Friday, 18 December 2015

14. திருப்புகழ் -12. திருமாணிகுழி



14. திருப்புகழ் -12 திருமாணிகுழி



அருணகிரிநாதர்  தரிசித்த பத்தாவது தலம் திருமாணிகுழி . இதற்கு வாமனபுரி,  பீம சங்கர க்ஷேத்ரம், உதவிமாணிகுழி என்றெல்லாம் பழைய பெயர்கள் உண்டு. சோழர்காலச் சிற்பங்கள் அமைந்த மிக அருமையான  கோயில், பல புராணச் சிறப்புக்கள் உள்ள பழைய தலம். கார்த்திகை மாதம் ரோஹிணி நக்ஷத்திரத்தில் இங்கு தீபத்திருவிழா நடக்கிறது. 

ஸ்வாமி பெயர்  வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், உதவிநாயகர்
அம்பாள் திருநாமம் அம்புஜாக்ஷி, மாணிக்கவல்லி, உதவிநாயகி

ஸ்வாமி சன்னதிக்குப் போகும்முன்பு. வாமனாவதாரக் காட்சிகள் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.



இத்தலத்தில் ஸ்ரீ சம்பந்தப் பெருமான் பதிகம் பாடியிருக்கிறார். மாதிரிக்கு ஒரு பாடல்:

நித்தம் நியமத் தொழிலன் ஆகி நெடுமால்
குறளன்ஆகி  மிகவும்
சித்தமது ஒருக்கி வழிபாடு செய நின்ற
சிவலோகன்  இடமாம்
கொத்தலர் மலர்பொழிலின் நீடுகுல மஞ்ஞை
நடம் ஆடலது கண்டு
ஒத்த வரி வண்டுகள்  உலாவி இசை பாடு
உதவிமாணி குழியே.


வாமனாவதாரம் எடுத்த திருமால் இங்குவந்து தவம் செய்த புராணச் செய்தியை இங்கு சொல்கிறார் சம்பந்தர்.

அருணகிரி நாதர்  இத்தலத்தில் பாடிய திருப்புகழ் :

மதிக்கு  நேரெனும் வாண்மூகம் வான்மக
     நதிக்கு மேல்வரு சேலெனு நேர்விழி
     மணத்த வார்குழல்  மாமாத ராரிரு                கொங்கைமூழ்கி

மதித்த பூதர மாமாம னோலயர்
     செருக்கி  மேல்விழ நாடோறு  மேமிக
     வடித்த தேன்மொழி வாயூர லேநுகர்              பண்ட நாயேன்

பதித்த நூபுர சீர்பாத மாமலர்
     படைக்குள் மேவிய சீராவொடே கலை
     பணைத்த தோள்களொ டீராறு  தோடுகள்        தங்குகாதும்

பணிக்க லாபமும் வேலோடு சேவலும் 
    வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை
     பதைத்த வாகையும் நாடாது பாழில்                மயங்கலாமோ;

கதித்து மேல்வரு மாசூரர் சூழ்படை
     நொறுக்கி மாவுயர் தேரோடு மேகரி 
      கலக்கி யூர்பதி தீமூளவே  விடும்                    வஞ்சவேலா !

களித்த பேய்கண  மாகாளி கூளிகள்
     திரட்பி ரேதமெ  லேமேவி  மூளைகள்
     கடித்த பூதமொ  டேபாடி யாடுதல்                    கண்டவீரா !

குதித்து வானர மேலேறு தாறுகள்
     குலைத்து நீள்கமு  கூடாடி வாழைகொள்
     குலைக்கு மேல்விழ வேரேறு  போகமும்               வஞ்சிதோயும்

குளத்தி லூறிய தோனூறல் மாதுகள்
     குடித்து லாவியெ சேலோடு மாணிகொள்
      குழிக்குள் மேவிய வானோர்களே தொழு             தம்பிரானே !



இதில் முதல் இரண்டு அடிகளில் பெண்களின் மயக்கில் விழுவதைப் பற்றிச் சொல்கிறார்.

கொதித்து மேலெழுந்து வருகின்ற  பெரிய சூரர்கள் சூழ்ந்துள்ள  சேனைகளைப் பொடியாக்கியும்;  குதிரைகள், பெரிய தேர்கள், யானைகள் இவற்றைக் கலக்கியும் ; ஊர்களயும் நகரங்களையும் தீமூண்டு  எரியும்படிச் செலுத்தின வஞ்சகங்  கொண்ட  வேலனே!

மகிழ்ச்சிகொண்ட பேய்க்கூட்டங்களும், பெரிய காளியும்,  பெருங்கழுகுகளும் திரண்டு கிடக்கும் பிணங்களின்  மேல் விழுந்து, அப்பிணங்களின் மூளைகளக் கடித்துத் தின்கின்ற  பூதங்களுடன்  பாடி ஆடுவதைக்  காணும் வீரனே !

பாக்குமரக் குலைகளிடையே குரங்குகள் குதித்து விளையாடுவதால் அக்குலைகள்  அறுபட்டு வாழைக் குலைகளின்மேல் விழுகின்றன.  இத்தகைய அழகும் செழுமையும் நிறைந்த, பூக்கொடிகளைக் கொண்டுள்ள-

குளத்தில் ஊறியுள்ள தேன்களின் சாரத்தையும், மிகுந்த மகரந்தத்தையும் உண்டு உலாவுகின்ற  மீன்கள்   ஓடும்  திருமாணிகுழி  என்னும் தலத்தில் வீற்றருளும் தேவர்களும் தொழும் தம்பிரானே !

