Sunday, 7 February 2016

21. திருப்புகழ் - 19. கடம்பூர்- மேலக்கடம்பூர் கரக்கோவில்.



21. திருப்புகழ் -19. கடம்பூர்
[மேலக்கடம்பூர் கரக்கோவில்]


By Kadamburvijay(Own work) [ CC BY-SA 3.0 creativecommons via wikimediacommons.

ருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 18 வது ஸ்தலம் கடம்பூர். கோவில் உள்ள இடம் மேலக்கடம்பூர் என வழங்கப்படுகிறது. கதம்பவனம் என்றிருந்த புராணப்பெயர் கடம்பூர் என ஆயிற்று என்கிறார்கள். கடம்ப வம்ச மன்னர்கள் ஆட்சிசெய்த இடம். 

இது அற்புத வேலைப்பாடுகள் அமைந்த அழகிய திருக்கோவில். முதல் குலோத்துங்கசோழன் கட்டியது; ராஜேந்திர சோழனால் விரிவாக்கப்பட்டது. முஸ்லிம்கள் படையெடுப்பிற்குப் பிறகு கவனிக்காமல் இருந்த இக்கோவிலை மூன்று தலைமுறை நகரத்தார்கள் திருப்பணிசெய்து சீர்செய்தார்கள்.

கர்பக்ரஹத்தின் நான்குபுறமும் சக்கரம் அமைக்கப்பட்டு தேர்போல் காட்சியளிப்பதால் இது கரக்கோயில் எனப்படுகிறது. ஸம்ஸ்கிருதத்தில் இதற்கு 'விஜயம்' என்று பெயர்.

ஸ்வாமியின் பெயர் அமிர்தகடேஶ்வரர்.  அம்பாளின் நாமம்  வித்யாஜோதி நாயகி- தமிழில் அழகாக ஜோதிமின்னம்மை என வழங்குகிறது. மூலவர் சுயம்பு என்றும், நவபாஷாணத்தினால் ஆனது  என்றும் பலவாறு சொல்கிறார்கள். பல புராணச்செய்திகளை உள்ளடக்கிய கோவில். நவகிரஹங்களும் தத்தமக்குரிய நாளன்று இங்கு ஸ்வாமியை வந்து தொழுவதாக ஐதீகம். அதனால் சிறந்த நவக்ரஹ பரிகாரஸ்தலமாகக் கருதப்படுகிறது. வருஷத்தில் 3 நாட்கள்  [பங்குனி- 3,4,5 ம் தேதி]சூரியவொளி நேராக ஸ்வாமியின்மீது விழுகிறது. ஐப்பசிமாதம் பௌர்ணமியின்போது (அன்னாபிஷேகம்) சந்திரகிரணங்களும் ஸ்வாமியின்மீது விழுகின்றன. அற்புத வேலைப்பாடுகள் கூடி, அருமையான பல மூர்த்தங்களைக் கொண்ட கோவில்.

ஞானசம்பந்தர் ஒரு பதிகமும், அப்பர் ஸ்வாமிகள் இரண்டு பதிகங்களும் பாடியுள்ளனர்.


கோவிலின் அற்புதத் தோற்றம்!

சம்பந்தர் பாடல்.



வானமர் திங்களும்  நீரும் மருவிய வார்சடையானைத்
தேனமர் கொன்றை யினானைத்  தேவர் தொழப்படுவானைக்
கானமரும்பிணை புல்கிக் கலைபயிலும் கடம்பூரில்
தானமர்  கொள்கையினானைத் தாள்தொழ வீடெளிதாமே.

தீவிரியக் கழலார்ப்பச் சேயெரி கொண்டிடு காட்டில்
நாவிரிகூந்தல் நற்பேய்கள் நகைசெய்ய நட்ட நவின்றோன்
காவிரிகொன்றை கலந்த கண்ணுதலான் கடம்பூரில்
பாவிரி பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.


விடை நவிலுங் கொடியானை  வெண்கொடிசேர்  நெடுமாடம்
கடை நவிலும்கடம் பூரில் காதலனைக் கடற்காழி
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும்
படை நவில் பாடல் பயில்வார் பழியொடு பாவம் இலாரே.







அப்பர் பாடல்.

