Friday, 19 May 2017

80.திருப்புகழ் -74 திருப்பூந்துருத்தி


80. திருப்புகழ்-74. திருப்பூந்துருத்தி





அருணகிரிநாதர் வரும் அடுத்த, 73வது தலம் திருப்பூந்துருத்தி. இது திருவையாற்றுக்கு அருகில் காவிரிக்கும் குடமுருட்டிக்கும் நடுவில் இருப்பதால் 'துருத்தி' ' எனப் பெயர்பெற்றது. இது ஸப்த ஸ்தான ஸ்தலங்களில் ஒன்றாகும். ஸ்வாமி பெயர்  புஷ்பவன நாதர்; அம்பாள்  சௌந்தர்ய நாயகி என்னும் அழகாலமர்ந்த  நாயகி.  திருவாவுக்கரசு ஸ்வாமிகள்   இத்தலத்து ஸ்வாமிமீது 3 பதிகங்கள் பாடியிருக்கிறார்.  பொதுப்பதிகங்கள் 15 இங்கு தங்கியிருந்தபோது செய்ததாகச் சொல்வார்கள்.

மாலினை மாலுற நின்றான் மலைமக டன்னுடைய
பாலனைப் பான்மதி சூடியைப் பண்புண ரார்மதின்மேல்
போலனைப் போர்விடை யேறியைப் பூந்துருத் திம்மகிழும்
ஆலனை யாதிபு ராணனை நாமடி போற்றுவதே.


4ம் திருமுறை

கொடிகொள் செல்வ விழாக்குண லைஅறாக்
கடிகொள் பூம்பொழிற் கச்சியே கம்பனார்
பொடிகள் பூசிய பூந்துருத் திந்நகர்
அடிகள் சேவடிக் கீழ்நா மிருப்பதே.


5ம் திருமுறை

நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை
    நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்
கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்
    காணா தனவெல்லாங் காட்டி னானைச்
சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்
    தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு
பொல்லாவென் நோய்தீர்த்த புனிதன் தன்னைப்
    புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே 


6ம் திருமுறை

பொதுப்பதிகம் - திருஅங்கமாலை


தலையே நீவணங்காய் - தலை 
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் 
தலையே நீவணங்காய்.
கண்காள் காண்மின்களோ - கடல்  நஞ்சுண்ட கண்டன்றன்னை எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக்  கண்காள் காண்மின்களோ. 

செவிகாள் கேண்மின்களோ - சிவன்  எம்மிறை செம்பவள எரிபோல் மேனிப்பி ரான்திற மெப்போதும் செவிகாள் கேண்மின்களோ.

மூக்கே நீமுரலாய் - முது  காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைம ணாளனை  மூக்கே நீமுரலாய். 

வாயே வாழ்த்துகண்டாய் - மத  யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை  வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய் - நிமிர்  புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை  நெஞ்சே நீநினையாய். 
கைகாள் கூப்பித்தொழீர் - கடி  மாமலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்  கைகாள் கூப்பித்தொழீர். 
ஆக்கை யாற்பயனென் - அரன் கோயில் வலம்வந்து பூக்கையா லட்டிப் போற்றியென் னாதஇவ்  ஆக்கை யாற்பயனென்
கால்க ளாற்பயனென் - கறைக் கண்ட னுறைகோயில்  கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக்  கால்க ளாற்பயனென்.
உற்றா ராருளரோ - வுயிர் கொண்டு போம்பொழுது  குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக் குற்றா ராருளரோ.
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்  சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்கு  இறுமாந் திருப்பன்கொலோ.

இத்தலத்திற்கு  சம்பந்தர் வந்தபோது, இது அப்பர்  உழவாரப்பணி செய்த இடம் என்பதால் உள்ளே வர அஞ்சி, வெளியிலிருந்தே தரிசனம் செய்தார், அப்போது நந்தி விலகி அவருக்கு தரிசனம் செய்ய  உதவியது என்பது வரலாறு.
இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.

