Sunday, 12 February 2017

60.திருப்புகழ் 54.பந்தணை நல்லூர்

60.திருப்புகழ் 54.பந்தணை நல்லூர்



காவிரியின் வடகரையில்  சேர்த்து எண்ணப்படும் பாடல் பெற்ற தலம். இத்தலங்கள் எல்லாமே புராண வரலாறு உடையவை. கண்பார்வையில் குறைபாடு பித்ரு தோஷம்  ,திருமணத்தடை மனநிலை பாதிப்பு பயந்த சுபாவம் கடனால் பாதிப்பு, நவக்ரஹ தோஷம்  முதலிய தோஷங்களுக்கு பரிகாரத்தலமாகக் கருதப்படுகிறது. மிக அருமையான மூர்த்திகள் உள்ள தலம். ஸ்வாமி பசுபதீஶ்வரர். அம்பாள் வேணுபுஜாம்பிகை, காம்பனையதோளி. சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.

சம்பந்தர்


இடறினார் கூற்றைப் பொடிசெய்தார் மதிலை
     யிவைசொல்லி யுலகெழுந் தேத்தக்
கடறினா ராவர் காற்றுளா ராவர்
      காதலித் துறைதரு கோயில்
கொடிறனார் யாதுங் குறைவிலார் தாம்போய்க்
     கோவணங் கொண்டுகூத் தாடும்
படிறனார் போலும் பந்தணை நல்லூர்
      நின்றவெம் பசுபதி யாரே .


கல்யாணசுந்தரர்



அப்பர்
  
பூதப் படையுடையார் பொங்கு நூலார்
    புலித்தோ லுடையினார் போரேற் றினார்
வேதத் தொழிலார் விரும்ப நின்றார்
    விரிசடைமேல் வெண்திங்கட் கண்ணி சூடி
ஓதத் தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்
    உம்பரோ டம்பொன் னுலக மாண்டு
பாதத் தொடுகழலார் பைங்க ணேற்றார்
    பலியேற்றார் பந்தணை நல்லூ ராரே.




மூன்று படங்களும் : thamizhagasivathalangal.blogspot.in Thanks.

இந்தப் பதிகங்களெல்லாமே அற்புத வாக்காகும். கருத்தைத்திருத்தி  கதிவழி சேர்க்கும் திறனுடையவை. நாளுக்கு ஒன்றாகப் படித்தால் நாளும் நிறையும், நெஞ்சும்   நிறையும் ! 

இது அருணகிரியார் தரிசித்த 54 வது தலம்.  7 பாடல்கள் பாடியிருக்கிறார்


வினைத்துன்பம் அகல



இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி துஞ்ச                 மலமாய
இருவினை அஞ்ச வருவினை கெஞ்ச
இருள்பிணி  துஞ்ச   மலமாய
எனதிடர் மங்க வுனதருள் பொங்க
இசைகொடு துங்க                புகழ்கூறித்
எனதிடர் மங்க உனதருள் பொங்க
இசைகொடு துங்க புகழ் கூறி
திருமுக சந்த்ர முருகக டம்ப
சிவசுத கந்த                   குகவேல
திருமுக சந்த்ர முருக கடம்ப
சிவசுத கந்த குஹ வேல


சிவசிவ என்று தெளிவுறு நெஞ்சு
 திகழந டஞ்செய்       கழல்தாராய்
சிவ சிவ என்று தெளிவுறு நெஞ்சு
திகழ நடம் செய் கழல்தாராய்
மருதொடு கஞ்ச னுயிர்பலி கொண்டு
மகிழரி விண்டு              மருகோனே
மருதொடு கஞ்சன் உயிர் பலி கொண்டு
மகிழ் அரி விண்டு மருகோனே

வதைபுரி கின்ற நிசிசரர் குன்ற
வலம்வரு செம்பொன்       மயில்வீரா
வதை புரிகின்ற நிசிசரர் குன்ற
வலம் வரு செம்பொன்  மயில்வீரா
அருகுறு மங்கை யொடுவிடை யுந்து
 மமலனு கந்த                முருகோனே
அருகுறு மங்கையொடு விடை உந்தும்
அமலன் உகந்த முருகோனே
அருள்செறி பந்த ணையிலிரு மங்கை
அமளிந லங்கொள்            பெருமாளே.
அருள்செறி பந்தணையில் இரு மங்கை
அமளி நலங்கொள் பெருமாளே





மிக அருமையான எளிய பாடல். பதம் பிரித்துக்கொண்டால் இன்னும் எளிதாகும்.

வினைத்துன்பம் நீங்க இறையருள் வேண்டும்

இருவினை யஞ்ச வருவினை கெஞ்ச : இது மிக அருமையான வரி. இருவினை: சஞ்சிதம், ப்ராரப்தம். 
சாஞ்சிதம் நாம் பல ஜன்மங்களில் செய்துள்ள கர்மங்கள்.   மலைபோல் குவிந்திருக்கிறது. அதிலிருந்து ஒருபகுதியை ப்ராரப்தம் என்ற பெயரில் நாம்  இந்தப் பிறவியில் அனுபவித்து  வருகிறோம்.
வருவினை : இனி வரப்போவது. நாம் இப்போது  செய்துவரும் கர்மங்களுக்கான பலன்- இதை ஆகாமி என்பார்கள். இது தவிர, பழைய மூட்டையிலிருந்தும் பாக்கி இருக்கிறது.
நாம் முருகனிடம் போனால். முதல் இருவகை வினைகளும் நம்மிடம் வர அஞ்சும். மூன்றாம் வகையோ,  'நான் வரவில்லை ' என கெஞ்சி அகலுமாம்.

