18. திருப்புகழ்- 16. கூடலையாற்றூர்
படம்: thirunalaippovar.blogspot.in Thanks.
இது அருணகிரிநாதர் தரிசித்த 15 வது தலம். வடவெள்ளாறும் மணிமுத்தா நதியும் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. பழைய கோவில் வெள்ளத்தால் விழுந்துவிட, அதே கற்களைக்கொண்டு பிறகு கட்டப்பட்ட கோவில். அதே பழைய விக்ரஹங்கள் தான்.கொடிமரமும் பலிபீடமும் இல்லை.
பழைய தலத்திற்கு சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளின் பதிகம் இருக்கிறது.
வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்
அடிகளிவ் வழிப்போந்த அதிசயம் அறியேனே. 7.85.1
இந்த "அதிசயத்திற்குப் " பின் ஒரு சரித்திரம் இருக்கிறது. சுந்தரர் திருப்புறம்பயத்திலிருந்து விருத்தாசலம் போகும்வழியில் இந்தத் தலத்திற்கு அருகில் வந்துகூட அங்கு செல்லாமல் மேலே நடந்தார். அப்போது எதிரில் வந்த ஒரு பிராமணரிடம் முதுகுன்றம் போகும் வழி கேட்டார். அவரோ, "கூடலையாற்றூருக்கு இதுதான் வழி " என்றுசொல்லி இங்கு வர வழிகாட்டிவிட்டு, ஊரை நெருங்கியதும் மறைந்தார். இவ்வாறு வந்து வழிகாட்டியது சிவபெருமானே என உணர்ந்த சுந்தரர், அந்த 'அதிசயத்தை" நினைத்துப் பாடிய பாடல்கள் இப்பதிகம்.
சம்பந்த ஸ்வாமிகளைப் பின்பற்றி, 'பல ஶ்ருதி ' பாடும் வழக்கமுடைய சுந்தரர், இப்பாதிகத்தின் கடைசிப் பாட்டில் இப்பதிகத்தைப் பாடுவதன் பயனையும் சொல்கிறார்:
கூடலை யாற்றூரில் கொடியிடை அவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இதுவென்று
நாடிய இன்தமிழால் நாவல வூரன்சொல்
பாடல்கள் பத்தும் வல்லார் தம்வினை பற்றறுமே.
இங்கு ஸ்வாமியின் பெயர் நெறிகாட்டு நாயகர். அம்பாள் பெயர் புரிகுழல் நாயகி. ஸ்வாமி இங்கு ப்ரம்மாவுக்கு நடனக்காட்சியளித்ததால், அவருக்கு நர்த்தனவல்லபேஶ்வரர் என்ற திருப்பெயரும் உண்டு. பராசக்தி, ஞானசக்தி என இரு அம்மன்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஊர் சற்று உட்புறமாக இருப்பதால், இன்றும் கூட பல இடத்தில் வழி கேட்டுதான் போகவேண்டிய நிலை!
பிராகாரம்.
இங்கு வந்த நம் அருணகிரி ஸ்வாமிகள் ஒரு திருப்புகழ் பாடினார். காலன் அணுகாதிருக்கும் அருளை வேண்டுகிறார்.
வாட்டியெனைச் சூழ்ந்தவினை யாசையமு வாசையனல்
மூட்டியலைக் காய்ந்த மழுவாமெனவி காசமொடு
மாட்டியெனைப் பாய்ந்துகட வோடடமொ டாடிவிடு விஞ்சையாலே
வாய்த்தமலர்ச் சாந்துபுழு கானபனி நீர்களொடு
காற்றுவரத் தாங்குவன மார்பிலணி யாரமொடு
வாய்க்குமெனப் பூண்டழக தாகபவி சோடுமகிழ் வன்புகூரத்
தீட்டுவிழிக் காந்திமட வார்களுட னாடிவலை
பூட்டிவிடப் போந்துபிணி யொடுவலி வாதமென
சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடியடி யேனுமுன தன்பிலாமல்
தேட்டமுறத் தேர்ந்து மமிர்தாமெனவெ யேகிநம
னோட்டிவிடக் காய்ந்து வரி வேதனடை யாளமருள்
சீட்டுவரக் காண்டுநலி காலனணு காநினரு ளன்புதாராய்.
