Monday, 27 February 2017

69.திருப்புகழ் 63.பெரியமடம்


69.திருப்புகழ் 63. பெரியமடம்



காசிவிஶ்வநாதர் கோயில், கும்பகோணம்.
படம்: பா.ஜம்புலிங்கம், நன்றி.

அருணகிரிநாதர்  அடுத்து தரிசித்த இடம் பெரியமடம். இது கும்பகோணத்தின் ஒரு பகுதி.  மஹாமகக் குளத்தின் வடக்கில் அமைந்துள்ள வீரசைவ மடம். 
இதேபோல் சோமேசர் கோயிலும் ( கும்பகோணம்-2 கட்டுரை பார்க்க ) கும்பகோணத்தின் ஒரு பகுதியே. ஆனால் இவை தனியாக எண்ணப்படுகின்றன, அதன்படி  சோமேசர்  கோயில் 60 வது தலமாகவும், பெரியமடம் 61வது   தலமாகவும் ஆகிறது.

வீரசைவம் கர்நாடகப் பகுதியில் பரவிய ஒரு சைவ இயக்கம். இவர்களுக்கு பல இடங்களில் மடங்கள் இருக்கின்றன. அருணகிரிநாதர் காலத்தில் கும்பகோணத்திலிருந்த  இந்த மடம் சிறந்து விளங்கியது போலும். இங்கு நாதர் பாடிய ஒரு பாடல் இருக்கிறது. அருமையான பாடல். மாதர் மயக்கொழிந்து  தீக்ஷை பெறவேணும் என்று பாடுகிறார்.

தீக்ஷை பெற 


அலகில் தமிழாலுயர்   சமர்த்தனே போற்றி
அருணைநகர் கோபுர  விருப்பனே போற்றி
அடல்மயில்  நடாவிய  ப்ரியத்தனே போற்றி         அவதான

அறுமுக   சுவாமியெனும் அத்தனே போற்றி
அகிலதலம் ஓடிவரு    நிர்த்தனே போற்றி
அருணகிரி நாதஎனும் அப்பனே போற்றி              அசுரேசர்


பெலமடிய வேல்விடு  கரத்தனே போற்றி
கரதல கபாலி  குருவித்தனே போற்றி
பெரியகுற மாதணை  புயத்தனே போற்றி            பெருவாழ்வாம்

பிரமனறியா  விரத தக்ஷிணா மூர்த்தி
பரசமய கோளரி தவத்தினால் வாய்த்த
பெரியமட மேவிய சுகத்தனே யோக்யர்               பெருமாளே.


மா யாக்கை
தனையும் அருநாளையும் அவத்திலே போக்கு

தலையறிவிலேனை  நெறிநிற்க  நீ தீக்ஷை         தரவேணும்





மிக எளிய பாடல். பதம் பிரித்துக் கொண்டதும் பொருள் உடனே  விளங்கும்!
எத்தனை அருமையான போற்றிகள் ! நாம் மேலும் நான்கைச் சேர்த்துக்கொள்ளலாம் :

பிரமனறியா விரத தக்ஷிணாமூர்த்தியே போற்றி
பரசமய கோளரி  போற்றி
தவத்தினால் வாய்த்த சுகத்தனே  போற்றி
யோக்யர் பெருமாளே  போற்றி

சில விளக்கங்கள்

கரதல கபாலி குரு வித்தன் : கையில் மண்டையோட்டை ஏந்திய சிவபிரானுக்கு  குருவாக உபதேசித்தவன்.

பரசமய கோளரி  : ஜைன, பௌத்தமாகிய பர சமயங்களை அழிக்க வந்த சிங்கம். இது திருஞான சம்பந்தரைக்குறிக்கும். பெரியபுராணத்தில் சேக்கிழார் அப்படிச் சொல்கிறார். சம்பந்தர் முருகனின் அவதாரம் என்பது அருணகிரிநாதரின் கொள்கை. அதனால் சம்பந்தர் செய்ததை முருகன் செய்ததாகச் சொல்கிறார்.

பிரமனறியா விரத தக்ஷிணாமூர்த்தி :  பிரம்மாவுக்கு ப்ரணவத்தின் பொருளை உபதேசித்த மூர்த்தி.

யோக்யர் :  யோகியர் !
மாயாக்கை ; அருமையான உடல்.
நாம் நாளையும் உடலையும் தெய்வ சம்பந்தமில்லாத விஷயத்தில்  ஈடுபடுத்தி அவமே  போக்குகிறோம்.
தலை அறிவிலேனை :  உத்தம அறிவு இல்லாதவன் அல்லது முதலில் அறியவேண்டியதையும் அறியாதவன்.