தாங்கு நிற்சரர் சேனா நீதரு
 னாங்கு ருத்ரகு மாரா கோஷண
  தாண்ட வற்கருள் கேகீ வாகன           துங்கவீரா

சாங்கி பற்சுகர் சீநா தீசுர
 ரேந்த்ரன் மெச்சிய வேலா போதக
  சாந்த வித்தக ஸ்வாமீ நீபவ              லங்கன்மார்பா

பூங்கு ளத்திடை தாரா வோடன
 மேய்ந்த செய்ப்பதி நாதா மாமலை
  போன்ற விக்ரக சூரா ரீபகி                    ரண்டரூபா
போந்த பத்தர்பொ லாநோய் போயிட
  வேண்ட நுக்ரக போதா மேவிய
  பூந்து ருத்தியில் வாழ்வே தேவர்கள்           தம்பிரானே

ஊண்பு ணர்ச்சியு மாயா வாதனை  தீர்ந்து னக்கெளி தாயே மாதவ  மூன்று தற்குமெய்ஞ் ஞானா சாரம்வ              ழங்குவாயே

     
ஜைன விரதத்தைத் தாங்கி நின்ற ஜைன குருமார்களின் கூட்டமாகிய நிசாசரர்கள் மிகுந்த  கவலை கொள்ளக் காரணமாகி நின்ற சிவ குமாரனே,
வாத்ய கோஷங்களுடன் தாண்டவம் செய்யும் சிவபிரானுக்கு உபதேசம் செய்த மயில் வாஹனனே!  உயர்ந்த வீரனே !
ஆத்ம தத்துவத்தை விசாரிக்கும் சாங்கிய யோகம் பயின்றவர்கள், சுகப்ப்ரம்ம ரிஷி, லக்ஷ்மியின் நாதராம் திருமால், சிவபிரான், தேவேந்த்ரன் ஆகியோர் மெச்சிய  வேலனே ! உபதேச குருவே ! சாந்த மூர்த்தியே !  வித்தகம் நிறைந்த மூர்த்தியே !ஸ்வாமியே ! கடப்ப மாலை அணிந்தவனே!
தாமரைப்பூ நிறைந்த குளத்தில், குள்ள வாத்துடன் அன்னப்பறவைகள்  மேய்கின்ற வயலூர்ப்  பெருமானே ! மலைபோன்ற உருவம் கொண்ட சூரனுக்குப் பகைவனே !வெளி அண்டங்களாய் நிற்கும் உருவத்தவனே !
உன்னடி சார்ந்த பக்தர்களின் பொல்லாத நோய்கள்   எல்லாம் விலகியோட, வேண்டிய அனுக்ரஹ பிரசாதத்தைத்தரும்  அறிஞனே !பொருந்திய  திருப்பூந்துருத்தி தலத்துச் செல்வனே ! தேவர்கள் தம்பிரானே !
மாயா சம்பந்தமாய் ஏற்படும் துன்பங்களும் ( அத்துடன் மாதர் மயக்கும்) ஒழிந்து, உன் திருவடித் தியானத்தில்  எளிதாக ஊன்றும் தவநிலை பொருந்துவதற்கு ஏற்ற மெய்ஞ்ஞான ஆசார  நியதியை பிரசாதித்து அருளுவாயாக.
[ பாடலில் முதல் மூன்று அடிகள்  விடப்பட்டன.]
இங்கு அருணகிரி நாதர் ஒரு முக்கிய விஷயம் சொல்கிறார்.  "மெய்ஞ்ஞானத்தை மட்டும் வேண்டவில்லை.  ஞானம் நிலைக்கவேண்டுமானால் அதற்கேற்ற ஆசாரமும் வேண்டும். அதனால் " ஞானாசாரம் வழங்குவாயே " என்று கேட்கிறார்.
கற்றதைப்பற்றி நிற்க வேண்டும். "  கற்றபின் நிற்க அதற்குத்தக " என்பார் வள்ளுவர். நமது மதத்தில் கொள்கை எதுவானாலும், ஆசாரத்திற்கே முதலிடம் தருவார்கள். " ஸர்வாகமானாம் ஆசார: ப்ரதமம் பரிகல்பதே" என்பது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம். இதையே நமது ஸ்வாமிகளும் சொல்கிறார்.

No comments:

Post a Comment