54.திருப்புகழ் 48.எண்கண்
தினமலர்.
அருணகிரிநாதர் தரிசித்த 47வது தலம் எண்கண். எண்கண், எட்டிகுடி, சிக்கல் ஆகிய மூன்று தலங்களிலும் ஒரே மாதிரியான ஸ்வாமி மூர்த்தங்கள் : மயில்மேல் அமர்ந்த முருகன், வள்ளி தெய்வானையுடன் தரிசனம். இம்மூன்றையும் வடித்தது ஒரே சிற்பி என்பார்கள். இதைப்பற்றிக் கர்ண பரம்பரைக் கதைகளும் வழங்குகின்றன.
இது சிவஸ்தலம். ஸ்வாமி பெயர் ப்ரம்மபுரீஶ்வரர். அம்பாள் பெரியநாயகி. ஆனாலும் ஸுப்ரமண்யரே பிரபலமடைந்துள்ளார் !
இங்கு நம் ஸ்வாமிகள் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
சந்த னந்தி மிர்ந்த ணைந்து குங்கு மங்க டம்பி லங்கு
சண்ப கஞ்செ றிந்தி லங்கு திரடோளுந்
சந்தனம் திமிர்ந்து அணைந்து குங்குமம் கடம்பு இலங்கு
சண்பகம் செறிந்து இலங்கு திரள்தோளும்
தண்டை யஞ்சி லம்ப லம்ப வெண்டை யஞ்ச லன்ச லென்று
சஞ்சி தஞ்ச தங்கை கொஞ்ச மயிலேறித்
தண்டை அம் சிலம்பு அலம்ப வெண்டையம் சலன் சல் என்று
சஞ்சிதம் சதங்கை கொஞ்ச மயிலேறி
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்த னந்த னந்த னென்று
சென்ற சைந்து கந்து வந்து க்ருபையோடே
திந்தி மிந்தி மிந்தி மிந்தி தந்தனம் தனந்தன என்று
சென்றசைந்து உகந்து வந்து க்ருபையோடே
சிந்தை யங்கு லம்பு குந்து சந்த தம்பு கழ்ந்து ணர்ந்து
செம்ப தம்ப ணிந்தி ரென்று மொழிவாயே
சிந்தை அம்குலம் புகுந்து சந்ததம் புகழ்ந்து உணர்ந்து
செம்பதம் பணிந்து இரு என்று மொழிவாயே
அந்த மந்தி கொண்டி லங்கை வெந்த ழிந்தி டும்ப கண்டன்
அங்க முங்கு லைந்த ரங்கொள் பொடியாக
அந்த மந்தி கொண்டு இலங்கை வெந்தழிந்து இடும்ப கண்டன்
அங்கமும் குலைந்து அரங்கொள் பொடியாக
அம்ப கும்ப னுங்க லங்க வெஞ்சி னம்பு ரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே
அம்ப கும்பனும் கலங்க வெஞ்சினம் புரிந்து நின்று
அம்பு கொண்டு வென்ற கொண்டல் மருகோனே
இந்து வுங்க ரந்தை தும்பை கொன்றை யுஞ்ச லம்பு னைந்தி
டும்ப ரன்ற னன்பில் வந்த குமரேசா
இந்துவும் கரந்தை தும்பை கொன்றையும் சலம் புனைந்திடும்
பரன் தன் அன்பில் வந்த குமரேசா
இந்தி ரன்ப தம்பெ றண்டர் தம்ப யங்க டிந்த பின்பு
எண்க ணங்க மர்ந்தி ருந்த பெருமாளே.
இந்திரன் பதம்பெற அண்டர் தம் பயம் கடிந்த பின்பு
எண்கண் அங்கு அமர்ந்திருந்த பெருமாளே.
www.kaumaram.com
அருமையான சந்தப் பாடல். வார்த்தைகளைப் பிரித்துக் கொண்டால் அர்த்தம் பாதிக்குமேல் தெரிந்துவிடும்.
சந்தனத்தை நிரம்பப் பூசி, குங்குமம் சேர்ந்து, கடம்பமலர், சண்பகம் இவை விளங்கும் திரண்ட தோள்கள் விளங்க,
தண்டையும் அழகிய சிலம்பும் ஒலிக்க, வெண்டையம் (என்ற வீரக் காலணி) சலன் சல் என்று சப்திக்க, இதமாக அமைந்துள்ள சதங்கை கொஞ்சுவது போல ஒலிக்க,
மயில்மீது ஏறி, திந்தி மிந்திமிந்தி மிந்தி'.......என்று நன்கு ஆடி அசைந்து மகிழ்ச்சியுடன் வந்து, க்ருபையுடனே
மனமாகிய அழகிய கோயிலில் புகுந்து, "எப்போதும் புகழ்ந்து, அறிந்து, செவ்விய பாதங்களைப் பணிந்து இருப்பாயாக " என்று அருளுடன் மொழிவாயாக.
பேர்போன அந்தக் குரங்கு ஹனுமாரைக் கொண்டு லங்கை வெந்து அழியவும்.கொடிய வீரனாகிய ராவணன் உடல் அழிந்து, ரம்பத்தினால் ராவிய தூள்போல ஆகவும்,
அம்பு முதலிய பாணங்களைக் கொண்டிருந்த கும்பகர்ணனும் உள்ளம் கலங்க கொடுங்கோபத்துடன் நின்று அம்பை ஏவி வெற்றி கொண்ட மேக வர்ணனாம் திருமாலின் மருகனே !
பிறைச் சந்திரன், கரந்தை, துரும்பை, கொன்றை ஆகிய மலர்கள், கங்கை - இவற்றை அணியும் சிவபிரான் தேவர்களிடம் கொண்ட அன்பினால் தோன்றிய குமரேசனே !
தேவேந்திரன் தன் இடத்தைப் பெறும்படி செய்து, தேவர்களுடைய பயத்தைப் போக்கிய பிறகு எண்கண் தலத்தில் அமர்ந்து அருளும் பெருமாளே !
முருகன் அவதாரத்துடன் ஸ்ரீ ராமர் அவதாரத்தையும் பாடுகிறார். முருகனை திருமாலின் மருகன் என்பதில் அருணகிரி நாதருக்கு அதிப்ரியம் போலும் ! அதோடு தண்டையணிந்த சிவந்த காலையும் பாடுகிறார். வேறு ஒரு இடத்திலும் சொல்கிறார்:
குருந்தில் ஏறும் கொண்டலின் வடிவினன் மருகோனே
குரங்குலாவும் குன்றுறை குறமகள் மணவாளா
திருந்த வேதம் தண்தமிழ் தெரிதரு புலவோனே
சிவந்த காலும் தண்டையும் அழகிய பெருமாளே
விளங்கு தீபம் கொண்டுனை வழிபட அருள்வாயே
எத்தனை அழகிய வாக்கு ! இதனாலெல்லாம்தானே தெய்வத் தமிழ்
என்கிறோம் !
pexels,com
அருமையான பதிவு அன்பு நண்பரே ! நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் !
ReplyDelete