57.திருப்புகழ் 51.த்ரியம்பகபுரம், கூந்தலூர்
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 50வது தலம் த்ரியம்பகபுரம். இந்த ஊர் எங்கிருக்கிறது என்பதே தெரியாமலிருந்தது. சில அன்பர்களின் தீவிர முயற்சியினால் இந்த இடம் சேங்காலிபுரத்திற்கு அருகே இருந்தது தெரியவந்தது. ஊரின் ஒரு பகுதி மதுரமாணிக்கம் எனவும் இன்னொரு பகுதி எருமைத்தலை எனவும் வழங்கப்பட்டது! கோயில் எதுவும் இருக்கவில்லை. தெய்வாதீனமாக சிவலிங்கம் மட்டும் ஒரு புதரிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
அன்பர்கள் இப்போது அங்கே ஒரு சிறிய கோவில் கட்டியிருக்கிறார்கள். மேலும் விவரங்களை subramaniyainfoplace.blogspot.in என்ற சைட்டில் தெரிந்துகொள்ளலாம்.

இங்கு அருணகிரிநாதர் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.
செருநி னைந்திடுஞ் சினவலி யசுரர்க
ளுகமு டிந்திடும் படியெழு பொழுதிடை
செகம டங்கலும் பயமற மயில்மிசை தனிலேறித்
திகுதி குந்திகுந் திகுதிகு திகுதிகு
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
திமிதி மிந்திமிந் திமிதிமி திமியென வருபூதங்
கரையி றந்திடுங் கடலென மருவிய
வுதிர மொண்டுமுண் டிடஅமர் புரிபவ
கலவி யன்புடன் குறமகள் தழுவிய முருகோனே
கனமு றுந்த்ரியம் பகபுர மருவிய
கவுரி தந்தகந் தறுமுக எனஇரு
கழல்ப ணிந்துநின் றமரர்கள் தொழவல பெருமாளே.
இழிதொழி லதுவற அருள்வாயே
போரையே நினைத்துக்கொண்டு, கோபமும் வலிமையும் மிக்க அசுரர்கள் யுகமுடிவு காலம்போல போருக்கு வந்த பொழுது,உலகம் முழுதும் பயம் நீங்க மயில்மீது ஏறி,'திகுதி குந் திகுந்திகு திகு திகு திகு ' என்றவாறு ஆடிவந்த பூதங்கள், கரை கடந்துவந்த கடல் போல உள்ள ரத்தத்தை மொண்டு உண்ணும்படிப் போர்புரிந்தவனே ! அன்புகொண்டு குறமகள் வள்ளியைத் தழுவின முருகனே !பெருமை மிகுந்த த்ரயம்பகபுரத்தில் அமர்ந்த பார்வதி தேவி அருளிய கந்தனே ! ஆறுமுகனே என்று உனது இரு தாள்களையும் தேவர்கள் பணிந்து நின்று தொழும் பெருமாளே !(பெண்ணாசையாகிய ) இழிதொழில் நீங்க அருள்வாயே !
அடுத்து, 51வது தலமாக அருணகிரிநாதர் கூந்தலூருக்கு வருகிறார். இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது.
santhipriyaspages.blogspot.in.
இங்கு அருணகிரிநாதர் மிக அருமையான பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார்.
ஒருபது சிரமிசை போந்த ராவண
னிருபது புயமுட னேந்து மேதியு
மொருகணை தனிலற வாங்கு மாயவன் மருகோனே
உனதடி யவர்புக ழாய்ந்த நூலின
ரமரர்கள் முனிவர்க ளீந்த பாலகர்
உயர்கதி பெறஅரு ளோங்கு மாமயி லுறைவோனே
குரைகழல் பணிவொடு கூம்பி டார்பொரு
களமிசை யறமது தீர்ந்த சூரர்கள்
குலமுழு தனைவரு மாய்ந்து தூளெழ முனிவோனே
கொடுவிட மதுதனை வாங்கி யேதிரு
மிடறினி லிருவென ஏந்து மீசுரர்
குருபர னெனவரு கூந்த லூருறை பெருமாளே.
