பதி
அங்கிருந்து அருணகிரியார் தஞ்சைப்பதி வருகிறார். (70). சரித்திரப் புகழ்பெற்ற இடம். ஆனால் பெரிய தலமல்ல. சரித்திரப் புகழ் இருந்தாலும் புராணச்சிறப்பு எதுவும் இல்லை. ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயில், கலைச்சிறப்பு மிக்கது. ஆனால் நாம் கொண்டாடும் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய எதனாலும் சிறப்பு பெறவில்லை. ராஜராஜன் என்றொரு சோழன் ஆண்டதெல்லாம் பழங்கதை. சென்ற ஐந்து நூற்றாண்டுகளில் விஜயநகர ஆளுகைக்குட்பட்ட நாயக்கர்களும், பிறகு ஏற்பட்ட மராட்டிய அரசும்தான் இந்தப் பகுதிகள் முகம்மதியர் வசம் விழாமல் தடுத்தன. நம் கோயிலும் குளங்களும் பிழைத்தன. ஆனால் இவர்களால் ஐரோப்பியர்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. ஆர்காட்டு நவாபும் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியும் தஞ்சாவூரின் செல்வத்தை எப்படிக் கொள்ளையடித்தனர் என்பதை Romesh Chander Dutt எழுதிய Economic History of India என்ற புத்தகத்திலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
புகழ்பெற்ற தஞ்சைப்பெரிய கோயில்.
இங்கு நம் சுவாமிகள் 3 பாடல்கள் பாடியிருக்கிறார்.
மாதர் மாயை அகல
அஞ்சன வேல்விழி மடமாதர்
அங்கவர் மாயையில் அலைவேனோ
விஞ்சுறுமா உன தடிசேர
விம்பதாய் அருள் அருளாதோ
நஞ்சு அமுதாஉணும் அரனார்தம்
நன் குமரா உமை அருள் பாலா
தஞ்செனவாம் அடியவர் வாழத்
தஞ்சையில் மேவிய பெருமாளே.
பிரமை தீர
அம்பு ராசியிற் கெண்டை சேலொளித்
தஞ்சவே மணிக் குழைவீசும்
அங்கணாரிடத் தின்ப சாகரத்
தங்கி மூழ்கும் இச்சையினாலே
எம்பி ரான் உனைச் சிந்தி யாதொழித்து
இந்த்ரசால இப்பிரமை தீர
இங்கு வாவெனப் பண்பி னால் அழைத்து
எங்குமான மெய்ப்பொருள் தாராய்
கொம்பு போலிடைத் தொண்டை போலிதழ்க்
கொண்டல் போல்குழற் கனமேருக்
குன்று போல்முலைப் பைங்கி ராதியைக்
கொண்ட கோலசற் குணவேலா
சம்பராரியைக் கொன்ற தீவிழிச்
சம்பு போதகக் குருநாதா
சண்ட கோபுரச் செம்பொன் மாளிகைத்
தஞ்சை மாநகர்ப் பெருமாளே
எளிய பாடல்.
கிராதி = வேடர்குலப்பெண்
சம்பராரி = மன்மதன்
சம்புபோதகன் = ஸ்வாமிநாதன்
எங்குமான மெய்ப்பொருள் = அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த பூர்த்தியாகி என்பார் தாயுமானவர். எங்கும் ஈசன் எனாதவர்க்கில்லையே என்பார் அப்பர். மெய்ப்பொருள் எங்கும் இருந்தாலும் சில இடங்களில் அதை விசேஷமாக உணர்கிறோம். பசு உடலில் பால் இருந்தாலும் மடியில் தானே பெறுகிறோம் ? சில கோவில்கள் அத்தகைய சிறப்புப் பெற்றவை. நேரடி தெய்வ அனுபவம் பெற்றவர்களுக்கே 'எங்கும் மெய்ப்பொருள் ' என்ற உணர்வு வரும். அதையே இங்கு அருணகிரிநாதர் வேண்டுகிறார்.
