Monday, 6 March 2017

74.திருப்புகழ் 68.சுவாமிமலை-1


74.திருப்புகழ் 68. சுவாமிமலை -1


குக்கே சுப்ரமண்யா கோயில்.
soorajna CC BY-SA 3.0 creativecommons via Wikimedia Commons.

ஆறு தலங்கள் : அறுபடைவீடு
ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த  68வது தலம் சுவாமிமலை என்னும் திருவேரகம். இது முருகன் எழுந்தருளியுள்ள ஆறு பிரதான தலங்களில்  
நான்காவதாக வைத்து எண்ணப்படுகிறது. இத்தலங்களை "அறுபடைவீடு " என்று சொல்கிறோம். இத்தலங்களை  இந்தமாதிரி நமக்கு அறிமுகப்படுத்தியவர்  சங்கப்புலவர்  நக்கீரர். அவர் எழுதிய திருமுருகாற்றுப்படை , சங்க நூல்கள்  36 லும் முதன்மையாக இருக்கிறது. அதில்தான் இந்த 6 தலங்களைப்பற்றி  முதலில் நமக்குச் சொல்லியிருக்கிறார்.  ஆனால் அவர் படைவீடு என்று சொல்லவில்லை!

குன்றமர்ந்து  உறைதலும் உரியன் [திருப்பரங்குன்றம் ]
அலைவாய்ச் சேரலும் நிலைஇய பண்பே [திருச்சீரலைவாய் ]
ஆவினன் குடி அசைதலும் உரியன்
ஏரகத்து உறைதலும் உரியன்
குன்றுதோராடலும் நின்றதன் பண்பே
பழமுதிர்சோலை மலைகிழவோனே

என்று இத்தலங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் நக்கீரர்.

எது திருவேரகம் ?


இவற்றில் எது  திருவேரகம் என்பது பற்றி சில மாற்றுக்கருத்துக்கள் இருக்கின்றன. இன்று கும்பகோணத்துக்கு அருகில் உள்ள ஸ்வாமிமலையே திருவேரகம் எனக்கொள்கிறோம். முருகன் குறிஞ்சி நிலத்துக்கு - மலையும் மலை சார்ந்த இடமும் - அதிபதி. குன்றெல்லாம் குமரன் என்கிறோம். ஆனால் சுவாமிமலையில் குன்றெதுவும் இல்லை ! அங்கிருப்பது செயற்கைக் குன்று.
அதனால் இது உண்மையான , பழைய திருவேரகமில்லை என்று சிலர் கருதுகிறார்கள். மலை நாட்டில் [ இன்றைய கர்னாடகாவின் ஒரு பகுதி ] உள்ள  "சுப்ரஹ்மண்யா " என்னும் க்ஷேத்திரமே திருவேரகம் என்பது இவர்கள்  கருத்து. இங்கு  குமாரதாரா என்னும் ஆறு ஒடுகிறது. அருகில் குமாரபர்வதம் என்னும் மலையும் இருக்கிறது. இங்கு சுப்ரமண்யரை நாகர்வடிவில் வழிபடுகிறார்கள். கும்பகோணம் பகுதியில் உள்ள சிலகுடும்பங்களுக்கு  இந்த சுப்ரமண்யரே குலதெய்வமாகவும் விளங்குகிறார் !. அதனால் இந்தக் கருத்திலும் ஏதோ உண்மை இருக்கவேண்டும். 




குமாரதாரா ஆறு. ஒரு தோற்றம்.
Holiday1Q


ஆனால் அருணகிரிநாதர் ஸ்வாமிமலையே திருவேரகம் எனப்பாடுகிறார்.:

தனி யேரகத்தின் முருகோனே
தருகாவிரிக்கு வடபாரிசத்தில்
சமர்வேலெடுத்த பெருமாளே !

ஏரகவெற்பெனும் அற்புதமிக்க
சுவாமிமலைப்பதி மெச்சிய சித்த
இராஜத லக்ஷண லக்ஷுமி பெற்றருள் பெருமாளே !

எனவே, அருணகிரிநாதர் காலத்திலேயே  ஸ்வாமிமலையே திருவேரகம் என வழங்கியது என்பது தெரிகிறது, இங்கும் குமாரதாரா என்ற ஒரு தீர்த்தம் இருக்கிறது! நமக்கு அருணகிரிநாதர் வாக்கே ப்ரமாணமாதலால்  இதற்குமேல் ஆராய்ச்சி அவசியமில்லை'



குமாரபர்வதம்
https://explorerinyou.wordpress.com

திருமுருகாற்றுப்படையில் திருவேரகம்.

