Tuesday, 2 February 2016

16. திருப்புகழ்- 14. திருநெல்வாயில்- சிவபுரி


16. திருப்புகழ் - 14. திருநெல்வாயில்- சிவபுரி



ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த தலம் (13வது) திருநெல்வாயிலாகும். இது  இன்று சிவபுரி என  வழங்கப்படுகிறது. சிதம்பரத்திற்கு அருகே 3 கி.மீ  தூரத்தில் உள்ளது. அழகான, சிறிய கோவில், குளத்துடன் திகழ்கிறது.

இது திருஞானசம்பந்த ஸ்வாமிகளின் வரலாற்றோடு தொடர்புடையது. ஸ்வாமிகளின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, அவர் அடியார்களுடன்    
திருநல்லூர்ப் பெருமணம் [ஆச்சாள்புரம்] போகும்போது, இத்தலத்தின்  அருகே வருகையில் பகலில் பசியால் வாடினர். இங்குள்ள இறைவன்  ஒரு கோவில் சிப்பந்தி வடிவில் வந்து அனைவருக்கும்  உணவளித்தார், அதனால் இங்கு ஸ்வாமியின் பெயர் உச்சிநாதர்- மத்யானேஶ்வரர் என்பதாகும். ஸ்வாமி சுயம்பு. அம்பாளின் பெயர் கனகம்பாள். சம்பந்தர் சிதம்பரம் வந்தபோது இங்கும் வந்து தினமும் தரிசித்தார். ஒரு பதிகமும் பாடியிருக்கிறார். (இரண்டாம் திருமுறை)

புடையினார் புள்ளி கால்பொருந்திய
மடையினார் மணி  நீர் நெல்வாயிலார்
நடையினார் விறர்  கோவணந்நயந்து
உடையினார் எமது உச்சியாரே.

நெண்பயங்கு நெல் வாயில் ஈசனைச்
சண்பை ஞானசம் பந்தன் சொல்லிவை
பண்பயன் கொளப் பாடவல்லவர்
விண்பயன் கொளும் வேட்கையாளரே.



இங்கு வந்த நம் அருணகிரிநாத ஸ்வாமிகள் ஓர் அருமையான திருப்புகழ் பாடுகிறார்.

அந்தக் காலத்தில் தமிழ்ப்புலவர்கள் வறுமையில் வாடினர். இதுபற்றியே திருவள்ளுவரும் , "இருவேறுலகத் தியற்கை திருவேறு தெள்ளியர் ஆதலும் வேறு" என்று பாடினார் போலும்! அவர்கள் தமிழை விற்றுப் பிழைக்கவில்லை. என்றாலும்  சில ப்ரபுக்களை/வள்ளல்களை நம்பியே வாழவேண்டி யிருந்தது. வயிற்றுக்காக பலரையும் பாடவேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அருணகிநாதர் சொல்கிறார்.


அறிவிலாதவர் ஈனர் பேச்சிரண்டு
பகரு நாவினர் லோபர்  தீக்குணங்கள்
அதிக பாதகர் மாதர்மேல் கலன்கள்                   புனை ஆதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
யழியு மாலினர் நீதிநூற் பயன்கள்                     தெரியாத

நெறியிலாதவர்  சூதினாற் கவர்ந்து
பொருள்செய் பூரியர்  மோகமாய்ப் ப்ரபஞ்ச
நிலையில் வீழ்தரு மூடர்பால் சிறந்த                தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடி நோக்கிழந்து
வறுமை யாகிய தீயின்மேல் கிடந்து
நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி                   அருள்வாயே.



அறிவிலிகள், ஈனர்கள், சொல்லிய பேச்சை மாற்றுபவர்கள், உலோபிகள்,
தீய குணங்களுடன் பாவச்செயல் செய்பவர்கள், பொது மாதர்களுக்கு ஆபரணங்களைப் புனைந்து பார்க்கும்  மூடர்கள்-

அசடர்கள்,பூமியில் வீணே காலம் போக்கித் திரிபவர்கள், பெண்கள் மீது காமத்தினால் அழிந்துபோகும் மனதுடையவர்கள், நீதி நூல்களின் பயனை அறியாதவர்கள்-

 நல்ல வழியில் போகாதவர்கள், சூதாட்டத்தினால்  பொருள் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள், ஆசையினால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள்- இத்தகையோரிடம் சென்று, நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி-


நினைவு தேய்ந்துபோக, வாட்டமடைந்து, கண்பார்வையும் மங்கி, வறுமையென்னும் தீயில் விழுந்து  புழுவைப்போல  நெளிகின்ற என்மீது இரங்கி அருள்புரிவாயாக.