தீக்ஷை : குரு சீடனை சமய / ஆன்மீகப் பாதையில் ஈடுபடுத்துவது. ஒவ்வொரு சம்பிரதாயத்திலும்  பலவித தீக்ஷைகள் இருக்கின்றன. பொதுவாக ஸ்பர்ஸ தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்மரண  தீக்ஷை என்பார்கள். [ பறவை முட்டையின் மீது அமர்ந்து அடைகாப்பது, மீன் தன் முட்டைகளை பார்வையினாலேயே  குஞ்சு பொரிப்பது, ஆமை முட்டையைத் தரையில் இட்டு அதை நினைத்தே குஞ்சு பொரிப்பது என்பதை  இதற்கு உதாரணம் சொல்வார்கள் .] மன்த்ர தீக்ஷையும் உண்டு; ஸன்யாச தீக்ஷையும் உண்டு..

 சமயப்பிரிவுகளில் இது  விதவிதமான  சடங்காக நடத்தப்படும். தீக்ஷையும் சமயக் கொள்கை பற்றியதாகவே இருக்கும். 

ஞானிகள் இந்த மாதிரி  தீக்ஷைகளைக் கையாள மாட்டார்கள். கொள்கைச் சிக்கலில், சழக்கில் ஈடுபடமாட்டார்கள்.  அருணகிரியார் முருகனிடமே தீக்ஷை கேட்கிறார். இது மிகவுயர்ந்த நிலை. இதை இங்கே ஞானம் என்ற பொருளிலேயே எடுத்துக்கொள்ளவேண்டும் . ஞானோபதேசம் அருள்வாயே என்றுதான் அவர் கேட்பார்.  


தி இந்து. மே 9, 2015. நன்றி

68.திருப்புகழ் 62,கும்பகோணம் 3


68.திருப்புகழ் 62.கும்பகோணம் -3


தேரில் கும்பேஶ்வரர், விநாயகர், முருகன்
படம்: பா.ஜம்புலிங்கம். நன்றி

உலக வாழ்க்கை

உலக  வாழ்க்கை இன்பமானதா, துன்பமானதா ? காணும் இந்த உலகம்தான் உண்மை என்ற கொள்கையுடையவர்கள் உலகம் இன்பமயம் என்று காட்டுவார்கள். சிறிது தீர்க்கமாக சிந்திப்பவர்கள்  இது இரண்டும் கலந்தது  [மிஶ்ர லோகம் ] என்பார்கள். 
வாழ்க்கை விதிப்படி நடக்கிறது; அதனால் இது "இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின் இன்னாது என்றலும் இலமே " என்று புறநானூற்றில் கணியன் பூங்குன்றனார் பாடினார்.
அருளாளர்கள் ,ஞானிகளோ இந்த உலகம் சாரமற்றது ; இதை நாம் இன்னும் பெரிய விஷயத்திற்குப் பயன் படுத்திக்கொள்ள  வேண்டும்  என்பார்கள். இந்த உலகம் நிலையில்லாதது; இதில் எதுவுமே நிலைப்பதில்லை; கடவுள் ஒருவரே சத்தியம் என்பார்கள். ஆதி சங்கரர் சொல்கிறார் :



नलिनीदलगतजलमतितरलं
तद्वज्जीवितमतिशयचपलम् ।
विद्धि व्याध्यभिमानग्रस्तं
लोकं शोकहतं च समस्तम् ॥ ४





நளினீ தலகத ஜலம் அதி தரலம்
தத்வத் ஜீவிதம் அதிசய  சபலம் I
வித்தி வ்யாத்யபி மானக்ரஸ்தம்
லோகம் சோக ஹதம் ச ஸமஸ்தம் II

- பஜகோவிந்தம்

[ படம் : சொல்வனம், நன்றி ]



இந்த உலகம் தாமரை இலைத் தண்ணீர் போல சலனம்மிக்கது (நிலையில்லாதது) இங்கு மக்கள் வியாதியினாலும் செருக்கினாலும்  பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். .இந்த உலகம்  எல்லாம்  சோகத்திற்கு இடமானது என்பதை அறிந்துகொள்.

அருணகிரிநாதர் ஞானிகள் பரம்பரையைச் சேர்ந்தவர். கும்பகோணத்தில் பாடிய இரண்டு பாடல்களில்  பிறவித் துன்பத்தைப் பற்றிச் சொல்கிறார்.

பிறவித் துன்பத்திலிருந்து விடுபட


கறுத்த குஞ்சியும் வெளிறி யெழுங்கொத்
துருத்த வெண்பலு மடைய விழுந்துட்
கருத்து டன்திகழ் மதியு மருண்டுச்               சுருள்நோயாற்

கலக்க முண்டல மலமுற வெண்டிப்
பழுத்தெ ழும்பிய முதுகு முடங்கக்
கழுத்தில் வந்திளை யிரும லொதுங்கக்        கொழுமேனி


அறத்தி ரங்கியொர் தடிகை நடுங்கப்
பிடித்தி டும்புறு மனைவியு நிந்தித்
தடுத்த மைந்தரும் வசைகள் விளம்பச்            சடமாகி

அழுக்க டைந்திடர் படுமுடல் பங்கப்
பிறப்பெ னுங்கட லழிய லொழிந்திட்
டடுத்தி ருந்திரு வடிதனை யென்றுற்                    றிடுவேனோ

