55.திருப்புகழ் 49.குடவாயில்
thevaaram.org
குடவாசல் என்று இன்று அழைக்கப்படும் இவ்வூர் அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 49வது தலமாகும். புராணவரலாறு உள்ள பழைய தலம். ஸ்வாமி பெயர் கோணேஶ்வரர். அம்பாள் பெரியநாயகி. இங்கு சம்பந்தர் இரு பதிகங்கள் பாடியிருக்கிறார்.
ஓடுந் நதியும் மதியோ டுரகம்
சூடுஞ் சடையன் விடைதொல் கொடிமேல்
கூடுங் குழகன் குடவா யில்தனில்
நீடும் பெருங்கோ யில்நிலா யவனே. 2.22
அடியார்ந்த பைங்கழலுஞ் சிலம்புமார்ப்ப வங்கையில்
செடியார்ந்த வெண்டலையொன் றேந்தியுலகம் பலிதேர்வீர்
குடியார்ந்த மாமறையோர் குலாவியேத்துங் குடவாயில்
படியார்ந்த கோயிலே கோயிலாகப் பயின்றீரே
நளிர்பூந் திரைமல்கு காழிஞான சம்பந்தன்
குளிர்பூங் குடவாயிற் கோயின்மேய கோமானை
ஒளிர்பூந் தமிழ்மாலை யுரைத்தபாட லிவைவல்லார்
தளர்வான தானொழியத் தகுசீர்வானத் திருப்பாரே 2.58
.
இங்கு அருணகிரிநாதர் பாடிய இரண்டு பாடல்கள் கிடைத்திருக்கின்றன.
மறையால் மிக்கருள் பெறவேணும் !
கயிலா யப்பதி யுடையா ருக்கொரு
பொருளே கட்டளை யிடுவோனே
கயிலாயப்பதி உடையாருக்கு ஒரு
பொருளே கட்டளை இடுவோனே
கடலோ டிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர் வேல் விட்டிடு திறலோனே
கடல் ஒடிப்புகு முதுசூர் பொட்டெழ
கதிர்வேல் விட்டிடும் திறலோனே
குயிலா லித்திடு பொழிலே சுற்றிய
குடவா யிற்பதி யுறைவோனே
குயில் ஆலித்திடும் பொழிலே சுற்றிய
குடவாயில் பதி உறைவோனே
குறமா தைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் பெருமாளே.
குறமாதைப்புணர் சதுரா வித்தக
குறையா மெய்த்தவர் பெருமாளே
மறையால் மிக்கருள் பெறவே யற்புத
மதுமா லைப்பத மருள்வாயே.
மறையால் மிக்க அருள்பெறவே அற்புத
மது மாலைப் பதம் அருள்வாயே.
இது எளிய பாடல். அற்புதமான வாக்கு.
ஒரு பொருளே கட்டளை இடுவோனே = ஒப்பற்ற ப்ரணவத்தின் பொருளை சிவனுக்கு உபதேசித்தார். குரு என்னும் நிலையிலிருந்து சொன்னதால் "கட்டளை இடுவோனே " என்றார்.
குறையா மெய்த்தவர் = குறையாத உண்மையான தவத்தில் சிறந்தவர்கள்.
மறையால் மிக்கருள் பெறவே = வேதங்களை ஓதி அதனால் மிகுந்த அருளைப் பெறவேண்டும் என்கிறார். இதனால் இவர் வேதம் ஒதும் மரபில் வந்தவர் என்பதை ஊகிக்கலாம்.
இதே போல் வேறு ஒரு இடத்தில் தான் வேதங்களை ஒதவில்லையே என்று பச்சாத்தாபப் படுகிறார்:
நாலானவேத நூல் ஆகமாதி நான் ஓதினேனும் இலைவீணே
நாள் போய் விடாமல் ஆறாறு மீதில் ஞானோபதேசம் அருள்வாயே.
(விராலிமலைத் திருப்புகழ் )
ஈசனுக்கு ப்ரணவப் பொருளைச்சொன்ன முருகனிடம், வேதம் ஓதி அருள் பெற வேண்டும் என்கிறார் ! என்ன நயமான இடம்!
மதுமாலைப் பதம் = தேன் நிரம்பிய மலர்களால் ஆன மாலை அணிந்த பாதம்.
