Tuesday, 9 February 2016

23.திருப்புகழ் - 21. மயேந்திரப்பள்ளி.



23. திருப்புகழ் -21. மயேந்திரப்பள்ளி


FROM:naavaapalanigotrust.com.

ருணகிரிநாதர் தரிசித்த அடுத்த -20வது- தலம்  மயேந்திரப்பள்ளி என்னும் மஹேந்திரப்பள்ளி. இந்த்ரன் பூஜித்ததனால் இந்தப்பெயர் வந்தது.

ஸ்வாமி பெயர் சோமசுந்தரர் என்னும் திருமேனி அழகர். அம்பாள் பெயர் வடிவாம்பாள், வடிவாம்பிகை, வடிவம்மை. இங்கு ஸுப்ரஹ்மண்யர் ஒருமுகம், நான்கு கைகளுடன், வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலிக்கிறார்.

திருஞானசம்பந்தர் பாடிய தலம். அவர் பதிகத்தில் இத்தலத்தின் செழுமையையும் வளமையையும் பலவாறு புகழ்ந்திருக்கிறார். இன்று இதை நாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது!

திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரும் அகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலால் எயிலெய்த  மயேந்திரப் பள்ளியுள்
அரவரை அழகனை  அடியிணை பணிமினே.

கொண்டல்சேர் கோபுரம் கோலமார் மாளிகை
கண்டலும் கைதையும் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி  மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான்  திருந்தடி பணிமினே.

நித்திலத் தொகைபல  நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த்  திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ்  கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.

சந்திரன் கதிரவன்  தகுபுகழ் அயனொடும்
இந்திரன் வழிபட இருந்தவெம் இறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமில் அழகனை அடிபணிந் துய்மினே.

வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி  ஞானசம்பந்தன் சொல்
நம்பரம் இதுவென நாவினால் நவில்பவர்
உம்பரார் எதிர்கொள உயர்பதி அணைவரே.


பூஜைக்கு கைகளில் மலர்களை ஏந்திவருவது போல, கடல் அலைகள் முத்துக்களைக் கரையில் கொண்டு சேர்க்கின்றனவாம்! [நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச் சித்திரப் புணரி சேர்த்திட] சூரிய சந்திரனும், ப்ரம்மாவும் இந்த்ரனும் வழிபட்ட இத்தலத்தில் வேத மந்த்ர ஒலி மிகுந்திருந்ததாம்! மேகத்தைத் தொடும் கோபுரங்களும் எழிலார்ந்த மாளிகைகளும் தாமரை மலர்ந்திருந்த குளங்களும் வண்டுசூழும் பூந்தோட்டங்களும் இருந்தனவாம்! இதை இன்று கற்பனைதான் செய்து பார்க்கவேண்டும்!



எத்தனை அழகான நந்தி  தேவர்!

இத்தலத்தில் நம் ஸ்வாமிகள் ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார்.

வண்டணி யுங்கமழ் கூந்த லார்விழி
     அம்பிய லுஞ்சிலை போந்த வாணுதல்
          வண்டர ளந்திக ழாய்ந்த வார்நகை ...... குயில்போல

வண்பயி லுங்குவ டாண்ட மார்முலை
     யின்பொறி யங்குமி ழாம்பல் தோள்கர
          வஞ்சியெ னுங்கொடி சேர்ந்த நூலிடை ...... மடவார்பொன்

கண்டவு டன்களி கூர்ந்து பேசிகள்
     குண்டுணி யுங்குரல் சாங்க மோதிகள்
          கண்சுழ லும்படி தாண்டி யாடிகள் ...... சதிகாரர்

கஞ்சுளி யுந்தடி யீந்து போவென
     நஞ்சையி டுங்கவ டார்ந்த பாவிகள்
          கம்பையி லுஞ்சட மாய்ந்து நாயனு ...... முழல்வேனோ


அண்டரு டன்தவ சேந்து மாதவர்
     புண்டரி கன்திரு பாங்கர் கோவென
          அஞ்சலெ னும்படி போந்து வீரமொ ...... டசுராரை

அங்கமொ டுங்கிட மாண்டொ டாழிக
     ளெண்கிரி யும்பொடி சாம்பர் நூறிட
          அந்தக னுங்கயி றாங்கை வீசிட ...... விடும்வேலா

செண்டணி யுஞ்சடை பாந்தள் நீர்மதி
     யென்பணி யன்கன சாம்பல் பூசிய
          செஞ்சட லன்சுத சேந்த வேலவ ...... முருகோனே

திங்கள்மு கந்தன சாந்து மார்பின
     ளென்றனு ளம்புகு பாங்கி மானொடு
          சிந்தைம கிழ்ந்தும யேந்த்ர மேவிய ...... பெருமாளே.



முதல் நான்கு அடிகளில்  பொது மகளிரின் வஞ்சனைச் செயல்களை விளக்கி, அதில் விழலாகாது என எச்சரிக்கிறார். இதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேணும்.
ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் பொதுமகளிரை நாடும் வழக்கம் மிகப் பரவலாகவே இருந்தது. இதைச்  சங்க நூல்களில் மிகத்தெளிவாகப் பார்க்கலாம். இதை எந்தச்  சங்க இலக்கியமும்  கண்டித்ததாகத் தெரியவில்லை. திருக்குறள் போன்ற நீதி நூல்களில்தான் இது கண்டிக்கப்படுகிறது. அருணகிரிநாதர்  இதைப் பலபாடல்களில் பலவாறு கண்டிக்கிறார். முதலில் பார்த்தால் பெண்களின் வர்ணனை போலிருக்கும் , ஆனால் அதை இகழ்ந்து பேசுவது  பின்னால் புரியும். அருவருப்பு  உணர்ச்சியே மிகும்.