தரையினில் வெகுவழி சார்ந்த மூடனை
வெறியனை நிறைபொறை வேண்டி டாமத
சடலனை மகிமைகள் தாழ்ந்த வீணணை மிகுகேள்வி
தவநெறி தனைவிடு தாண்டு காலியை
யவமதி யதனில்பொ லாங்கு தீமைசெய்
சமடனை வலியஅ சாங்க மாகிய தமியேனை
விரைசெறி குழலியர் வீம்பு நாரியர்
மதிமுக வனிதையர் வாஞ்சை மோகியர்
விழிவலை மகளிரொ டாங்கு கூடிய வினையேனை
வெகுமல ரதுகொடு வேண்டி யாகிலு
மொருமல ரிலைகொடு மோர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாடொழ அருள்வாயே
ஒப்பற்ற பத்துத் தலைகளுடன் போருக்குவந்த ராவணன் தன் இருபது கரங்களில் ஏந்திய வாளானது ஒரே பாணத்தினால் அற்று விழும்படி பாணத்தை விட்ட திருமாலின் மருகனே !
உனது அடியார்களும், உனது திருப்புகழை ஆய்ந்த நூல் வல்லவர்களும், தேவர்களும் முனிவர்களும், கொடையால் ரக்ஷிப்பவர்களும், உயர்ந்த நற்கதி அடையும்படி அருள் விளங்கும் அழகிய மயிலில் வீற்றிருப்பவனே !
ஒலிக்கின்ற உனது திருவடியைத் தாழ்மையுடன் கும்பிடாதவர்களும், சண்டையிடும் போர்க்களத்தில் தர்ம நெறியைக் கைவிட்டவர்களுமான சூராதிகளின் குலம் முழுவதும் மாண்டுபோய் பொடியாகும்படிக் கோபித்தவனே !
பொல்லாத விஷத்தைக் 'கொடு ' என்று வாங்கி, அழகிய கழுத்தில் 'இரு ' என்று அதை நிறுத்தி, அங்கேயே அதைத் தாங்கி நிலைக்கவைத்த சிவபிரானுக்குக் குருமூர்த்தி என வந்துள்ள பெருமாளே ! கூந்தலூர் தலத்தில் உறைகின்ற பெருமாளே !
இந்தப் பூமியில் நல்ல வழி நில்லாமல் பல தீய வழிகளையும் சார்ந்துள்ள மூடனாகிய என்னை, குடிவெறி கொண்டவன் போன்ற பித்தனை, மனதை அடக்கவேண்டும்; பொறுமை, அடக்கம் இவை இருக்கவேண்டும் என்ற எண்ணமே இல்லாத , செருக்குக்கொண்ட அறிவிலாப் பண்டம் போன்றவனை, ஒருவிதப் பெருமையும் இல்லாது தாழ் நிலையில் இருக்கும் வீணனை,
அதிகக் கேள்வி, தவவழி ஆகியவற்றை விட்டு, கண்ட வழியில் திரியும் காலியை, கெட்டபுத்தியால் பொல்லாங்கு செய்யும் குணக்கேடனை, வேண்டுமென்றே ஜாதியிலிருந்து விலக்கப்பட்டவனாய் கதியற்றவனை,
நறுமணம் நிறைந்த கூந்தல் உடையவர், பிடிவாதமுள்ள மாதர், சந்திரனைப் போன்ற முகமுடையவர், காம மயக்கிகள், கண் என்னும் வலையை வீசும் பெண்கள் - ஆகியோருடன் அவ்வப்போது சேர்ந்தவனாகிய நான் -
அதிக பூக்களைக்கொண்டு விருப்பிப் பூஜித்தாலும், அல்லது ஒரு மலரோ, ஒரு இலையோ கொண்டாவது உன்னை நினைத்து, நல்ல அன்புடன் , கீழே விழுந்து உன் திருப்பாதங்களைத் தொழும்படி அருள்புரிவாயாக !
கூந்தலூர். முருகன் சன்னிதி.santhipriyaspages.blogspot.in
பெரியோர்கள் சொல்லிக்கொள்ளும் குற்றங்குறைகள்
முருகனின் பெருமைகளைப் பேசிய அருணகிரிநாதர், தனது சிறுமைகளைப் பட்டியலிடுகிறார் ! இங்கேதான் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இம்மாதிரி பல இடங்களில் பாடியிருக்கிறார். இதையெல்லாம் அவருடைய சொந்த அனுபவங்களாக எடுத்துக்கொண்டு, அவர் இளவயதில் நெறி கெட்டு அலைந்தார் என்றெல்லாம் சிலர் சொல்லி இடர்படுகின்றார்கள் ! இது இலக்கிய மரபு அறியாததால் வந்த வினை. பல பெரியோர்கள் தம்மை நாயேன், பேயேன் , பொல்லாதவன் என்றெல்லாம் தமது பாட்டில் சொல்வார்கள். அதை அப்படியே அவர்களுக்குப் பொருந்துவதாகவே எடுத்துக்கொள்ளக்கூடாது.
