17. திருப்புகழ் -15. திருமுதுகுன்றம்:
விருத்தாசலம்.
அருணகிரிநாதர் தரிசித்த அடுத்த தலம்- 14 வது - முதுகுன்றம். இன்று இதற்கு விருத்தாசலம் என்ற பெயர் வழங்கிவருகிறது. பழமலை என்பதும் அழகிய பழைய பெயர். விருத்தகிரி எனவும் படும்.
இது ஒரு காரணப்பெயர். உலகத்தில் மலைகள் தோன்றுவதற்கு முன்பே பரமன் இங்கு மலையாக எழுந்தருளினான். அதனால் இது பழமலை. ஸ்வாமி பெயர் பழமலை நாதர்= விருத்தகிரீஶ்வரர். அம்பாள் பெயர் விருத்தாம்பிகை, பெரியநாயகி.
இதற்கு விருத்தகாசி யெனவும் ஒரு பெயருண்டு. இங்கு மடியும் உயிர்களுக்கு அம்பாள் தன் முந்தானையால் வீச, சிவபெருமான் பஞ்சாக்ஷரம் அவர் காதில் ஓதி அவர்களுக்கு முக்தியை அருளுகிறான். அதனால் இது காசித்தலத்தைக் காட்டிலும் உயர்ந்தது என கந்தபுராணத்தில் வருகிறது. காசியின் விழுமிதான முதுகுன்ற வரை என்பது கந்தபுராண வசனம். [வழி நடைப் படலம்]
இங்கு மணிமுத்தா நதி ஓடுகிறது (ஓடியது!) பல தீர்த்தங்களும் உண்டு.
இந்தத்தலம் சம்பந்தருக்குப் பிடித்த தலம் போலும்! ஏழு பதிகங்கள் பாடியிருக்கிறார். அப்பர் ஒரு பதிகமும், சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் மூன்று பதிகங்களும் பாடியுள்ளனர். அவர் இங்கு இறைவனிடம் பொன்பெற்று மணிமுத்தாற்றில் இட்டு, அதைத் திருவாரூர் திருக்குளத்தில் மீட்டுக்கொண்டார்! அப்போது அங்கிருந்தபடியே, முதுகுன்றைப் பாடினார்!
சம்பந்தர் பாடல்கள்.
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விடம் உண்ட
தொத்தார்தரு மணிநீள்முடிச் சுடர்வண்ணனது இடமாம்
கொத்தார் மலர் குளிர்ச்சந்தகில் ஒளிர்குங்குமம் கொண்டு
முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன் றடைவோமே. 1.12.1
தேவராயும் அசுரராயும் சித்தர் செழுமறையோர்
நாவராயும் நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும்
மேவராய விரைமலரோன் செங்கண்மால் ஈசன்யென்னும்
மூவராய முதல் ஒருவன் மேயது முது குன்றே. 1.53.1
நின்று மலர்தூவி இன்று முதுகுன்றை
நன்றும் ஏத்துவீர்க் கென்றும் இன்பமே.
ஈசன்முது குன்றை நேசம் ஆகிநீர்
வாசமலர் தூவப் பாச வினைபோமே. 1.93. 1,4.
மெய்த்தாறு சுவையும் ஏழிசையும் எண்குணங்களும்
விரும்பு நால்வே
தத்தாலும் அறிவொண்ணா நடைதெளியப் பளிங்கேபோல்
அரிவைபாகம்
ஒத்தாறு சமயங்கட்கு ஒருதலைவன் கருதுமூர்
உலவுதெண்ணீர்
முத்தாறு வெதிருதிர நித்திலம்வா ரிக்கொழிக்கு
முதுகுன்றமே. 1.131.1
தேவா சிறியோம் பிழையைப் பொறுப்பாய் பெரியோனே
ஆவா என்றங்கு அடியார் தங்கட்கு அருள்செய்வாய்
ஓவா உவரிகொள்ள வுயர்ந்தாய் என்றேத்தி
மூவாமுனிவர் வணங்கும் கோயில் முதுகுன்றே. 2.64.1
வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலார் ஆயிழை யாளொடும் அமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே. 3.34.1
முத்தி தரும்உயர் முதுகுன்ற மேவிய
பத்து முடியடர்த்தீரே
பத்து முடியடர்த் தீர்உமைப் பாடுவார்
சித்தநல் லவ்வடியாரே. 3.99.8
(இந்தப் பாடலில் முதுகுன்றம் முத்தி தரும் என்று கூறியுள்ளதைக்
கவனிக்க வேண்டும்.)
அப்பர் பாடல்
எத்திசையும் வானவர்கள் தொழ நின்றானை
ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று
பத்தனாய்ப் பணிந்தடியேன் தன்னைப் பன்னாள்
பாமாலை பாடப் பயில்வித்தானை
முத்தினை என்மணியை மாணிக்கத்தை
முளைத்தெழுந்த செம்பவளக் கொம்பொப்பானை
சித்தனை என்திரு முதுகுன் றுடையான் தன்னை
தீவினையேன் அறியாதே திகைத்தவாறே.
