Friday, 3 March 2017

73.திருப்புகழ் 67. சத்திமுத்தம், பழையாறை,


73.திருப்புகழ் 67. சத்திமுத்தம்,
பழையாறை, வலஞ்சுழி
சத்திமுத்தம்: ஓரளவுக்காவது பழைய எழிலுடன் விளங்கும் காட்சி.
படம்: Wikimapia

அருணகிரி நாதர் அடுத்து  சத்திமுத்தம் (65), பழையாறை (66), வலஞ்சுழி (67) ஆகிய தலங்களை தரிசித்தார். இவை கும்பகோணத்தைச் சுற்றியிருப்பவை. மூன்றும்  தேவாரப்பாடல் பெற்ற தலங்கள். மூன்று இடத்திலும் பெண்மயல் இன்றி அருள் பெறவேண்டும் என்று பாடுகிறார்.


சத்திமுத்தம்

அடலைபுனை முக்கட்ப ரற்குப்பொ ருட்சொலரு
மறைதனையு ணர்த்திச்செ கத்தைப்பெ ருத்தமயில்
அதனைமுன டத்திக்க ணத்திற்றி ரித்துவரு                  மழகோனே

அபகடமு ரைத்தத்த மெத்தப்ப டைத்துலகி
லெளியரைம ருட்டிச்செ கத்திற்பி ழைக்கவெணு
மசடர்தம னத்தைக்க லக்கித்து ணித்தடரு                       மதிசூரா

விடவரவ ணைக்குட்டு யிற்கொட்க்ரு பைக்கடவுள்
உலவுமலை செப்பைச்செ விக்கட்செ றித்துமிக
விரைவிலுவ ணத்திற்சி றக்கப்ரி யத்தில்வரு                 மொருமாயோன்


விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை
நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய
விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி னிற்குலவு                   பெருமாளே.


கொடிச்சியர்கள்
கணியினில கப்பட்ட ழுத்தத்து யர்ப்படுவ            தொழியேனோ






ஸ்வாமி : சிவக்கொழுந்தீசர். அம்பாள் : பெரியநாயகி.
Wikimapia.


சாம்பல் பூசும் முக்கண் பெருமானுக்குப் பொருள்சொல்லி, அரிய வேதப்பொருளை உபதேசித்து, பெருத்த மயிலை முன் நடத்தி ஒருகணப்பொழுதில்  உலகைச் சுற்றிவந்த அழகனே !


வஞ்சகப்பேச்சைப் பேசி, பொருட்செல்வம்  அதிகம் உடையவராய், உலகிலே எளியோரைப் பயமுறுத்தி மயக்கி பூமியில் பிழைக்க எண்ணுகின்ற மூடர்களின் மனதைக் கலக்கியும்,வெட்டிப்பிளந்தும் நெருக்கும் அதி சூரனே !


விஷம்கொண்ட பாம்பணையில் துயில்கொள்ளும்  க்ருபாமூர்த்தி, கஜேந்த்ரன்  கூவியழைத்ததை நன்கு காதில்வாங்கி, மிக்க வேகத்துடனே கருடன்மீது விளங்கிப் பிரியத்துடன் வந்த ஒப்பற்ற திருமால்  அன்பு கொள்ளும் மருகனே !


மாமரமாகக் கடலில் நின்ற சூரனை நெறு நெறுவென வெட்டின  உக்ர வேலாயுதம் என்னும் ஒப்பற்ற படையை உடையவனே !ரிஷபவாகனம் கொண்ட சிவபிரான்  வீற்றிருக்கும் திருச்சத்திமுத்தம்  தலத்தில் விளங்கும் பெருமாளே !


பெண்களின் கண்ணாகிய வலையில் அகப்பட்டுத் துன்பப்படுவதை  ஒழிக்கமாட்டேனா !

பழையாறை




பா.ஜம்புலிங்கம். நன்றி



ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகராக மகோன்னதமாக இருந்த இந்த நகரை இன்னொரு தமிழ் அரசனாகிய ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் நாசமாக்கினான். இங்கிருந்த சோமேசர் கோயில் மட்டும் தப்பியது. பொன்னியின் செல்வனைப் படித்துவிட்டு இங்குவரும் எவருக்கும் கண் கலங்காமல் இருக்காது.
ஸ்வாமி சோமேசர். அம்பாள் சோமகமலாம்பிகை.

வேடிக்கைக் காரவு தாரகு
ணாபத்மத் தாரணி காரண
வீரச்சுத் தாமகு டாசமர்                        அடுதீரா

வேலைக்கட் டாணிம காரத
சூரர்க்குச் சூரனை வேல்விடு
வேழத்திற் சீரரு ளூறிய                       இளையோனே

ஆடத்தக் காருமை பாதியர்
வேதப்பொற் கோவண வாடையர்
ஆலித்துத் தானரு ளூறிய                            முருகோனே

ஆடப்பொற் கோபுர மேவிய
 ஆடிக்கொப் பாமதிள் சூழ்பழை
 யாறைப்பொற் கோயிலின் மேவிய            பெருமாளே.