வாகீச கலாநிதி கி.வா.ஜ அவர்கள் எழுதுகிறார் :
அதுதான் பெரியோர்களது இயற்கை. " நீ தப்புச் செய்தாய் "என்று சொல்லமாட்டார்கள். " நான் பண்ணிய தப்புக்கு இந்தப் பரிகாரம் வேண்டும் " என்று சொல்லுவார்கள். " நீ தவறு செய்கிறாய் " என்று சொன்னால் கோபம் வரும். கோபம் முதலிய குணங்களையெல்லாம் அறுக்கவேண்டும் என்று நினைக்கின்ற பெரியவர்கள் அப்படி மற்றவர்களுக்குச் சொல்லிக் கோபத்தை வருவிக்க மாட்டார்கள். அந்தக் குற்றங்கள் தம்மிடம் இருப்பனவாக நினைத்துக்கொண்டு முறையிடுவார்கள். இதைத்தான் நைச்சியானுசந்தானம் என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். வக்காலத்துப் பெறாத வக்கீல்கள் அவர்கள். நாம் படுகின்ற பாட்டையெல்லாம் அவர்கள் உணர்ந்து நமக்காக ஆண்டவனிடத்தில் முறையிடுவார்கள்.
தம்மை இழித்துக்கொண்டு தாம் பெண்மயலில் உழந்ததாகவும்,பல பாவங்களைப் புரிந்ததாகவும் கூறுவனவற்றை அவருடைய வரலாற்றுக் குறிப்புக்களாகக் கொள்ளக்கூடாது. அவை மக்களுடைய இயல்புகளைத் தம்மேலே ஏற்றிக்கொண்டு கூறியவை. அவர் கூறியிருக்கும் பாவங்களையெல்லாம் ஒருவன் ஓர் ஆயுளில் செய்யமுடியாது. தவத்தால் நெடுங்காலம் வாழ்ந்து பாவமே புரிந்த அசுரர்களும் அரக்கர்களும்கூட அத்தனை பாவங்களையும் ஒரு வாழ்நாளிலே செய்வது இயலாத செயல். ஆகவே மக்களிடத்தில் உள்ள பெருங்கருணையால் அவர்கள் செய்த குற்றங்களைத் தாம் செய்தனவாக வைத்து அருணகிரியார் பாடியிருக்கிறார். அவருடைய கருணை வியப்பதற்கு உரியது.
[ அனுபூதி விளக்கம் ]உதாரணமாக பட்டினத்தார் பாடுகிறார் :
பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே!
இதை பட்டினத்தாருக்குப் பொருந்துவதாக நாம் எடுத்துக்கொள்ளலாமா ? எத்தனை அபத்தம் !
இந்தப் பாடலின் மிக ரசமான பகுதி அருணகிரியாரின் பிரார்த்தனை.
வெகு மலரது கொடு வேண்டியாகிலும்
ஒரு மலர் இலைகொடும் ஓர்ந்து யானுனை
விதமுறு பரிவொடு வீழ்ந்து தாள் தொழ அருள்வாயே
எத்தனை அருமையான வரிகள் ! நிறைய மலர் இருந்தால் சரி, இஷ்டப்படி பூஜை செய்யலாம். இல்லாவிடில் ஒரு மலர், ஒரு இலை இருந்தாலும் போதும். பகவானை நினைத்து (ஓர்ந்து ) நல்ல வழியில் ( விதமுறு ) அன்புடன் (பரிவொடு ) தரையில் வீழ்ந்து தாளில் தொழவேண்டும் !
கீதையில் பகவான் சொல்கிறார் :
पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति।
तदहं भक्त्युपहृतमश्नामि प्रयतात्मनः।।9.26।।
பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி
ததஹம் பக்த்யுபஹ்ருதமஶ்னாமி ப்ரயதாத்மன :
எவன் பக்தியுடன் எனக்கு இலை, புஷ்பம், பழம், நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ, இந்த்ரிய சுத்தியுடன் , பக்தியுடன் அர்ப்பணம் செய்யப்பட்ட அதை நான் பிரியத்துடன் புசிக்கிறேன் (அங்கீகரிக்கிறேன் ).தூய பக்தியிருந்தால் ஒரு மலரே போதுமே ! மனமே மலராகுமே !
திருமூலரும் சொல்கிறார் :
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு
அண்ணல் அதுகண்டு அருள்புரியா நிற்கும்
எண்ணிலி பாவிகள் எம்மிறை ஈசனை
நண்ணறியாமல் நழுவுகின்றாரே (1828)
இப்படி நமக்காகப் பரிந்து முருகனிடம் வேண்டுகிறார் நம் அருணகிரியார்.
No comments:
Post a Comment