Sunday, 13 December 2015

10. திருப்புகழ் - 8. வடுகூர்.



10. திருப்புகழ் -8. வடுகூர்


வடுகூர் கோயிலின் வெளித்தோற்றம்.

அருணகிரிநாதர் தரிசித்த  6வது தலம் வடுகூர் ஆகும். இது புதுச்சேரியில் உள்ளது. ஆண்டார்கோயில் என்பது இன்றைய பெயர்.

இங்குள்ள கோயில் அருமையானது.  ஸ்வாமிபெயர்  பஞ்சநாதீஶ்வரர், வடுகீஶ்வரர்; அம்பாள் பெயர் திரிபுரசுந்தரி, வடுவகிர்க்கண்ணி.




நந்தி மண்டபம், பலிபீடம். வெளிப்ராகாரம்.

இது சம்பந்தர் பாடல்பெற்ற தலமாகும். இதோ ஒரு பாடல்!
.தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக்
கிளரும் அரவார்த்துக் கிளரும் முடிமேலோர்
வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட
ஒளிரும் வடுகூரில் ஆடும் அடிகளே.


இங்கு அமைந்துள்ள அழகான தக்ஷிணாமூர்த்தி வடிவம்! சோழர் காலச் சிற்பம்.
உவகையோ ருருவந்தன்னுள் வுவப்பவன் களிமுகத்தன்
அவனையான் தென்பான் மூர்த்தி அப்பனை ஏத்துவோமே- ஸ்ரீ ரமணர்.

[இந்த மூன்று படங்களும் www.atheetham.com லிருந்து  எடுத்தவை. நன்றி.]




இங்கு பாடியதும் ஒரேஒரு திருப்புகழ்தான் கிடைத்துள்ளது.  அருமையான பாடல்.


அரி அயன் அறியா தவறெரி புரமூணதுபுக
                                            நகையே          வியநாதர்
அவிர்சடை மிசையோர்  வனிதையர் பதிசீறழலையு 
                                            மழு நேர்         பிடிநாதர்

வரைமக ளொருகூ றுடையவர்  மதனா கமும் விழ
                                         விழியே                வியநாதர்

மனமகிழ் குமரா  என வுன திருதாள்
                                           மலரடி  தொழுமா           றருள்வாயே

அருவரை யிருகூறிட வொரு மயில்மேல்
                                         அவனியை  வலமாய்     வருவோனே

அமரர்கள் இகல்நீ  டசுரர்கள்  சிரமேல்
                   அயில்தனை விசையாய்                   விடுவோனே

வரிசையொ டொருமாதினை தரு வனமே
                   மருவியொர் குறமா                               தணைவேடா

மலைகளில் மகிழ்வாய்  மருவி நல் வடுகூர்
                    வரு தவமுனிவோர்                               பெருமாளே




திருமாலும் ப்ரம்மாவும் காணமுடியாதவர்; சிரிப்பினாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்தவர். (அழலுந்த நகுந்திறல் கொண்டவர் என்று  வேறொரு பாடலில் சொல்கிறார் );
விளங்கும்  சடைமீது  கங்கையைக் கொண்டவர்; கனலையும் மழு  ஆயுதத்தையும் கையில் ஏந்தியுள்ள தலைவர்;
மலைமகள் பார்வதியை ஒரு பாகத்தில் உடையவர்; மன்மதனின் உடலை  கண் தீயினால் எரித்தவர்-
ஆகிய சிவபிரான் மகிழும் குமரனே ! என்று உன்னுடைய மலர்ப் பாதங்களைத் தொழ அருள்புரிவாயாக.
அருமையான க்ரௌஞ்ச கிரி  இரண்டாகப் பிளவுபடும்படி செய்து, ஒப்பற்ற மயில்மீதுஏறி  உலகை வலமாக வந்தவனே !
தேவர்களோடு பகைகொண்டிருந்த அஸுரர்களின்மீது  வேகமாக வேலைச் செலுத்தியவனே !
சிறந்த தினை வளரும் காட்டிற்குச் சென்று  ஒப்பற்ற குறப்பெண் வள்ளியை அணைந்த வேடனே !
மலையிடங்களில்  ஆசை கொண்டவனே !   நல்ல வடுகூர் தலத்தில் வரும் தவமுநிவர்களின்  பெருமாளே !
உன்னுடைய மலர்ப்பாதங்களைத் தொழ அருள்வாயே !

வடுகூர்  கோவிலின் மற்றொரு காட்சி. இந்த விமானம்  தஞ்சைப்  பெரிய கோயிலின் விமானம் போல இருப்பதைப் பார்க்கலாம் !

No comments:

Post a Comment