Sunday, 28 May 2017

84.திருப்புகழ்- 78.திருமாந்துறை.


84.திருப்புகழ்-78.திருமாந்துறை



wikimapia


அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த 77வது தலம் மாந்துறை என்னும் திருமாந்துறை. இது காவிரிக்கு வடகரையில் அமைந்துள்ள தலங்களில் ஒன்று. ஸ்வாமி பெயர் ஆம்ரவனேஶ்வரர், ம்ருகண்டீஶ்வரர். அம்பாள் பாலாம்பிகை என்னும் அழகம்மை. தல மரம் மா (ஆம்ரம்). திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

செம்பொன் ஆர்தரு வேங்கையும் ஞாழலும்
செருந்தி செண்பகம் ஆனைக்
கொம்பும் ஆரமும் மாதவி சுரபுனை
குருந்தலர் பரந்துந்தி
அம்பொனேர்வரு காவிரி வடகரை
மாந்துறை உறைகின்ற 
எம்பிரான் இமையோர் தொழு பைங்கழல்
ஏத்துதல் செய்வோமே.

பெருகு சந்தனம் காரகில் பீலியும்
பெருமரம் நிமிர்ந்துந்திப்
பொருது காவிரி வடகரை மாந்துறைப்
புனிதன் எம் பெருமானைப்
பரிவினால் இருந்து இரவியும் மதியமும்
பார்மன்னர் பணிந்தேத்த
மருத வானவர் வழிபடு மலரடி
வணங்குதல் செய்வோமே.

வரைவளங்கவர் காவிரி வடகரை
மாந்துறை உறைவானைச்
சிரவுரம்பதி யுடையவன்  கவுணியன்
செழுமறை நிறை நாவன்
அரவெனும்பணி வல்லவன் ஞானசம்பந்தன்
அன்புறு மாலை
பரவிடுந்தொழில் வல்லவர் அல்லலும்
பாவமும் இலர் தாமே.


சம்பந்தரை வாழ்த்தி, பெருமானைப் பணிந்து அல்லலும் பாவமும் இல்லாமல் செய்துகொள்வோம் !


maragadham.blogspot.in


இங்கு வந்த நம் ஸ்வாமிகள் பாடிய ஒரு திருப்புகழ்ப் பாடல் கிடைத்திருக்கிறது.


ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து 
ஆய்ஞ்சுதளர் சிந்தை      தடுமாறி

ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து 

ஆண்டுபல சென்று         கிடையோடே

ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து

 ஓய்ந்துணர் வழிந்து      உயிர்போமுன்

ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து 

ஊன்றிய பதங்கள்          தருவாயே

வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த

 வேந்திழையி னின்ப      மணவாளா

வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச 
வேண்டிய பதங்கள்       புரிவோனே

மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து

 மாண்புநெல் விளைந்த       வளநாடா

மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற 

மாந்துறை யமர்ந்த      பெருமாளே.

ஊன்றிய பதங்கள் தருவாயே.


எளிய, மிக உருக்கமான பாடல்.


நன்றாக இருந்த குடல் வளைந்து, கூன் உற்று, விழவேண்டிய பற்கள்  தளர்ந்து, ஆய்ந்து ஓய்ந்து மனம் தடுமாற்றம் அடைந்து,


நிறைய இருந்த கடன்கள் வாங்கவேண்டுவனவற்றை அறிந்து வாங்கி, இங்ஙனம் பல வருஷங்கள் செல்ல, படுக்கையில் கிடந்து,


நிரம்ப இருமல் நோய் வந்து,குடலும் வீங்கி நோவுற்று,  சோர்வடைந்து, உணர்ச்சியும் அடங்கி, அழிந்து, உயிர் போவதற்குமுன்,


விளங்கி நிற்கும் மயில்மேல் நீ வந்து, அடியேன் விண்ணுலகை அடைவதற்கு நீ மனமுவந்து ஒப்பி, நிலைபெற்ற  உனது பதங்களைத் தருவாயாக.


வேங்கை மரங்கள் உயர்ந்தோங்கி யிருந்த  இனிய தினைப்புனத்தில்  இருந்த மாதேவி வள்ளியின் இன்ப மணவாளனே!


வேண்டிக்கொள்ளும் அடியார்கள் கொண்டுள்ள பதவி மேம்பட்டு விளங்க, அவர்கள் விரும்பிய பதவிகளை அல்லது திருவடியை அருள்புரிபவனே !
மாம்பழம் உடைந்து, அதன் சாறு வயலில் வந்து தேங்கி , நல்ல அழகிய நெல்விளையும்  வளப்பமுள்ள சோழ நாடனே !
மனிதர்களும், தவசிகளும், தேவேந்த்ரனும் பரவிப்போற்றி  நிற்கும் மாந்துறையில் அமர்ந்த பெருமாளே!


ஊன்றிய பதங்கள் தருவாயே !

முதுமையின் கஷ்டத்தை  விவரிக்கிறார். இதைப் பல பாடல்களில் சொல்லுவார். புத்தியும் உணர்வும் தெளிவாக இருக்கும்போதே கடவுளை நினைக்கவேண்டும்.  
' வேண்டிக்கொள்ளும் அடியார்கள் ' என்கிறார்.  எதை வேண்டுவது? 


"அடியவர் இச்சையில் எவைஎவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே ";

"வேண்டியபோது அடியர் வேண்டிய போகமது வேண்ட வெறாதுதவு பெருமாளே ";
" வேண்டும் அடியர் புலவர் வேண்டஅரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமாளே "

என்றெல்லாம் அருணகிரியார் பாடுவார். இருந்தாலும் உண்மையான அடியார்கள் அருள் ஒன்றையே, திருவடிப்பேற்றையே வேண்டுவார்கள்.


"பிழையே பொறுத்துன் இரு தாளில் உற்ற பெருவாழ்வு பற்ற அருள்வாயே "-


 இதுவே உண்மையான வேண்டுதல். இதையே "ஊன்றிய பதங்கள் தருவாயே " என்று கேட்கிறார்.

மாந்துறையின் பெயர்க்காரணத்தை  விளக்குகிறார். மாந்தோப்பாக இருந்த இடத்தின் வளப்பத்தை விளக்குகிறார். மாம்பழம்  மரத்திலேயே உடைந்து அதன் சாறு வயலில் வந்து தங்குமாம்! கற்பனை போலத் தோன்றும். ஆனால், பலாப்பழங்கள் மரத்திலேயே பழுத்து வெடித்து, பழச்சாறு வழிந்தோடுவதை மங்களூர்  பக்கத்தில் காடுகளில் இன்றைக்கும் காணலாம்.  அவ்வளவு உயரத்தில் அவ்வளவு  பழங்கள்! பறிக்க ஆளில்லை! பறித்து மாளாது!
மாந்துறையில் யார்யார் வந்து வணங்குகிறார்கள் என்பதை சம்பந்தர்  வழியிலேயே  அருணகிரிநாதர்  சொல்லியிருப்பது நயமானது.
அருமையான பாடல்.


pasumaimuthu.blogspot.in/2012. thanks


No comments:

Post a Comment