Wednesday, 31 May 2017

87. திருப்புகழ்-81. வேப்பஞ்சந்தி, கொல்லிமலை


87.திருப்புகழ் - 81. வேப்பஞ்சந்தி, கொல்லிமலை



ருணகிரிநாதர் தரிசித்த 80வது தலம் வேப்பஞ்சந்தி எனப்படுகிறது. ஆனால் இது எந்த ஊர் என்று விளங்கவில்லை.  வேப்பூர், நிம்பபுரம் என வேறு இரு இடங்கள் இருக்கின்றன. இத்தலத்திற்கான ஒரு பாடல் இருக்கிறது.


நாட்டந் தங்கிக் கொங்கைக் குவடிற் ...... படியாதே

நாட்டுந் தொண்டர்க் கண்டக் கமலப் ...... பதமீவாய்

வாட்டங் கண்டுற் றண்டத் தமரப் ...... படைமீதே

மாற்றந் தந்துப் பந்திச் சமருக் ...... கெதிரானோர்

கூட்டங் கந்திச் சிந்திச் சிதறப் ...... பொருவோனே

கூற்றன் பந்திச் சிந்தைக் குணமொத் ...... தொளிர்வேலா

வேட்டந் தொந்தித் தந்திப் பரனுக் ...... கிளையோனே

வேப்பஞ் சந்திக் கந்தக் குமரப் ...... பெருமாளே.




நாட்டமும் ஆசையும் உன்பால்  தங்க  வைத்து, கொங்கை  மலைகளில் படியாமல்,


தங்கள் சித்தத்தை உனது திருவடியில் நாட்டவல்ல தொண்டர்களுக்கு  கிட்டும்படியாக உனது திருவடித் தாமரையைக் கொடுத்தருள்வாய்.


சோர்வு காணும் படியாக  விண்ணகத் தேவர் படைமீது வஞ்சின மொழிபேசி  கூட்டமாய்ப்  போருக்கு எதிர்த்துவந்தவராகிய அசுரர்கள்கூட்டமெல்லாம் பிரிந்து சிதறிப்போகும்படி  சண்டை செய்தவனே !
யமனுடைய ஒழுங்கான ( நேரான ) குணம் போல விளங்கும் பண்பை  நிகர்த்த வேலை யுடையவனே !
அடியார்களின் விருப்பத்தை நிறைவேற்றும்  பெருமான், பெரிய தொப்பையை உடைய பெருமான், யானை முகப் பெருமான், ஆகிய கணபதிக்கு இளையவனே !
வேப்பஞ்சந்தித் தலத்தில் அமர்ந்த கந்தப்   பெருமாளே ! குமரப் பெருமாளே !
கமலப் பதமீவாய் !


கொல்லிமலை


view of Kollihills from Belukurichi.
Karthickbala. CC BY-SA 3.0

அடுத்து 81வது தலமாக கொல்லிமலைக்கு வருகிறார். இங்கு அறப்பளீஶ்வரர் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். சங்ககாலத்திலிருந்து புகழ்பெற்ற இடம். தர்மதேவதையே இம்மலை வடிவில் வந்ததால் இதற்கு அறமலை என்ற பெயர் வழங்கியது. சதுரகிரி என்றும் சொல்வார்கள். அப்பரும் சம்பந்தரும் இந்த தலத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்கள். இங்கு நம் ஸ்வாமிகள் இரண்டு திருப்புகழ்ப்பாடல்கள் அருளியிருக்கிறார்.

கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
     கட்கு மன்னு மில்ல                           மிதுபேணி

கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
     கக்க எண்ணி முல்லை                       நகைமாதர்

இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
     யிட்டு பொன்னை யில்லை               யெனஏகி

எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
     யெற்று மிங்ங னைவ                       தியல்போதான்


முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
     முட்ட நன்மை விள்ள                           வருவோனே

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
     முத்தி விண்ண வல்லி                         மணவாளா

பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
     பட்ட துன்னு கொல்லி                       மலைநாடா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல                    பெருமாளே.



