Sunday, 7 February 2016

20. திருப்புகழ்- 18.திருமுட்டம்= ஸ்ரீமுஷ்ணம்.



20. திருப்புகழ் -18. திருமுட்டம் =ஸ்ரீ முஷ்ணம்


இதுவரை நாம் பார்த்த தலங்களைக் காட்டும் படம்.

ருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 17 வது தலம் ஸ்ரீமுஷ்ணம். இது புகழ்பெற்ற ஆதிவராகப்பெருமாள் கோவில்கொண்டுள்ள அருமையான தலம். வைஷ்ணவர்கள் இதை "ஸ்வயம்வ்யக்த ஸ்தலம்" - தானாகவே தோன்றி விளங்கும் தலம் என்று கொண்டாடுகிறார்கள்.[இவ்வாறு எட்டுத் தலங்கள்  உள்ளன. இங்கெல்லாம் லக்ஷ்மியே பெருமாளைப் பூஜித்ததாக வரலாறு.]இங்குள்ள பெருமாள் மூர்த்தம் இயற்கையாகவே எழுந்த சாளக்ராமத்தால் அமைந்தது.  இது சிறந்த பரிகாரத்தலமாகவும் இருக்கிறது. வாகனங்களை வாங்கியவுடனும், விபத்துக்குள்ளாகி பழுதுபார்க்கப்பட்ட வாகனங்களையும் இங்கு கொண்டுவந்து பூஜை செய்யும் வழக்கம் இங்கு ப்ரசித்தம். ஆனாலும், இதை எந்த ஆழ்வாரும் பாடியதாகத் தெரியவில்லை! ஸ்ரீ சைதன்ய மஹாப்ரபு தனது தென்னிந்திய யாத்திரையில்  இங்கும் வந்து தரிசித்தார். அதனால் இது கௌடிய (வங்காள) வைஷ்ணவர்களுக்கும் உகந்த தலமாக இருக்கிறது.

இது பெரிய அழகான கோவில். ஸ்தல வ்ருக்ஷம் அஸ்வத்த மரம். புஷ்கரணியும் இருக்கிறது.

இங்கு வந்த அருணகிரிநாதர், இங்கு  நிதிலேஶ்வரர்  கோவிலில் உள்ள முருகனைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. பெருமாளைப் போற்றும் பெரும்குணம் கொண்ட நம் ஸ்வாமிகள், ஆதிவராகப் பெருமாளையும் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.


முதல் பாடல் முருகன் தரிசனம் தரவேண்டும் என வேண்டுவதாக அமைந்துள்ளது.

கழைமுத்து மாலை புயல்முத்து மாலை
கரிமுத்து மாலை                                              மலைமேவும்

கடிமுத்து மாலை வளைமுத்து மாலை
கடல்முத்து மாலை                                          அரவீனும்

அழல்முத்து மாலை  இவைமுற்று மார்பில்
அடைவொத்து  லாவ                                        அடியேன்முன்

அடர்பச்சை  மாவி லருளிற் பெணோடும்
அடிமைக்  குழா மொடு                                      அருள்வாயே !

மழையொத்த ஜோதி குயில் தத்தை போலும்
மழலைச்சொ  லாயி                                           எமையீனும்

மதமத்த  நீல களநித்த நாதர்
மகிழ்சத்தி யீனும்                                                முருகோனே

செழுமுத்து மார்பின்  அமுதத் தெய்வானை
திருமுத்தி மாதின்                      மணவாளா

சிறைவிட்ட சூரர் தலைவெட்டி ஞான
திருமுட்ட மேவு                                                    பெருமாளே !


மூங்கில் அல்லது கரும்பு தரும் முத்தாலாகிய மாலை, மேகம் தருகின்ற முத்தாலாகிய மாலை, யானதரும் முத்தாலாகிய மாலை -

மலையில் கிடக்கும் சிறந்த முத்தாலாகிய மாலை, சங்கில் கிடைக்கும் முத்தாலாகிய மாலை, கடலில் கிடைக்கும் முத்தாலாகிய மாலை,- 

பாம்பு தரும் சூடுமிக்க முத்தாலாகிய மாலை- இப்படிப்பட்ட எல்லாமாலைகளும் மார்பில் அடர்ந்து  புரண்டு விளங்க, 

அடியேன் முன்னால் பச்சைநிறக் குதிரையாகிய மயில்மீது, அருள் மிகுந்து, உனது பத்தினிகள் தேவசேனை-வள்ளியுடனும், அடியார் கூட்டத்துடனும் வந்து அருள்புரிவாயாக !

மழைமேகத்தை யொத்த நிறமுடைய ஜோதிஉமை, குயிலும் கிளியும் போன்றவள், மழலைமொழி பேசும் தாய், 

எம்மைப்பெற்ற  ஊமத்தைமலர் சூடியவரும், கழுத்து நீலமானவரும், நிர்த்தமாடும் தலைவருமாகிய சிவபெருமான் மகிழும் சக்தி பார்வதி தேவி பெற்ற குழந்தையே!

மார்பில் செழிப்புள்ள முத்துமாலை அணிந்த அமுதமயமானவளும், முத்தியைத் தரவல்ல மாதுமாகிய தேவசேனையின் மணவாளனே!

சிறையில் அடைத்த தேவர்களுக்கு சூரர்கள் இட்ட விலங்கைத் தகர்த்தெரிந்தவனே! ஞான உருவானவனே ! ஸ்ரீமுஷ்ணம் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !

தேவியரோடும், அடியவர் குழாத்துடனும் மயில்மீது வந்து தரிசனம் தரவேணும்.