புறத்த லம்பொடி படமிக வுங்கட்
டறப்பெ ருங்கடல் வயிறு குழம்பப்
புகட்ட ரங்கிய விரக துரங்கத்                                   திறல்வீரா

பொருப்பு ரம்படர் கிழிபட வென்றட்
டரக்கர் வன்றலை நெரிய நெருங்கிப்
புதைக்கு றுந்தசை குருதிகள் பொங்கப்              பொரும்வேலா

சிறுத்த தண்டைய மதலையொ ரஞ்சச்
சினத்து மிஞ்சரி திரிதரு குன்றத்
தினைப்பு னந்திகழ் குறமகள் கொங்கைக்         கிரிமேவிச்


செருக்கு நெஞ்சுடை முருக சிகண்டிப்
பரிச்சு மந்திடு குமர கடம்பத்
திருக்கு டந்தையி லுறைதரு கந்தப்                     பெருமாளே.

கருத்த மயிரும் வெளுத்துப்போய், வரிசையாய் நின்றிருந்த பற்களும் விழுந்துவிட,  உள்ளே பல கருத்துக்களுடன் இருந்த புத்தியும் கலங்கிப்போய்,  நோய்கள் உடலைச் சுருட்டி மடக்க,

கலக்கம் அடைந்து, இந்த வாழ்க்கை போதும்,போதும் என்று மனம் சலித்து,  நீர்வற்றிய பழம்போல,  நிமிர்ந்து ஓங்கியிருந்த முதுகு கூன்விழ,  கோழையும் இருமலும் கழுத்திலே வந்து நிற்க,

கொழுத்திருந்த உடல் வற்றிச் சுருங்கி, ஒரு தடியைக் கையிலே நடுக்கத்துடன் பிடித்து, மனைவியும் நிந்தித்து இகழ, அவமதிப்புக்கிடமாகி,  அடுத்துள்ள பிள்ளைகளும் பழிக்க,  ஜடப் பொருள் போல ஆகி,

உடலெல்லாம் அழுக்கு சேர, வேதனைப்படும் உடலுக்கு இடமான பிறப்பு என்னும் சேறுபோன்ற கடலில்  அழிந்து போவதை விட்டு,பெருமைவாய்ந்த உன் திருவடிகளை  சரணடைந்து  நான் இருப்பேனோ !

வெளியிடங்கள் எல்லாம் பொடிபட்டு நிலை கலங்கவும், பெரிய கடலும் அதன் உட்புறம்  கலங்கிக் குழம்பவும், அசுரர்களின் மீது பாயவிட்டு, அவர்களைத் தேய்த்துச் சிதைத்த  சாமர்த்தியமுடைய குதிரையாகிய மயிலேறிய பராக்ரமசாலியாகிய வீரனே !

க்ரௌஞ்சகிரி  பிளவுண்டு அதன் வலிமை அழிய , வெற்றியடைந்து, பகைவர்களைக்கொன்று, அரக்கர்களின் வலிமைமிக்க தலைகள் நெரிபட்டு அழிய, உள்ளடங்கிய ரத்தம், கொழுப்பு இவை பொங்கி மேலெழப் போர்செய்த வீரனே !

சிறிய தண்டைகளை அணிந்தவனே ! வேட்டுவக்குழந்தைகள் பயப்படும்படி, கோபம்மிக்க சிங்கம் திரிகின்ற வள்ளிமலையில், தினைப்புனத்தில் விளங்கியிருந்த வள்ளியை  விரும்பி அடைந்து அதனால்,

மகிழ்ச்சி கொண்ட மனத்தையுடைய முருகனே ! மயில் என்னும் குதிரை சுமக்கின்ற குமரனே !கடம்பனே ! திருக்குடந்தையில் வீற்றிருக்கும் கந்தப் பெருமாளே !

நான் பிறப்பு என்னும் சேற்றுக் கடலில் விழாமல்  உன்  திருவடிகளை அடைவேனோ !

பிறப்பு  (இறப்பு ) என்னும் கடலை இறைவன் அருளின்றித் தாண்டமுடியாது என்பது  பாரதத்தின் பொதுவான கொள்கை.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்
என்பது குறள்.


வாழ்க்கையில் முதுமை, நோய் இவற்றால் படும் அவலங்களை பல பாடல்களில் விரிவாகவே சொல்லியிருக்கிறார் அருணகிரிநாதர்.







இங்கே முருகனைக் கடம்பா என விளிக்கிறார். கடம்ப மரம், மலர் முருகனுக்கு உகந்தது. ஆனால்  எது சரியான கடம்பமரம் என்பது தெரியவில்லை. தாவர இயலில் 5 மரங்களைச் சொல்கிறார்கள்.


Neolamarckia cadamba
J.M.Garg. CC BY-SA 3.0
Creativecommons via Wikimedia Commons.