சுருதி யாயிய லாயியல் நீடிய
தொகுதி யாய்வெகு வாய்வெகு பாஷைகொள்
தொடர்பு மாயடி யாய்நடு வாய்மிகு துணையாய்மேல்
ஶ்ருதியாய் இயலாய் இயல் நீடிய
தொகுதியாய் வெகுவாய் வெகுபாஷை கொள்
தொடர்புமாய் அடியாய் நடுவாய் மிகு துணையாய் மேல்
துறவு மாயற மாய்நெறி யாய்மிகு
விரிவு மாய்விளை வாயருள் ஞானிகள்
சுகமு மாய்முகி லாய்மழை யாயெழு சுடர்வீசும்
துறவுமாய் அறமாய் நெறியாய் மிகு
விரிவுமாய் விளையாய் அருள் ஞானிகள்
சுகமுமாய் முகிலாய் மழையாய் எழு சுடர்வீசும்
பருதி யாய்மதி யாய்நிறை தாரகை
பலவு மாய்வெளி யாயொளி யாயெழு
பகலி ராவிலை யாய்நிலை யாய்மிகு பரமாகும்
பருதியாய் மதியாய் நிறை தாரகை
பலவுமாய் வெளியாய் ஒளியாய் எழும்
பகல் இரவு அலையாய் நிலையாய் மிகு பரமாகும்
பரம மாயையி னேர்மையை யாவரு
மறியொ ணாததை நீகுரு வாயிது
பகரு மாறுசெய் தாய்முதல் நாளுறு பயனோதான்
பரம மாயையின் நேர்மையை யாவரும்
அறியொணாததை நீ குருவாய் இது
பகருமாறு செய்தாய் முதல் நாள் உறு பயனோதான்.
கருது மாறிரு தோள்மயில் வேலிவை
கருதொ ணாவகை யோரர சாய்வரு
கவுணி யோர்குல வேதிய னாயுமை கனபாரக்
கருதும் ஆறு இரு தோள் மயில் வேல் இவை
கருதொணாவகை ஓர் அரசாய் வரும்
கவுணியோர் குல வேதியனாய் உமை கனபாரக்
களப பூண்முலை யூறிய பாலுணு
மதலை யாய்மிகு பாடலின் மீறிய
கவிஞ னாய்விளை யாடிடம் வாதிகள் கழுவேறக்
களப பூண்முலை ஊறிய பால் உண்ணும்
மதலையாய் மிகு பாடலின் மீறிய
கவிஞனாய் விளையாடு இடம் வாதிகள் கழுவேற
குருதி யாறெழ வீதியெ லாமலர்
நிறைவ தாய்விட நீறிட வேசெய்து
கொடிய மாறன்மெய் கூனிமி ராமுனை குலையாவான்
குறுதி ஆறு எழ வீதியெலாம் மலர்
நிறைவதாய் விட நீறிடவே செய்து
கொடிய மாறன் மெய் கூன் நிமிரா முனை குலையா வான்
குடிபு கீரென மாமது ராபுரி
யியலை யாரண வூரென நேர்செய்து
குடசை மாநகர் வாழ்வுற மேவிய பெருமாளே
குடி புகீர் என மாமதுரா புரி
இயலை ஆரண ஊர் என் நேர் செய்து
குடசை மா நகர் வாழ்வுற மேவிய பெருமாளே.
மாயையின் வலிமை, அதை வெல்லும் வழி
இது ஓர் அற்புதமான பாடல். இரு அரிய விஷயங்களைச் சொல்கிறது. இரண்டும் அருணகிரிநாதரின் விசேஷத் தன்மையை விளக்கும்.
இந்த உலகம் எப்படிப்பட்டது? இதன் உண்மையைக் கண்டுகொள்வது எளிதல்ல. எதுவும் நமக்குப் பூராவும் தெரிவதில்லை, சரியாகப் புரிவதில்லை! பெரியவர்கள் 'மாயை' என்ற ஒரே வார்த்தையில் இந்த ப்ரபஞ்சத்தையே அடக்கிவிடுகிறார்கள். ஆனால் நாம் அதை வைத்தும் மண்டையை உடைத்துக்கொள்கிறோம்!