சிலம்பணிந்த சீரானபாதமாகிய சிறந்த மலரும், சீராவெனும் ஆயுதமாகிய உடைவாளும், ஒளிவீசும்  பருத்த தோள்களுடன் , தோடுகள் விளங்கும்  பன்னிரண்டு காதுகள்,, - 

பாம்பை அடக்கும் மயில்,  சேவல், வேல், கூர்மையான சூலாயுதம் , வெற்றிதரும்  ஒளிவீசும் நீண்ட வில்- ஆகிய இவற்றை நான் விரும்பித் தியானிக்காமல், பாழான எண்ணங்களிலும் செய்கைகளிலும்  மயக்கம் கொள்வது  தகுமா?  ( தகாது  என்றவாறு ).



இக்கோயிலில் உள்ள  நாயன்மார்கள் விக்ரஹங்கள்.

படங்கள்: rajiyinkanavugal.blogspot.com.  நன்றி.



Thursday, 17 December 2015

13. திருப்புகழ்- 11. திருப்பாதிரிப்புலியூர்.




13. திருப்புகழ் - 11. திருப்பாதிரிப்புலியூர்.


அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த  (9 வது ) தலம் திருப்பாதிரிப்புலியூர் ( இன்று கடலூரின் ஒரு பகுதி ).
ஸ்வாமி பெயர் பாடலேஶ்வரர், தோன்றாத்துணைநாதர். அம்பாள் பெயர் ப்ருஹந்நாயகி, பெரியநாயகி.







கல்லில் கட்டி, கடலில் விடப்பட்ட அப்பர் , சுவாமியை நினைத்து "சொற்றுணை வேதியன் " என்று தொடங்கிப் பதிகம் பாடினார்.சிவபிரான் அவரை  இந்த இடத்தில் கரையில் சேர்த்தார். 

கரை சேர்ந்தவுடன் அப்பர் பாடிய திருப்பதிகத்திலிருந்து ஒரு பாடல்:




ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாயுலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன்  திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்களுக்கே.

இந்த தலத்தில் சம்பந்தரும் பதிகம் பாடினார். அவர் பாடிய ஒரு பாடல்:

மதியம் மொய்த்த கதிர்போல் ஒளிம்மணல் கானல்வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தைதன் பழம் தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகாகவே.


இங்கு, அருணகிரிநாதரின் வாக்கிலிருந்து ஓர் அரிய பாடல் வருகிறது.

நிணமொடு குருதி நரம்பு மாறிய
     தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
     நிரைநிரை  செறியு முடம்பு நோய்படு                     முதுகாயம் -

நிலைநிலை  யுருவ மலங்க  ளாவது
     நவதொளை  யுடைய குரம்பை யாமிதில்
     நிகழ்தரு  பொழுதில் முயன்று மாதவ                    முயவோரும்;

உணர்விலி ஜெபமுத லொன்று தானிலி
     நிறையில் முறையிலி யன்பு தானிலி
     உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை              வழியாமுன் -

ஒருதிரு மரகத துங்க மாமிசை
     யுறுமுக மொளிவிட வந்து நான்மறை
     யுபநிட மதனை விலங்க நீயருள்                             புரிவாயே ;

புணரியின் விரவி யெழுந்த ஞாயிறு
     விலகிய புரிசை இலங்கை வாழ்பதி
     பொலமணி மகுட சிரங்கள் தாமொரு                     பதுமாறிப் -

புவியிடை யுருள முனிந்து கூர்கணை
     யுறசிலை வளைய வலிந்து நாடிய 
     புயலதி விறலரி வண்டு மால்திரு                            மருகோனே !

அணிதரு கயிலை நடுங்க வோரெழு
     குலகிரி யடைய இடிந்து தூலெழ
     அலையெறி யுததி குழம்ப வேல்விடு                       முருகோனே !

அமலைமு னரிய  தவஞ்செயல் பாடல 
     வளநகர் மருவி  யமர்ந்த தேசிக
     அறுமுக குறமக ளன்ப மாதவர்                                பெருமாளே !



மாமிசம், ரத்தம், நரம்பு ஆகியவற்றுடன் சதை, குடல், நெருங்கிய எலும்பு, தோல் ஆகிய இவை வரிசையாக நெருங்கியுள்ளது உடல். இது நோய்க்கு இடமானது.


வயதுக்குத் தக்கபடி உருவம் மாறும்; உடலில் மாசுகள் உண்டாகும். ஒன்பது துவாரங்கள் உள்ள இச்சிறு குடிலில் உயிர் உலவும் பொழுதே வேண்டிய முயற்சிகள் செய்து உய்யும்படிக்கு தவங்கள் செய்யவேண்டும் என்ற-


உணர்ச்சி இல்லாதவன் நான். ஜபம் முதலிய ஒரு  நல்லொழுக்கமும் இல்லாதவன்; விவேகமில்லாதவன்; அன்புகூட இல்லாதவன். மேன்மையான குணங்கள் இல்லாதவன். இவ்வாறு பல குறைகள்  என்னிடம் இருந்தாலும், என் மனது நினைவை இழப்பதற்கு முன்பே-


ஒப்பற்ற அழகிய பச்சை நிறமுடைய உயர்ந்த மயிலாகிய குதிரையின்மேல், ஆறு திருமுகங்களும் ஒளிவிட, நீ வந்து நான்கு வேதங்கள், உபனிஷத்துக்கள் ஆகிய இவற்றை  எனக்கு விளக்கி  யருள்வாயாக.