ஞானம் பெற

செனித்தி டுஞ்சல சாழலு மூழலும்
விளைத்தி டுங்குடல் பீறியு மீறிய
செருக்கொ டுஞ்சதை பீளையு மீளையு              முடலூடே

தெளித்தி டும்பல சாதியும் வாதியும்
இரைத்தி டுங்குல மேசில கால்படர்
சினத்தி டும்பவ நோயென வேயிதை                    யனைவோருங்

கனைத்தி டுங்கலி காலமி தோவென
வெடுத்தி டுஞ்சுடு காடுபு காவென
கவிழ்த்தி டுஞ்சட மோபொடி யாய்விடு               முடல்பேணிக்


கடுக்க னுஞ்சில பூடண மாடைகள்
இருக்கி டுங்கலை யேபல வாசைகள்
கழித்தி டுஞ்சிவ யோகமு ஞானமு                         மருள்வாயே

தனத்த னந்தன தானன தானன
திமித்தி திந்திமி தீதக தோதக
தகுத்து துந்துமி தாரைவி ராணமொ                    டடல்பேரி

சமர்த்த மொன்றிய தானவர் சேனையை
வளைத்து வெஞ்சின வேல்விடு சேவக
சமத்து ணர்ந்திடு மாதவர் பாலருள்                     புரிவோனே


தினைப்பு னந்தனி லேமய லாலொரு
மயிற்ப தந்தனி லேசர ணானென
திருப்பு யந்தரு மோகன மானினை                      யணைவோனே

சிவக்கொ ழுஞ்சுட ரேபர னாகிய
தவத்தில் வந்தருள் பாலக்ரு பாகர
திருக்கு டந்தையில் வாழ்முரு காசுரர்                   பெருமாளே.



மஹாமகக் குளம்


ஜனனம் என்கின்ற  பொய்மையான ஒரு விளையாட்டாகிய கூத்தென்ன,
அந்தப் பிறப்புடன் கூடிய ஆபாசம் என்ன,  பிறப்பால் ஏற்படும் குடல், அந்தக் குடலைக் கிழித்தெழுவதுபோல் மேலெழுகின்ற  ஆணவம் என்ன, அந்த உடலில் உள்ள சதை, பீளை, கோழை என்ன,

ஏற்பட்ட பல ஜாதி என்ன, அதைப்பற்றி வாதிப்பவர் என்ன,  கூச்சலிட்டுப் பேசும் குலத்தவர் என்ன, சில சமயம் கோபித்து எழுவதுபோல், துன்பம் மிகுந்து எழும் பிறப்பு ஒரு நோய் என்றே இவ்வாழ்வை எல்லோரும்

ஒலித்து எழும் கலிகாலத்தின் கூத்தோ இது என்று கூறுவது என்ன, (பிணத்தை ) எடுங்கள் சுடுகாட்டிற்குப்போக என்பதென்ன, அங்கேபோய் கவிழ்க்கப்படுவதான இந்த உடல் தீயால் பொடியாகிச் சாம்பலாய்விடும்; அத்தகைய உடலை நான் விரும்பிப் போற்றி,

அதை அலங்கரிக்க கடுக்கன் ஆதிய சில ஆபரணங்களை அணிவது என்ன,வேத மந்திரங்களால் பெறப்படும் சாஸ்திர நூல்களைப் படிப்பது என்ன, பல திறத்ததான ஆசைகளைக் கொண்டிருப்பதென்ன  --
ஆக இவை எல்லாவற்றையும் ஒழிக்கவல்ல சிவயோகத்தையும், சிவஞானத்தையும் அருள்வாயாக !

பலவித  சந்த ஒசைகள் முழங்க பறை, தாரை, தப்பட்டை, வெற்றிமுரசு ஆகியவற்றுடன் கூடி,

போருக்கு என்று வந்த அசுர சேனைகளை வளைத்து, கொடிய கோபத்துடன் வேலாயுதத்தைச் செலுத்திய பராக்ரமசாலியே ! உனது பெருமையை அறிந்துள்ள தவசீலர்களுக்கு அருள்பாலிப்பவனே !

தினைப்புனத்திலே  அன்புடன் மயில் போன்ற வள்ளியிடம் சரணடைந்த , உன்னை மயக்கவல்ல மான் வள்ளியை அணைபவனே !

சிவத்தினின்றும் தோன்றிய செழும்சுடரே ! தவம் செய்வோர் பொருட்டு பரமனாக வெளித்தோன்றி  வந்து அருளும் குழந்தை க்ருபாகரனே ! திருக்குடந்தை வாழும் முருகா ! தேவர்கள் பெருமாளே !

[உலக விஷயங்கள் எல்லாம் அற] சிவயோகமும் ஞானமும் அருள்வாயே !

ஒரு முக்கிய விஷயத்தை மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். பிறப்பு - இறப்பு இதற்கிடையில் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் பல கருத்துக்கள் இருக்கின்றன; வாத-பிரதிவாதங்கள் நிகழ்ந்தவண்ண மிருக்கின்றன. இவற்றுக்கு முடிவே இல்லை. தெய்வ ஞானம் ஒன்றே இவற்றுக்கு முடிவுதரும். அதை தெய்வ அருளால்தான் பெறமுடியும். அதையே இங்கு வேண்டுகிறார்.  " எல்லாம் அற என்னையிழந்த  நலம் சொல்லாய் முருகா சுரபூபதியே " என்று இதையே கந்தரனுபூதியில் சொன்னார் !

