Friday, 5 February 2016

19. திருப்புகழ்- 17. எருக்கத்தம்புலியூர்.



19.திருப்புகழ் -17.எருக்கத்தம்புலியூர்.




ருணகிரிநாத ஸ்வாமிகள்  கூடலையாற்றூரிலிருந்து சென்று தரிசித்த தலம் எருக்கத்தம்புலியூர்.இது இவர் தரிசித்த 16வது தலம்.

புலியூர் என்ற பெயரில் ஐந்து ஸ்தலங்கள் உள்ளன: பெரும்பற்றப் புலியூர் (சிதம்பரம்), ஓமாம்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், திருப்பெரும்புலியூர், எருக்கத்தம்புலியூர். இந்த ஐந்து இடங்களிலும் வ்யாக்ரபாதர்  (புலிக்கால் முனிவர் )நடராஜ தரிசனம் பெற்றதால் இவை அவர்பெயரிலேயே புலியூர் என வழங்குகின்றன. இங்கு ஸ்தலமரம் எருக்கு ஆனதால் இது எருக்கத்தம்புலியூர் என்று ஆனது.நாயன்மார்களில் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் பிறந்த ஊர் இதுவே. அதனால் இதற்கு யாழ்ப்பாண்நாயன் பட்டினம் என்ற பெயரும் இருந்தது போலும்! அருணகிரிநாதர்  இந்தப்பெயரில்தான் பாடியிருக்கிறார்.
ராஜேந்திரசோழன் இங்கு வழிபட்டு அருள்பெற்றதால் பல தொண்டுகள் செய்ததாகவும் அதனால் அவன்பெயரில் இது ராஜேந்திரப்பட்டினம் என வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.

ஒரே பிராகாரமுள்ள சிறிய கோவில். ஸ்வாமி பெயர் நீலகண்டேஶ்வரர், குமாரஸ்வாமி. அம்பாள்  வீராமுலையம்மன், அபீதகுசாம்பாள், நீலமலர்க்கண்ணி. ஞானசம்பந்த ஸ்வாமிகள் பாடியதலம். இத்தலத்து ஸ்வாமியைத்தொழ வினை போகும், அல்லல் தீரும் எனப் பாடுகிறார்.


படையார் தருபூதப் பகடார் உரிபோர்வை
உடையான் உமையோடு முடனாய் இடுகங்கை
சடையான் எருக்கத்தம் புலியூர் தகுகோயில்
விடையான் அடியேத்த மேவா வினைதானே.

இலையார் தருசூலப் படையெம் பெருமானாய்
நிலையார் மதில்மூன்று நீறாய் விழவெய்த
சிலையான் எருக்கத்தம் புலியூர் திகழ்கோயில்
கலையான் அடியேத்தக்  கருதா வினைதானே.

விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ
பெண்ணாண் அலியாகும்  பித்தா பிறைசூடீ
எண்ணார் எருக்கத்தம் புலியூர் உறைகின்ற
அண்ணாவென வல்லார்க்கு அடையா வினைதானே.

ஆவாவென அரக்கன் அலற அடர்த்திட்டுத்
தேவாவென அருளார் செல்வம் கொடுத்திட்ட
கோவே எருக்கத்தம்  புலியூர் மிகுகோயில்
தேவே என அல்லல் தீர்தல் திடமாமே.

ஏரார் எருக்கத்தம் புலியூர் உறைவானைச்
சீரார் திகழ்காழித்  திருவார் சம்பந்தன்
ஆரா அருந்தமிழ் மாலை இவைவல்லார்
பாரார் அவரேத்தப் பதிவான் உறைவாரே.




பிராகாரம்.
Temple photos from: thirunalaippovar.blogspot.in Thanks.

இங்கு வந்த நம் ஸ்வாமிகள் ஞானம் வேண்டும் என்று பாடுகிறார்.

பூத்தார் சூடும் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலும் கட்கமு மதன்விடு
போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன்                      விடுதூதும்

போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர்
மேற்றா ளார்தம் பற்றிடு  ப்ரமையது
பூட்டா மாயங் கற்றமை விழியின                          ரமுதூரல்

வாய்த்தார் பேதஞ்  செப்புபொய்  விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாட்டாய் வீசுங் கர்ப்புர  ம்ருகமத                          மகிலாரம்

மாப்பூ ணாரங் கச்சணி  முலையினர்
வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட                      அருளாயோ.

