Sunday, 13 December 2015

8. திருப்புகழ். 6, திருநாவலூர்




8. திருப்புகழ் -6. திருநாவலூர்




அருணகிரிநாத ஸ்வாமிகள்  அடுத்துச் சென்ற (4 வது) தலம்  
திருநாவலூராகும். இது இப்போது  திருநாமநல்லூர் என வழங்கப்படுகிறது. இது சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் பிறந்த தலம். இந்த கோவிலில் ஸ்வாமி பெயர் நாவலேஶ்வரர். அம்பாள் பெயர்  சுந்தராம்பிகை. ஸ்தலமரம் நாவல் மரம்.

சுந்தரர் இத்தலத்தில்  ஒரு பதிகம் பாடியிருக்கிறார். அதில் சிவபெருமான் திருவெண்ணெய்நல்லூரில் தன்னைத் தடுத்தாட்கொண்ட செய்தியைத் தெரிவிக்கிறார்.







தன்மையி னால்அடி யேனைத்தாம்
    ஆட்கொண்ட நாட்சபைமுன்
வன்மைகள் பேசிட வன்றொண்டன்
    என்பதோர் வாழ்வுதந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்
    தென்னைப்போ கம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
    நந்திரு நாவலூரே





வாயாடி மாமறை ஓதிஓர்
    வேதிய னாகிவந்து
தீயாடி யார்சினக் கேழலின்
    பின்சென்றோர் வேடுவனாய்
வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்
    வைத்தெனை ஆளுங்கொண்ட
நாயாடி யார்க்கிடம் ஆவது
    நந்திரு நாவலூரே.







இங்கு அருணகிரிநாதர்  ஒரு திருப்புகழ் பாடியிருக்கிறார்.



கோல மறை யொத்த மாலைதனி லுற்ற
     கோரமதன் விட்ட ...... கணையாலே

கோதிலத ருக்கள் மேவுபொழி லுற்ற
     கோகிலமி குத்த ...... குரலாலே

ஆலமென விட்டு வீசுகலை பற்றி
     ஆரழலி றைக்கு ...... நிலவாலே

ஆவிதளர் வுற்று வாடுமெனை நித்த
     மாசைகொட ணைக்க ...... வரவேணும்

நாலுமறை கற்ற நான்முகனு தித்த
     நாரணனு மெச்சு ...... மருகோனே


நாவலர்ம திக்க வேல்தனையெ டுத்து
     நாகமற விட்ட ...... மயில்வீரா

சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
     சீரணி தனத்தி ...... லணைவோனே

சீதவயல் சுற்று நாவல்தனி லுற்ற
     தேவர்சிறை விட்ட ...... பெருமாளே.



இது  அகத்துறையில் அமைந்த பாடல். தன்னை நாயகியகவும், முருகனை நாயகனாகவும்  வைத்துப் பாடிய பாடல். நாயக- நாயகி பாவம் பக்தியின் முதிர்ந்த நிலையைக் காட்டுவது. இதை மேலைநாட்டு பக்தி மரபில்  Bridal Mysticism என்பார்கள். நம் காலத்தில் ஸ்ரீ ரமண மஹர்ஷிகள் இந்த நிலையில் ஸ்ரீ அருணாசல அக்ஷரமணமாலை என்ற ஸ்துதியை அருளியிருக்கின்றார்கள். மஹாஞானிகளுக்கே இந்த நிலை  ஸித்திக்கும்.

நான்கு வேதங்களையும் கற்ற நான்முகனைத் தோற்றுவித்த திருமாலும் மெச்சும் மருகன், முருகன். வேலைச் செலுத்தி க்ரௌஞ்ச மலையைத் துளைத்தவன். இந்த தீரச்செயலை புலவர்கள்  போற்றுகின்றனர். இப்படிப்பட்ட வீரன் வேடுவர் மகளாகிய வள்ளியை அணைந்தான்.  அந்த பெருமான் தேவர்களைச் சிறையினின்று விடுவித்தான். குளிர்ந்த வயல் சூழ்ந்த நாவலூரிலே  உறைகின்றான். அவன் நமக்கு அருளவேண்டும் என்று பாடுகிறார் நம் ஸ்வாமிகள். 

இந்த தலத்தைப்பற்றி  இந்த ஒரு பாடல்தான்  நமக்குக் கிடைத்திருக்கிறது.



No comments:

Post a Comment