இப்படி கும்பகோணத்தில் அருமையான பாடல்களைப் பாடியிருக்கிறார் அருணகிரிநாதர்.

மானஸரோவர்.




Sunday, 26 February 2017

67.திருப்புகழ் 61.கும்பகோணம் -2


67.திருப்புகழ்  61. கும்பகோணம் -2


சோமேஶ்வர் கோயில், கும்பகோணம்.
படம்: பா.ஜம்புலிங்கம். விக்கிபீடியா.

அருளாளர்கள் எப்போதும்  பகவானையே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் எங்கும் ஈசன் என்பார்கள். எங்கே நினைப்பினும் அங்கே என்முன்  எதிர்வந்து நிற்பனே என்பார்கள். இருந்தாலும்  புராணத் தலங்களைத் தேடிச்சென்று பாடினார்கள். இது நமது  நன்மைக்காகச் செய்தது.

 இன்று எந்தப் பாடல்பெற்ற கோயிலும் பழைய உன்னத நிலையில் இல்லை. பல கோயில்களிலும் போதிய பராமரிப்பு இல்லை. தர்மபுர ஆதீனத்தின் வசப்பட்ட கோயில்கள் அருமையாக நிர்வகிக்கப் படுகின்றன. இதைப் பார்த்தும்கூட பிற கோயில்களின் நிர்வாகம் திருந்தவில்லை. திருப்பணி என்ற பெயரில் இருப்பதையும் கெடுக்கிறார்கள். நமது பொதுமக்களும் ஒத்துழைப்பதில்லை. அதிலும் டூரிஸ்டுகள் படுத்தும் பாடு சொல்லிமுடியாது. கோயில் வளாகமே தூய்மை இழந்து நிற்கிறது ! இருந்தாலும் ஆஸ்திக புத்தியினால் நாம் விடாமல்  இங்கெல்லாம் போய் வருகிறோம். எதையும்  சகித்துக் கொள்கிறோம் !

அருணகிரிநாதர் கும்பகோணத்தில் பாடிய பாடலில் பல அருமையான விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அவருக்கு இந்த இடத்தின்மேல் ஒரு கண் போலும் ! அவர் பாடிய க்ஷேத்திரக்கோவை பாடல் "கும்பகோணமோடு ஆரூர் சிதம்பரம் " என்றுதான் தொடங்குகிறது !

சித்ரத் தமிழ் பாட

பஞ்சுசேர் நிர்த்தப் பதமாதர்
பங்கமார்  தொக்கிற் பதியாமல்
செஞ்சொல்சேர் சித்ரத் தமிழாலுன்
செம்பொன் ஆர்வத்தைப் பெறுவேனோ
பஞ்ச பாணத்தற் பொரு தேவர்
பங்கில் வாழ் சத்திக் குமரேசா
குஞ்சரீ வெற்புத் தன நேயா
கும்பகோணத்திற்  பெருமாளே !

எளிய பாடல். அருணகிரிநாதர் சம்பந்தரைக் குருவாகவும் அவதாரமாகவும் போற்றியவர். அவரைப்போன்றே  கவி பாடவேண்டும் என்று வேண்டுகிறார் !




பகவான் நாமத்தின் பெருமை

மாலிருள் அழுந்தி சாலமிக நொந்து தவியாமல்

காலையில் எழுந்து உன் நாமமெ மொழிந்து
காதலுமை  மைந்த என ஓதிக்
காலமும்  உணர்ந்து  ஞான வெளி கண்கள்
காண அருள் என்று பெறுவேனோ
கோலமுடன் அன்று சூர்படையின் முன்பு
கோபமுடன் நின்ற   குமரேசா
கோதை இரு பங்கின் மேவ வளர் கும்ப
கோண நகர் வந்த பெருமாளே !

இதில் ஒரு ரகசியத்தைச் சொல்கிறார்!

ஆசை இருளில் அழுந்தி, மிகவும் மனம் நொந்து தவிக்காமல்.
காலையில் எழுந்ததும் உன் நாமத்தையே சொல்லி,  அன்புமிக்க உமையின்  மைந்தனே  என்று ஓதி, முக்காலத்தையும் அறியும் சக்தியை அடைந்து  ஞானாகாச வெளியை ஞானக்கண் கொண்டு  நான் பார்க்கும் உன் திருவருளை என்று அடைவேனோ !
போர்க்கோலத்துடன் அன்று சூரனது  சேனைகளின் முன்பு கோபத்துடன் நின்ற குமரேசனே !
இரு தேவிமார்கள் இரு பக்கத்திலும் விளங்க, கல்வியும் செல்வமும் வளரும் கும்பகோணப் பதியில் அமர்ந்த பெருமாளே !

