Saturday, 20 May 2017

81.திருப்புகழ் -75.திருநெய்த்தானம்


81.திருப்புகழ்- 75. திருநெய்த்தானம்


pixabay

அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 74 வது தலம்  திருநெய்த்தானம். ஸப்த ஸ்தானத்தலங்களில் ஒன்றான இது இப்போது தில்லைஸ்தானம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. ஸ்வாமி பெயர்  நெய்யாடியப்பர் ; அம்பாள்  பாலாம்பிகை , வாலாம்பிகை. இங்கு ஸ்வாமிக்கு சுத்த பசும் நெய்யினால் மட்டுமே அபிஷேகம் . ஸரஸ்வதி,   காமதேனு, கௌதம முனிவர் ஆகியோர் பூஜித்த ஸ்தலம். இங்கு சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.

சம்பந்தர்

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான்
கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன்
செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும்
நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.


பறையும்பழி பாவம்படு துயரம் பலதீரும்
பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர்
அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல்
நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.


முதல் திருமுறை


அப்பர்

காலனை வீழச் செற்ற கழலடி யிரண்டும் வந்தென்
மேலவா யிருக்கப் பெற்றேன் மேதகத் தோன்று கின்ற
கோலநெய்த் தான மென்னுங் குளிர்பொழிற் கோயின் மேய
நீலம்வைத் தனைய கண்ட நினைக்குமா நினைக்கின் றேனே.


பிறைதரு சடையின் மேலே பெய்புனற் கங்கை தன்னை
உறைதர வைத்த வெங்க ளுத்தம னூழி யாய
நிறைதரு பொழில்கள் சூழ நின்றநெய்த் தான மென்று
குறைதரு மடிய வர்க்குக் குழகனைக் கூட லாமே.


4ம் திருமுறை


எத்தனை எளிய பாடல்களை அருளியிருக்கிறார்கள் !


picture from bharthipayilagam.blogspot.in

இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரு பாடல் கிடைத்திருக்கிறது.

குகுகுக் கூகுக் குகுகுகு குகுவென
 திமிதித் தீதித் திமிதியென் முரசொடு
   குழுமிச் சீறிச் சமர்செயு மசுரர்கள்                  களமீதே

குழறிக் கூளித் திரளெழ வயிரவர்
 குவியக் கூடிக் கொடுவர அலகைகள்
 குணலிட் டாடிப் பசிகெட அயில்விடு              குமரேசா



செகசெச் சேசெச் செகவென முரசொலி
 திகழச் சூழத் திருநட மிடுபவர்
 செறிகட் காளப் பணியணி யிறையவர்          தருசேயே

சிகரப் பாரக் கிரியுறை குறமகள்
 கலசத் தாமத் தனகிரி தழுவிய
 திருநெய்த் தானத் துறைபவ சுரபதி                 பெருமாளே.


உனதடி  மறவேனே



குகுகுக் கூகுக்....குகு என்றும், திமிதித் தீதித் திமிதி  என்றும் பலவித ஓசை யெழுப்பும்  பறைகளுடன்  ஒன்றுகூடி, மிகுந்த கோபத்துடன்  போர்செய்த அசுரர்களின்  போர்க்களத்தில்,


பெருங்கூச்சலுடன்  கழுகுகளும் பேய்களும் கூடவும்,  அஷ்ட பைரவர்கள் ஒன்றுகூடி வர,  பேய்கள் குணலை ஆட்டம் ஆடிக் கொக்கரித்து  தமது பசியை ஆற்றிக்கொள்ளுமாறு தனது வேலாயுதத்தைப் பிரயோகித்த  குமரேசனே !


செக செச் சேசெச் செக என்று முரசு  சப்திக்க  திரு நடனம் செய்பவர்,  செவி உணர்ச்சி கூடிய கண்களையும் விஷத்தையும் கொண்ட பாம்பை  அணியாகக் கொண்ட  இறைவர்  சிவபிரான் அருளிய குழந்தையே !


சிகரங்களை உடையதும், பருத்து கனமுள்ளதுமான வள்ளிமலையில்  இருந்த, மாலையணிந்த  குறமகளாம்  வள்ளியைத் தழுவிய  பெருமாளே ! திரு  நெய்த்தானத்தில் அமர்ந்தவனே ! தேவர்களின் தலைவனான இந்த்ரனுக்குப் பெருமாளே ! 
உன் திருவடியை மறக்கமாட்டேன் !

[பாடலின் முதல் நான்கு அடிகள் விடப்பட்டன]



elephant- Bandipur.  ByYathinSKrishnappa (Own Work ) CC BY-SA 3.0 Creativecommons via Wikimedia Commons.

No comments:

Post a Comment