என்னை வாட்டிச் சூழ்ந்துள்ள வினையும், மூவாசைகளும், தீயைமூட்டி உலையில் பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்புபோல மலர்ச்சியோடு என்னை நன்றாக மாட்டிவைத்து, வாழ்க்கையில் பிடிவாதமாக ஆட்டிவைக்கின்ற மாயையாகிய இதனால்-
கிடைத்துள்ள மலர், சாந்து, புனுகுசட்டம், பன்னீர் ஆகியவற்றுடன் நல்ல காற்றுவீச அனுபவித்து, நல்ல ஆபரணங்கள், முத்துமாலை கிடைத்ததென மார்பில் அணிந்து அழகுபெற , பவிசோடு, மகிழ்ச்சியும் அன்பும் மிக்குப் பெருக, -
மைதீட்டிய, ஒளிமிக்க கண்களுடன் கூடிய மாதருடன் விளையாடி, காமவலையில் மனம் பூட்டப்பட்டுப்போய், நோய்களுடன் வலிகளும், வாத நோயும் எனப்பல ஒன்றுசேர்ந்துவிட, நிலைமாறி, வினைகள்மூடி, அடியேனும் உன்மீது அன்பில்லாமல்-
சேகரித்தபொருள் நிரம்ப இருப்பதால், மனம் ஒருவாறு தெளிவுபெற்று, சாவு என்றுஒன்று உண்டு என்ற எண்ணமே இல்லாமல், வாழ்நாளைக் கடத்த, நமனார் தனது தூதர்களை ஒட்டி அனுப்ப, மெலிந்து, எழுத்துள்ளதும், ப்ரம்மாவினது அடையாளம் உள்ளது மாகிய ஓலைச்சீட்டுவரப் பார்க்கும்படி வருத்துகின்ற காலன் என்னை அணுகாதபடிக்கு உன்னுடைய அருளையும் அன்பையும் எனக்குத் தந்து உதவுக.
இங்கு ஸ்வாமிகள் சம்சாரத்தில் உழலும் சராசரி மனிதர்களீன் நிலையை விவரிக்கிறார். பணமும் பொருளும் உடலில் தெம்பும் இருக்கும்வரையில் இவர்கள் வாழ்வின் அடிப்படையைப் பற்றி நினைப்பதில்லை. பிறகு வியாதிகளும் மூப்பும் வந்துசேர கவலையில் மூழ்குகிறார்கள். தலை நரைப்பது, பல் ஆடிவிழுவது போன்றவை நமன் மனிதருக்கு அனுப்பும் எச்சரிக்கை- நோட்டீஸ் என்பார் ஸ்ரீ க்ருபனந்த வாரியார். இந்த விஷயங்களை அருணகிரிநாதர் பலபாடல்களில் சொல்கிறார். கந்தரலங்காரத்தில் ஒரு பாடல்:
கூர்கொண்ட வேலனைப் போற்றாமல் ஏற்றம் கொண்டாடுவிர்காள்!
போர்கொண்ட காலன் உமைக் கொண்டுபோம் அன்று பூண்பனவும்
தார்கொண்ட மாதரும் மாளிகையும் பணச் சாளிகையும்
ஆர்கொண்டுபோவர் ஐயோ கெடுவீர் நும்அறிவுஇன்மையே.
இதே கருத்தை ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் சொல்லியிருக்கிரார்.
दिनयामिन्यौ सायं प्रातः
शिशिरवसन्तौ पुनरायातः ।
कालः क्रीडति गच्छत्यायुः
तदपि न मुञ्चत्याशावायुः
தினயாமின்யௌ ஸாயம் ப்ராத:
ஶிஶிர வஸந்தௌ புனராயாத:
கால: க்ரீடதி கச்சத் ஆயுஹு
ததனபி ந முஞ்சத் யாஶா வாயு:
பகலும் இரவும், மாலையும் காலையும் , குளீர் காலமும் வஸந்த காலமும் மீண்டும் மீண்டும் வருகின்றன. காலம் விளையாடுகிறது! ஆயுள் சென்றுகொண்டே இருக்கின்றது (குறைந்துகொண்டே வருகின்றது.) ஆனாலும் ஆசாபாசம் விடுவதில்லை!
अङ्गं गलितं पलितं मुण्डं
दशनविहीनं जातं तुण्डम् ।
वृद्धो याति गृहीत्वा दण्डं
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥
அங்கம் கலிதம் பலிதம் முண்டம்
தஶன விஹீனம் ஜாதம் துண்டம்
வ்ருத்தோ யாதி க்ருஹீத்வா தண்டம்
ததபி ந முஞ்சத் யாஶா பிண்டம்.
உடல் தளர்ந்துபோய் விட்டது, தலை நரைத்து விட்டது. பல் விழுந்துவிட்டது.கிழவன் கோலை ஊன்றி நடக்கிறான். ஆனாலும் ஆசைக்கூட்டத்தை விடவில்லை!இனி, முருகனின் சிறப்பைச் சொல்கிறார்.