காலையில் எழுந்ததும் பகவானது நாமத்தைச் சொல்வது ஆஸ்தீக மரபு. "ப்ராத ஸ்மரணம் " என்றே சில ஶ்லோகங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. சம்பிரதாயங்களுக்கு ஏற்ப இதில் பல பிரிவுகள் இருக்கின்றன.  இங்கு முருகன் அடியார்களுக்காகச் சொல்கிறார். 
 " உன் நாமமே மொழிந்து " என்கிறார். என்ன நாமம் சொல்வது? அவருக்கோ ஆயிரமாயிரம் நாமங்கள் !
இதற்கு விடை கந்தரனுபூதியில் இருக்கிறது! 

முருகன் குமரன் குஹனென்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வென்றருள்வாய்

எனவே, காலையில் எழுந்ததும் " முருகா, குமரா, குஹா , காதல் உமை மைந்தா " என ஓதவேண்டும். இது  ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகளின் அறிவுரை.

இன்னும் ஒரு புதிர் போடுகிறார். "காலமும்  உணர்ந்து " என்கிறார். இதற்கு முக்காலத்தையும் உணரும் சக்தி எனச் சாதாரணமாகப் பொருள் சொல்லலாம். ஆனால் ஞானிகளும் பக்தர்களும் அப்படிக் கேட்பார்களா? ஆகவே இதற்கு வேறு பொருள் இருக்கவேண்டும். கடந்த காலத்தைப் பற்றிய வருத்தம்  [ Regrets ], நிகழ், எதிர்காலத்தைப் பற்றிய கவலை , பயம்[ Anxiety, Fear ] இல்லாமல் இருக்கவேண்டும் எனச் சொல்லலாம். காலையில் முருகனை நினைத்து எழுபவர்களுக்கு முக்காலத்தைப் பற்றிய சிந்தனையும் இருக்காது என்பது இதனால் தெரிகிறது. என்ன அருமையான பாடல் !






ஓதும் பேறு பெற


உரியதவ நெறியில்நம நாராய ணாயவென
ஒருமதலை மொழியளவி லோராத கோபமுட
னுனதிறைவ னெதனிலுள னோதாய டாவெனுமு          னுறுதூணில்

உரமுடைய அரிவடிவ தாய்மோதி வீழவிரல்
உகிர்புதைய இரணியனை மார்பீறி வாகைபுனை
உவணபதி நெடியவனும் வேதாவும் நான்மறையு          முயர்வாக


வரியளிக ளிசைமுரல வாகான தோகையிள
மயிலிடையில் நடனமிட ஆகாச மூடுருவ
வளர்கமுகின் விரிகுலைகள் பூணார மாகியிட                 மதில்சூழும்

மருதரசர் படைவிடுதி வீடாக நாடிமிக
மழவிடையின் மிசையிவரு சோமீசர் கோயில்தனில்
மகிழ்வுபெற வுறைமுருக னேபேணு வானவர்கள்           பெருமாளே.

இரவினிடை துயிலுகினும் யாரோடு பேசுகினும்
இளமையுமு னழகுபுனை யீராறு தோள்நிரையும்
இருபதமு மறுமுகமும் யானோத ஞானமதை                  யருள்வாயே

சரியான தவ நெறியில் இருந்து, ஒரு பிள்ளை  " நமோ நாராயணாய " என்று சொன்னவுடன் , ஆராய்ச்சி அறிவு இல்லாமல் , கோபத்துடன்  "உன் கடவுள் எங்கு உள்ளான், சொல்லடா "  என்று கேட்டு  முடிக்கும் முன்பே அங்கிருந்த  தூணில் -

வலிமைகொண்ட சிங்கத்தின் உருவுடன்  ஹிரண்யன்மேல் மோதி அவனை விழச்செய்து, தனது விரல்களின் நகம் புதைய அவனது மார்பைக் கீறிப் பிளந்து, வெற்றி சூடியவனும், கருடனுக்குத் தலைவனும்,  [மஹாபலிக்காக ] நெடிய உரு எடுத்தவனும், ஆன திருமாலும், பிரமனும், நான்கு வேதங்களும் மேன்மை பெற -

ரேகைகள் உள்ள வண்டுகள் இசையெழுப்ப , அழகிய தோகையுள்ள இள மயில்  நடுவில் நடனம் செய்ய , ஆகாசத்தையும் ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வளர்ந்துள்ள கமுக மரத்தின் விரிந்த குலைகள் பூணுதற்குரிய ஹாரமாக விளங்க , மதில் சூழ்ந்துள்ளதும்,

மருத நிலத்து மன்னர்கள் பாசறைக்குத் தகுந்த இடம் என விரும்புவதுமான  சோமீசர்கோயிலில், இளமையான ரிஷபத்தின்மேல் வரும்  சோமீசர் என்னும் திரு நாமமுடைய சிவபிரானது கோயிலில் மகிழ்ந்து வீற்றிருக்கும் முருகனே ! விரும்பி நிற்கும் தேவர்கள் பெருமாளே !