பொதுவாக, ஆண்-பெண் கவர்ச்சியின் மேல்தான் உலகமே இயங்குகிறது. [பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ - திருச்சாழல், மாணிக்கவாசகர்.]பெரியவர்கள் அதைக் கண்டித்துப் பேசுவார்கள்- ஆனால் அவர்கள் கண்டிக்கும் முறை வித்தியாசப்படும். ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்கிறார்:

தருணஸ்தாவத்  தருணீ ஸக்த:

வாலிபர்களுக்கு பருவப்பெண்களிடம் கவர்ச்சி உண்டாகிறது

நாரீ ஸ்தனபர நாபீ தேஶம்
மாகா த்ருஷ்ட்வா மோஹாவேஶம்.
ஏ தன் மாம்ஸ வஸாதி விகாரம்
மனஸி விசிந்தய வாரம் வாரம்


பெண்களின்  ஸ்தனங்களையும் நாபிப் பிரதேசத்தையும் பார்த்து, மதிமயங்கி ஆவேசத்தை அடையாதே. இதெல்லாம் மாமிசம்., கொழுப்பு  ஆகியவற்றின் வேறுபட்ட வடிவங்களே. இதை அடிக்கடி மனதில் நினைத்துப் பார்.

அருணகிரிநாதர் இதையே நமக்கு அடிக்கடி நினைவூட்டுகிறார்.."மாம்ஸ வஸாதி விகாரம் " என்பதை பலவாறு விளக்குகிறார். குறிப்பாக,அன்றையதமிழ் நாட்டினருக்கு இந்த எச்சரிக்கை  அவசியமாக இருந்தது,

சமீப காலத்தில் ஸ்ரீ ராமக்ருஷ்ணரும் " காமினி- காஞ்சனம்"  ஆகியவையே மாயையின் உருவம் என எப்போதும் எச்சரித்து வந்தார்.

பாடலின் பின் நான்கு அடிகளில் முருகனின் பெருமையை விளக்குகிறார்.

தேவர்கள், தபஸ்விகள், ப்ரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம்  (சூராதி அஸுரர்களால் ) வருந்த, அவர்களை அஞ்சாதீர்கள் எனும்படிச் சென்று

மிக்க வீரத்துடன், அசுரர்கள் உடல் ஒடுங்கி மாளும்படியும், கடல்கள் வறண்டுபோகவும், எட்டு மலைகளும்  தூளாகும்படியும், யமனும் பாசக்கயிற்றை வியப்புடன் அங்கு வீசவும், வேலாயுதத்தைச் செலுத்தியவனே!

சடையில் பூச்செண்டுடன் பாம்பு, கங்கை, சந்திரன், எலும்பு ஆகியவற்றை அணிந்தவன், பெருமை மிகுந்த திருநீற்றைப் பூசியுள்ள சிவந்த தேகத்தினன், ஆகிய சிவனது குமாரனே ! சிவந்த நிறமுடையவனே! வேலனே !முருகோனே!

சந்திரன் போன்ற திருமுகத்தையும், சந்தனம் பூசிய மார்பையும் உடையவளும், என் உள்ளத்தில் வாழ்பவளுமான வள்ளியுடன் மனம் மகிழ்ந்து மயேந்திரப்பள்ளியில்  வீற்றிருக்கும் பெருமாளே !

பெண்கள் மயலில் உழலாமல் இருக்கவேண்டும்.

நமது புராணங்களில் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு அஸுரனை மாய்க்க  ஒவ்வொரு தெய்வம் அவதாரமெடுத்ததாக வரும். அப்போது அந்தந்த தெய்வங்களையே  பெரிதாகச் சொல்வார்கள். ஏனெனில், அஸுரர்களும் கடினமான தவங்களைச் செய்தே தெய்வங்களிடமிருந்தே வரம் பெற்றவர்கள். வரம் கொடுத்த தெய்வமே அவர்களைத்  தண்டிக்க முடியாது,  அதனால் வேறு  உருவில்தான் (வேறு தெய்வமாகத்தான்) தண்டிக்க வேண்டும். அப்படி நேரும்போது எல்லாதெய்வங்களும் ஒத்துழைப்பதாகவே வரும். 

இங்கு ப்ரம்மா, விஷ்ணு  இவர்களெல்லாம் அஸுரர்களால் துன்பப்பட்டார்கள், முருகன் வேல் எய்து அஸுரர்களை மாய்த்தான் என்பதால், ப்ரம்மா, விஷ்ணுவுக்கு குறைவு  நேர்ந்ததாக நினைக்கக் கூடாது. 

ஸுப்ரஹ்மண்யரின் அவதாரம் சூர ஸம்ஹாரத்திற்காக நிகழ்ந்தது. இதை அருணகிரிநாதரே தெளிவாகச் சொல்லியிருக்கிறார்:

வெங்காள கண்டர்கைச் சூலமும்  திருமாயன் 
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமும் சூரன் குலங்கல்லி 
வெல்லா எனக் கருதியே
சங்க்ராம நீஜயித் தருளெனத்  தேவருடன் 
சதுர்முகனும் நின்றிரப்ப
சயிலமொடு சூரனுடல் ஒரு நொடியில் உருவியே 
தனி ஆண்மைகொண்ட நெடுவேல்

[வேல் விருத்தம்]


இங்கே வார்தைகளைக் கவனிக்க வேண்டும்.