கஷ்டங்கள்  மிகுந்த சேறு போன்றதும், கொடுகொட்டி என்னும்  பொம்மைபோல கூத்தாடவைப்பதுமான ஐம்புலன்களுக்கு இடமாகிய இந்த உடலை விரும்பி, 


நான் கற்ற வித்தைகளைச்சொல்லி,  நினைத்ததெல்லாம் சுலபமாக நிறைவேறும், மகிழலாம் எனக் கருதி, முல்லை மலர் போன்ற  பற்களை உடைய மாதர்களின்


இஷ்டப்படி செயல்பட்டு,  நல்ல  பொருள்களையெல்லாம் ஒன்றாகக் கொட்டி அவர்களிடம் கொடுத்தபின், இன்னும் கொடுப்பதற்குப் பொருள் இல்லை என்று சொல்லி, வெளி வந்து,


ஏமாற்றும் பொருட்டு பொய்வழியை  யோசித்தும், பொன் இல்லாமையை நினத்து இரக்கமுற்றும் இவ்வாறு  மனம் வருந்துவது தகுமோ ?


முழு உண்மையைச் சொல்லும் [ ருத்ர ஜன்மன் என்னும்] செட்டியாக  அவதரித்து ,  சண்டையிட்ட புலவர்கள் உறுதிப்பொருளைத் தெரிந்துகொள்ளும் வண்ணம், முழுதும் சமாதானம் விளையும்படியாக வந்தவனே !


முத்து நிற வல்லி, அழகிய சித்ர நிற வல்லி, முக்திதரவல்ல  விண்ணுலக வல்லியாம் தேவசேனையின்  மணவாளனே !


வழியில் அமைக்கப்பட்டிருந்த மோகினிப்பெண்,  மது மயக்கம் போல போதை தரும் பெண்   ஆகிய கொல்லிமலைப்பாவை  இருக்கும் கொல்லிமலை நாடனே !


பச்சை நிறமான  வன்னி, அல்லி, வெட்சி  ஆகிய வற்றை அணிந்த  முடியுடைய பெருமாளே ! பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்தவல்ல பெருமாளே !


உலக மாயையில்  [ பெண், பொன் ] மயங்கி வருந்துவது தகுமோ ?

பெண், பொன் இந்த இரண்டிற்காகத்தான் மக்கள்  இந்த உலகில் அதிகம் அவதிப் படுகிறார்கள். 'காமினி, காஞ்சனம் ' ஆகிய இவையே மாயை என்பார் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்ஸர். இங்கு அருணகிரியார் அதையே சொல்கிறார்.

தேவசேனை முக்தி மாது என்பது  நாதரின் கொள்கை. இதை முதல் திருப்புகழிலேயே சொன்னார்.

 " முத்தித் தரு பத்தித் திருநகை அத்தி "

" அமுதத் தெய்வானை திருமுத்தி மாது " 

என  ஸ்ரீமுஷ்ணம் திருப்புகழிலும் சொல்லியிருக்கிறார். 
தெய்வானையின் வாகனமாகிய மேகம் நமக்கு செல்வம் தரும் எனவும் கந்தரந்தாதியில் பாடியிருக்கிறார்.
" அவன் தெய்வ மின் ஊர் செல்வந்து இகழும் நமது இன்மை தீர்க்கும்"  
[பாடல் 100]

 இகபர சௌபாக்யம் தரும் வரதனல்லவா! அதற்கு இதமாக வள்ளி, தேவசேனை ஆகிய இரு தேவிமார்!

இதைத் தொடர்ந்து இன்னொரு அருமையான பாடல்:


தொல்லைமுதல் தான்  ஒன்று மெல்லியிரு பேதங்கள்
     சொல்லுகுணம் மூவந்தம்             எனவாகி

துய்யசதுர் வேதங்கள் வெய்யபுலன் ஓரைந்து
     தொய்யுபொருள் ஆறங்கம்           என  மேவும் 

பல்லபல நாதங்கள் அல்கபசு பாசங்கள்
     பல்குதமிழ் தானொன்றி               யிசையாகிப்

பல்லுயிரு மாயந்த மில்லசொரு பாநந்த
     பெளவமுற வேநின்ற               தருள்வாயே


கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோவம்பு
     கல்வருக வேநின்று                     குழலூதுங்

கையன் மிசை யேறும்பன் நொய்யசடை யோனெந்தை
     கைதொழமெய்ஞ் ஞானஞ்சொல்                கதிர்வேலா

கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளிபுன மேசென்று
     கொள்ளைகொளு மாரன்கை                       யலராலே

கொய்துதழை யேகொண்டு செல்லுமழ வாகந்த
     கொல்லிமலை மேனின்ற                             பெருமாளே.




