79. திருப்புகழ் -73 பெரும்புலியூர்
www.thevaaram.org.
அருணகிரிநாதர் திருவையாற்றிலிருந்து கண்டியூர் வந்து ஸ்வாமி தரிசனம் செய்தார். கண்டியூர் வைப்புத்தலமாக ஒரு பாடலில் வருகிறது. பிறகு அங்கிருந்து பெரும்புலியூர் வருகிறார். இது ஸ்வாமிகள் தரிசித்துப் பாடிய 72வது தலம். சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
சம்பந்தர் பதிகம்
மண்ணுமோர் பாக முடையார் மாலுமோர் பாக முடையார்
விண்ணுமோர் பாக முடையார் வேத முடைய விமலர்
கண்ணுமோர் பாக முடையார் கங்கை சடையிற் கரந்தார்
பெண்ணுமோர் பாக முடையார் பெரும்புலி யூர்பிரி யாரே
.
மறையுடை யாரொலி பாடன் மாமலர்ச் சேவடி சேர்வார்
குறையுடை யார்குறை தீர்ப்பார் குழக ரழகர்நஞ் செல்வர்
கறையுடை யார்திகழ் கண்டங் கங்கை சடையிற் கரந்தார்
பிறையுடை யார்சென்னி தன்மேற் பெரும்புலி யூர்பிரி யாரே
.
சீருடை யாரடி யார்கள் சேடரொப் பார்சடை சேரும்
நீருடை யார்பொடிப் பூசு நினைப்புடை யார்விரி கொன்றைத்
தாருடை யார்விடை யூர்வார் தலைவரைந் நூற்றுப்பத் தாய
பேருடை யார்பெரு மானார் பெரும்புலி யூர்பிரி யாரே
நூற்றுப்பத்தாய பேர் = ஸஹஸ்ர நாமம்.
ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இல்லார்க்கு ஆயிரம்
திரு நாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
என்பார் மாணிக்கவாசக ஸ்வாமிகள்.
wikimapia
இங்கு ஸ்வாமி பெயர் வ்யாக்ரபுரீஶ்வரர். அம்பாள் பெயர் சௌந்தர நாயகி. வ்யாக்ரபாதர் வழிபட்ட 5 தலங்கள் " பஞ்ச புலியூர் " என்று வழங்கப்படுகின்றன. [வ்யாக்ரபாதர் என்பது தமிழில் புலிக்கால் முனிவர் என்று வரும் . அவர் வழிபட்டதால் இவை புலியூர் ஆகின்றன.] இவற்றில் சிதம்பரம் "பெரும்பற்றப் புலியூர் " ஆகும் மற்றவை பெரும்புலியூர், திருப்பாதிரிப்புலியூர், எருக்கத்தம் புலியூர், ஓமாம்புலியூர் ஆகியவை.
இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது.
சதங்கைமணி வீரச் சிலம்பினிசை பாடச்
சரங்களொளி வீசப் புயமீதே
தனங்கள்குவ டாடப் படர்ந்தபொறி மால்பொற்
சரங்கண்மறி காதிற் குழையாட
இதங்கொள்மயி லேரொத் துகந்தநகை பேசுற்
றிரம்பையழ கார்மைக் குழலாரோ
டிழைந்தமளி யோடுற் றழுந்துமெனை நீசற்
றிரங்கியிரு தாளைத் தருவாயே
சிதம்பரகு மாரக் கடம்புதொடை யாடச்
சிறந்தமயில் மேலுற் றிடுவோனே
சிவந்தகழு காடப் பிணங்கள்மலை சாயச்
சினந்தசுரர் வேரைக் களைவோனே
பெதும்பையெழு கோலச் செயங்கொள்சிவ காமிப்
ப்ரசண்டஅபி ராமிக் கொருபாலா
பெரும்புனம தேகிக் குறம்பெணொடு கூடிப்
பெரும்புலியுர் வாழ்பொற் பெருமாளே.
எளிய பாடல். முதல் நான்கு அடிகளில் பெண்மயலைச் சாடுகிறார். அதிலிருந்து மீள இருதாளைத் தருவாயே என வேண்டுகிறார்.
பெரும்புலியூரில் இருந்தாலும் ஸ்வாமிகளுக்கு சிதம்பரம் நினைவு வருகிறது. முருகனை சிதம்பர குமாரா என்று அழைக்கிறார். ஆனால் சிதம்பரத்திலும் அவருக்கு முருகன் நினைவுதான். "கனகசபை மேவும் எனது குரு நாத கருணை முருகேசப் பெருமாள் காண் " என்று பாடுகிறார்.
greenindiafoundation.blogspot.in /2010
No comments:
Post a Comment