சிவன் கைச்சூலம் வெல்லாது. 
திருமாயன் வெற்றிபெரும் சுடர் ஆழி =  பெருமை மிகுந்த விஷ்ணுவின் ஆயுதமாகிய  என்றும் வெற்றியை அடையும் ஒளிபொருந்திய சக்கரம்!
இங்கு விஷ்ணுவையும் அவர் சக்ராயுதத்தையும் எப்படிப் போற்றிச் சொல்லியிருக்கிறார்! ஆனால் அதுவும் சூரனை வெல்லாது!
இந்த்ரனுடைய வஜ்ராயுதமும் வெல்லாது!

அதனால், சூர ஸம்ஹாரத்திற்கென்றே  வந்தவர் ஸுப்ரஹ்மண்யர்! இது நமது அறிவுக்கு எட்டாத சூக்ஷ்மம். இவர்தான் தேவஸேனாபதி என்ற பட்டத்தைப் பெற்றவர் ! அதனால்தான் கீதையில் ஸ்ரீ பகவான்  ஸேனாதிபதிகளுக்குள் நான் ஸ்கந்தன்  [ ஸேனானீனாம் அஹம் ஸ்கந்த:  10.24 ]என்று சொல்கிறார்!

ஒரே பரம்பொருள்தான் நமது நன்மைக்காக இத்தனை வடிவங்களையும் தாங்கி வருகிறது  என்று உணர்பவர்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லை! 



இந்தத் தலத்துடன் அருணகிரி நாதரின் யாத்திரையில் ஒரு கட்டம் நிறைவுபெறுகிறது,  இங்கிருந்து அவர் சீர்காழிக்கு வருகிறார். அதுமுதல் அடுத்த யாத்திரை தொடங்குகிறது.

Monday, 8 February 2016

22. திருப்புகழ்- 20. ஆச்சாபுரம்- திருநல்லூர்ப்பெருமணம்.



22.திருப்புகழ் -20. ஆச்சாபுரம்-
திருநல்லூர்ப்பெருமணம்



ருணகிரிநாதர்  தரிசித்த அடுத்த தலம் -19வது- ஆச்சாபுரம் என்னும் நல்லூர். ஆச்சாள்புரம் என்பது இன்றைய பெயர். ஊரின் பெயர் நல்லூர். கோவிலின் பெயர் பெருமணம். எனவே, திருநல்லூர்ப் பெருமணம்.
சிதம்பரத்திற்கும் சீர்காழிக்கும் அருகில் உள்ளது.

இங்கு ஸ்வாமிபெயர் சிவலோகத்தியாகேசர், சிவலோக நாதர். கல்வெட்டில் திருப்பெருமணமுடைய மகாதேவர் என்று இருக்கிறது. அம்பாள் பெயர் சுவேத விபூதி நாயகி, விபூதி கல்யாணி, வெண்ணீற்று உமை நங்கை.

இது நினைத்தாலே புல்லரிக்கும் அற்புதத் தலம். ஞானசம்பந்தருக்கு 16 வயது ஆனதும் அவருக்கு திருமணம் முடிக்க இவ்வூரிலுள்ள  நம்பியாண்டார் நம்பிகளின் மகளான "ஸ்தோத்ரபூர்ணாம்பிகை" யை நிச்சயித்து, திருமணமும் நடந்தது. சடங்குகள்  விதிப்படி நடந்து முடிந்தவுடன்  சம்பந்த ஸ்வாமிகள்  , வினைக்கு இடமாகும் மணவாழ்வு வந்ததே என நினைத்துக் கோவிலினுள் சென்று பதிகம் பாடி வழிபட்டார். அப்போது " வந்த அனைவருடன் இங்கு சிவஜோதியில் கலந்துவிடுக " என பெருமான் சிவஜோதியாக விளங்க, சம்பந்தர்  வந்திருந்த அனைவருடன் அந்த ஜோதியில் ஐக்கியமானார்! அதனால் இது முக்தித்தலமாகக் கருதப்படுகிறது. சம்பந்தர்  தனது யாத்திரையில் கடைசியாக வந்த தலம் இதுவேயாகும். இங்கு மணக்கோலத்தில் தோத்திர பூர்ணாம்பிகையுடன் கூடிய சம்பந்தரின்  அழகிய மூலவிக்ரஹம் இருக்கிறது.



இத்தலத்தில் சம்பந்தர் பாடிய பதிகம் :

கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்
பல்லூர்ப் பருமணம் பாட்டு மெய் யாய்த்தில
சொல்லூர்ப் பெருமணம் சூடல ரேதொண்டர்
நல்லூர்ப் பெருமண மேய நம்பானே.


தருமணல் ஓதம்சேர் தண்கடல் நித்திலம்
பருமண லாக்கொண்டு பாவை நல்லார்கள்
வருமணம் கூட்டி மணம் செயும் நல்லூர்ப்
பெருமணத் தான்பெண்  ணோர்பாகம் கொண்டானே.

அன்புறு சிந்தைய ராகி யடியவர்
நன்புறு நல்லூர்ப் பெருமண மேவிநின்று
இன்புறும் எந்தை இணையடி யேத்துவார்
துன்புறு வாரல்லர் தொண்டுசெய் வாரே.

மேகத்த கண்டனெண் தோளன் வெண்ணீற்றுமை
பாகத்தன் பாய்புலித் தோலொடு பந்தித்த 
நாகத்தன் நல்லூர்ப் பெருமணத்தான் நல்ல
போகத்தன் யோகத்தை யேபுரிந் தானே.

