Tuesday, 30 May 2017

86. திருப்புகழ் -80. அரத்துறை


86.திருப்புகழ் - 80. அரத்துறை


wikimapia

 அடுத்து அருணகிரி நாதர் வந்த 79வது தலம்  'திருநெல்வாயில் அரத்துறை ' எனப்படும். இப்போது திருவட்டுறை, திருவட்டத்துறை  என்று சொல்கிறார்கள். ஸ்வாமி தீர்த்தபுரீஶ்வரர், ஆனந்தீஶ்வரர், அரத்துறை நாதர். அம்பாள் ஆனந்த நாயகி, திரிபுரசுந்தரி, அறத்துறை நாயகி. இங்கு நிவா நதி தீர்த்தம், ஆலமரம் தலமரம்.  இங்கு முருகன் ஒரு முகம், நான்கு கரத்தோடு காட்சியளிக்கிறார். இத்தலம் மூவர் பாடலும் பெற்ற 44 தலங்களுள் ஒன்றாகும். பிள்ளையார் வருந்தி நடந்துவந்தது கண்டு, சிவபிரான் சம்பந்தருக்கு முத்துச் சிவிகையும் முத்துக்குடையும்  அளித்தருளிய தலம்.

சம்பந்தர்

எந்தை யீசன் எம் பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லால்  சென்றுகை கூடுவ தன்றால்
கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.

கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுண் ஞானசம் பந்தன்
அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை அடிகள்தம் அருளை
முறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்
பறையும் ஐயுறவில்லை பாட்டிவை பத்தும்வல் லார்க்கே.


[ இரண்டாம் திருமுறை ]


அப்பர்

கடவு ளைக்கடலுள்ளெழு நஞ்சுண்ட
உடலு ளானையொப் பாரியி லாதவெம்
அடலு ளானை யரத்துறை மேவிய
சுடரு ளானைக்கண் டீர்நாந் தொழுவதே.


கலையொப் பானைக் கற்றார்க்கோ ரமுதினை
மலையொப் பானை மணிமுடி யூன்றிய
அலையொப் பானை யரத்துறை மேவிய
நிலையொப் பானைக்கண் டீர்நாந் தொழுவதே.


[ஐந்தாம் திருமுறை ]

சுந்தரர்

கல்வாய்அகி லுங்கதிர் மாமணியுங்
    கலந்துந்தி வருந்நிவ வின்கரைமேல்
நெல்வாயி லரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதி சூடிய நின்மலனே
நல்வாயில்செய் தார்நடந் தார்உடுத்தார்
    நரைத்தார்இறந் தார்என்று நானிலத்தில்
சொல்லாய்க்கழி கின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன்உய்யப் போவதொர் சூழல்சொல்லே







இங்கு அருணகிரி நாதர் பாடிய பாடல் ஒன்று  இருக்கிறது.

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்
     கவிசொ லிச்சிரித்            துறவாடிக்

களவு வித்தையட் டுளமு ருக்கிமுற்
     கருதி வைத்தவைப்         பவைசேரத்

தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்
     தழுவி நெக்குநெக்          குயிர்சோரச்

சயன மெத்தையிற் செயல ழிக்குமித்
     தருணி கட்ககப்               படலாமோ


பிறவி யைத்தணித் தருளு நிட்களப்
     பிரம சிற்சுகக்                 கடல்மூழ்கும்

பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்
     ப்ரபல கொச்சையிற்         சதுர்வேதச்

சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்
     சிவிகை யைக்கொடுத்         தருளீசன்

செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த்
     திருவ ரத்துறைப்                  பெருமாளே.



முதல் நான்கு அடிகளில் பொதுமகளிர் மயக்கும் விதத்தைச் சொல்லி அதற்கு மயங்கக்கூடாது  என்கிறார். 
பின் நான்கு அடிகளில்  சம்பந்தருக்கு அருளியதைச் சொல்கிறார்.


பிறவிப்பிணியைத் தொலைத்தருளக்கூடிய , உருவம் ஏதும் இல்லாத, முழுமுதற் பொருளான ஞானானந்தக் கடலில் முழுகும்,
பெரிய முனிவர்கள்  கூட்டங்கள் போற்றுகின்ற வயலூரில் புகழ் விளங்க வீற்றிருப்பவனே!
சீர்காழியில் நான்கு வேதங்களும் வல்லவனாய் வந்த [ ஞான சம்பந்தச் ] சிறுவனே !
உன்பால் திருவருள் வைத்து முத்துக் குடையும் முத்துப் பல்லக்கும் கொடுத்தருளின-
சிவன் வீற்றிருக்கும் பூமியினிடத்தே, புகழ்பெற்ற சத்திய வாசகப் பெருமாளே !
திருவரத்துறைப் பெருமாளே !

இந்தப்பாடலிலும்  சம்பந்தராய் வந்தது முருகனே எனத் தெளிவாகச் சொல்கிறார்.

 சதுர்வேதச் சிறுவன்:  சம்பந்தர்  நான்மறை வல்லவர். இதை அவரே  பலபாடல்களில் பாடியிருக்கிறார்.
" நான்மறை வல்ல ஞான சம்பந்தன் ",  "மறை ஞான ஞான முனிவன் " , "ஆய்ந்த நான்மறை ஞான சம்பந்தன் " என்றெல்லாம்  தம்மைப் பற்றிச் சொல்வார்.அதை இங்கு நாதர் நினவுகூருகிறார். 

கொச்சை :  சீர்காழிக்குள்ள பன்னிரண்டு பெயர்களில் ஒன்று.



No comments:

Post a Comment