கடலில் உதிக்கும் சூர்யன் பயந்து விலகிய மதில்களை உடைய  லங்கையில் வாழ்ந்த  தலைவன் ராவணனுடைய பொன்மயமான  ரத்ன கிரீடங்கள்  அணிந்திருந்த  தலைகள் பத்தும் அறுபட்டு,


பூமியில் உருளும்படி கோபித்து, அவனைத் தேடிச்சென்று ,வில்லை வளைத்து,கூரிய அம்புகளைத் தொடுத்த மேக நிறத்துப் பெருமான், வீரம் மிக்க ஹரி, விண்டு, மால் என்ற பெயர்களைக்கொண்ட  திருமாலின் அழகிய மருகனே !


அழகிய கயிலை மலையும் நடுங்க,  எட்டு குலகிரிகளும் இடிந்து தூள் பறக்க, அலைவீசும் கடலும் குழம்பும்படி வேல்விடுத்த முருகனே !


தேவி முன்பு அரிய தவம் செய்த வளம்மிக்க பாடலி நகரில் (திருப்பாதிரிப்புலியூரில்) விரும்பி வீற்றிருக்கும்  தேசிக மூர்த்தியே !ஆறுமுகனே ! வள்ளியின் அன்பனே ! பெரிய தவசிகளின் பெருமாளே !


வேத, உபனிஷதங்களின் பொருள் வீளங்குமாறு  அருள்புரிவாயாக!

இங்கு ஓர் அரிய விஷயத்தைச் சொல்கிறார். வேத, உபனிஷதங்களை தக்க குரு இல்லாமல் நாமே வாசித்து அறிய முடியாது. தந்தைக்கே தனிஞான வாளொன்று சாதித்த குருநாதனாகிய முருகனைவிடச் சிறந்த தேசிகன் யார் இருக்க முடியும்? அதனால் முருகனையே வேண்டுகிறார். வேறொரு திருப்புகழிலும் இவ்வாறு வேண்டுகிறார் : " நாலான வேத நூலாகமாதி நான் ஒதினேனும் இலைவீணே, நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே ". (மாலாசை கோபம் )

அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப்பொழுதில் வாழ்வித்த  வேதியன் முருகனை நாமும் இவ்வாறே வேண்டுவோம்! ஞான பண்டித ஸ்வாமி நமோ நமோ!






Wednesday, 16 December 2015

12, திருப்புகழ். 10 திருவதிகை வீரட்டானம்.



12. திருப்புகழ் - 10. திருவதிகை வீரட்டானம்.


அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த (8வது) தலம் திருவதிகை வீரட்டானம். இது அட்டவீரட்டம் எனப் புகழ்பெற்ற எட்டு ஸ்தலங்களில் ஒன்று. இங்கு சிவபிரான் முப்புரங்களை எரித்தார்.

இங்கு ஸ்வாமி பெயர் வீரட்டேஶ்வரர். அம்பாள் பெயர்  த்ரிபுரசுந்தரி.இது தேவாரம் பாடிய நாயன்மார்கள்  மூவராலும் பாடப்பெற்ற தலம்.
இங்குதான் அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கி, இறைவனிடம் அப்பருக்காகப் பிரார்த்தித்தது. இறைவன் அப்பருக்கு சூலை நோய் தந்து அது தாங்க இயலாத அவர், இங்கு வந்து திருநீறு பெற்றுக் குணமடைந்து, தேவாரம் பாடத்தொடங்கியது. அவர் பாடிய முதல் பாடல்:

கூற்றாயினவாறு விலக்ககிலீர்
   கொடுமைபல செய்தன நானறியேன்
ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
   பிரியாது வணங்குவன் எப்பொழுதும்
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
   குடரொடு  துடக்கி முடக்கியிட
ஆற்றேனடியேன் அதிகைக் கெடில 
   வீரட்டானத்துறை அம்மானே.

இப்பதிக்கு வந்த சம்பந்தர் சிவனின் நடனக் காட்சியைத் தரிசித்தார். அவர் பாடிய ஒரு பாடல்:


எண்ணார் எழில்எண்தான் இறைவன் அனல் ஏந்தி
மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப்
பண்ணார் மறை பாடப் பரமன் அதிகையுள்
விண்ணோர் பரவ நின்றாடும் வீரட்டானத்தே."

இங்கு வந்த சுந்தரர், இத்தலத்தை மிதிக்க அஞ்சி, அருகிலிருந்த சித்தவட மடத்தில் தங்கி திருவடி தீக்ஷை பெற்றார்.  அவர் பாடிய ஒரு பாடல்:

தம்மானை யறியாத சாதியார் உளரே, 
சடைமேற்கொள்பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானைக்கரி காட்டிலாட, லுடையானை
விடையானைக் கறைகொண்ட கண்டத்
தெம்மான்தன் அடிக்கொண்டு என்முடிமேல் வைத்திடுமென்னும்,
ஆசையால் வாழ்கின்ற அறிவிலாநாயேன்
எம்மானை எறிகெடில வடவீரட்டானத்து- உறைவானை
இறைபோதும் இகழ்வன் போலியானே.




from: muelangovan.blogspot.com Thanks.


இங்கு வந்த அருணகிரிநாதர் இரண்டு பாடல்கள் பாடுகிறார்.