நறும்பொழிற் காழியுள்  ஞானசம்பந்தன்
பெறும்பத நல்லூர்ப் பெருமணத் தானை
உறும்பொரு ளாற்சொன்ன ஒண்தமிழ் வல்லார்க்கு
அறும்பழி பாவம் அவலம் இலாரே.


  ஜோதியில் கலக்கும்போது பாடிய பதிகம் "காதலாகிக் கசிந்து" என்னும் நமசிவாயத் திருப்பதிகம். இதுவே திருஞானசம்பந்தர் பாடிய கடைசிப் பதிகமாகும்.

காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை  நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே.

மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்த னையவர்  தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே.

நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தையால் தமிழ் ஞானசம் பந்தன்சொல்
சிந்தையால் மகிழ்ந் தேத்தவல் லாரெலாம்
பந்தபாசம் அறுக்க வல்லார்களே.



இதை ராமலிங்க ஸ்வாமிகள் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.



"விழிப்பாலன்கல்லூர்ப் பெருமணத்தைக் கட்டுரைக் கச்சோதிதரு
நல்லூர்ப் பெருமணம் வாழ் நன்னிலையே"

from: adiyarkadiyen.blogspot.in. Thanks.


இங்கு வந்த அருணகிரிநாதர்  ஒரு திருப்புகழ் பாடினார்.
"நல்லூர்ப் பெருமணத்தான் யோகத்தையே புரிந்தானே" எனச் சம்பந்தர் பாடியதைக் கருத்தில் கொண்டார் போலும்! இந்தத் திருப்புகழ் ஒரே யோக சூக்ஷ்மங்கள் அடங்கிய பாடலாக இருக்கிறது!

மூல முண்டகனு பூதி மந்திரப
     ராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅ
          தார சந்திமுக மாறு மிந்த்ரதரு ...... வுந்தளாமேல்

மூது ரம்பலவர் பீட மந்தமுமி
     லாத பந்தவொளி யாயி ரங்கிரண
          மூணு மிந்துவொளிர் சோதி விண்படிக ...... விந்துநாதம்

ஓல மென்றுபல தாள சந்தமிடு
     சேவை கண்டமுதை வாரி யுண்டுலகி
          ரேழு கண்டுவிளை யாடி யிந்துகதி ...... ரங்கிசூலம்

ஓடு மந்தகலி காலொ டுங்கநடு
     தூணில் தங்கவரி ஞான வண்கயிறு
          மீத ணைந்துசத கோடி சந்த்ரவொளி ...... சந்தியாதோ


சூலி யந்தரிக பாலி சங்கரிபு
     ராரி யம்பரிகு மாரி யெண்குணசு
          வாமி பங்கிசிவ காம சுந்தரியு ...... கந்தசேயே

சூர சங்கரகு மார இந்திரச
     காய அன்பருப கார சுந்தரகு
          காஎ னுஞ்சுருதி யோல மொன்றநட ...... னங்கொள்வேலா

சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்
     மாள வெங்கழுவி லேறு மென்றுபொடி
          நீறி டுங்கமல பாணி சந்த்ரமுக ...... கந்தவேளே

தேவ ரம்பையமு தீண மங்கைதரு
     மான ணைந்தபுய தீர சங்கரதி
          யாகர் வந்துறைந லூர மர்ந்துவளர் ...... தம்பிரானே.


[ Taken from: kaumaram.com. Profound thanks.]

முதல் நான்கு அடிகளில் சிவயோக சாதனைகள் பற்றிக் கூறியிருக்கிறார்.. சூக்ஷ்மமான இந்த விஷயத்தை அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் தான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேணும். ( ஸ்ரீ க்ருபானந்த வாரியாரின் விளக்க உரைகளைப் பார்க்கலாம். kaumaram.com மில் எளிய விளக்கம் இருக்கிறது. தகுந்த குரு இல்லாமல் இத்தகைய பயிற்சிகளில் நாமாகவே ஈடுபடுவது தகாது)

சூரியன், சந்திரன், அக்னி என்ற சொற்கள்  யோக நெறியில் சங்கேதக்  குறிகளாகும். கோடி சந்திரவொளி சந்தியாதோ  எனப் பாடுகிறார். கொங்கணகிரிப் பாடலிலும்  "சந்திரவெளிக்கு வழி யருள்வாயே " என்று வேண்டுகிறார், அதேபோல் ஸ்ரீசைலம் பாடலிலும் "முழுமதி தழலென  வொளிதிகழ் வெளி " எனப் பாடுகிறார். ஆனால் அருணையடிகள்  இத்தகைய யோக, தந்திர நெறிகளைப் பின்பற்றியவர் அல்ல. "ஆன பயபக்தி வழிபாடு பெறு முத்தி யது " என்பது தான் அவர் கொள்கை. எதனையும் முருகனிடமே வேண்டிப் பெறுவதுதான் அவர் வழி. யோகிகள் இவ்வாறெல்லாம் முயன்று அடைந்ததை முருகனுடைய அருள் ஒன்றினாலயே பெறவேண்டும் என்பது குறிப்பு. இதையே  "காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின்  வீட்டிற் புகுதல் மிக எளிதே"  எனக் கந்தரலங்காரத்தில் யோகிகளுக்கு  அறிவுரை கூறுகிறார்.

பின் நான்கு  வரிகளில் முருகன் பெருமையைச் சொல்கிறார்.

