83.திருப்புகழ் - 77. பூவாளூர்
படம்: குங்குமம், நன்றி.
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 76வது தலம் பூவாளூர். ஸ்வாமி பெயர் ஸ்ரீமூலநாதர்; அம்பாள் குங்கும சுந்தரி. இது பித்ரு பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது. முருகன் இங்கு பாலதண்டாயுதபாணியாக இருக்கிறார்.
திருஞான சம்பந்தர் இங்கு வந்து வழிபட்டார் என பெரியபுராணத்தில் வருகிறது. ஆனால் இதற்குரிய பதிகம் எதுவும் கிடைக்கவில்லை. இத் தலத்திற்கு "காமர் பதி " என்ற பெயர் இருந்ததாகவும், இது சோழ நாட்டின் 'மேல் மழ நாடு ' என்னும் பகுதியைச் சேர்ந்தது எனவும் டாக்டர் உ.வே. சுவாமிநாதையரவர்கள் எழுதியிருக்கிறார்.
இங்கு நாதர் பாடிய ஒரு பாடல் கிடைத்திருக்கிறது.
காலன் வேற்கணை யீர்வா ளாலமு
நேர்க ணாற்கொலை சூழ்மா பாவிகள்
காம சாத்திர வாய்ப்பா டேணிக ளெவரேனுங்
காத லார்க்கும்வி னாவாய் கூறிகள்
போக பாத்திர மாமூ தேவிகள்
காசு கேட்டிடு மாயா ரூபிக ளதிமோக
மாலை மூட்டிகள் வானூ டேநிமிர்
ஆனை போற்பொர நேரே போர்முலை
மார்பு காட்டிகள் நானா பேதக மெனமாயா
மாப ராக்கிக ளோடே சீரிய
போது போக்குத லாமோ நீயினி
வாவெ னாப்பரி வாலே யாள்வது மொருநாளே
பால றாத்திரு வாயா லோதிய
ஏடு நீர்க்கெதிர் போயே வாதுசெய்
பாடல் தோற்றிரு நாலா மாயிர சமண்மூடர்
பாரின் மேற்கழு மீதே யேறிட
நீறி டாத்தமிழ் நாடீ டேறிட
பாது காத்தரு ளாலே கூனிமி ரிறையோனும்
ஞால மேத்திய தோர்மா தேவியும்
ஆல வாய்ப்பதி வாழ்வா மாறெணு
ஞான பாக்கிய பாலா வேலவ மயில்வீரா
ஞான தீக்ஷித சேயே காவிரி
யாறு தேக்கிய கால்வாய் மாமழ
நாடு போற்றிய பூவா ளுருறை பெருமாளே.
நீயினி
வாவெ னாப்பரி வாலே யாள்வது மொருநாளே
வில்வம்-தல மரம்.
படம்: www.inidhu.com. thanks
இப்பாடலிலும், சென்ற பாடலைப்போன்று முதல் நான்கு அடிகளில் பொதுமளிரைக் கடிய சொற்களால் [ மாபாவிகள், மாமூதேவிகள், மாயா ரூபிகள், மார்பு காட்டிகள், மாபராக்கிகள் ] சாடியிருக்கிறார்.
சம்பந்தர் வழிபட்ட தலமல்லவா! அதனால் ஸ்வாமிகளுக்கு அவர் நினைவு வந்தது போலும்! இங்கு சம்பந்தரின் லீலைகளை விவரிக்கிறார்.
தேவியின் முலைப்பால் நீங்காத திருவாயால் நீ பாடிய பாடல் அடங்கிய ஏடு வைகையாற்றின் நீரினை எதிர்த்துப் போக, வாது செய்த பாடலுக்குத் தோற்ற எண்ணாயிரம் சமண மூடர்கள் -
மதுரைப் பிரதேசத்தில் கழுவில் ஏறவும், திருநீற்றை இடாதிருந்த தமிழ் நாடு [திருநீற்றை இட்டு,] ஈடேறவும், பாதுகாத்து உனது அருளாலே கூன் நிமிர்ந்த அரசன் பாண்டியன் நெடுமாறனும்,
உலகெலாம் போற்ற நின்ற ஒப்பற்ற மாதேவி பாண்டியன் தேவி மங்கையர்க்கரசியும், திருவாலவாய் நகரத்தில் உள்ளவர்களும், நல்வாழ்வு அடையும்படி திருவுள்ளத்தில் நினைத்தருளின ஞான பாக்கிய பாலகனே ! வேலவனே ! மயில் வீரனே !
ஞான தீக்ஷை தந்தருளியவனே ! குழந்தையே ! காவிரி ஆறு நிறைந்துவரும் கால்வாய் உள்ளதும், சிறந்த மழ நாட்டுப் பகுதியில் சிறப்புடன் திகழ்வதுமான பூவாளூரில் வீற்றிருக்கும் பெருமாளே !
பரிவால் ஆள்வதும் ஒரு நாளே !
சம்பந்தராக வந்தது முருகனே என்பதைச் சந்தேகத்துக்கிடமில்லாமல் சொல்லும் பாடல்களில் இதுவும் ஒன்று.
சமணர்கள் வாதில் தோற்றதும் தங்கள் சொற்படி அவர்களாகவே கழுவில் ஏறினார்கள்.
நாம் ஈடேறுவதற்கு நீறிடவேண்டும் என்பதைக் குறிப்பாகச் சொல்கிறார்.
"ஞான தீக்ஷை" தந்ததைச் சொல்கிறார். முருகன் தந்தைக்கும் ஞானோபதேசம் செய்தார், அருணகிரி நாதருக்கும் ஞான தீக்ஷை தந்தார்.
"மூதறிவுந்திய தீக்ஷை செப்பிய
ஞானம் விளங்கிய மூர்த்தி "
[திருப்பராய்த்துறை]
"தலை நாளிற் பதமேத்தி அன்புற
உபதேசப்பொருள் ஊட்டி மந்திர
தவஞானக்கடல் ஆட்டி யென்றனை அருளால் உன்
சதுராகத்தொடு கூட்டி.......
அன்பொடு கதிர்தோகைப்பரி மெற்கொளுஞ்செயல் மறவேனே "
[வழுவூர் ]
என்றெல்லாம் பிற பாடல்களில் பாடுகிறார். "ஜப மாலை தந்த சற்குருநாதா " எனவும் பாடியிருக்கிறார்.
பூவாளூர்- பங்குனி தீர்த்தம்.
No comments:
Post a Comment