தமிழ் இலக்கியத்தில் நக்கீரர்தான் முதன்முதலில் இந்த ஆறு தலங்களை ஒன்றாகவைத்து எண்ணும் முறையைக் கற்பித்தார். இதில் நான்காவதாக வரும் திருவேரகத்தைப் பற்றி அருமையாகப் பாடியிருக்கிறார். 

முருகன்  மலைப்பகுதிக்கு உரிய தெய்வமானாலும் அவனை மும்மூர்த்திகள், தேவர், முனிவர், மனிதர் என அனைவரும் வழிபடுகின்றனர். மனிதர்களும் ஒவ்வொரு சமூகத்தினரும் அவரவர் குலவழக்கப்படியே வழிபடுகின்றனர். குறவர்கள், மலையில் வாழும் பூசாரி, முதலியோர் கள்ளைக் குடித்தும், ஆட்டை அறுத்தும் வழிபடுகிறார்கள். ஒவ்வொரு ஊரிலும்  தினையும் மலரும் கொண்டு, ஆட்டை அறுத்து விழா எடுக்கிறார்கள். சிலர் வெறிவந்து ஆடுகிறார்கள். பறைகொட்டி குறவை ஆடுகிறார்கள்.முருகன் அவரவர்கள் வழிபடுவதையெல்லாம் உவந்து ஏற்று, அவர்களுக்கு வேண்டியவாறு அருள்புரிகிறான். இதையெல்லாம் நமக்குப் படம்பிடித்துக்காட்டும் நக்கீரர், திருவேரகத்தில் பிராமணர்கள் எப்படி வழிபட்டனர் என்பதைக் காட்டுகிறார்.

இருமூன்று எய்திய இயல்பினின் வழாஅது
இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
அறுநான்கு இரட்டி  இளமை நல்லியாண்டு
ஆறினிற் கழிப்பிய அரன் நவில் கொள்கை
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து
இருபிறப்பாளர் பொழுதறிந்து நுவல
ஒன்பது கொண்ட மூன்றுபுரி  நுண்ஞாண்
புலராக் காழகம் புலர உடீஇ
உச்சிக்கூப்பிய  கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கின் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிது உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்.


[தங்களுக்கென்று விதிக்கப்பட்ட ] ஆறு தொழில்கள் என்ற இலக்கணத்திலிருந்து  பிறழாதவர்கள்;
தாய், தந்தை என்ற இருவழியிலும் பல்வேறு பழைய கோத்திரத்தை உடையவர்கள்;
இளமைப்பருவத்துக்குரிய 48  நல்ல வருஷங்களை  நிற்கவேண்டிய நல்ல நெறியிலே  [பிரம்மசரியம் ] நின்று  கழித்தவர்கள்; 
தர்மத்தையே விளக்கும் கொள்கை உடையவர்கள் ;
மூன்று வகையாகச் சொல்லப்பட்ட மூன்று வேள்வித் தீயையே செல்வமாக உடைய இருபிறப்பாளராகிய அந்தணர்கள் ;
முருகனைத் துதிக்கும் சமயம் [ நல்ல முஹூர்த்தம்] அறிந்து  தோத்திரங்கள் சொல்லவும்;
ஒன்பது நூலை முறுக்கிய மூன்று புரிகளாகிய நுண்ணிய பூணூலை அணிந்து,
உலராத ஈர ஆடையை  (உடலில் ) கிடந்தவாறே உலரும்படியாக உடுத்து,
தலைமேலே கைகளைக்குவித்து,  முருகனைப் புகழ்ந்து,
ஆறெழுத்துக்கள்  தன்பால் கொண்டதான அரிய உபதேச மந்திரத்தை, நாக்கு நன்கு புரளுமாறு பலமுறை கூறி,
மணம்மிக்க நறுமலர்களை ஏந்தி வழிபடவும்,
அதற்கு மிகவும் மகிழ்ந்து திருவேரகத்திலே  எழுந்தருளி இருப்பதற்கும் உரியவன் முருகன். 
இவ்வாறு பதின்மூன்றே வரிகளில் பல  அரிய செய்திகளைச் சொல்லியிருக்கிறார். நக்கீரர்.
இந்தத் தலத்திற்கு வந்த அருணகிரிநாதர்  38 அரிய, அற்புதமான பாடல்களைப் பாடியிருக்கிறார்,

குறிஞ்சிப் பூ - 12 வருஷங்களுக்கு ஒருமுறை பூக்கும் 
படம்: indrayavanam.blogspot.in Thanks




No comments:

Post a Comment