சூலாயுதத்தை ஏந்தியவள், பராகாசவடிவை உடையவள், கபாலம் ஏந்தியவள், சங்கரி, புரத்தை எரித்தவள், திரிபுர ஸம்ஹார காலத்தில் அம்பாயிருந்த வைஷ்ணவி, என்றும் இளையவள், எண்குணத்தவனான சிவபிரானின் பங்கில் உறைபவள் ஆகிய சிவகாம சுந்தரி உகந்த சேயே!

சூரனைச் ஸம்ஹரித்த குமரவேளே ! இந்த்ரனுக்கு உதவிசெய்பவனே! அன்பர்களுக்கு உபகாரம் செய்பவனே ! அழகனே ! குஹனே! என்றெல்லாம் வேதங்கள்  உரைக்கத் திருநடனம்  புரியும் வேலனே !

பரிசுத்தமான  திருவெண்ணீற்றை   தரியாதவர்களும்,  பொல்லாதவர்களுமான சமணர்கள் இறக்கும்படி கொடிய கழுவில் ஏறுங்கள் எனத் திருவிளையாடல் புரிந்து, திருநீற்றை அடியவர்களுக்கு  அளித்த  தாமரைக் கையனே! சந்திரன் போன்ற முகவிலாசம் உடையவனே! கந்தவேளே!

தேவமகளிர் போன்றவளும். பாற்கடலில் உதித்த லக்ஷ்மி அளித்த மானாகிய வள்ளி ( அல்லது, அமுதவல்லி யென்ற பெயருடன் கற்பகத் தருவின் நிழலில் இருந்த தேவஸேனை) அணைந்த  புயத்தை உடையவனே! தீரனே!  சங்கரத் தியாகர்- சிவலோகத் தியாகர்  என்ற திருநாமம் உடைய சிவபெருமான்  வந்து உரைகின்ற திருநல்லூர் தலத்தில் பொருந்தி வீற்றிருக்கின்ற தம்பிரானே

 அரிய யோகநிலை பெறும் பேறு கிட்டுமா?

இங்கு, ஞானசம்பந்தரின்  செயலை முருகன் செய்ததாகக்  கூறுகிறார். சம்பந்தராக வந்தது முருகனே என்பது  அருணகிரிநாதரின் கொள்கை. இதைப் பல பாடல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். கந்தரந்தாதியிலிருந்து ஒரு பாடல்:

திருக்கையம் போதிக ளோகஞ்ச  மோநஞ்ச மோதிருமால்
திருக்கையம் போசெய்ய வேலோ விலோசனத் தென்னனங்கத்
திருக்கையம் போருகக்கைந்  நீற்றின் மாற்றித் தென்னூல்சிவபத்
திருக்கையம் போக வுரைத்தோன் சிலம்பிற்  சிறுமிதற்கே.



முன்பு சம்பந்த மூர்த்தியாக அவதரித்து, சமணமதம் சார்ந்திருந்த பாண்டியனது கூனை திருநீற்றால் மாற்றியும், எந்த சமயம் பெரிது என்னும் சந்தேகம் இல்லாமல், சைவ சமயமே பெரிதென்று நம்பும்படி, ருக்வேத சாரமாகிய தேவாரத்தை மொழிந்தருளிய  [ருக்கு ஐயம் போக உரைத்தோன் - கடைசி வரி ]குமாரக் கடவுளின்  மலையில் வாழும் கன்னியினது கண், சமுத்திரமோ, தாமரையோ, விஷமோ, அம்போ,வேலோ? (அகத்துறையில் அமைந்த பாடல்)
[இது  அந்தாதியில் 96 வது பாடல். 29ம் பாடலில் சம்பந்தரைத்தவிற வேறு தெய்வங்களே இல்லை என்று உறுதியாகக் கூறுகிறார். அதைப் பிறகு பார்ப்போம்.]

முருகன்  சம்பந்தராக வந்தான் என்பதைச் சில சைவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் அருணகிரிநாதருக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஸ்ரீ ராமலிங்க  ஸ்வாமிகளும் அருட்பாவில் இதைச் சொல்லியிருக்கிறார்:

சைவம்  தழைக்கத் தழைத்தாண்டி
ஞானசம்பந்தன்  பேர்கொண்டு 
அழைத்தாண்டி.

இத்தலத்தில் சம்பந்தரின் மணவிழா ஒவ்வொரு வருஷமும்  வைகாசி மூலத்தன்று பக்தர்களால் கொண்டாடப்படுகிறது. மாதிரிக்கு ஒரு பத்திரிகை:


FROM: www.marvelmurugan.com. thanks.

From: wikimapia.Copyright position not known. Used here purely for non-commercial, educational purpose.

Sunday, 7 February 2016

21. திருப்புகழ் - 19. கடம்பூர்- மேலக்கடம்பூர் கரக்கோவில்.



21. திருப்புகழ் -19. கடம்பூர்
[மேலக்கடம்பூர் கரக்கோவில்]


By Kadamburvijay(Own work) [ CC BY-SA 3.0 creativecommons via wikimediacommons.

ருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 18 வது ஸ்தலம் கடம்பூர். கோவில் உள்ள இடம் மேலக்கடம்பூர் என வழங்கப்படுகிறது. கதம்பவனம் என்றிருந்த புராணப்பெயர் கடம்பூர் என ஆயிற்று என்கிறார்கள். கடம்ப வம்ச மன்னர்கள் ஆட்சிசெய்த இடம். 