ஆத்தாள் மால்தங் கைச்சிக னிகையுமை
கூத்தா டாநந்   தச்சிவை திரிபுரை
யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி                             புவநேசை

ஆக்கா யாவும் பற்றியெற திரிபுற
 நோக்கா ஏதுஞ் செற்றவள் திருவிளை
யாட்டா லீசன் பக்கம துறைபவள்                           பெறுசேயே

ஏத்தா நாளுந்  தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பா ராயுஞ்  சொற்றமி ழருள்தரு                      முருகோனே

ஏற்போர்  தாம்வந்  திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பா ணாயன் பட்டின மருவிய                        பெருமாளே

உனதுமெய் வாக்கால்   ஞானம் பெற்றினி வழிபட அருளாயோ.


முதல் நான்கு அடிகளில் பெண்களின் மயலில் இருந்த நிலையைச் சொல்லி, அதிலிருந்து விடுபடுதலை வேண்டுகிறார்.

எனது தாய், திருமாலின் தங்கை, கன்னிகை, உமை, நடனம்புரியும் ஆனந்தசிவாம்பிகை, திரிபுரை, தானாளும் பேய்களும் பூதங்களும்  சுற்றியுள்ள பயிரவி,  புவனேஶ்வரி -

எல்லாவற்றையும் ஆக்கியும், காத்தும், அழித்தும் முத்தொழிலையும் செய்பவள்,  திருவிளையாடலாக ஈசனது இடதுபாகத்தில் வீற்றிருப்பவள்- ஆகிய பார்வதி பெற்ற குழந்தையே!

தினந்தோறும் பூஜை செய்தும், தர்ப்பணம், ஜபம் இவை செய்தும், துறந்தவர்கள் தங்கள் ஞான நிலையிலும்  பலரும் பற்றிய குருமூர்த்தியே !
யாப்பிலக்கணத்தை ஆராய்ந்து எடுத்த சொற்களைக் கொண்ட தமிழ்ப்பாடல்களை அருளிய முருகனே!

ஏற்பவர்களுக்கு இஷ்டமுடனும், மகிழ்ச்சியுடனும் அள்ளி வீசுகின்ற கொடையாளிகள் உள்ளதும், பொன்னொளி வீசும்  நீண்ட மதில் சூழ்ந்துள்ளதுமான யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய பெருமாளே !

ஞானம்பெற்று இனி வழிபட அருள்வாயே !

இங்கு அம்பாளைப் பற்றிவரும்  12 நாமங்கள் பலகாலும் படித்து இன்புறத்தக்கன.இவ்வாறு பல பாடல்களில் அரிய சொல்லாட்சி அமைந்துள்ளது அற்புதமே! சக்தி உபாசகர்கள் கூட இம்மாதிரி நாமங்களைச் சொன்னதில்லை!

அடுத்து, ஞானசம்பந்தராக வந்து அற்புதத் தமிழ்க்கவி பாடியது முருகனே என்கிறார். முத்தமிழ் விரகன், நாற்கவிராஜன், தமிழாகரன் என்றெல்லாம் சம்பந்தருக்குப் பட்டங்கள். அவர்பாடியது அமிர்தகவித்தொடை, அதுமாதிரி தானும் பாடவேண்டும் என்று ஒரிடத்தில் வேண்டுகிறார்.

இங்கு ஒரு அரிய செய்தி.  பூஜை, ஜபம் செய்து வழிபடுவார்கள். தர்ப்பணம் உண்டா? ஸந்த்யாவந்தனத்தில் தேவதர்ப்பணம் உண்டு; ஆனால் அதில் முருகனுக்கெனத் தர்ப்பணம் இல்லை.இங்கு சம்பந்தரைப் பற்றிச் சொல்கிறார். சம்பந்தர் கவுண்டின்ய கோத்திரத்தைச் சேர்ந்தவர், (கவுணியன்). இந்த கோத்திரத்தில் வந்து, போதாயன சூத்திரத்தைப்  பின்பற்றுபவர்கள், அவர்கள் செய்யும் ப்ரம்ம யஞ்ஞத்தில் , தேவ தர்ப்பணம் செய்கிறார்கள். அப்போது, முருகனுக்கும் தர்ப்பணம் செய்கிறார்கள்! (இதைத்தவிற பிறவும் இருக்கலாம்.) அருணகிரி நாதர் இதைச் சொல்வதுபோல் தெரிகிறது.

கடவுளை வழிபடவும் அவன் அருள் தேவை! "அவனருளாலே அவன் தாள் வணங்கி " என்பார் மாணிக்கவாசகர். அதையே இங்கு வேண்டுகிறார் அருணகிரிநாதர்.

அருணகிரிநாதரின் ஒவ்வொரு பாடலிலும் ஏதோ ஒரு விசேஷம் இருக்கவே செய்கிறது!



Bandipur tusker.
By Yathin S.Krishnappa (Own Work) [CC BY-SA 3.0 creativecommons via wikimedia commons.]





No comments:

Post a Comment