பழம்பொருள், முழுமுதற்பொருள் என்று தான் ஒன்றே விளங்குவதாய்,
சக்தி, சிவம் என்ற இருவேறு தன்மையதாய்,
ராஜஸம், தாமஸம், சாத்வீகம் எனச் சொல்லப்படும் முக்குண முடிவாய் [ முக்குண முடைய திரிமூர்த்திகளாய் ]
பரிசுத்தமான நான்கு வேதங்களாய்,
ஐம்புலன் களையும் சோர்வடையச்செய்யும் பொருள்  கொண்ட  [ சிக்ஷை, வியாகரணம், சந்தஸ்,  நிருக்தம்,  ஜோதிஷம் , கல்பம் என்னும் ] ஆறு வகைப்பட்ட வேதப்பொருள் உணர்த்தும் கருவிகளாக விளங்குவதாய்,
பலப்பல ஒலிகளில் தங்குவதாய், உயிர், தளை என்பனவாய், பெரிதும் பொருந்தி இன்னிசையாய்,
பல உயிர்களுமாய், முடிவில்லாததாய் உள்ள ஆனந்த உருவக் கடலை அடையும்படிச் செய்யவல்ல பொருள் எதுவோ  அந்தப் பொருளை அருளுவாயாக !


கஷ்டப்படும் பசுக்கள் தங்கள் அழகிய இடம் வந்து சேர, மலையும் உருகும்  படியாக, நின்று  மூங்கிலினாலான  குழலை ஊதும் கையை  உடையவனாகிய  கண்ணபிரானாம் திருமாலாகிய  விடையில் ஏறும்  பெரியோனும், புன்சடையுடையோனும்  ஆகிய எந்தை சிவபிரான் கைதொழுது நிற்க,  மெய்ஞ்ஞானத்தைப் போதித்த ஒளி வேலனே !
தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளியிடம் சென்று, உயிரைக் கொள்ளை கொள்ளும்  மன்மதனின் கைமலர் அம்புகளின் செயலாலே,
தழைகளைக் கொய்துசென்ற  கட்டழகுக் கந்தனே !
கொல்லிமலைமேல் விளங்கும் பெருமாளே !


பேரின்ப நிலையை அருள்வாயே ! 


அறப்பளீஶ்வரர் கோவில்.
Karthickbala. CC BY-SA 3.0




Tuesday, 30 May 2017

86. திருப்புகழ் -80. அரத்துறை


86.திருப்புகழ் - 80. அரத்துறை


wikimapia

 அடுத்து அருணகிரி நாதர் வந்த 79வது தலம்  'திருநெல்வாயில் அரத்துறை ' எனப்படும். இப்போது திருவட்டுறை, திருவட்டத்துறை  என்று சொல்கிறார்கள். ஸ்வாமி தீர்த்தபுரீஶ்வரர், ஆனந்தீஶ்வரர், அரத்துறை நாதர். அம்பாள் ஆனந்த நாயகி, திரிபுரசுந்தரி, அறத்துறை நாயகி. இங்கு நிவா நதி தீர்த்தம், ஆலமரம் தலமரம்.  இங்கு முருகன் ஒரு முகம், நான்கு கரத்தோடு காட்சியளிக்கிறார். இத்தலம் மூவர் பாடலும் பெற்ற 44 தலங்களுள் ஒன்றாகும். பிள்ளையார் வருந்தி நடந்துவந்தது கண்டு, சிவபிரான் சம்பந்தருக்கு முத்துச் சிவிகையும் முத்துக்குடையும்  அளித்தருளிய தலம்.

சம்பந்தர்

எந்தை யீசன் எம் பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்  சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுறவில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே.


[ இரண்டாம் திருமுறை ]


அப்பர்

கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை யரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.


கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை யரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.


[ஐந்தாம் திருமுறை ]

சுந்தரர்

கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்
    கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெல்வாயி லரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
    நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே







இங்கு அருணகிரி நாதர் பாடிய பாடல் ஒன்று  இருக்கிறது.