வேட்டுவரைக் காய்ந்துகுற மாதையுற வாடியிருள்
நாட்டவரைச் சேந்த கதிர் வேல்கொடம ராடிசிறை
மீட்டமரர்க் காண்டவனை வாழ்கநிலை யாகவைகும் விஞ்சையோனே
வேற்றுருவிற் போந்துமது ராபுரியி லாடி வைகை
யாற்றின்மணற் றாங்குமழு வாளியென தாதைபுர
மேட்டையெரித் தாண்டசிவ லோகன்விடை யேறியிட முங்கொளாயி
கோட்டுமுலைத் தாங்குமிழை யானஇடை கோடிமதி
தோற்றமெனப் போந்த அழ கானசிவ காமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தார அருள் கந்தவேளே
கூட்டு நதித் தேங்கிய வெளாறுதர ளாறு திகழ்
நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ
கூற்றுவிழத் தாண்டியென தாகமதில் வாழ்குமர தம்பிரானே.
வேடர்கள்மீது கோபம்கொண்டு, வள்ளியுடன் உறவு கொண்டாடி,.
அஞ்ஞான (இருள்) நாட்டினராகிய அரக்கரர்களைச் சிவந்த ஒளிவீசும் வேல்கொண்டு போர்செய்து , தேவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, அத்தேவர்களின் தலைவனான இந்த்ரன் நிலயாகவாழும்படி வைத்த வித்தகனே !
[ அரக்கர்கள் ஞானமில்லாதவர்கள். வேதாந்தத்தில் ஞானமின்மையே இருள் எனப் படுகிறது. இருளை ஒளிதான் நீக்கும்.; அதுபோல அஞ்ஞானத்தை ஞானம்தான் நீக்கும், முருகனின் வேல் ஞானத்தின் சின்னம்- ஞானசக்தி. அதனால் அது ஒளிவேல்- மின்னும் கதிர்வேல், ஞான ஶக்திதர ஸ்கந்த:]
[வேதத்தில் இதுவே ஒளிக்கும் இருளுக்குமிடையேயான போராக வருணிக்கப்படுகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ள இயலாத மூளைகெட்ட வெள்ளைக்கார முண்டங்கள் இதை வெள்ளைத்தோலர்களுக்கும் கறுப்பர்களுக்கும் நடத்த போர் என எழுதிவிட்டனர். விவரம் வேண்டுவோர் ஸ்ரீ அரவிந்தர் கட்டுரைகளை வாசித்தறியவும்.]
மண்சுமக்கும் கூலியாள் வுருவில் மதுரை சென்று, வகையாற்றின் மணலைச் சுமந்து லீலை புரிந்தவரும், மழு ஏந்தியவரும், என்னுடைய தந்தையும், திரிபுரத்தின் மேன்மையை எரித்த சிவலோகனும், ரிஷபவாகனத்தில் ஏறினவரும் ஆகிய சிவபிரானது இடது பாகத்தைக் கொண்ட எனது தாய்-
மலையன்ன கொங்கைகளைத் தாங்கும் நூல்போன்ற இடையையும், கோடி சந்திரர்களின் அழகையும் கொண்ட சிவகாமி. வலிமைமிக்க யமனை உதைத்து அழித்த அழகியாம் பார்வதிதேவி மனங்குளிரப் பெற்றுகந்த கந்தவேளே!
[கூற்றுவனை உதைத்தது இடது பாதம். பரமனது இடதுபாகம் அம்பிகைக்குரியதால், இங்கு அம்பிகையே உதைத்ததாகக் கூறுகிறார்! இதை வேறு பாடல்களிலும் சொல்லியிருக்கிறார். முருகன் அம்பிகைக் குகந்தவன் என்கிறார், பெற்றும் உகந்தது கந்தனையே என்பார் ஞானசம்பந்த ஸ்வாமிகள். (உற்றுமை சேர்வது பாடல்.)
வெள்ளாறும் மணிமுத்தாறும் கூடி விளக்கங்கொண்ட இடத்தில், கூடலையாற்றூர் என்னும் தலத்தில் விளங்கும் சேந்தனே! மயில் வாகனனே!
எமன் என்னை நெருங்காதபடி, வள்ளிதெய்வானையுடன் என்னிடத்திலேயே குடிகொண்ட குமரனே ! தம்பிரானே !
தரளம்= முத்து. தரளாறு= மணிமுத்தாறு.
அருமையான கருத்துக்கள் கொண்ட பாடல்.
No comments:
Post a Comment