இது பக்தி மார்கத்தின் உயிர் நிலையான கோட்பாடு. கர்மவினையை அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும் என்பார்கள் ஞானிகள். பக்தர்களோ. கர்மவினை கடவுள் வசப்பட்டது என்பார்கள். வினையின் விளைவை ஒழிப்பது அல்லது குறைப்பது  அனைத்து வழிபாடுகளின் , குறிப்பாக கோயில் வழிபாட்டின் முக்கிய நோக்கமாகும். இதுதான் நடைமுறை  சமயம். ஃபிலாசஃபி எல்லாம் யாருக்கு வேணும், ஊறுகாய் போட !

மலமாய :   ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் மாயும்.
இவ்வாறு இடர் மங்கவும்  அருள் பொங்கவும். இசையுடன் முருகன் புகழ் பாடவேண்டும் அதற்கு அவன் அருள் வேண்டும் !


இன்னும் இங்கு அருணகிரிநாதர் வேண்டுவது :

மாயைத்துயர் தீர

வதனஞ்சசி யமுதம்பொழி முலைநன்குற மாதொ
டிசையுஞ்சுரர் தருமங்கையொ டிதயங்களி கூர
வருபந்தணை நகர்வந்துறை விமலன்குரு நாதப்         பெருமாளே.
மாயைத்  துயர்தீராய்
வதனம் சசி அமுதம் பொழி முலை நல் குறமாதொடு
இசையும் சுரர் தரு மங்கையொடு இதயம் களி கூர
வரு பந்தணைநகர் வந்துறை விமலன் குருநாதப் பெருமாளே
மாயைத்துயர் தீராய்.

தெய்வானை திருமணம் முதலில் நடந்தது. வள்ளி வந்ததால்  சுரமங்கையான தெய்வானையின் இதயம் மகிழ்ந்ததாம்.  என்ன நயமான விளக்கம்! இருவரும் முற்பிறவியில் திருமாலின் மகள்களாகப்பிறந்து முருகனை மணக்க வேண்டியவர்கள் தானே





ஞான உபதேசம் பெற



தினைவ னந்தனில் வாழ்வளி நாயகி
வளர்த னம்புதை மார்பழ காமிகு
திலக பந்தணை மாநகர் மேவிய    பெருமாளே.
நாயடி யேனினி       யுழலாமல்
அமுத மந்திர ஞானொப தேசமும்
அருளி யன்புற வேமுரு காவென
அருள்பு குந்திட வேகழ லார்கழல்     அருள்வாயே







பதத்தை வணங்க


சங்கணி கரத்தர்  உம்பர்
பயமுற்ற
சஞ்சல மறுத்த          பெருமாளே
மங்கி நரகத்தில்      மெலியாமல்
வண்கயி லைசுற்றி வந்திடு 
பதத்தை
வந்தனை செய்புத்தி      தருவாயே


சஞ்சலங்கள் கெட

பந்திவரு மந்திசெண் பகமகிற்
சந்துசெறி கொன்றைதுன் றியவனப்
 பந்தணையில் வந்திடுஞ் சரவணப்       பெருமாளே.
தண்டைகள்க லின்கலின் கலினெனக்
கிண்கிணிகி ணின்கிணின் கிணினெனத்
 தண்கொலுசு டன்சிலம் பசையவுட்  பரிவாகிச
சந்ததமும் வந்திரும் பரிமளப்
பங்கயப தங்களென் கொடுவினைச்
சஞ்சலம லங்கெடும் படியருட்  புரிவாயே


மறவேன்


ஏர்க ரந்தையறு கோடு கொன்றைமதி
 யாற ணிந்தசடை யார்வி ளங்குமெழில்
  ஈறில் பந்தணைந லூர மர்ந்துவளர்     தம்பிரானே.
சோக முண்டுவிளை யாடி னுங்கமல
 பாத மும்புயமி ராறு மிந்துளபல்
 தோட லங்கலணி மார்ப மும்பரிவு     ளங்கொள்வேனே





சந்தப்பாடல் பாட அருள் வேண்டும்


கெருவம் பற்றிகல் விளைந்த சூரொடு
தளமஞ் சப்பொரு தெழுந்து தீயுகள்
கிரவுஞ் சக்கிரி வகிர்ந்த வேலுள   பெருமாளே.
உழலாதே
நிதிபொங் கப்பல தவங்க ளாலுனை
மொழியும் புத்திகள் தெரிந்து நானுனை
நிகர்சந் தத்தமிழ் சொரிந்து பாடவு  மருள்தாராய்.

இவ்வாறு எல்லா நிலையிலும் முருகனது அருளை இறைஞ்சி  நிற்பது அருணகிரிநாதரின் சிறப்பு.



No comments:

Post a Comment