பரவுவரிக் கயல்குவியக் குயில்கிளியொத் துரைபதறப்
     பவளநிறத் ததரம்விளைத் ...... தமுதூறல்

பருகிநிறத் தரளமணிக் களபமுலைக் குவடசையப்
     படைமதனக் கலையடவிப் ...... பொதுமாதர்

சொருகுமலர்க் குழல்சரியத் தளர்வுறுசிற் றிடைதுவளத்
     துகிலகலக் க்ருபைவிளைவித் ...... துருகாமுன்

சொரிமலர்மட் டலரணைபுக் கிதமதுரக் கலவிதனிற்
     சுழலுமனக் கவலையொழித் ...... தருள்வாயே


கருகுநிறத் தசுரன்முடித் தலையொருபத் தறமுடுகிக்
     கணைதொடுமச் சுதன்மருகக் ...... குமரேசா

கயிலைமலைக் கிழவனிடக் குமரிவிருப் பொடுகருதக்
     கவிநிறையப் பெறும்வரிசைப் ...... புலவோனே

திரள்கமுகிற் றலையிடறிப் பலகதலிக் குலைசிதறிச்
     செறியும்வயற் கதிரலையத் ...... திரைமோதித்

திமிதிமெனப் பறையறையப் பெருகுபுனற் கெடிலநதித்
     திருவதிகைப் பதிமுருகப் ...... பெருமாளே.


இதில் முதல் நான்கு அடிகளில் பொதுமாதரின்  இயல்புகளைக் கூறி அத்தகைய மயக்கிலிருந்து காப்பாற்ற வேண்டும் என வேண்டுகிறார்.


கரிய நிறத்தையுடைய அஸுரனான ராவணனது முடிசூடிய தலை பத்தும் அற்றுவிழ வேகமாக அம்பைவிட்ட அச்சுதன் மருகோனே! குமரேசனே!



கயிலைமலையின் நாதராகிய சிவபிரானின் இடப்பாகத்தில் அமர்ந்த குமரியாகிய பார்வதி அன்புடன் கொடுத்த  பிரசாதத்தின் (பாலின்) மகிமையால் பாடல்கள் அதிகம் பாடும் திறனைப்பெற்ற புலவனான ஞானஸம்பந்தராக வந்தவனே!



திரண்ட பாக்கு மரத்தின் உச்சியை இடறியும், வாழைகளின் குலையைச் சிதற அடித்தும், வயல்களில் நிறைந்த நெற்கதிர்கள் அலைச்சல் படவும், அலைகள் வீசி,



திமிதிமியெனப் பறைகள் முழங்க வெள்ளம் பெருகும் கெடில நதிக்கரையில் உள்ள திருவதிகையில் உள்ள பெருமாளே !



என் கவலையை நீக்கி யருள்வாய் !



முருகன்  எதிரில் மயில் வாகனம்.
படங்களுக்கு நன்றி.

விடமும் வேலன மலரன விழிகளு
     மிரத மேதரு மமுதெனு மொழிகளும்
          விரகி னாலெழு மிருதன வகைகளு ...... மிதமாடி

மிகவு மாண்மையு மெழினல முடையவர்
     வினையு மாவியு முடனிரு வலையிடை
          வெளியி லேபட விசிறிய விஷமிக ...... ளுடன்மேவா

இடரு றாதுனை நினைபவர் துணைகொள
     இனிமை போலெழு பிறவியெ னுவரியி
          னிடைகெ டாதினி யிருவினை யிழிவினி ...... லிழியாதே

இசையி னாடொறு மிமையவர் முநிவர்கள்
     ககன பூபதி யிடர்கெட அருளிய
          இறைநி னாறிரு புயமென வுரைசெய ...... அருள்வாயே


படரு மார்பினி லிருபது புயமதொ
     டரிய மாமணி முடியொளி ரொருபது
          படியி லேவிழ வொருகணை தொடுபவ ...... ரிடமாராய்

பரவை யூடெரி பகழியை விடுபவர்
     பரவு வார்வினை கெடஅரு ளுதவியெ
          பரவு பால்கட லரவணை துயில்பவர் ...... மருகோனே

அடர வேவரு மசுரர்கள் குருதியை
     அரக ராவென அலகைகள் பலியுண
          அலையும் வேலையும் அலறிட எதிர்பொரு ...... மயில்வீரா

அமர ராதிய ரிடர்பட அடர்தரு
     கொடிய தானவர் திரிபுர மெரிசெய்த
          அதிகை மாநகர் மருவிய சசிமகள் ...... பெருமாளே.


(பாடல்கள் கௌமாரம்.காமிலிருந்து  எடுக்கப் பட்டவை. நன்றி ).


இந்தப் பாடலிலும் முதல் இரண்டுஅடிகள் வேசையரின்  கவர்ச்சியைக் கூறி, அதிலிருந்து விடுபட வேண்டும், பிறவி யெடுக்காதிருக்கவேண்டும் என வேண்டுகிறார்.



பரந்த மார்பின் புறமுள்ள இருபது புயங்களும், அருமையான ரத்ன கிரீடங்கள்  விளங்கும்  பத்துத் தலைகளும்  பூமியில் விழும்படி ஒர் அம்பைச் செலுத்தியவரும்,  சந்தர்ப்பம் அறிந்து,



கடலின் மீது  எரியும் அம்பை விடுபவரும், தம்மைப் போற்றுபவர்களின்  வினை கெடும்படி அருள்செய்து, பாற்கடலில் பாம்பணையில் துயில்பவரின் மருகோனே !