இரவில் தூங்கினாலும், யாருடன் பேசினாலும், உன்னுடைய இளமையையும், உன்னுடைய அழகிய பன்னிரண்டு தோள் வரிசையையும்,  இரண்டு திருவடிகளையும் , ஆறு முகங்களையும்  நான் ஓதும்படியான ஞானத்தை  அருள்புரிவாயாக !

நரஸிம்ஹ  அவதாரத்தை எத்தனை அழகாகப் பாடியிருக்கிறார் !
இந்தப்பாடலிலும் ஒரு ரகசியம் சொல்கிறார்  நம் நாதர்.
"இரவினிடை துயிலுகினும்" ,, முருகனின் அழகிய உருவை நினைத்து ஓத வேண்டும் என்கிறார் ! 
இந்த வரியை இரவில் உறங்கப்போவதற்குமுன்  சொல்லவேண்டும் என்பார் ஸ்ரீ வள்ளிமலை திருப்புகழ் ஸ்வாமிகள்.

முதல் பாடல்   Bed Coffee ! எழுந்தவுடன் சொல்ல வேண்டியது !
இந்தப் பாடல்  Nightcap !   உறங்கப்போகும்முன் சொன்னால், தீய கனவுகள் வராமல்  தெய்வ நினைவுடன் நிம்மதியாக உறங்கலாம்.
எத்தனை அருமையான பாடல்கள் !  இந்த பாடல்களின் இந்த வரிகளை மனப்பாடம் செய்து சொல்லிப் பயனடையலாமே !
How nice that in Kumbakonam which became famous for "degree coffee ", Arunagirinatha provides us Divine coffee !

chenaitamilulaa.net



66.திருப்புகழ் 60. கும்பகோணம்-1


66.திருப்புகழ் 60. கும்பகோணம் -1
ஆதிகும்பேஶ்வரர் கோயில். விக்கிபீடியா.

அருணகிரிநாதர் அடுத்து வந்த 59வது தலம் கும்பகோணம். கோவில்கள் நிறைந்தவூர்.  குடந்தை, குடமூக்கு , வடகரைப் பாம்பு நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வள நாட்டுப் பிரம்மதேயம் திருக்குடமூக்கு என்றல்லாம் வழங்கப்படும். மஹாமகம் கொண்டாடப்பெறும் தலம். இதன்  பெருமையைச் சொல்லி மாளாது. இதன் புராணப்பெருமையை  சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் "ஜயமங்கள ஸ்தோத்ரத் "தின் 2ம் பகுதியில் விரிவாக விளக்கியிருக்கிறார். இங்கே சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.

சம்பந்தர்
திருக்குடந்தைக் காரோணம் (1ம் திருமுறை )

வாரார்கொங்கை மாதோர்பாக மாக வார்சடை
நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றி யொற்றைக்கண்
கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கில்
காரார்கண்டத் தெண்டோளெந்தை காரோ ணத்தாரே.


குடமூக்கு (3ம் திருமுறை )

அரவிரி கோடனீட லணி காவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவன் மண மல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ னெம்மிறையே.


அப்பர் 


தொண்ட ராகித் தொழுது பணிமினோ
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்ட வர்புரம் மூன்றொரு மாத்திரைக்
கொண்ட வன்னுறை யுங்குட மூக்கிலே.

[ 5ம் திருமுறை ]

திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம்


சொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்
    சொற்பொருளுங் கடந்த சுடர்ச் சோதி போலும்
கன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்
    கடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்
மன்மலிந்த மணிவரைத்திண் தோளர் போலும்
    மலையரையன் மடப்பாவை மணாளர் போலும்
கொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்
    குடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே


[6ம் திருமுறை ]


கீழ்க்கோட்டம் நாகேஶ்வரர் கோயில்.

இங்குவந்த நம் நாதர் 8 அழகிய பாடல்கள் பாடியிருக்கிறார்.

யோகக்காட்சியை வேண்டிப் பாடியது

இந்துகதிர்ச் சேரருணப் பந்திநடுத் தூணொளிபட்
டின்பரசப் பாலமுதச்                                       சுவைமேவு

எண்குணமுற் றோனடனச் சந்த்ரவொளிப் பீடகமுற்
றெந்தைநடித் தாடுமணிச்                                     சபையூடே

கந்தமெழுத் தோடுறுசிற் கெந்தமணப் பூவிதழைக்
கண்டுகளித் தேயமுதக்                                          கடல்மூழ்கிக்

கந்தமதித் தாயிரவெட் டண்டமதைக் கோல்புவனக்
கண்டமதைக் காணஎனக்                                      கருள்வாயே


திந்ததிமித் தீதகுடட் டுண்டுமிடட் டாடுடுடிட்
டிந்தமெனக் காளமணித்                                          தவிலோசை

சிந்தைதிகைத் தேழுகடற் பொங்கவரிச் சூர்மகுடச்
செண்டுகுலைத் தாடுமணிக்                                 கதிர்வேலா


குந்தியரித் தாழ்துளபச் செந்திருவைச் சேர்களபக்
கொண்டல்நிறத் தோன்மகளைத்                       தரைமீதே

கும்பிடகைத் தாளமெடுத் தம்பொனுருப் பாவைபுகழ்க்
கும்பகொணத் தாறுமுகப்                                       பெருமாளே.