இங்கு அருணகிரிநாதர் சொல்கிறார் :
வேதமாய், இயல் தமிழாய் , அதன் மிகுந்துள்ள பகுதியாய், பலவுமாய், அனேகம் பாஷைகளின் சம்பந்தம் உடையதாய், அடிப்படையாய், நடுவாய், மிக்க துணையாய், பின்னும்
எல்லவற்றையும் விட்ட நிலையுமாய், தர்மமாய், நல்லொழுக்க வழியாய், மிகுந்த விரிவு உடையதாய், விளைவுப் பொருளாய், அருள் நிறைந்த ஞானிகள் அனுபவிக்கும் சுகமாய், மேகமாய், மழையாய், எழுவகை கிரணங்களை வீசும்
சூர்ய மூர்த்தியாய், சந்திரனாய், நிறைந்துள்ள நக்ஷத்திரங்கள் பலவுமாய்,ஆகாய வெளியாய், ஜோதியாய், உண்டாகும் பகலும் இரவும் இல்லாததாய், நிலைத்துள்ள தாய் உள்ள மிக்க மேலான பொருளான -
மஹாமாயையின் உண்மை நிலையை, எவரும் அறிய முடியாததை நீ குருவாக வந்து இதை இவ்வாறு உலகுக்கு எடுத்துச் சொல்லுமாறு எனக்குத் திருவருள் செய்தாய் ! இந்தப் பாக்கியம் நான் முற்பிறப்புக்களில் செய்த தவத்தின் பயனே போலும் !
என்ன அற்புதமான வாக்கு !
வேதத்திலிருந்து தொடங்குகிறார். உயிர்-உலகம்-கடவுள் [ ஜீவன்-ஜகத்-ஈஶ்வரன்] ஆகிய மூன்றின் கூட்டு இந்த ப்ரபஞ்சம். இது தெய்வீக மானது- கடவுளின் சிருஷ்டி, அதனால் அது மனதிற்கும் வாக்கிற்கும் அகப்படாதது. இதை ஒவ்வொருவரும் ஞானத்தால் அனுபவத்தில் உணரவேண்டும்
என்கிறது வேதம். உலகம் என்று ஒன்று இருக்கிறது ஆனால் அதில் எதுவும் நிலையாக இல்லை. எதுவும் பிடிபடவில்லை.
இந்தக் குழப்பத்தை நீக்குவது குருவின் செயல். ஆனால் மனித குருமார்களும் இந்தப் பரம மாயையை விளக்கவோ விலக்கவோ சக்தியற்றவர்களாக இருக்கிறார்கள். ஸ்ரீ பகவான் கீதையில் சொல்கிறார்:
दैवी ह्येषा गुणमयी मम माया दुरत्यया।
मामेव ये प्रपद्यन्ते मायामेतां तरन्ति ते।।7.14।।
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யன்தே மாயாமேதாம் தரன்தி தே
இந்த தெய்வீகமான, முக்குண வசமான மாயை கடத்தற்கு அரியது. யார் என்னையே எப்பொழுதும் புகலாகக் கொள்கிறார்களோ, அவர்களே இதைக் கடந்து விடுகிறார்கள்.
இங்கு முருகனே குருவாக வந்து இதை அருணகிரிநாதருக்குப் போதித்து விட்டார் !
இங்கு சொன்ன அத்தனை விஷயங்களையும் சுருக்கமாக கந்தரனுபூதியில் சொல்லிவிட்டார் :
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே !
( இதற்கு அருமையான விளக்கம் வாகீச கலாநிதி கி.வா,ஜ அவர்கள் எழுதியிருக்கிறார்.)
குருவாய் வந்து அருளவேண்டும் என்றார். இங்கு அவ்வாறு அருளியதைத் தெரிவிக்கிறார் ! அருணகிரிநாதருக்கு பரமனே குரு- மனித குரு இல்லை !
வெகு பாஷைகொள் தொடர்புமாய் :
உலகில் பல மொழிகள் இருக்கின்றன. அவை தெய்வ சம்பந்தம் உடையவை. மொழிகளும் தம்மிடையே தொடர்புள்ளவை. சொந்த மொழியில் பற்று என்ற பெயரில் பிறமொழிகள் பால் துவேஷத்தை வளர்ப்பது இறை நெறியில் நிற்பவர்கள் செய்யத்தகுந்த செயலல்ல..