நெருக்கமாக வந்த அஸுரர்களின்  ரத்தத்தை , மகிழ்ச்சியுடன் அரஹரா என்ற ஒலியுடன் பேய்கள் உண்ண, அலைவீசும் கடலும் சப்தமிட, போர்செய்த மயில்வீரனே!



தேவர்கள் முதலானோர் துன்பப்படும்படி, மேல் விழுந்து நெருங்கியெதிர்த்த பொல்லாத அஸுரர்கள் வாழ்ந்திருந்த முப்புரங்களை எரித்த இடமாகிய அதிகை மாநகரில் அமர்ந்த பெருமாளே !



துன்பப்படாமல், உன்னை நினைக்கின்றவர்களின்  துணையைப் பெறுதற்கு, இன்பம் போலத் தோன்றுகின்ற  ஏழு பிறவி என்கின்ற கடலில் விழுந்து அழியாமல், இனியாகிலும்  இருவினை என்கிற  இழிந்த நிலையை அடையாமல்- 



புகழுடனே நாள்தொறும் தேவர்கள், முனிவர்கள் , விண்ணுலக அரசன் இந்த்ரன் ஆகியவர்களின் துன்பம் தொலைத்து அருளிய  இறைவனே ! உன்னுடைய  பன்னிரு புயங்களை இசையுடன் போற்றி  உரைக்க  அருள் செய்வீராக !.

பரம முருகனடியாரான  அருணகிரிநாதர்  இரு பாடல்களிலும் திருமாலைப்  பற்றி  எவ்வளவு புகழ்ந்து பாடியிருக்கிறார்! இது அவருடைய தனித்தன்மை!





Monday, 14 December 2015

11. திருப்புகழ் -9. திருத்துறையூர்.




11. திருப்புகழ் -9. திருத்துறையூர்  (திருத்தளூர் )


அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த (7வது) தலம் திருத்துறையூர். இது இன்று திருத்தளூர் என்று ஆகிவிட்டது.
ஸ்வாமி பெயர் சிஷ்டகுருநாதர். பசுபதீஶ்வரர்
அம்பாள்  சிவலோகநாயகி, பூங்கோதை நாயகி
நாரதர், வசிஷ்டர், அகஸ்தியர், சூர்யன், பீமன் ஆகியோர் வழிபட்ட புராதன ஸ்தலம். 
இங்கு சுந்தரர் ஸ்வாமியிடம்  தவநெறியை வேண்டிப்பெற்றார். பிள்ளையாரை சாக்ஷியாக வைத்து அவருக்கு உபதேசம் செய்ததாக வரலாறு. இதைக்காட்டும் சிற்பமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.


நின்ற நிலையில் சுந்தரர் உபதேசம் பெறும் காட்சி.

இத்தலத்தில் சுந்தரர்  ஒரு பதிகம் பாடியிருக்கிறார்.மாதிரிக்கு ஒரு பாடல்

மத்தம் மத யானையின் வெண்மருப்பு உந்தி
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வடபால்
பத்தர் பயின்று ஏத்திப் பரவும் துறையூர்
அத்தா உனை வேண்டிக் கொள்வேன் தவநெறியே.

என்று பாடுகிறார். தடுத்தாட் கொள்ளப்பட்ட பிறகு அவர் பாடிய முதல் பதிகம்  இது. தவநெறி வேண்டி நிற்பதால் இவர் மன நிலை விளங்குகிறது.

அருணகிரிநாதர் இங்கு இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறார்.


ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர்  காணக்கையில்    யாழ்வைத்திசை  கூரக்குழ                       லுடைசோர
ஆகப்பனி நீரப்புழு  கோடக்குழை யாடப்பிறை    யாசப்படு வார்பொட்டணி                         சசி நேர்வாள்;
கூரக்கணை வேல்கட்கயல் போலச்சுழல் வார்சர்க்கரை     கோவைக்கனி வாய்பற்கதி                       ரொளிசேருங்
கோலக்குயிலார் பட்டுடை நூலொத்திடை  யார்சித்திர     கோபச்செய  லார்பித்தர்க                           ளுறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழலாள் பத்தர்கள்      பூஜைக்கியல் வாள்பத்தினி                          சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்குமு னாள்பத்திர காளிப்புணர்     போகர்க்குப  தேசித் தருள்                             குரு நாதா
சூரக்குவ டாழித்தவி டாய்முட்டசு ராருக்கிட     சோற்விற்கதிர்  வேல்விட்டருள்                    விறல்வீரா
தோகைச்செய லாள்பொற்பிர  காசக்குற மான்முத்தொடு     ஜோதித்துறை  யூர் நத்திய                             பெருமாளே.


இப்பாடலில் முதல் நான்கு அடிகளில்  பொதுமகளிரின் செயல்கள் கூறப்படுகின்றன. 


நிறைந்த தனபாரத்தையும், சடையையும், வேத சொரூபமாகிய கூந்தலையும் உடையவளும், பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்பவளும், பத்தினியும், சிவகாமியும்;

 பூமி,கடல், மும்மூர்த்திகள் ஆகிய எல்லாவற்றிற்கும் முன்னவளும், பத்ரகாளியும் ஆகிய பார்வதியை அணைந்த சிவனுக்கு உபதேசித்து அருளிய குருமூர்த்தியே!
சூரனும், க்ரௌஞ்ச கிரியும்,கடலும் தவிடுபொடியாக, முட்டிப்பொருத அஸுரர்கள் மெலிந்து அழிய, அயற்சியில்லாத வீரம்மிக்க ஒளிவேலைச் செலுத்தி அருளின வெற்றி  வேலவனே !
மயில்போன்ற இயலுடைய அழகிய முத்துப்போன்ற வள்ளிதேவியுடன், ஒளிவீசும் துறையூர் தலத்தை விரும்பிய பெருமாளே !