இது அற்புத வேலைப்பாடுகள் அமைந்த அழகிய திருக்கோவில். முதல் குலோத்துங்கசோழன் கட்டியது; ராஜேந்திர சோழனால் விரிவாக்கப்பட்டது. முஸ்லிம்கள் படையெடுப்பிற்குப் பிறகு கவனிக்காமல் இருந்த இக்கோவிலை மூன்று தலைமுறை நகரத்தார்கள் திருப்பணிசெய்து சீர்செய்தார்கள்.

கர்பக்ரஹத்தின் நான்குபுறமும் சக்கரம் அமைக்கப்பட்டு தேர்போல் காட்சியளிப்பதால் இது கரக்கோயில் எனப்படுகிறது. ஸம்ஸ்கிருதத்தில் இதற்கு 'விஜயம்' என்று பெயர்.

ஸ்வாமியின் பெயர் அமிர்தகடேஶ்வரர்.  அம்பாளின் நாமம்  வித்யாஜோதி நாயகி- தமிழில் அழகாக ஜோதிமின்னம்மை என வழங்குகிறது. மூலவர் சுயம்பு என்றும், நவபாஷாணத்தினால் ஆனது  என்றும் பலவாறு சொல்கிறார்கள். பல புராணச்செய்திகளை உள்ளடக்கிய கோவில். நவகிரஹங்களும் தத்தமக்குரிய நாளன்று இங்கு ஸ்வாமியை வந்து தொழுவதாக ஐதீகம். அதனால் சிறந்த நவக்ரஹ பரிகாரஸ்தலமாகக் கருதப்படுகிறது. வருஷத்தில் 3 நாட்கள்  [பங்குனி- 3,4,5 ம் தேதி]சூரியவொளி நேராக ஸ்வாமியின்மீது விழுகிறது. ஐப்பசிமாதம் பௌர்ணமியின்போது (அன்னாபிஷேகம்) சந்திரகிரணங்களும் ஸ்வாமியின்மீது விழுகின்றன. அற்புத வேலைப்பாடுகள் கூடி, அருமையான பல மூர்த்தங்களைக் கொண்ட கோவில்.

ஞானசம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் ஸ்வாமிகள் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.


கோவிலின் அற்புதத் தோற்றம்!

சம்பந்தர் பாடல்.



வானமர் திங்களும்  நீரும் மருவிய வார்சடையானைத்
தேனமர் கொன்றை யினானைத்  தேவர் தொழப்படுவானைக்
கானமரும்பிணை புல்கிக் கலைபயிலும் கடம்பூரில்
தானமர்  கொள்கையினானைத் தாள்தொழ வீடெளிதாமே.

தீவிரியக் கழலார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரிகூந்தல் நற்பேய்கள் நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரிகொன்றை கலந்த கண்ணுதலான் கடம்பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.


விடை நவிலுங் கொடியானை  வெண்கொடிசேர்  நெடுமாடம்
கடை நவிலும்கடம் பூரில் காதலனைக் கடற்காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.







அப்பர் பாடல்.

பண்ணினார் மறை பல்பல பூசனை
மண்ணினார் செய்வ தன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப் படுவன
கண்ணினார் கடம்பூர்க் கரக் கோயிலே.


நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே.               5. 19

வேறுசிந்தை யிலாதவர் தீவினை
கூறுசெய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர் தாம்தொழும்
ஆறுசேர் கடம்பூர்க் கரக் கோயிலே

மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லையான பிரானார் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.             5.20



இத்தலத்திற்கு வந்த நம் ஸ்வாமிகள்  முருகனின் திருவடிப்பேற்றை வேண்டிப் பாடுகிறார்.

வாருமிங் கேவீடி தோ பணம் பாஷாண
மால்கடந் தொபொமெ                                                    னியலூடே

வாடிபெண் காள்பாயை  போடுமென்றாசார
வாசகம் போல்கூறி                                                          யணைமீதே

சேருமுன்  காசாடை வாவியும் போதாமை
தீமைகொண்  டேபோமெ                                               னடமாதர்

சேரிடம் போகாம  லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார                                                                       மருள்வாயே.

நாரணன் சீராம கேசவன் கூறாழி
நாயகன்  பூவாயன்                                                             மருகோனே

நாரதும் பூர்கீத  மோத நின்றேயாடு
நாடகஞ் சேய்தாளர்                                                           அருள்பாலா!

சூரணங் கோடாழி  போய்கிடந் தேவாட
சூரியன்  தேரொட                                                                  அயிலேவி

தூநறுங்  காவேரி சேருமொண் சீறாரு
சூழ்கடம் பூர்தேவர்                                                                பெருமாளே!



முதல் நான்கு அடிகளில் விலைமாதரின் சாகசங்களைச் சொல்லி அவ்விடங்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும் என்கிறார்.


நாராயணன், ஸ்ரீராமன், கேஶவன், கூர்மையான சக்ராயுதம் தாங்கிய நாயகன், இடையர் குலத்தில் வந்த கண்ணபிரான் ஆகிய திருமாலின் மருகனே!

நாரதரும் தும்புருவும் இசைபாட, நின்று ஆடும்  நடனம் புரிகின்ற  திருவடியையுடைய சிவபெருமான்  அருளிய குழந்தையே!

சூரனும், அவனுடைய வருத்தும் செயல்களும் கடலில் போய்  அழியும் படியும், சூரியனுடைய தேர் பழையபடியே தடையின்றி  ஓடும்படியும்  வேலாயுதத்தைச் செலுத்தியவனே!

பரிசுத்தமான மணம் வீசும் காவிரியுடன் சேர்கின்ற  ஒள்ளிய சிற்றாறு சேர்ந்து சூழும் கடம்பூரில்  அமர்ந்த பெருமாளே ! தேவர்களின் பெருமாளே !