இவ்வாறு அருள் பெற்றது முன் நாட்களில் ( கடந்த பிறவிகளில் ) தாம் செய்த நல்வினையின் பயனே என்கிறார் ! சம்பந்தரும் பாடத்தொடங்கியதுமே இது முன்னாளில் செய்த பூஜையின் பலனே என்கிறார் :
ஏடுடைய மலரால் முனை நாள் பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான்.

சம்பந்தராக வந்த முருகன்
அடுத்த நான்கு அடிகளில் முருகன் சம்பந்தராக வந்து மதுரையில் செய்த லீலையைச் சொல்கிறார்.
யாவராலும் மதித்துப் போற்றப்படும் பன்னிரு தோள்கள், மயில், வேல் இவற்றை எவரும் கண்டுகொள்ள இயலாத வகையில்,(மறைத்து) சீகாழிப் பதியில் மறையவர் குலத்தில் தலைவனாய் (சிறந்தவனாய்) வந்து
உமாதேவியாரின் முலையில் ஊறிய பாலை அருந்திய குழந்தையாய், மிக்க பாடல்களைப் பாடுவதில் யாவர்க்கும் மேம்பட்ட கவிஞனாக, திருவிளையாடல்கள் செய்திருந்த சமயத்தில், வீண்வாதுக்கு வந்த சமணர்கள் கழு ஏறவும்,
அவர்கள் ரத்தம் ஆறாகப் பெருகவும், வீதிகளில் எல்லாம் பூமாரி நிரம்பவும், திருநீற்றை யாவரும் இடும்படிச் செய்து, கொடிய, மனம் கோணியிருந்த சமணர் பக்கம் சார்ந்திருந்த பாண்டியனுடைய கூன் பட்ட உடல் நிமிர்ந்து நேராகவும், சமணர்களுடைய பகையை அழித்து,
பொன்னுலகில் உங்கள் ஊருக்குக் குடிபுகுவீர்களாக என, சிறந்த மதுரைப்பட்டணத்தின் நிலையை மாற்றி, வேதபுரி என்னும் படியாக அந்த ஊரை நேர்மையான செந்நெறியில் சேர்ப்பித்து, திருக்குடவாயில் என்னும் பெரிய நகரில் வாழ்வு கொண்டருளும் பெருமாளே !
எத்தகைய விளக்கம்! பகவான் பூமியில் இறங்கி வருவதை யாரும் உணர்வதில்லை ! மூவிரு தோள்களையும்,. வேல் மயிலையும் மறைத்துக் கொண்டார்.
ஒர் அரசாவரு கவுணியோர் குல வேதியன் : சம்பந்தர் வந்து பிறப்பதென்றால் அக்குடி எத்தகையதாக இருக்கவேண்டும் ! கௌண்டின்ய கோத்திரத்தில் , அரசாய் வரு = தலைமையான நிலையில் வரும் வேதியன் என்கிறார் !
பாண்டியன் முதுகு மட்டும் கோணியிருக்க வில்லை; அவன் கோணல் புத்தி படைத்த சமணர்களின் வழியைப் பற்றி இருந்தான்! சம்பந்தர் பாண்டியனின் கூனை நிமிர்த்தினார்; அதே சமயம் ஊரையும் சீர் படுத்தினார். அனைவரும் திருநீறு அணியச் செய்தார். முருகன் தேவர்களுக்கு அவர்களுடைய அமராபுரியை மீட்டுக்கொடுத்தார். இங்கு சம்பந்தராகி மதுரையையே வேதபுரியாக்கி [ மதுராபுரி இயலை ஆரண ஊர் என நேர் செய்து ] அதைப் பொன்னுலகாக்கினார் ! (அல்லது அமரபுரியாக்கினார் =வான் குடி புகீர் என)
வேத நெறி தழைத்தோங்கவும் மிகு சைவத் துறை விளங்கவும் வழிசெய்தார் ! தமிழ் நாட்டின் சரித்திரத்தையே மாற்றினார். எத்தகைய அருமையான வாக்கால் பாடுகிறார் நம் ஸ்வாமிகள் !
இந்த இரு பாடல்களும் முத்தானவை.
No comments:
Post a Comment