சந்திர மண்டல ஓளியை மூட்டி, அங்கே சிவந்து  திரண்ட ஜோதி ஸ்தம்பத்தின்  நடுப்பாகத்தில் ஒளிபட்டு, பாலமுதம் போன்ற இனிமையை அனுபவித்து,


எண்குணம் கொண்ட ஈசனின்  நடனம் செய்யும்  நிலவொளிவீசும் பெருமை வாய்ந்த இடத்தை தரிசித்து, அங்கே எந்தை சிவபிரான் நடனம் செய்து கூத்தாடும் அழகிய சபையில்,
கூட்டமான ஐம்பத்தியொரு அக்ஷரமும் [ அல்லது ப்ரணவமும் ] அறிவு என்னும் நறுமணமும் ஞான மணம் கொண்ட பூவைக் கண்டு களித்து, அறிவால் அறிந்து, ஆனந்தக் கடலில் மூழ்கி,


அந்த நறுமணத்தைப் போற்றி செய்து, ஆயிரத்தெட்டு அண்டங்களையும் வளைத்துக்கொண்டுள்ள  ஈரேழு புவனப் பகுதிகளைக் காணும்படி எனக்கு அருள்புரிவாயாக !


பலவிதமான தாள வகைகளுடன்  தவில்முதலிய வாத்யங்களின் ஒலியெழுப்பிகொண்டு ,


மனம் திகைக்கும்படியும், ஏழு கடல்களும் பொங்கும்படியும், சிங்கம்  போன்ற  சூரனது மணிமுடியிலுள்ள  பூச்செண்டை அழித்துத்  தள்ளி விளையாடிய மணிகட்டிய ஒளி வேலனே !


வண்டுகள் விரும்பி பொய்க்கும் துளப மாலை அணிந்தவனும், செவ்விய லக்ஷ்மியைச் சேர்பவனுமான , கலவைச் சாந்து அணிபவனும் மேக நிறத்தவனும் ஆன திருமாலின் மகளான வள்ளியை  இப்பூமியில்,


கும்பிடும் பொருட்டுக் கைத்தாளம்போட்டு, அழகிய அந்த வள்ளியைப் புகழ்ந்து போற்றின  பெருமாளே ! கும்பகோணத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே !

இங்கே தெய்வீக யோக நிலையை வேண்டுகிறார் ! [ இது மாதிரிதானே அன்று அர்ஜுனனும்  பகவானின் விஶ்வரூப தரிசனத்தை விரும்பிக்கேட்டு  அண்டகோளத்தையெல்லாம் கண்டான்! ஆனால் இங்கு வேண்டுவது யோகக்காட்சி / நிலை ! ]
"தங்கிய தவத்துணர்வு  தந்தடிமை  முத்திபெற 
சந்திர வெளிக்கு வழி அருள்வாயே " 
என்று வேறு ஒரு பாடலிலும் இதையே சொன்னார்.


ஞானம் பெற

அண்டர் வாழப்பிரபை சண்டமேருக்கிரிய
ளைந்து வீழப்பொருத                        கதிர்வேலா

அஞ்சுவாயிற் பரனை நெஞ்சிலூறித்தவசி
னன்புளாரைச் சிறையி                    டசுரோரைக்

கொண்டுபோய்  வைத்தகழு நெஞ்சிலே றக்கழுகு
கொந்தியா டத்தலையை                          யரிவோனே

கொண்டல் சூழக்கழனி சங்குலா விப்பரவு
கும்பகோ     ணத்திலுறை                       பெருமாளே

வந்துஞா நப்பொருளி லொன்றுபோ தித்துனது
மஞ்சுதா  ளைத்தினமு                              மருள்வாயே.



தேவர்கள் வாழவேண்டி, ஒளிவீசும் வலிமைமிக்க  க்ரௌஞ்சமலை  கலங்கி விழும்படி போர்புரிந்த  ஓளிவேலுடையவனே !


பஞ்சேந்த்ரியங்களாலும்  சிவபிரானை உள்ளத்தில் தேக்கி, தவ நெறியில் அன்புள்ள தேவர்களைச் சிறையிலிட்ட அசுரர்களை,


கொண்டுபோய், கூர்மையான சூலம் அவர்கள் நெஞ்சில் ஏறிப் பாயவும், கழுகுகள் கொத்திவிளையாடவும் அவர்கள் தலையை அரிந்தவனே !


மேகங்கள் சூழ்ந்த வயல்களில் சங்குகள் பரந்திருக்கும் கும்பகோணத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !


நீ வந்து ஞானப்பொருளில் ஒன்றை எனக்கு உபதேசித்து உன்னுடைய அழகிய திருவடியை தினமும் தந்தருளுக !