உன்னுடைய சீதள பாதத்தை  அருள்வாய்!

இங்கு வரும் "பூவாயன் " என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் சொல்கிறார்  தணிகைமணி யவர்கள்.
  • தாமரை போன்ற இதழ் உடையவன்.
  • பூதேவிக்கு நாயகனாக வந்தவன்
  • பூலோகத்தையே தன்வாயில் தாய் யசோதைக்குக் காட்டியவன்
  • வராஹ அவதாரத்தில் பூமியையே தன் வாயால் கிண்டியவன்
  • சிவபிரானின் ஜோதியுருவின் அடியைத் தேட வராஹமாய் உருவெடுத்தபோதும் பூமியைத் தோண்டியவன்
  • பூலோகத்தில் ஆயர்குலத்தில்  கண்ணபிரானாக வந்தவன்.
அருணகிரிநாதரின் வாக்கின் விசேஷங்கள் பெரியவர்களுக்கல்லவா புரியும்!




படங்களுக்கு நன்றி: tamilnadu-favtourism.blogspot.in.

20. திருப்புகழ்- 18.திருமுட்டம்= ஸ்ரீமுஷ்ணம்.



20. திருப்புகழ் -18. திருமுட்டம் =ஸ்ரீ முஷ்ணம்


இதுவரை நாம் பார்த்த தலங்களைக் காட்டும் படம்.

ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 17 வது தலம் ஸ்ரீமுஷ்ணம். இது புகழ்பெற்ற ஆதிவராகப்பெருமாள் கோவில்கொண்டுள்ள அருமையான தலம். வைஷ்ணவர்கள் இதை "ஸ்வயம்வ்யக்த ஸ்தலம்" - தானாகவே தோன்றி விளங்கும் தலம் என்று கொண்டாடுகிறார்கள்.[இவ்வாறு எட்டுத் தலங்கள்  உள்ளன. இங்கெல்லாம் லக்ஷ்மியே பெருமாளைப் பூஜித்ததாக வரலாறு.]இங்குள்ள பெருமாள் மூர்த்தம் இயற்கையாகவே எழுந்த சாளக்ராமத்தால் அமைந்தது.  இது சிறந்த பரிகாரத்தலமாகவும் இருக்கிறது. வாகனங்களை வாங்கியவுடனும், விபத்துக்குள்ளாகி பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களையும் இங்கு கொண்டுவந்து பூஜை செய்யும் வழக்கம் இங்கு ப்ரசித்தம். ஆனாலும், இதை எந்த ஆழ்வாரும் பாடியதாகத் தெரியவில்லை! ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு தனது தென்னிந்திய யாத்திரையில்  இங்கும் வந்து தரிசித்தார். அதனால் இது கௌடிய (வங்காள) வைஷ்ணவர்களுக்கும் உகந்த தலமாக இருக்கிறது.

இது பெரிய அழகான கோவில். ஸ்தல வ்ருக்ஷம் அஸ்வத்த மரம். புஷ்கரணியும் இருக்கிறது.

இங்கு வந்த அருணகிரிநாதர், இங்கு  நிதிலேஶ்வரர்  கோவிலில் உள்ள முருகனைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. பெருமாளைப் போற்றும் பெரும்குணம் கொண்ட நம் ஸ்வாமிகள், ஆதிவராகப் பெருமாளையும் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.


முதல் பாடல் முருகன் தரிசனம் தரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது.

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை                                              மலைமேவும்

கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை                                          அரவீனும்

அழல்முத்து மாலை  இவைமுற்று மார்பில்
அடைவொத்து  லாவ                                        அடியேன்முன்

அடர்பச்சை  மாவி லருளிற் பெணோடும்
அடிமைக்  குழா மொடு                                      அருள்வாயே !

மழையொத்த ஜோதி குயில் தத்தை போலும்
மழலைச்சொ  லாயி                                           எமையீனும்

மதமத்த  நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனும்                                                முருகோனே

செழுமுத்து மார்பின்  அமுதத் தெய்வானை
திருமுத்தி மாதின்                      மணவாளா

சிறைவிட்ட சூரர் தலைவெட்டி ஞான
திருமுட்ட மேவு                                                    பெருமாளே !


மூங்கில் அல்லது கரும்பு தரும் முத்தாலாகிய மாலை, மேகம் தருகின்ற முத்தாலாகிய மாலை, யானதரும் முத்தாலாகிய மாலை -

மலையில் கிடக்கும் சிறந்த முத்தாலாகிய மாலை, சங்கில் கிடைக்கும் முத்தாலாகிய மாலை, கடலில் கிடைக்கும் முத்தாலாகிய மாலை,- 

பாம்பு தரும் சூடுமிக்க முத்தாலாகிய மாலை- இப்படிப்பட்ட எல்லாமாலைகளும் மார்பில் அடர்ந்து  புரண்டு விளங்க, 

அடியேன் முன்னால் பச்சைநிறக் குதிரையாகிய மயில்மீது, அருள் மிகுந்து, உனது பத்தினிகள் தேவசேனை-வள்ளியுடனும், அடியார் கூட்டத்துடனும் வந்து அருள்புரிவாயாக !

மழைமேகத்தை யொத்த நிறமுடைய ஜோதிஉமை, குயிலும் கிளியும் போன்றவள், மழலைமொழி பேசும் தாய், 

எம்மைப்பெற்ற  ஊமத்தைமலர் சூடியவரும், கழுத்து நீலமானவரும், நிர்த்தமாடும் தலைவருமாகிய சிவபெருமான் மகிழும் சக்தி பார்வதி தேவி பெற்ற குழந்தையே!