பித்துப் பிடித்தவர்களாம் பொதுமகளிரின் உறவு  தகுமோ?

[ அருணகிரிநாதரின்  பல பாடல்களில் பொதுமகளிரின் தொடர்பைக் கண்டிக்கும் பகுதிகள் வரும். தமிழ் நாட்டில் சங்ககாலம் தொட்டே பொதுமகளிர்  சமூகத்தின் ஒரு அங்கமாக இருந்து வந்துள்ளனர். "தலைமகனுக்கு " பொதுமகளிருடன் தொடர்பு ஸர்வசாதாரணம் என்பதை சங்க இலக்கியத்தில் பார்க்கலாம். பிற்காலத்தில் வந்த நீதி நூல்கள் இதைக் கண்டிக்கின்றன. திருவள்ளுவர்  குறளில் 'பிறனில் விழையாமை' என்று ஒரு அதிகாரம் அறத்துப்பாலிலும், 'வரைவின் மகளிர் ' என்று ஒரு அதிகாரம் பொருட்பாலிலும் அமைத்திருக்கிறார். நன்னூலிலும் இவற்றைப்பற்றி இருபது பாடல்கள் உள்ளன. இப்பகுதிகளில் அருணகிரியார் சமூகத்தில் பரவியிருந்த ஒரு தீய பழக்கத்தைக் கண்டிக்கிறார் என்று கொள்ளவேண்டும். பல பாடல்களில் இத்தகைய பகுதிகள் வருவதால், இந்த விளக்கம் இங்கு அவசியமாகிறது.]

இனி, அடுத்த பாடல்.

வெகுமாய விதத்துரு வாகிய
திறமே பழகப்படு சாதக
வீத மேழ் கடலிற் பெரிதாமதில்                      சுழலாகி

வினையான கருக்குழி யாமெனும்
மடையாள முளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கவொ ணாதெனும்             முதியோர் சொல்

தகவாம தெனைப்பிடி யாமிடை
கயிறாலு மிறுக்கிம காகட 
சலதாரை வெளிக்கிடை யேசெல                     வுருவாகிச்

சதிகாரர் விடக்க திலேதிரள்
புழுவாக நெளித்தெரி  யேபெறு
மெழுகாக வுருக்கு முபாதிகள்                          தவிர்வேனோ

உககால நெருப்பதிலே  புகை
யெழவேகு முறைப்படு பாவனை
யுறவே குகை யிற்புட  மாய்விட                        வெளியாகி

உலவாநர குக்கிரை யாமவர்
பலவோர்கள்  தலைக்கடை  போயெதிர்
உள மாழ்கி மிகக்குழை வாகவு                          முறவாடித்

தொகலாவ தெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையே பணியத் தருவாய் பரி                       மயில்வேலா !

துதிமாதவர்  சித்தர்ம  கோரர்
அரீ மால்பிர மற்கருள்   கூர்தரு
துறையூர் நக ரிற்குடி யாய்வரு                          பெருமாளே.


இங்கே, தொடர்ந்து வரும் பிறவி என்னும் நோயிலிருந்து விடுபெற வேண்டும் என்று வேண்டுகிறார்.


எண்ணில்லாத மாயவகைகளால் நாம் எடுத்துப் பழகும் பிறப்புகள் ஏழு கடலைவிடப் பெரிதாகும். (எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப் பிறவி அவதாரம் என்று சிதம்பரம் திருப்புகழில் பாடினார்,) அத்தகைய பிறப்புச் சுழலில் சிக்கிக்கொண்டு,


வினைக்குத் தகுந்த கருவில் பிறக்க  நேரிடும் என்ற ஒரு அடையாளம் மனதில் பதிந்து இருந்தாலும், விதியை யாராலும் விலக்க முடியாது என்கிற பெரியோர் வாசகம்-


பொருத்தமானதே ஆகும். அந்த விதி என்னைப் பிடித்து இறுக்கிக் கட்டி, உடம்பாகிய சாக்கடை வழியே  வெளிவர  ஓர் உருவம் கொடுத்து,


மோசக்காரர்களாகிய ஐம்புலன்களின் சேஷ்டைகளும் (உடலாகிய) மாமிசத்திலே திரண்டு, புழுப்போல நெளிவுண்டு, நெருப்பிலிட்ட மெழுகுபோல உடலை உருக்குகின்ற  வேதனையை நான் ஒழிக்கமாட்டேனா?


யுகமுடிவு காலத்தில் புகையுடன் எழும் நெருப்பைப்போன்று கோபம் காட்டி, உலைபோன்று  உள்ளக் கொதிப்புடன் வெளியில் வரும், அழியாத  நரகத்துக்கு இரையாகுபவர்களாகிய பல பேர்களின் (இரப்பவர்களிடம் இரக்கம் காட்டாதவர்கள் )  வீட்டுவாசலில் போய் நின்று, அவர்களிடம் குழைந்து, வேதனைப்பட்டு இருக்கும் நிலை இனியாவது ஒழிவதாக.