ஞானம் பெற
இந்த்ர தாருவை ஞால மீதி னிற்கொ ணர்ந்த
சங்க பாணிய னாதி கேச வப்ர சங்க
னென்று வாழ்மணி மார்பன் வீர விக்ர மன்றன் மருகோனே
எண்டி சாமுக வேலை ஞால முற்று மண்டு
கந்த தாருக சேனை நீறு பட்டொ துங்க
வென்று பேரொளி சேர்ப்ர காசம் விட்டி லங்கு கதிர்வேலா
சந்த்ர சேகரி நாக பூஷ ணத்தி யண்ட
முண்ட நாரணி யால போஜ னத்தி யம்பை
தந்த பூரண ஞான வேள்கு றத்தி துஞ்சு மணிமார்பா
சண்ட நீலக லாப வாசி யிற்றி கழ்ந்து
கஞ்சன் வாசவன் மேவி வாழ்ப திக்கு யர்ந்த
தஞ்சை மாநகர் ராஜ கோபு ரத்த மர்ந்த பெருமாளே.
மங்கை மாரநு போக தீவி னைப்ப வங்கள்
மங்கி யேகிடு மாறு ஞான வித்தை தந்து
வண்டு லாவிய நீப மாலை சற்றி லங்க வருவாயே
இந்த்ர லோகத்துக் கற்பக விருக்ஷத்தை பூமிக்குக் கொண்டுவந்தவரும், பாஞ்சஜன்யம் என்னும் சங்கைக் கையில் ஏந்தியவரும், ஆதிகேஶவன் என்னும் கீர்த்தி பெற்றவரும், சூரியன் போன்று ஒளிவீசும் கௌஸ்துப மணியை மார்பில் அணிந்துள்ளவரும் , வீர பராக்ரமரும் ஆகிய திருமாலின் மருகனே !
எட்டுத்திக்கிலும் உள்ள கடலால் சூழப்பட்ட பூமி முழுதும் நிறைந்து விளங்கும் கந்தனே! தாருகனும் அவன் சேனையும் முற்றும் தூள்பட்டு அழிய ஜெயித்து பெரும்புகழ்கொண்ட ஒளிபரப்பி விளங்கும் ஒளி வேலனே !
சந்திரனைச் சூடியவள், பாம்பை ஆபரணமாகக் கொண்டவள், பூவுலகை உண்ட நாரணி, விஷத்தை உண்டவள் , அம்பிகை ஆகிய பார்வதி பெற்ற ஞானபூரணனாம் வேளே ! வள்ளி துயில் கொள்ளும் அழகிய மார்பனே!
அதிவேகம் கொண்டதும் நீல நிறத் தோகை உள்ளதுமான மயிலாகிய குதிரைமீது விளங்கி, பிரமன் -இந்த்ரன் வீற்றிருந்து வாழும் பதிகளாகிய மனோவதி, அமராவதி ஆகியவற்றிலும் மேம்பட்டதான தஞ்சை என்னும் பெரும் பட்டணத்தில் உள்ள ராஜகோபுரத்தில் அமர்ந்தருளும் பெருமாளே !
மாதர்களுடன் அனுபோகம் செய்வதால் வரும் கொடிய வினைகளுடன் கூடிய பிறப்புக்கள் எல்லாம் குலைந்து, தொலைந்து போகும்படி, ஞானவித்தையை அடியேனுக்குத் தந்து, நீயும் வண்டுகள் மொய்க்கும் கடப்ப மாலைவிளங்க சற்றே என்முன் வருவாயே !திருமாலையும் அம்பாளையும் அருமையாகப் பாடுகிறார். இங்கு கோபுரத்தமர்ந்த பெருமாளே என்பதால் இத்தலத்தில் வேறு தனிக்கோயில் எதுவும் இருந்திருக்கவில்லை என்று தெரிகிறது. மனோவதி, அமராவதி ஆகிய வற்றைக்காட்டிலும் சிறந்தது என்பதால் அருணகிரியார் காலத்தில் தஞ்சை பெற்றிருந்த செல்வச்செழிப்பும் பிற சிறப்புக்களும் புலனாகும்.
clip-art.library.com. Thanks
No comments:
Post a Comment