மார்பில் செழிப்புள்ள முத்துமாலை அணிந்த அமுதமயமானவளும், முத்தியைத் தரவல்ல மாதுமாகிய தேவசேனையின் மணவாளனே!

சிறையில் அடைத்த தேவர்களுக்கு சூரர்கள் இட்ட விலங்கைத் தகர்த்தெரிந்தவனே! ஞான உருவானவனே ! ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !

தேவியரோடும், அடியவர் குழாத்துடனும் மயில்மீது வந்து தரிசனம் தரவேணும்.


இங்கு ஸ்வாமிகள் முருகன் அடியவர் குழாத்துடன் வரவேணும் என்கிறார். அடியவர்கள் அடியவர் உறவையே நாடுவார்கள். ஞான நெறி செல்வோர் தனிமையை விரும்பலாம். ஆனால் பக்தர்கள் பிறபக்தர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடுவதையே விரும்புவார்கள். இதைப் பல பெரியவர்களும் பாடியிருக்கிறார்கள். 

இங்கு தேவயானை முக்திமாது என்ற அரிய விஷயத்தைச் சொல்கிறார்.அவருக்கு அமிர்த (அமுத) வல்லி என்பதே பெயர். அமுதம் அமரத்தன்மையை அளிப்பது. அடியவர்களுக்கு அழியாத முத்திப்பேற்றை அருள்பவர் தேவசேனை. இதை முதல் திருப்புகழிலும்  (முத்தைத்தரு பத்தித் திருநகை அத்தி )குறிப்பிட்டார் நம் ஸ்வாமிகள்.


The map and the picture from: www.naavaapalanigotrust.com. Thanks.



சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
     சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
          தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள்

சனுமெத் தப்பரி வாகிய மாமய
     லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
          தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும்

விரகத் துர்க்குண வேசைய ராசையர்
     பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
          விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக

மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
     கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
          விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ


பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
     லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
          புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது

புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
     சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
          புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா

திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
     புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
          சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர்

திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
     மகளைப் பொற்றன வாசையொ டாடிய
          திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.



[பாடல் www.kaumaram.com. -மிலிருந்து எடுக்கப்பட்டது. பணிவுடன் நன்றியும் அவர்களுக்கு சமர்ப்பணம்.]
இங்கு முதல் நான்கு அடிகளில் பொதுமகளிரின் இழிசெயல்களை இடித்துக்கூறுகிறார். அவர்களின் உறவு தகாது என்கிறார்.

போரில் என்றும் வெற்றியையே தரும் கரும்புவில்லை யுடைய  மன்மதன் உடல்எரிந்து , சருகுபோல்விழும்படி  நகைசெய்த  பிறையணிந்த சடையனாரின் இடது பாகத்தில் அமர்ந்த ஒப்பற்ற மாது-

எல்லோராலும் புகழப்படுகின்ற பராசக்தி, நிலைகுலையாத சிவபக்திமிகுந்த பரமேஶ்வரி, அருள்கொண்டு மூவுலகையும் முன்பு படைத்தவளான உமாதேவி அருளிய பாலனே!

பொன்மலையாகிய மேரு கடலில் சுழன்று ஆடும்படி, வாசுகியைக் கயிறாகக் கட்டி (கடைந்த முற்காலத்தில்), சுவைமிகுந்த இந்த அமுது  சிவபக்தர்களுக்கே உரியது ஆகும் என்று  பங்கிட்டுக் கொடுத்த திருமாலாகிய ராமர், 

லக்ஷ்மிதேவி பூஜித்துப் பணிந்த  ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளின்  திருமகளாகிய வள்ளியுடன் ஆடி மகிழ்ந்த, திருமுட்டத் தலத்தில் விளங்கும் முருகா! தேவர்கள் பெருமாளே !

[குடிகேடிகள் சேடிகள் உறவு தகாது.]

இங்கு ஸ்வாமிகள் ஒர் அரிய விஷயத்தைச் சொல்கிறார். அமுதம் கடைந்ததும் அதை திருமால் பகிர்ந்தளித்ததும் தெரிந்த விஷயங்கள்- என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்!  

அமுதத்தை நினைத்துக் கடைந்தவர்களுக்கு முதலில் கிடைத்தது ஆலகால விஷம்! அதனால் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர் விஷத்தை யேற்று, தேவர்கள் அமுதம் பெறக் கருணைசெய்தார். அந்த அமுதத்தைப் பங்கிடவந்த திருமால், ' தேவர்கள் சிவபெருமானை வேண்டி, அவர் விஷத்தை நீக்கியருளியதால் அல்லவோ அமுதம் கிடைத்தது; அதனால் இந்த அமுதம் சிவனடியார்களுக்கே உரியது ' [அமுதார் சுவை சிவபத்தர்க் கிதுவாமென = சுவையாரமுது  இதுசிவபக்தர்க்கு ஆம்என ] என்று கருதி  சிவ பக்தர்களான தேவர்களுக்கே அளித்தாராம்! எத்தனை அரிய விஷயம்!





இங்கே ஆதிவராகர் என்று நினவுகூறியது எத்தகைய பரந்தமனத்தைக் காட்டுகிறது! தெய்வங்களிடையே பேதம் கருதும் பேதைமை நம் ஸ்வாமிகளிடம் இல்லை! அருணகிரியாரே நமது ஆசான்!