மயிலாகிய குதிரையையும்,வேலையும் உடையவனே !நான் சிறக்கும்படி, உனது திருவருள் பெருகும் சிறந்த பாத மலர்கள் இனியாவது எனக்குத் துணை செய்யுமாறு  தருவாயாக.


துதிக்கின்ற் மஹாதபஸ்விகளுக்கும், சித்தர்களுக்கும், மஹேஶ்வரன், இந்த்ரன், ப்ரம்மா, திருமால் இவர்களுக்கும் திருவருள் புரியும் பெருமாளே !
துறையூர் நகரில் குடியாய் வந்து வீற்றருளும் பெருமாளே !


பிறவிதான் பெரிய துன்பம் என்பது ஆன்றோர் அறிவுரை. " வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை " என்றார் திருவள்ளுவர்.  அதையே இங்கு வேண்டுகிறார்  அருணகிரிநாதர்.



ஸ்ரீ சிஷ்டகுருநாதர் ஸன்னிதி.
All pictures here taken from: orbekv.blogspot.in. (பலராமன் பக்கங்கள் ) நன்றி.









Sunday, 13 December 2015

10. திருப்புகழ் - 8. வடுகூர்.



10. திருப்புகழ் -8. வடுகூர்


வடுகூர் கோயிலின் வெளித்தோற்றம்.

அருணகிரிநாதர் தரிசித்த  6வது தலம் வடுகூர் ஆகும். இது புதுச்சேரியில் உள்ளது. ஆண்டார்கோயில் என்பது இன்றைய பெயர்.

இங்குள்ள கோயில் அருமையானது.  ஸ்வாமிபெயர்  பஞ்சநாதீஶ்வரர், வடுகீஶ்வரர்; அம்பாள் பெயர் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.




நந்தி மண்டபம், பலிபீடம். வெளிப்ராகாரம்.

இது சம்பந்தர் பாடல்பெற்ற தலமாகும். இதோ ஒரு பாடல்!
.தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.


இங்கு அமைந்துள்ள அழகான தக்ஷிணாமூர்த்தி வடிவம்! சோழர் காலச் சிற்பம்.
உவகையோ ருருவந்தன்னுள் வுவப்பவன் களிமுகத்தன்
அவனையான் தென்பான் மூர்த்தி அப்பனை ஏத்துவோமே- ஸ்ரீ ரமணர்.

[இந்த மூன்று படங்களும் www.atheetham.com லிருந்து  எடுத்தவை. நன்றி.]




இங்கு பாடியதும் ஒரேஒரு திருப்புகழ்தான் கிடைத்துள்ளது.  அருமையான பாடல்.


அரி அயன் அறியா தவறெரி புரமூணதுபுக
                                            நகையே          வியநாதர்
அவிர்சடை மிசையோர்  வனிதையர் பதிசீறழலையு 
                                            மழு நேர்         பிடிநாதர்

வரைமக ளொருகூ றுடையவர்  மதனா கமும் விழ
                                         விழியே                வியநாதர்

மனமகிழ் குமரா  என வுன திருதாள்
                                           மலரடி  தொழுமா           றருள்வாயே

அருவரை யிருகூறிட வொரு மயில்மேல்
                                         அவனியை  வலமாய்     வருவோனே

அமரர்கள் இகல்நீ  டசுரர்கள்  சிரமேல்
                   அயில்தனை விசையாய்                   விடுவோனே

வரிசையொ டொருமாதினை தரு வனமே
                   மருவியொர் குறமா                               தணைவேடா

மலைகளில் மகிழ்வாய்  மருவி நல் வடுகூர்
                    வரு தவமுனிவோர்                               பெருமாளே




திருமாலும் ப்ரம்மாவும் காணமுடியாதவர்; சிரிப்பினாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்தவர். (அழலுந்த நகுந்திறல் கொண்டவர் என்று  வேறொரு பாடலில் சொல்கிறார் );
விளங்கும்  சடைமீது  கங்கையைக் கொண்டவர்; கனலையும் மழு  ஆயுதத்தையும் கையில் ஏந்தியுள்ள தலைவர்;
மலைமகள் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர்; மன்மதனின் உடலை  கண் தீயினால் எரித்தவர்-
ஆகிய சிவபிரான் மகிழும் குமரனே ! என்று உன்னுடைய மலர்ப் பாதங்களைத் தொழ அருள்புரிவாயாக.
அருமையான க்ரௌஞ்ச கிரி  இரண்டாகப் பிளவுபடும்படி செய்து, ஒப்பற்ற மயில்மீதுஏறி  உலகை வலமாக வந்தவனே !
தேவர்களோடு பகைகொண்டிருந்த அஸுரர்களின்மீது  வேகமாக வேலைச் செலுத்தியவனே !
சிறந்த தினை வளரும் காட்டிற்குச் சென்று  ஒப்பற்ற குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே !
மலையிடங்களில்  ஆசை கொண்டவனே !   நல்ல வடுகூர் தலத்தில் வரும் தவமுநிவர்களின்  பெருமாளே !
உன்னுடைய மலர்ப்பாதங்களைத் தொழ அருள்வாயே !

வடுகூர்  கோவிலின் மற்றொரு காட்சி. இந்த விமானம்  தஞ்சைப்  பெரிய கோயிலின் விமானம் போல இருப்பதைப் பார்க்கலாம் !

9, திருப்புகழ் -7. திருவாமூர்.