கூளச்சித் தாளனை மூளனை               வினையேனைக்

கோபித்துத் தாயென நீயொரு
போதத்தைப் பேசவ தாலருள்
கோடித்துத் தானடி யேனடி                          பெறவேணும்




வினோதமான திருவிளையாடல்கள் செய்பவனே ! தாராளகுணம் உடையவனே !
தாமரை மாலை அணிபவனே ! மூலபுருஷனே ! வீரம்மிக்க பரிசுத்த மூர்த்தியே ! கிரீடம் அணிந்தவனே ! போரில் கொல்லும் தீரனே !


வேலையில் சமர்த்தனும், மஹாரத சூரர்களுக்கெல்லாம் சூரனுமாகிய சூரன்மீது வேலைச் செலுத்திய இளையோனே ! ஐராவதம் என்னும் யானையின்மீது சீரான திருவருள் ஊறின இளையோனே !


கூத்தாட வல்லவர், உமாதேவிக்குத் தமது உடலில் பாதிபாகம் கொடுத்தவர், வேதத்தையே அழகிய கோவண ஆடையாக உடையவர், களித்து, மகிழ்ந்து திருவருள் சுரந்து தந்த குழந்தையே !

பொன்மயமான அழகிய  கோபுரத்தைக் கொண்டதும், பளிங்குக்கு ஒப்பான மதில் சூழ்ந்ததுமான பழையாறைத் தலத்தில் அழகிய திருக்கோயிலில்  அமர்ந்த பெருமாளே !


கூளம் போன்ற பயனற்ற அறிவுடைய என்னை, அத்துடன்  முயற்சிகள் செய்யமுற்படும் என்னை,


தாய்போல நீ கண்டித்து, ஒப்பற்றதான ஞானத்தை உபதேசிக்க, அதனால் ஞானம் பெற்றவனாய் உன் திருவருளைப் புகழ்ந்து பிரார்த்தித்து அடியேன் உன் திருவருளைப் பெறவேணும்.


விமானம் . 
 sibipranav.blogspot.in Thanks.


வலஞ்சுழி

புராணப் புகழ்பெற்ற தலம். காவேரி இங்கு வலமாகச் சுழித்துச் செல்கிறது. ஸ்வாமி கபர்தீஶ்வரர், கற்பகநாதேஶ்வரர், செஞ்சடைநாதர், வலஞ்சுழிநாதர்.  அம்பாள் ப்ருஹன்நாயகி, பெரியநாயகி. இங்கு வெள்ளை விநாயகர் (ஶ்வேத கணபதி ) மிகவும் பிரசித்தம்.



தினமலர். நன்றி.

நிகரில் வஞ்சக மாரீ சாதிகள்
     தசமு கன்படை கோடா கோடிய
     நிருத ரும்பட வோரே வேவியெ           யடுபோர்செய்

நெடிய னங்கனு மானோ டேயெழு
     பதுவெ ளங்கவி சேனா சேவித
     நிருப னம்பரர் கோமான் ராகவன்           மருகோனே


சிகர வும்பர்கள் பாகீ ராதிகள்
     பிரபை யொன்றுபி ராசா தாதிகள்
     சிவச டங்கமொ டீசா னாதிகள்                      சிவமோனர்

தெளியு மந்த்ரக லாபா யோகிகள்
     அயல்வி ளங்குசு வாமீ காமரு
      திருவ லஞ்சுழி வாழ்வே தேவர்கள்           பெருமாளே.


பசாசே போல்பவ          ருறவாமோ



ஒப்பில்லாத வஞ்சகச் செயலில் ஈடுபட்ட மாரீசன் முதலிய அரக்கர்கள், ராவணன் அவனுடைய கோடானுகோடி சேனை  அரக்கர்கள்  இவர்கள் யாவரும் அழியும்படி ஒரு அம்பைச் செலுத்தி, அடுத்துவந்த போரைச் செய்த


 நெடியோனாகிய மாயோன், ஹனுமாருடன் எழுபது வெள்ளம் குரங்குப்படையால் வணங்கப்பெற்ற அரசன், தேவர்களுக்குத் தலைவன், ராகவனாய் அவதரித்தவன் ஆகிய திருமாலின் மருகனே !


மேலான தேவர்கள், பகீரதன் முதலிய அடியார்கள், ஞான ஒளிபொருந்திய தெய்வ அனுக்ரஹம் பெற்றவர்கள், சிவ சம்பந்தமான கிரியைகளில் வல்ல ஈசானன் முதலியோர், சிவ முனிவர்கள்,


தெளிந்த மந்திர சாஸ்திரத்தில் மனதைச் செலுத்தின யோகிகள் - ஆகிய இவர்கள் யாவரும் பக்கத்தில் நிற்க விளங்கும் ஸ்வாமியே ! அழகிய திருவலஞ்சுழியின் செல்வனே ! தேவர்கள் பெருமாளே !


பிசாசு போன்ற (பொது ) மகளிரின் சம்பந்தம்  தகுமோ ? தகாது என்றபடி.


திருவலஞ்சுழி க்ஷேத்ரபாலர் கோயிலில்  ஒரு காட்சி. அமரர் சில்பி வரைந்தது.
திருப்பணி என்ற பெயரில் மூடர்கள்  இதுபோன்ற அரிய சிற்பங்களையும்  கல்வெட்டுக்களையும் சிதைத்துவருகின்றனர்.  மேலும் விவரங்களுக்கு  www.varalaaru.com பார்க்கவும். [ accessed 4 March 2017 ].



No comments:

Post a Comment