பண்ணினார் மறை பல்பல பூசனை
மண்ணினார் செய்வ தன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப் படுவன
கண்ணினார் கடம்பூர்க் கரக் கோயிலே.


நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன் கடன் அடியேனையும் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே.               5. 19

வேறுசிந்தை யிலாதவர் தீவினை
கூறுசெய்த குழகன் உறைவிடம்
ஏறு செல்வத்து இமையவர் தாம்தொழும்
ஆறுசேர் கடம்பூர்க் கரக் கோயிலே

மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கெலாம்
எல்லையான பிரானார் இருப்பிடம்
கொல்லை முல்லை கொழுந்தகை மல்லிகை
நல்ல சேர்கடம் பூர்க்கரக் கோயிலே.             5.20



இத்தலத்திற்கு வந்த நம் ஸ்வாமிகள்  முருகனின் திருவடிப்பேற்றை வேண்டிப் பாடுகிறார்.

வாருமிங் கேவீடி தோ பணம் பாஷாண
மால்கடந் தொபொமெ                                                    னியலூடே

வாடிபெண் காள்பாயை  போடுமென்றாசார
வாசகம் போல்கூறி                                                          யணைமீதே

சேருமுன்  காசாடை வாவியும் போதாமை
தீமைகொண்  டேபோமெ                                               னடமாதர்

சேரிடம் போகாம  லாசுவந் தேறாமல்
சீதளம் பாதார                                                                       மருள்வாயே.

நாரணன் சீராம கேசவன் கூறாழி
நாயகன்  பூவாயன்                                                             மருகோனே

நாரதும் பூர்கீத  மோத நின்றேயாடு
நாடகஞ் சேய்தாளர்                                                           அருள்பாலா!

சூரணங் கோடாழி  போய்கிடந் தேவாட
சூரியன்  தேரொட                                                                  அயிலேவி

தூநறுங்  காவேரி சேருமொண் சீறாரு
சூழ்கடம் பூர்தேவர்                                                                பெருமாளே!



முதல் நான்கு அடிகளில் விலைமாதரின் சாகசங்களைச் சொல்லி அவ்விடங்களுக்குப் போகாமல் இருக்க வேண்டும் என்கிறார்.


நாராயணன், ஸ்ரீராமன், கேஶவன், கூர்மையான சக்ராயுதம் தாங்கிய நாயகன், இடையர் குலத்தில் வந்த கண்ணபிரான் ஆகிய திருமாலின் மருகனே!

நாரதரும் தும்புருவும் இசைபாட, நின்று ஆடும்  நடனம் புரிகின்ற  திருவடியையுடைய சிவபெருமான்  அருளிய குழந்தையே!

சூரனும், அவனுடைய வருத்தும் செயல்களும் கடலில் போய்  அழியும் படியும், சூரியனுடைய தேர் பழையபடியே தடையின்றி  ஓடும்படியும்  வேலாயுதத்தைச் செலுத்தியவனே!

பரிசுத்தமான மணம் வீசும் காவிரியுடன் சேர்கின்ற  ஒள்ளிய சிற்றாறு சேர்ந்து சூழும் கடம்பூரில்  அமர்ந்த பெருமாளே ! தேவர்களின் பெருமாளே !

உன்னுடைய சீதள பாதத்தை  அருள்வாய்!

இங்கு வரும் "பூவாயன் " என்ற வார்த்தைக்கு பல பொருள்கள் சொல்கிறார்  தணிகைமணி யவர்கள்.
  • தாமரை போன்ற இதழ் உடையவன்.
  • பூதேவிக்கு நாயகனாக வந்தவன்
  • பூலோகத்தையே தன்வாயில் தாய் யசோதைக்குக் காட்டியவன்
  • வராஹ அவதாரத்தில் பூமியையே தன் வாயால் கிண்டியவன்
  • சிவபிரானின் ஜோதியுருவின் அடியைத் தேட வராஹமாய் உருவெடுத்தபோதும் பூமியைத் தோண்டியவன்
  • பூலோகத்தில் ஆயர்குலத்தில்  கண்ணபிரானாக வந்தவன்.
அருணகிரிநாதரின் வாக்கின் விசேஷங்கள் பெரியவர்களுக்கல்லவா புரியும்!




படங்களுக்கு நன்றி: tamilnadu-favtourism.blogspot.in.

No comments:

Post a Comment