9. திருப்புகழ் -7. திருவாமூர்



திருவாமூர் திருக்கோயில். படம் : தினமலர். நன்றி.


அருணகிரிநாதர் தரிசித்த 5வது தலம் திருவாமூர்.  இது அப்பர் ஸ்வாமிகள் அவதரித்த பூமி.







ஆனால் அவர் இத்தலத்தைப் பற்றி ஒரு பதிகம் கூடப் பாடவில்லை! அவர் பாடிய பசுபதி திருவிருத்தம் இத்தலத்து ஸ்வாமியைப் பற்றியதாகக் கொள்ளப்படுகிறது. அதனால் இது வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது. இங்கு ஸ்வாமியின் பெயர் பசுபதீஶ்வரர். அம்பாள் பெயர் திரிபுரசுந்தரி. ஸ்தல விருக்ஷம் வன்னி மரம்.


 ஒருவரைத் தஞ்சமென் றெண்ணாதுன் பாத மிறைஞ்சுகின்றார்
அருவினைச் சுற்றம் அகல்விகண் டாய் அண்ட மேயணவும்
பெருவரைக் குன்றம் பிளிறப் பிளந்துவேய்த் தோளியஞ்சப்
பருவரைத் தோலுரித் தாயெம்மை யாளும் பசுபதியே.




இங்கு அருணகிரி நாதர் ஒரு திருப்புகழப் பாடல் பாடியிருக்கிறார். 

சீத மதிய மெறிக்குந்                     தழலாலேசீறி மதனன் வலைக்குஞ்          சிலையாலேஓத மருவி  யலைக்குங்               கடலாலேஊழி யிரவு தொலைக்கும்           படியோதான்
மாது புகழை வளர்க்குந்               திருவாமூர்வாழு மயிலில் இருக்கும்            குமரேசாகாதலடியர் கருத்தின்                    பெருவாழ்வேகாலன் முதுகை விரிக்கும்          பெருமாளே.


இதுவும்  போன பாடலைப்போல, அகத்துறையில் அமைந்தது.

முருகன் இங்கு திருவாமூரில் மயில்மேல் எழுந்தருளியிருக்கின்றான். ஆனால் அவன்  அடியவர்களின் கருத்தில்  வாழ்கிறான்! 

காலன் முதுகை விரிக்கும் பெருமாள் என்கின்றார். அதாவது, காலன் முதுகைப் பிளக்கும்  பெருமாள். முருகன் அடியவர்களை யமபயத்திலிருந்து காப்பாற்றுவார். இங்கு கீழ் வரும் கந்தரலங்காரப் பாடல்களை நாம் நினவுகூறலாம் :


ஓலையும் தூதரும் கண்டு திண்டாடல் ஒழித்து எனக்குக்

 காலையும் மாலையும் முன்னிற்குமே கந்தவேள் மருங்கில்

  சேலையும் கட்டிய சீராவும் கையில் சிவந்த செச்சை

  மாலையும் சேவல் பதாகையும் தோகையும் வாகையுமே.

பட்டிக் கடாவில் வரும் அந்தகா உனைப் பார் அறிய

வெட்டிப் புறம்கண்டு அலாது விடேன் வெய்ய சூரனைப்போய்
 முட்டிப் பொருத செவ் வேல் பெருமாள் திருமுன்பு நின்றேன்  கட்டிப் புறப்படடா, சத்திவாள் என்றன் கையதுவே.

மரண ப்ரமாதம் நமக்கு இல்லையாம்  என்றும் வாய்த்த துணை
 கிரணக் கலாபியும் வேலும் உண்டே; கிண்கிணி முகுள 
சரண ப்ரதாப, சசிதேவி மங்கல்ய தந்துரக்ஷா 
பரண கிருபாகர, ஞானாகர, சுர பாஸ்கரனே.

தண்டாயுதமும் திரிசூலமும் விழத் தாக்கி உன்னைத் 
 திண்டாட வெட்டி விழவிடுவேன் செந்தில் வேலனுக்குத் 
தொண்டாகிய என் 'அவிரோத ஞானச்சுடர் வடிவாள்'  
கண்டாயடா அந்தகா  வந்துபார் சற்று என் கைக்கு எட்டவே!

ஆகவே, முருகன்  அடியார்களுக்கு கால பயம் இல்லை!

மாது புகழை வளர்க்கும் திருவாமூர் என்று பாடுகிறார்  அடிகள்.  இது  அப்பர் ஸ்வாமிகளின்  சரித்திரத்துடன்  சம்பந்தப்பட்டது.  அப்பர்  ஜைன மதத்தில் சேர்ந்திருந்த நாட்களில் அவர் தமக்கையார் திலகவதியார்  இத்தலத்தில் இருந்து, அவர் மீண்டு சைவத்திற்கே  திரும்பிவரவேண்டும்  என  சிவபெருமானிடம் ப்ரார்த்தித்து வந்தார். பரமனும்  சூலை நோய் கொடுத்து அவரை  ஆட்கொண்டார். ஆக, அப்பர் திரும்பவும் தாய் சமயத்திற்கே  திரும்புவதற்கு திலகவதியாரின் தவமே காரணமானது. அதனால் அவர் புகழ் ஓங்கியது. இதையே இங்கு அருணகிரியார் கூறுகிறார்.

ஒரு சிறிய பாடலிலே எத்தகைய சீரிய கருத்துக்களைச் சொல்கிறார்  நம் நாதர்!