சுந்தரர் பாடல்
பொன்செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கசைத்தீர்
முன்செய்த மூவெயிலும் எரித்தீர்முது குன்றமர்ந்தீர்
மின்செய்த நுண்ணிடையாள் பரவையிவள் தன்முகப்பே
என்செய்த வாரடிகேள் அடியேனிட் டளங்கெடவே . 7.25.1
நஞ்சி யிடையின்று நாளையென் றும்மை நச்சுவார்
துஞ்சி யிட்டாற்பின் னைச்செய்வ தென்னடி கேள்சொலீர்
பஞ்சி யிடப்புட்டில் கீறுமோ பணி யீரருள்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே. 7.43.1
மெய்யை முற்றப்பொடிப் பூசியொர் நம்பி
வேதம் நான்கும் விரித்தோதி யொர் நம்பி
கையிலோர் வெண்மழு வேந்தியொர் நம்பி
கண்ணு மூன்றுடை யாரொரு நம்பி
செய்ய நம்பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரம் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி
எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே.
[நமது பழையகோவில்கள் உள்ள ஒவ்வொரு தலமும் ஒவ்வொரு வகையில் சிறப்புமிக்கதேயாகும். நம் பெரியவர்கள் கண்டவிடத்தில் கோவில் கட்டவில்லை. ஆனால் இன்று பலருக்கும் தலப்பெருமையும் தெரியவில்லை; அதைப்போற்றிப் பாதுகாக்கும் முறையும் தெரியவில்லை.பெரிய கோவிலெல்லாம் காட்சிப்பொருளாகிவிட்டது; அதைச்சுற்றிலும் வியாபாரஸ்தலமாகிவிட்டது. மதச்சார்பில்லை என்று பிதற்றும் அரசாங்கமே உண்டியல்வைத்தும், கட்டணம் வசூலித்தும் ஹிந்துக்களிடம் மட்டும் பணம் சுரண்டுகிறது. இது துலுக்கர்கள் போட்ட ஜிசியாவரியைவிட எப்படி வித்தியாசமாகும்?]
இத்தலத்திற்கு வந்த அருணகிரிநாதர் இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் பாடியிருக்கிறார்.
குடத்தாமரை யாமென வேயிரு
தனத்தார்மதி வாணுத லாரிருள்
குழற்காடின மாமுகில் போல்முது ...... கலைமோதக்
குலக்கார்மயி லாமென வேகயல்
விழித்தார்கர மேல்கொடு மாமுலை
குடத்தியாழ்கிளி யாமென வேகுயில் ...... குரலோசை
படித்தார்மயி லாமென வேநடை
நெளித்தார்பல காமுகர் வார்கலை
பழிப்பாரவ ராசையை மேல்கொடு ...... விலைமாதர்
படிக்கார்மின லாமென வேநகை
புரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்
பறிப்பார்பழி காரிகள் நாரிக ...... ளுறவாமோ
அடைத்தார்கட லோர்வலி ராவண
குலத்தோடரி யோர்சர னார்சின
மழித்தார்முகி லேய்நிற ராகவர் ...... மருகோனே
அறுத்தாரய னார்தலை யேபுர
மெரித்தாரதி லேபுல னாருயி
ரளித்தாருடல் பாதியி லேயுமை ...... அருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரற
அடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்
விளைத்தாய்குடி வாழம ரோர்சிறை ...... மிடிதீர
விழித்தாமரை போலழ காகுற
மகட்கானவ ணாஎன தாயுறை
விருத்தாசலம் வாழ்மயில் வாகன ...... பெருமாளே.
இதில் முதல் நான்கு வரிகளில் விலைமாதரின் உறவைக் கண்டிக்கிறார்.
பின் நான்கு வரிகள்:
கடலை அணைகட்டி யடைத்து, வலிமைமிக்க ராவணனை அவன் குலத்தோடு அரிந்து தள்ளி அழித்த ஒர் (ஒப்பற்ற) அம்பையுடையவர்; அசுரர்களின் கோபத்தை அழித்து ஒழித்தவர்; மேகத்துக்கு நிகரான நிறம்கொண்ட ராகவமூர்த்தியின் மருகனே!
பிரமனது தலையைக் கொய்தவர்; திரிபுரத்தை எரித்தவர்; அந்தத் திரிபுரத்தில் இருந்த அறிவுள்ள மூன்று அசுரர்களின் உயிரைக் காத்தருளியவர்; ஆகிய சிவபெருமானது உடலில் பாதியாகவுள்ள உமாதேவியார் அருளிய பாலனே!
[ திரிபுரத்தை எரித்தபோது சிவபக்தர்களாகிய மூன்று அசுரர்கள் உயிர் பிழைத்தனர். அவர்களில் இருவர் கோவில் காப்பவராகவும், ஒருவன் முழவு வாத்யம் ஒலிப்பவனாகவும் ஆயினர்.]