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
     கவிசொ லிச்சிரித்            துறவாடிக்

களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
     கருதி வைத்தவைப்         பவைசேரத்

தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
     தழுவி நெக்குநெக்          குயிர்சோரச்

சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
     தருணி கட்ககப்               படலாமோ


பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
     பிரம சிற்சுகக்                 கடல்மூழ்கும்

பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
     ப்ரபல கொச்சையிற்         சதுர்வேதச்

சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
     சிவிகை யைக்கொடுத்         தருளீசன்

செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
     திருவ ரத்துறைப்                  பெருமாளே.



முதல் நான்கு அடிகளில் பொதுமகளிர் மயக்கும் விதத்தைச் சொல்லி அதற்கு மயங்கக்கூடாது  என்கிறார். 
பின் நான்கு அடிகளில்  சம்பந்தருக்கு அருளியதைச் சொல்கிறார்.


பிறவிப்பிணியைத் தொலைத்தருளக்கூடிய , உருவம் ஏதும் இல்லாத, முழுமுதற் பொருளான ஞானானந்தக் கடலில் முழுகும்,
பெரிய முனிவர்கள்  கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே!
சீர்காழியில் நான்கு வேதங்களும் வல்லவனாய் வந்த [ ஞான சம்பந்தச் ] சிறுவனே !
உன்பால் திருவருள் வைத்து முத்துக் குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளின-
சிவன் வீற்றிருக்கும் பூமியினிடத்தே, புகழ்பெற்ற சத்திய வாசகப் பெருமாளே !
திருவரத்துறைப் பெருமாளே !

இந்தப்பாடலிலும்  சம்பந்தராய் வந்தது முருகனே எனத் தெளிவாகச் சொல்கிறார்.

 சதுர்வேதச் சிறுவன்:  சம்பந்தர்  நான்மறை வல்லவர். இதை அவரே  பலபாடல்களில் பாடியிருக்கிறார்.
" நான்மறை வல்ல ஞான சம்பந்தன் ",  "மறை ஞான ஞான முனிவன் " , "ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன் " என்றெல்லாம்  தம்மைப் பற்றிச் சொல்வார்.அதை இங்கு நாதர் நினவுகூருகிறார். 

கொச்சை :  சீர்காழிக்குள்ள பன்னிரண்டு பெயர்களில் ஒன்று.



Monday, 29 May 2017

85.திருப்புகழ் -79.வாலிகண்டபுரம்


85.திருப்புகழ்- 79.வாலிகண்டபுரம்


deivadharisanam.com. thanks

அருணகிரிநாதர் அடுத்து வந்த 78வது தலம் வாலி கண்ட (அ) கொண்ட புரம். இது பெரம்பலூருக்கு அருகில் உள்ளது. பழமையான கோவில். ஸ்வாமி பெயர் வாலீஶ்வரர். ராமாயணகால தொடர்புடையது . வாலி இங்கு தவம் செய்து சிவபெருமானிடம் வரம்பெற்று மிகுந்த பலசாலியானான்.. இங்குள்ள பால தண்டாயுத பாணியை  அருணகிரியார் பாடியிருக்கிறார்.


ஈயெ றும்புநரி நாய்க ணங்கழுகு
காக முண்பவுட லேசு மந்துஇது
ஏல்வ தென்றுமத மேமொ ழிந்துமத       வும்பல்போலே
ஏது மென்றனிட கோலெ னும்பரிவு
மேவி நம்பியிது போது மென்கசில
ரேய்த னங்கள்தனி வாகு சிந்தைவச        னங்கள்பேசிச்
சீத தொங்கலழ காவ ணிந்துமணம்
வீச மங்கையர்க ளாட வெண்கவரி
சீற கொம்புகுழ லூத தண்டிகையி           லந்தமாகச்
சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு
மாசை வெந்திடவு னாசை மிஞ்சிசிவ
சேவை கண்டுனது பாத தொண்டனென       அன்புதாராய்

சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி
சூரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ
சூரி யன்புரவி தேர்ந டந்துநடு              பங்கினோடச்
சோதி யந்தபிர மாபு ரந்தரனு
மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது
சூழ மன்றில்நட மாடு மெந்தைமுத            லன்புகூர
வாது கொண்டவுணர் மாள செங்கையயி
லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள்
மாதர் சிந்தைகளி கூர நின்றுநட              னங்கொள்வோனே
வாச கும்பதன மானை வந்துதினை
காவல் கொண்டமுரு காஎ ணும்பெரிய
வாலி கொண்டபுரமே யமர்ந்து வளர்                தம்பிரானே.
உனது பாத தொண்டனென  அன்புதாராய்.

