13. திருப்புகழ் - 11. திருப்பாதிரிப்புலியூர்.
ஸ்வாமி பெயர் பாடலேஶ்வரர், தோன்றாத்துணைநாதர். அம்பாள் பெயர் ப்ருஹந்நாயகி, பெரியநாயகி.
கல்லில் கட்டி, கடலில் விடப்பட்ட அப்பர் , சுவாமியை நினைத்து "சொற்றுணை வேதியன் " என்று தொடங்கிப் பதிகம் பாடினார்.சிவபிரான் அவரை இந்த இடத்தில் கரையில் சேர்த்தார்.
கரை சேர்ந்தவுடன் அப்பர் பாடிய திருப்பதிகத்திலிருந்து ஒரு பாடல்:
ஈன்றாளுமாய் எனக்கெந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாயுலகம் படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்னடி யோங்களுக்கே.
இந்த தலத்தில் சம்பந்தரும் பதிகம் பாடினார். அவர் பாடிய ஒரு பாடல்:
மதியம் மொய்த்த கதிர்போல் ஒளிம்மணல் கானல்வாய்ப்
புதிய முத்தம் திகழ் பாதிரிப்புலியூர் எனும்
பதியில் வைக்கப்படும் எந்தைதன் பழம் தொண்டர்கள்
குதியும் கொள்வர் விதியும் செய்வர் குழகாகவே.
இங்கு, அருணகிரிநாதரின் வாக்கிலிருந்து ஓர் அரிய பாடல் வருகிறது.
நிணமொடு குருதி நரம்பு மாறிய
தசைகுடல் மிடையு மெலும்பு தோலிவை
நிரைநிரை செறியு முடம்பு நோய்படு முதுகாயம் -
நிலைநிலை யுருவ மலங்க ளாவது
நவதொளை யுடைய குரம்பை யாமிதில்
நிகழ்தரு பொழுதில் முயன்று மாதவ முயவோரும்;
உணர்விலி ஜெபமுத லொன்று தானிலி
நிறையில் முறையிலி யன்பு தானிலி
உயர்விலி யெனினுமெ னெஞ்சு தானினை வழியாமுன் -
ஒருதிரு மரகத துங்க மாமிசை
யுறுமுக மொளிவிட வந்து நான்மறை
யுபநிட மதனை விலங்க நீயருள் புரிவாயே ;
புணரியின் விரவி யெழுந்த ஞாயிறு
விலகிய புரிசை இலங்கை வாழ்பதி
பொலமணி மகுட சிரங்கள் தாமொரு பதுமாறிப் -
புவியிடை யுருள முனிந்து கூர்கணை
யுறசிலை வளைய வலிந்து நாடிய
புயலதி விறலரி வண்டு மால்திரு மருகோனே !
அணிதரு கயிலை நடுங்க வோரெழு
குலகிரி யடைய இடிந்து தூலெழ
அலையெறி யுததி குழம்ப வேல்விடு முருகோனே !
அமலைமு னரிய தவஞ்செயல் பாடல
வளநகர் மருவி யமர்ந்த தேசிக
அறுமுக குறமக ளன்ப மாதவர் பெருமாளே !
மாமிசம், ரத்தம், நரம்பு ஆகியவற்றுடன் சதை, குடல், நெருங்கிய எலும்பு, தோல் ஆகிய இவை வரிசையாக நெருங்கியுள்ளது உடல். இது நோய்க்கு இடமானது.
வயதுக்குத் தக்கபடி உருவம் மாறும்; உடலில் மாசுகள் உண்டாகும். ஒன்பது துவாரங்கள் உள்ள இச்சிறு குடிலில் உயிர் உலவும் பொழுதே வேண்டிய முயற்சிகள் செய்து உய்யும்படிக்கு தவங்கள் செய்யவேண்டும் என்ற-
உணர்ச்சி இல்லாதவன் நான். ஜபம் முதலிய ஒரு நல்லொழுக்கமும் இல்லாதவன்; விவேகமில்லாதவன்; அன்புகூட இல்லாதவன். மேன்மையான குணங்கள் இல்லாதவன். இவ்வாறு பல குறைகள் என்னிடம் இருந்தாலும், என் மனது நினைவை இழப்பதற்கு முன்பே-
ஒப்பற்ற அழகிய பச்சை நிறமுடைய உயர்ந்த மயிலாகிய குதிரையின்மேல், ஆறு திருமுகங்களும் ஒளிவிட, நீ வந்து நான்கு வேதங்கள், உபனிஷத்துக்கள் ஆகிய இவற்றை எனக்கு விளக்கி யருள்வாயாக.
கடலில் உதிக்கும் சூர்யன் பயந்து விலகிய மதில்களை உடைய லங்கையில் வாழ்ந்த தலைவன் ராவணனுடைய பொன்மயமான ரத்ன கிரீடங்கள் அணிந்திருந்த தலைகள் பத்தும் அறுபட்டு,
பூமியில் உருளும்படி கோபித்து, அவனைத் தேடிச்சென்று ,வில்லை வளைத்து,கூரிய அம்புகளைத் தொடுத்த மேக நிறத்துப் பெருமான், வீரம் மிக்க ஹரி, விண்டு, மால் என்ற பெயர்களைக்கொண்ட திருமாலின் அழகிய மருகனே !
அழகிய கயிலை மலையும் நடுங்க, எட்டு குலகிரிகளும் இடிந்து தூள் பறக்க, அலைவீசும் கடலும் குழம்பும்படி வேல்விடுத்த முருகனே !
தேவி முன்பு அரிய தவம் செய்த வளம்மிக்க பாடலி நகரில் (திருப்பாதிரிப்புலியூரில்) விரும்பி வீற்றிருக்கும் தேசிக மூர்த்தியே !ஆறுமுகனே ! வள்ளியின் அன்பனே ! பெரிய தவசிகளின் பெருமாளே !
வேத, உபனிஷதங்களின் பொருள் வீளங்குமாறு அருள்புரிவாயாக!
இங்கு ஓர் அரிய விஷயத்தைச் சொல்கிறார். வேத, உபனிஷதங்களை தக்க குரு இல்லாமல் நாமே வாசித்து அறிய முடியாது. தந்தைக்கே தனிஞான வாளொன்று சாதித்த குருநாதனாகிய முருகனைவிடச் சிறந்த தேசிகன் யார் இருக்க முடியும்? அதனால் முருகனையே வேண்டுகிறார். வேறொரு திருப்புகழிலும் இவ்வாறு வேண்டுகிறார் : " நாலான வேத நூலாகமாதி நான் ஒதினேனும் இலைவீணே, நாள் போய்விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே ". (மாலாசை கோபம் )
அறிவும் அறி தத்துவமும் அபரிமித வித்தைகளும்
அறியென இமைப்பொழுதில் வாழ்வித்த வேதியன் முருகனை நாமும் இவ்வாறே வேண்டுவோம்! ஞான பண்டித ஸ்வாமி நமோ நமோ!
No comments:
Post a Comment