இங்கு ஸ்வாமிகள் முருகன் அடியவர் குழாத்துடன் வரவேணும் என்கிறார். அடியவர்கள் அடியவர் உறவையே நாடுவார்கள். ஞான நெறி செல்வோர் தனிமையை விரும்பலாம். ஆனால் பக்தர்கள் பிறபக்தர்களுடன் சேர்ந்து ஆடிப்பாடுவதையே விரும்புவார்கள். இதைப் பல பெரியவர்களும் பாடியிருக்கிறார்கள். 

இங்கு தேவயானை முக்திமாது என்ற அரிய விஷயத்தைச் சொல்கிறார்.அவருக்கு அமிர்த (அமுத) வல்லி என்பதே பெயர். அமுதம் அமரத்தன்மையை அளிப்பது. அடியவர்களுக்கு அழியாத முத்திப்பேற்றை அருள்பவர் தேவசேனை. இதை முதல் திருப்புகழிலும்  (முத்தைத்தரு பத்தித் திருநகை அத்தி )குறிப்பிட்டார் நம் ஸ்வாமிகள்.


The map and the picture from: www.naavaapalanigotrust.com. Thanks.



சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி
     சிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்
          தனமுத் துக்கிரி யாமெனு நூலிடை ...... மடவார்கள்

சனுமெத் தப்பரி வாகிய மாமய
     லிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்
          தகுதத் தக்கிட தோதகு தீதென ...... விளையாடும்

விரகத் துர்க்குண வேசைய ராசையர்
     பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்
          விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள் ...... அதிபோக

மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்
     கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்
          விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள் ...... உறவாமோ


பொருவெற் றிக்கழை வார்சிலை யானுட
     லெரிபட் டுச்சரு காய்விழ வேநகை
          புகுவித் தப்பிறை வாழ்சடை யானிட ...... மொருமாது

புகழ்சத் திச்சிலு காவண மீதுறை
     சிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரி
          புவனத் தைப்பரி வாய்முத லீனுமை ...... யருள்பாலா

திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகி
     புனைவித் துத்தலை நாளமு தார்சுவை
          சிவபத் தர்க்கிது வாமென வேபகி ...... ரரிராமர்

திருவுற் றுப்பணி யாதிவ ராகர்த
     மகளைப் பொற்றன வாசையொ டாடிய
          திருமுட் டப்பதி வாழ்முரு காசுரர் ...... பெருமாளே.



[பாடல் www.kaumaram.com. -மிலிருந்து எடுக்கப்பட்டது. பணிவுடன் நன்றியும் அவர்களுக்கு சமர்ப்பணம்.]
இங்கு முதல் நான்கு அடிகளில் பொதுமகளிரின் இழிசெயல்களை இடித்துக்கூறுகிறார். அவர்களின் உறவு தகாது என்கிறார்.

போரில் என்றும் வெற்றியையே தரும் கரும்புவில்லை யுடைய  மன்மதன் உடல்எரிந்து , சருகுபோல்விழும்படி  நகைசெய்த  பிறையணிந்த சடையனாரின் இடது பாகத்தில் அமர்ந்த ஒப்பற்ற மாது-

எல்லோராலும் புகழப்படுகின்ற பராசக்தி, நிலைகுலையாத சிவபக்திமிகுந்த பரமேஶ்வரி, அருள்கொண்டு மூவுலகையும் முன்பு படைத்தவளான உமாதேவி அருளிய பாலனே!

பொன்மலையாகிய மேரு கடலில் சுழன்று ஆடும்படி, வாசுகியைக் கயிறாகக் கட்டி (கடைந்த முற்காலத்தில்), சுவைமிகுந்த இந்த அமுது  சிவபக்தர்களுக்கே உரியது ஆகும் என்று  பங்கிட்டுக் கொடுத்த திருமாலாகிய ராமர், 

லக்ஷ்மிதேவி பூஜித்துப் பணிந்த  ஸ்ரீ ஆதிவராகப் பெருமாளின்  திருமகளாகிய வள்ளியுடன் ஆடி மகிழ்ந்த, திருமுட்டத் தலத்தில் விளங்கும் முருகா! தேவர்கள் பெருமாளே !

[குடிகேடிகள் சேடிகள் உறவு தகாது.]

இங்கு ஸ்வாமிகள் ஒர் அரிய விஷயத்தைச் சொல்கிறார். அமுதம் கடைந்ததும் அதை திருமால் பகிர்ந்தளித்ததும் தெரிந்த விஷயங்கள்- என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்!  

அமுதத்தை நினைத்துக் கடைந்தவர்களுக்கு முதலில் கிடைத்தது ஆலகால விஷம்! அதனால் தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர் விஷத்தை யேற்று, தேவர்கள் அமுதம் பெறக் கருணைசெய்தார். அந்த அமுதத்தைப் பங்கிடவந்த திருமால், ' தேவர்கள் சிவபெருமானை வேண்டி, அவர் விஷத்தை நீக்கியருளியதால் அல்லவோ அமுதம் கிடைத்தது; அதனால் இந்த அமுதம் சிவனடியார்களுக்கே உரியது ' [அமுதார் சுவை சிவபத்தர்க் கிதுவாமென = சுவையாரமுது  இதுசிவபக்தர்க்கு ஆம்என ] என்று கருதி  சிவ பக்தர்களான தேவர்களுக்கே அளித்தாராம்! எத்தனை அரிய விஷயம்!





இங்கே ஆதிவராகர் என்று நினவுகூறியது எத்தகைய பரந்தமனத்தைக் காட்டுகிறது! தெய்வங்களிடையே பேதம் கருதும் பேதைமை நம் ஸ்வாமிகளிடம் இல்லை! அருணகிரியாரே நமது ஆசான்!


No comments:

Post a Comment