ஈ, எறும்பு, நரி, நாய்க்கூட்டங்கள், பேய், கழுகு, காகம்  ஆகியவை உண்ணும் இந்த உடலை நான் சுமந்து, இது தக்கது என்று நினைத்து, ஆணவ மொழிகளையே பேசி, மத யானைபோல -
எல்லாம் என்னுடைய ஆட்சிக்கு அடங்கியது என்னும்படி, இன்பமடைந்து, அதுவே நிலையாக இருக்குமென நம்பி, 'இவருக்கு இந்த ஆடம்பரங்கள் போதுமா ' எனச் சிலர் சொல்லும்படி, செல்வம் மிகுந்து,அழகிய எண்ணங்கள் கொண்டு பேசி,
குளிர்ந்த மாலைகளை அழகாக அணிந்து, நல்ல மணம் வீச, மங்கையர்கள் நடனம் ஆட, வெண் சாமரங்கள் மேலெழுந்து வீச, ஊதுகொம்பு, புல்லாங்குழல் முதலிய வாத்யங்கள் இசைத்து வர, பல்லக்கில் -
அழகாக அமர்ந்துவரும் பெருமைகூடிய பெரிய வாழ்வைக் கொண்டு திரியும் ஆசையானது  வெந்து அழிய, உன்மீது அன்பு மிகுந்து, மங்களமான  உனது தரிசனத்தைப் பெற்று, உனது திருவடித் தொண்டன் என்னும்படியான அன்பைத் தருவாயாக !
வஞ்சனைச் செயல்களுக்கு இடமாக இருந்த , இருண்ட பிளவுகளைக்கொண்ட   கிரௌஞ்ச மலையும், அசுர சூரர்களும் வெந்து பொடியாகி அழிந்துபட, சூர்யனுடைய குதிரைகள் பூட்டிய தேர் முன்பு போனது போலவே   நேர்வழியில் நடுவாக ஓட,
பொன் நிறத்தவனான அந்த பிரம்மாவும், இந்த்ரனும், முதல் தேவர் முதல் கடைத் தேவர் வரை எல்லோரும் வணங்கிச் சூழ்ந்து நிற்க,  கனக சபையில் நடமாடும் எந்தை சிவபிரான் முதலாக யாவரும் அன்பு மிகுந்து நிற்க,
போருக்கு என்று வாதுசெய்துவந்த அசுரர்கள்  மாண்டு அழிய, செவ்விய திருக்கையில் தாங்கிய வேலாயுதத்தைச் செலுத்தி, தேவர்கள் பொன்னுலகில் குடியேற, வித்யாதர மாதர்கள் மிகவும் மனம் மகிழ, நின்று நடனம் புரிபவனே !
நறுமணமுள்ளதும்,குடம்போன்றதுமான கொங்கையை உடைய மான் போன்ற வள்ளியிடம் வந்து தினைப்புனத்தைக் காவல் செய்த முருகா!
பெரிதும் மதிக்கத்தக்க வாலிகொண்ட புரத்தில் பொருந்தி வீற்றிருந்து விளங்கும் தம்பிரானே !
உனது பாத தொண்டன் எனவாகும் அன்பு தாராய்.

எளிய பாடல்.
உடல் தர்மம் செய்ய அவசியமானது. சரீர மாத்யம் கலு தர்ம சாதனம் என்பார்கள். உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்பார் திருமூலர். ஆனால் இந்த உடலும் அதைப்பற்றிய சுகங்களுமே நிரந்தரம் என நம்பி மோசம் போகக்கூடாது என்பது பெரியோர்கள் அறிவுரை.
பூக்கைக் கொண்டரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கிலார்
ஆக்கைக் கேயிரை தேடி யலமந்து

காக்கைக் கேயிரை யாகிக் கழிவரே.