விஷகுணம் கொண்ட அசுரர்களுடைய ஊர்கள் வேறுடன் அழியும்படி சம்ஹாரம் செய்தாய். ஒளிமிக்க வேலைக்கொண்டு பராக்ரமம் புரிந்தாய். தேவர்கள் மீண்டும் தம் இடம் புகவும், அவர்களுடைய சிறையும் வறுமையும் நீங்கவும் (அருளிய)-
தாமரை போன்ற கண்களையுடைய அழகனே! வள்ளிக்குப் பிரியமுள்ள அழகனே! என்னுடைய தாய் (பார்வதி- விருத்தாம்பிகை) அமர்ந்துள்ள விருத்தாசலத்தில் வாழும் மயில் வாகனப் பெருமாளே!
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
செயமுன மருளிய ...... குளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழு
தெறிபட மறுகிட ...... விடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களி
னுறுபட ருறுமெனை ...... யருள்வாயோ
உலகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்
ஒருநொடி தனில்வரு ...... மயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்
கணினெதிர் தருவென ...... முனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமக
கருணையில் மொழிதரு ...... முதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிட
முரணுறு மசுரனை ...... முனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்
முதுகிரி வலம்வரு ...... பெருமாளே.
முக்திவாசகமாகிய ப்ரணவப்பொருளின் விளக்கத்தைப் பெற சிவபிரான் உன்னை வணங்க, முன்பு அவருக்கு அதனை உபதேசித்த சரவணபவனே!
ஒளிமிக்க மதுரையில் சமணர்களின் உயிர் கழுவில் கலக்கமுற்றுச் சிதற வைத்தவனே !
நீக்குதற்கு அரிதான உன்னுடைய திருவருளில் அன்பில்லாதவர்களைப் போலத் துன்பத்தை அனுபவிக்கின்ற எனக்கு அருள்வாயோ!
உலகத்தில் யாவரும் புகழும்படித் திருவண்ணாமலையில் ஒரு நொடிப்பொழுதில் வந்து தோன்றிய மயில்வீரனே!
கரிய ரேகைகள் பொருந்திய அம்புபோன்ற கண்களையுடைய வள்ளிக்குமுன் வேங்கை மரமாக முன்பு ஆனவனே!
கரியமேகத்தைப் போன்ற நிறமுடைய திருமாலின் அழகிய மருகனே! கருணையுடன் உபதேசமொழி தந்த முதல்வனே !
நறுமணமலர்கொண்ட கற்பக விருக்ஷத்தின் நிழல்கீழ் இருக்கும் தேவர்களின் சிறை நீங்கும்படி, மாறுபட்டு நின்ற சூரனைக் கோபித்தவனே !
(விருத்தாசலம் என்னும் இத்தலத்தில்) இறப்பவர்கள் பிறப்பு அறுகின்ற தூய நல்ல நிலை பெறும், தமிழில் முதுகிரி யெனப்பெயர் விளங்கும் இத்தலத்தில் வெற்றியுடன் எழுந்தருளியுள்ள பெருமாளே !
இங்கு பல அருமையான விஷயங்களைச் சொல்கிறார் நம் ஸ்வாமிகள்!
- சிவபெருமானுக்கு ப்ரணவப்பொருளை உபதேசித்தது
- ஞானசம்பந்தராக வந்து சமணர்களை அடக்கியது. முருகன்தான் சம்பந்தராக அவதரித்தார் என்பது நம் ஸ்வாமிகளின் கொள்கை. இதைப் பல பாடல்களில் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். இங்கு சம்பந்தர் சமணர்களைக் கழுவேற்றினார் என்பதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேணும். சம்பந்தர் தானே முன்னின்று அவ்வாறு செய்யவில்லை. வாதில் தோற்ற சமணர்கள் , தங்கள் சபதப்படி, தாங்களாகவே இத்தண்டனையை ஏற்று அனுபவித்தனர்.
- முருகன் (இறைவன்) அருளில் நம்பிக்கையில்லாதவர்கள் துன்பம் அனுபவிப்பர்.
- திருவண்ணாமலையில் முருகன் மயில்மீது தோன்றி அருணகிரியாருக்குக் காட்சியளித்தான். இதை யாவரும் வியந்து போற்றினர்.
- விருத்தாசலத்தில் இறப்பவர்களுக்கு "வடிவறும்" = மீண்டும் வடிவு (உடல்) எடுக்கும் நிலை தோன்றாது! அத்தகைய தூய, உயர்ந்த நிலையாகிய முக்திப்பேறு - "சுசிகரம்" - அவர்களுக்குக் கிடைக்கும்.
எத்தகைய மகிமை வாய்ந்த தலம்! எத்தகைய உயர்ந்த பாடல்கள்! மீண்டும் மீண்டும் போற்றிப் பயில்வோம் !
கோவிலின் பழைய தோற்றம். from: Wikimapia. Acknowldeged with thanks.
2 pictures are from mclmarimuthu.blogspot.in. Acknowledged with thanks.
Tiruppugazh text downloaded from kaumaram.com. Acknowledged with profound thanks. This is an excellent site for learning Tiruppugazh and other songs of Arunagirinatha with meaning. We can also listen to the recital of many of them.
I generally follow Tanigaimani Va.Su.Che. Pillai for the meaning.
No comments:
Post a Comment