நறிய வார்குழல் வானநாட் டரம்பை
மகளிர் காதலர் தோள்கள் வேட்டிணங்கி
நகைகொடேழிசை பாடிமேற் பொலிந்து             களிகூர

நடுவி லாதகு  ரோதமாய்த் தடிந்த
தகுவர் மாதர் மணாளர் தோட்பிரிந்து
நசைபொறாதழு தாகமாய்த் தழுங்கி                 யிடர்கூர

மறியு மாழ்கட லூடுபோய்க்  கரந்து
கவடு கோயின்  மேலுமாய்ப் பரந்து
வளவரு மாவிரு கூறதாய்த் தடிந்த                   வடிவேலா

மருவு காளமு கீல்கள் கூட்டெழுந்து
மதியுலாவிய மாட்மேற் படிந்த
வயல்கள் மேவு நெல்வாயில்வீற் றிருந்த        பெருமாளே.


இந்தப் பகுதியில் முருகனின் அவதார மகிமையைச் சொல்கிறார். அவர் அசுரர்களை மாய்த்து  தேவர்களுக்கு வாழ்வளித்தார். இதைச் சொல்கிறார்.

நறுமணமுள்ள நீண்ட கூந்தலுடைய தேவலோகத்து மகளிர் தத்தம் காதலர்களுடன் , களிப்பு மிகவும், சிரித்தும், ஏழிசையுடன் பாடியும், மகிழ்ச்சி பொங்கக் குதூகலிக்கவும்- 

நியாயம் இல்லாமல், குரோதம் மிகுந்து, அழிதொழிலைச் செய்த அசுர மகளீர் , தத்தம் கணவர்களின் தோளைப் பிரிந்து, ஆசையை அடக்கமுடியாமல் அழுது, தங்கள் உடலை வருத்தி  துன்பம் பெருகவும்-

அலைகள் பொங்கும் ஆழ்கடலின் உள்ளே சென்று மறைந்து, கோடிக்கணக்காக விரியும் கிளைகளுடன்  நின்ற சூரனாம் மாமரம் இரண்டு கூறாகும்படி வெட்டிப்பிளந்த கூறிய வேலாயுதத்தை உடையவனே!

பொருந்திய கரிய மேகங்கள் கூட்டமாய் எழுந்து, நிலவுலாவும் மாடங்களின் மீது படிகின்ற, வயல்கள் மிகுந்த திருநெல்வாயிலில் அமர்ந்த பெருமாளே!

வறுமையினால் ஈனர்களைப் பாடும் சிறுமையைத் தவிர்த்து அருள்வாயாக.

வறுமை எவ்வளவு கொடியது என்பதைக் காட்டுகிறார், அதனால்தானே அறிவுமிக்க புலவர்களும் புல்லர்களைப் பாடிப் பிழைக்கவேண்டி யுள்ளது!
இக்காலத்திலும்  அறிவிற் சிறந்தவர்களும் அரசியல்வாதிகளை அண்டியே பிழைக்கவேண்டியுள்ளது! 

வறுமையின் கொடுமையை  கந்தரனுபூதியில் சொல்கிறார்.

வடிவும் தனமும் மனமும் குணமும் 
குடியும் குலமும் குடிபோ கியவா 
அடி அந்தம் இலா அயில் வேல் அரசே 
மிடி என்று ஒரு பாவி வெளிப்படினே.


அறிவற்றவர்களிடம் சென்று  பாடும் நிலை வேண்டாம் என்றும்    வேண்டுகிறார்.
கரவாகிய கல்வி யுளார் கடை சென்று
 இரவா வகை மெய்ப் பொருள் ஈகுவையோ? 
 குரவா, குமரா, குலிசாயுத, குஞ் 
 சரவா, சிவயோக தயாபரனே.


அருணகிரிநாதர் சிலவிஷயங்களைத் தன்மேலேயே ஏற்றிச் சொன்னாலும் அந்த நிலை அத்தகைய அருளாளர்களுக்குப் பொருந்தாது. பிறர்மீதுள்ள கருணையினாலேயே அவ்வாறு பாடுகிறார்  என்பதே சரியாகும்.





சிவபுரிக் கோவிலின் இன்னொரு தோற்றம்.

Pictures from: www.thenkoodu.in. Thanks.


No comments:

Post a Comment