என்பது அப்பர் திருவாக்கு, இதையே  அருணகிரிநாதர் முதல் வரியில் சொல்கிறார்.
பலகாலம் தேவர்களைச்  சிறையிட்ட சூரபத்மனுக்குப் பயந்து சூர்யன் கூட நேர்வழியில் செல்லவில்லை. முருகன் வந்து சூராதி அசுரர்களை வதைத்த பிறகுதான் மீண்டும்  சூர்யன் தன் பழைய நிலைக்கு வந்து  நேராகச் செல்லத் தொடங்கினான். இதை ஐந்தாவது அடியில் அழகாகச் சொல்கிறார்.
"எணும் பெரிய வாலிகொண்டபுரம் " என்கிறார். மிகவும் மதிக்கத்தக்க - பெரிதாக எண்ணத்தக்க  வாலிகொண்டபுரம்  என்பது. இன்று பலரும் அறியாத இடமாக இருக்கிறது,  இத்தகைய சிற்றூர்களில்  உள்ள பழைய கோவில்களில்தான் தெய்வ சான்னித்யம்  மிகுந்து இருக்கும் போலும்!
இந்தப்பாடலும் முந்தைய திருமாந்துறைப் பாடல் கருத்தையே கொண்டிருக்கிறது!

வாலிகொண்டபுரத்தில் உள்ள படிவைத்த குளம்-கிணறு. [Step Well] இத்தகைய அமைப்பை குஜராத்தில் காணலாம்.
படம்: facebook.com/nammaperambalur. Thanks.


Sunday, 28 May 2017

84.திருப்புகழ்- 78.திருமாந்துறை.


84.திருப்புகழ்-78.திருமாந்துறை



wikimapia


அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 77வது தலம் மாந்துறை என்னும் திருமாந்துறை. இது காவிரிக்கு வடகரையில் அமைந்துள்ள தலங்களில் ஒன்று. ஸ்வாமி பெயர் ஆம்ரவனேஶ்வரர், ம்ருகண்டீஶ்வரர். அம்பாள் பாலாம்பிகை என்னும் அழகம்மை. தல மரம் மா (ஆம்ரம்). திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும்
செருந்தி செண்பகம் ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொனேர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைகின்ற 
எம்பிரான் இமையோர் தொழு பைங்கழல்
ஏத்துதல் செய்வோமே.

பெருகு சந்தனம் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதன் எம் பெருமானைப்
பரிவினால் இருந்து இரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.

வரைவளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை உறைவானைச்
சிரவுரம்பதி யுடையவன்  கவுணியன்
செழுமறை நிறை நாவன்
அரவெனும்பணி வல்லவன் ஞானசம்பந்தன்
அன்புறு மாலை
பரவிடுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர் தாமே.


சம்பந்தரை வாழ்த்தி, பெருமானைப் பணிந்து அல்லலும் பாவமும் இல்லாமல் செய்துகொள்வோம் !


maragadham.blogspot.in


இங்கு வந்த நம் ஸ்வாமிகள் பாடிய ஒரு திருப்புகழ்ப் பாடல் கிடைத்திருக்கிறது.


ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து 
ஆய்ஞ்சுதளர் சிந்தை      தடுமாறி

ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து 

ஆண்டுபல சென்று         கிடையோடே

ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து

 ஓய்ந்துணர் வழிந்து      உயிர்போமுன்

ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து 

ஊன்றிய பதங்கள்          தருவாயே

வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த

 வேந்திழையி னின்ப      மணவாளா

வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச 
வேண்டிய பதங்கள்       புரிவோனே

மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து

 மாண்புநெல் விளைந்த       வளநாடா

மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற 

மாந்துறை யமர்ந்த      பெருமாளே.

ஊன்றிய பதங்கள் தருவாயே.


எளிய, மிக உருக்கமான பாடல்.


நன்றாக இருந்த குடல் வளைந்து, கூன் உற்று, விழவேண்டிய பற்கள்  தளர்ந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து,


நிறைய இருந்த கடன்கள் வாங்கவேண்டுவனவற்றை அறிந்து வாங்கி, இங்ஙனம் பல வருஷங்கள் செல்ல, படுக்கையில் கிடந்து,


நிரம்ப இருமல் நோய் வந்து,குடலும் வீங்கி நோவுற்று,  சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, அழிந்து, உயிர் போவதற்குமுன்,


விளங்கி நிற்கும் மயில்மேல் நீ வந்து, அடியேன் விண்ணுலகை அடைவதற்கு நீ மனமுவந்து ஒப்பி, நிலைபெற்ற  உனது பதங்களைத் தருவாயாக.


வேங்கை மரங்கள் உயர்ந்தோங்கி யிருந்த  இனிய தினைப்புனத்தில்  இருந்த மாதேவி வள்ளியின் இன்ப மணவாளனே!


வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய பதவிகளை அல்லது திருவடியை அருள்புரிபவனே !
மாம்பழம் உடைந்து, அதன் சாறு வயலில் வந்து தேங்கி , நல்ல அழகிய நெல்விளையும்  வளப்பமுள்ள சோழ நாடனே !
மனிதர்களும், தவசிகளும், தேவேந்த்ரனும் பரவிப்போற்றி  நிற்கும் மாந்துறையில் அமர்ந்த பெருமாளே!


ஊன்றிய பதங்கள் தருவாயே !

முதுமையின் கஷ்டத்தை  விவரிக்கிறார். இதைப் பல பாடல்களில் சொல்லுவார். புத்தியும் உணர்வும் தெளிவாக இருக்கும்போதே கடவுளை நினைக்கவேண்டும்.  
' வேண்டிக்கொள்ளும் அடியார்கள் ' என்கிறார்.  எதை வேண்டுவது? 


"அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே ";

"வேண்டியபோது அடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாளே ";
" வேண்டும் அடியர் புலவர் வேண்டஅரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே "

என்றெல்லாம் அருணகிரியார் பாடுவார். இருந்தாலும் உண்மையான அடியார்கள் அருள் ஒன்றையே, திருவடிப்பேற்றையே வேண்டுவார்கள்.


"பிழையே பொறுத்துன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே "-


 இதுவே உண்மையான வேண்டுதல். இதையே "ஊன்றிய பதங்கள் தருவாயே " என்று கேட்கிறார்.

மாந்துறையின் பெயர்க்காரணத்தை  விளக்குகிறார். மாந்தோப்பாக இருந்த இடத்தின் வளப்பத்தை விளக்குகிறார். மாம்பழம்  மரத்திலேயே உடைந்து அதன் சாறு வயலில் வந்து தங்குமாம்! கற்பனை போலத் தோன்றும். ஆனால், பலாப்பழங்கள் மரத்திலேயே பழுத்து வெடித்து, பழச்சாறு வழிந்தோடுவதை மங்களூர்  பக்கத்தில் காடுகளில் இன்றைக்கும் காணலாம்.  அவ்வளவு உயரத்தில் அவ்வளவு  பழங்கள்! பறிக்க ஆளில்லை! பறித்து மாளாது!
மாந்துறையில் யார்யார் வந்து வணங்குகிறார்கள் என்பதை சம்பந்தர்  வழியிலேயே  அருணகிரிநாதர்  சொல்லியிருப்பது நயமானது.
அருமையான பாடல்.


pasumaimuthu.blogspot.in/2012. thanks


Wednesday, 24 May 2017

83.திருப்புகழ் -77. பூவாளூர்.


83.திருப்புகழ் - 77. பூவாளூர்


படம்: குங்குமம், நன்றி.

அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 76வது தலம் பூவாளூர். ஸ்வாமி பெயர் ஸ்ரீமூலநாதர்; அம்பாள்  குங்கும சுந்தரி. இது பித்ரு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது. முருகன் இங்கு பாலதண்டாயுதபாணியாக இருக்கிறார்.

திருஞான சம்பந்தர் இங்கு வந்து வழிபட்டார் என  பெரியபுராணத்தில் வருகிறது. ஆனால் இதற்குரிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை. இத் தலத்திற்கு "காமர் பதி " என்ற பெயர் இருந்ததாகவும், இது சோழ நாட்டின் 'மேல் மழ  நாடு ' என்னும் பகுதியைச் சேர்ந்தது எனவும் டாக்டர் உ.வே. சுவாமிநாதையரவர்கள்  எழுதியிருக்கிறார்.

இங்கு நாதர் பாடிய ஒரு பாடல் கிடைத்திருக்கிறது.

