72.திருப்புகழ் 66.கொட்டையூர்
படம்: தினமலர்.காம். நன்றி
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 64 வது தலம் கொட்டையூர். இது கும்பகோணம் - சுவாமிமலை சாலையில் உள்ளது. புராண சரித்திர வரலாறுகள் உள்ள இடம். ஸ்வாமி கோடீஶ்வரர், கைலாசநாதர். அம்பாள்
ஸ்ரீ கந்துக க்ரீடாம்பாள் என்னும் பந்தாடு நாயகி. இத்தலத்தின் பெருமையை சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் "ஜய மங்கள ஸ்தோத்திர " த்தில் எழுதியிருக்கிறார். இது அப்பர் பாடிய தலம்.
விண்டார் புரமூன் றெரித்தான் கண்டாய்
விலங்கலில்வல் லரக்கனுட லடர்த்தான் கண்டாய்
தண்டா மரையானும் மாலுந் தேடத்
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார்பூஞ் சோலைவலஞ் சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோ டங்கங்
கொண்டாடு வேதியர்வாழ் கொட்டை யூரிற்
கோடீச் சரத்துறையுங் கோமான் றானே.
[ 6ம் திருமுறை ]
இங்கு அருணகிரியார் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.
அடியார்களொடு சேர
சுட்டபொருட் கட்டியின்மெய்ச் செக்கமலப் பொற்கொடியைத்
துக்கமுறச் சொர்க்கமுறக் கொடியாழார்
சுத்தரதத் திற்கொடுபுக் குக்கடுகித் தெற்கடைசிச்
சுற்றுவனத் திற்சிறைவைத் திடுதீரன்
கொட்டமறப் புற்றரவச் செற்றமறச் சத்தமறக்
குற்றமறச் சுற்றமறப் பலதோளின்
கொற்றமறப் பத்துமுடிக் கொத்துமறுத் திட்டதிறற்
கொற்றர்பணிக் கொட்டைநகர்ப் பெருமாளே.
கெட்டவினைத் தொழிலாலே
துட்டனெனக் கட்டனெனப் பித்தனெனப் ப்ரட்டனெனச்
சுற்றுமறச் சித்தனெனத் திரிவேனைத்
துக்கமறுத் துக்கமலப் பொற்பதம்வைத் துப்பதவிச்
சுத்தியணைப் பத்தரில்வைத் தருள்வாயே
சுட்ட தங்கக்கட்டி போன்ற தேகம் உடையவளும், செந்தாமரையில் வீற்றிருக்கும் லக்ஷ்மியுமேயான அழகிய கொடிபோன்ற சீதையை துக்கப்படும்படிச் செய்து,
ஆகாயத்தை அளாவும் வீணைக்கொடியுடைய தேரில் அவளை எடுத்துச் சென்று, தெற்கு திசையை நெருங்கி, வளைந்தமைந்த அசோகவனத்தில் சிறையில் வைத்த ராவணன் என்னும் தைரியசாலியின்
கொட்டம் அழிய, புற்றுப் பாம்பின் கோபம் போன்ற கோபம் அற்று ஒழிய, குரலும் அடங்க, சுற்றத்தார்கள் அனைவரும் மாண்டுபோக,
அவனுக்கிருந்த பல தோள்களின் வீரம் குலைய, பத்து முடிக்கூட்டத்தை அறுத்துத் தள்ளின வீரம் மிக்க வெற்றியாளராம் ஸ்ரீ ராமன் (திருமால் ) பணிந்து பூஜித்த கொட்டையூரின் பெருமாளே !
கெட்டவினையைப் பெருக்குவதான தொழிலாலே
துஷ்டன் என்றும், கஷ்டத்திற்கு ஆளானவன் என்றும், பித்தன் என்றும், நல்ல நெறியிலிருந்து வழுவிய பிரஷ்டன் என்றும்,பாவ எண்ணங்களுடன் எங்கும் திரிபவன் என்றும் அலைகின்ற என்னுடைய
துக்கங்களை ஒழித்து, தாமரை போன்ற அழகிய திருவடியில் என்னைச் சேர்த்தும், பரிசுத்தமான நல்ல பதவியை அடைந்துள்ள பக்தர் கூட்டத்தில் என்னைச் சேர்த்தும் அருள்புரிவாயாக.
பாதிப் பாடலில் ராமாயண நிகழ்சிகளைச் சொல்கிறார். ராவணனுடைய வீணைக்கொடியைச் சொல்கிறார். ராவணனுக்கு பாம்புபோல் கோபம் வரும் என்கிறார். இதையே கம்பரும் சொல்கிறார்:
தீவிடத்து அரவந்தானே உருகெழு சீற்றம் பொங்கிப்
பணம்விரித் துயர்ந்த தொத்தான்.
அப்படிப்பட்டவனுடைய கொட்டத்தை அடக்கியவர் ராமர். அவரது மருகன் கொட்டையூரில் இருப்பது எவ்வளவு பொருத்தமானது !
ஒருவிதத்தில் தன்னுடைய கொட்டத்தையும் அதனால் ஏற்படும் துன்பத்தையும் போக்கவேண்டும் என்று வேண்டுகிறார் !
1881v,blogspot.in thanks.
No comments:
Post a Comment