காலன் வேற்கணை யீர்வா ளாலமு
 நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்
   காம சாத்திர வாய்ப்பா டேணிக            ளெவரேனுங்

காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்
 போக பாத்திர மாமூ தேவிகள்
  காசு கேட்டிடு மாயா ரூபிக                     ளதிமோக


மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
 ஆனை போற்பொர நேரே போர்முலை
  மார்பு காட்டிகள் நானா பேதக                  மெனமாயா

மாப ராக்கிக ளோடே சீரிய
 போது போக்குத லாமோ நீயினி
 வாவெ னாப்பரி வாலே யாள்வது               மொருநாளே


பால றாத்திரு வாயா லோதிய
 ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
 பாடல் தோற்றிரு நாலா மாயிர                 சமண்மூடர்


பாரின் மேற்கழு மீதே யேறிட
 நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
 பாது காத்தரு ளாலே கூனிமி                 ரிறையோனும்

ஞால மேத்திய தோர்மா தேவியும்
 ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
  ஞான பாக்கிய பாலா வேலவ                   மயில்வீரா

ஞான தீக்ஷித சேயே காவிரி
 யாறு தேக்கிய கால்வாய் மாமழ
 
நாடு போற்றிய பூவா ளுருறை                  பெருமாளே.

 நீயினி
 வாவெ னாப்பரி வாலே யாள்வது               மொருநாளே







வில்வம்-தல மரம்.
படம்: www.inidhu.com. thanks



இப்பாடலிலும், சென்ற பாடலைப்போன்று முதல் நான்கு அடிகளில் பொதுமளிரைக் கடிய சொற்களால் [ மாபாவிகள், மாமூதேவிகள், மாயா ரூபிகள், மார்பு காட்டிகள், மாபராக்கிகள் ] சாடியிருக்கிறார்.

சம்பந்தர் வழிபட்ட தலமல்லவா! அதனால் ஸ்வாமிகளுக்கு அவர் நினைவு வந்தது போலும்! இங்கு சம்பந்தரின் லீலைகளை விவரிக்கிறார்.


தேவியின் முலைப்பால் நீங்காத திருவாயால் நீ பாடிய பாடல் அடங்கிய  ஏடு வைகையாற்றின் நீரினை எதிர்த்துப் போக, வாது செய்த பாடலுக்குத் தோற்ற எண்ணாயிரம் சமண    மூடர்கள் -


மதுரைப் பிரதேசத்தில் கழுவில் ஏறவும்,  திருநீற்றை இடாதிருந்த தமிழ் நாடு [திருநீற்றை  இட்டு,] ஈடேறவும், பாதுகாத்து உனது அருளாலே கூன் நிமிர்ந்த  அரசன்  பாண்டியன் நெடுமாறனும்,


உலகெலாம் போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவி பாண்டியன்  தேவி மங்கையர்க்கரசியும், திருவாலவாய் நகரத்தில் உள்ளவர்களும், நல்வாழ்வு அடையும்படி  திருவுள்ளத்தில் நினைத்தருளின ஞான  பாக்கிய பாலகனே ! வேலவனே ! மயில் வீரனே !


ஞான தீக்ஷை தந்தருளியவனே ! குழந்தையே ! காவிரி ஆறு நிறைந்துவரும் கால்வாய் உள்ளதும், சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் திகழ்வதுமான பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே !


பரிவால் ஆள்வதும் ஒரு நாளே !

சம்பந்தராக வந்தது முருகனே என்பதைச்  சந்தேகத்துக்கிடமில்லாமல் சொல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று.

சமணர்கள் வாதில் தோற்றதும் தங்கள் சொற்படி அவர்களாகவே கழுவில் ஏறினார்கள்.

 நாம் ஈடேறுவதற்கு நீறிடவேண்டும் என்பதைக் குறிப்பாகச் சொல்கிறார்.

"ஞான தீக்ஷை" தந்ததைச் சொல்கிறார். முருகன் தந்தைக்கும் ஞானோபதேசம் செய்தார், அருணகிரி நாதருக்கும் ஞான தீக்ஷை தந்தார்.

"மூதறிவுந்திய தீக்ஷை செப்பிய
ஞானம் விளங்கிய மூர்த்தி "

[திருப்பராய்த்துறை]

"தலை நாளிற் பதமேத்தி  அன்புற
உபதேசப்பொருள் ஊட்டி  மந்திர
தவஞானக்கடல் ஆட்டி  யென்றனை  அருளால் உன்
சதுராகத்தொடு கூட்டி.......
அன்பொடு கதிர்தோகைப்பரி மெற்கொளுஞ்செயல்  மறவேனே  "

[வழுவூர் ]

என்றெல்லாம் பிற பாடல்களில் பாடுகிறார். "ஜப மாலை தந்த சற்குருநாதா " எனவும் பாடியிருக்கிறார்.





பூவாளூர்- பங்குனி தீர்த்தம்.