59.திருப்புகழ் 53.திருவாவடுதுறை
படம்: thevaaram.org. நன்றி
அரிய புராண ஸ்தலம். கஜாரண்யம் எனவும் இன்னும் வேறு பெயர்களும் உண்டு. ஸ்வாமி மாசிலாமணி ஈஶ்வரர், கோமுக்தீஶ்வரர். அம்பாள் அதுல்ய குசாம்பிகை, ஒப்பிலாமுலையம்பிகை.
மூவர் தேவாரப்பாடலும் பெற்ற தலம். சம்பந்தரின் தந்தை ஒரு யஜ்ஞம் செய்யவதற்குப் பொருள் வேண்டவே, சம்பந்தர் இங்கு பதிகம்பாடி 1000 பொற்காசுகள் பெற்றார். இந்த விஷயத்தை அப்பரும் சொல்லியிருக்கிறார்.
சம்பந்தர்
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை ஆளுமா றீவதொன்றெமக் கில்லையேல்
அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை அரனே.
அப்பர்
மாயிரு ஞால மெல்லா மலரடி வணங்கும் போலும்
பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலும்
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதி மிக்க
உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின்
உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற
கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய்
அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே
சுந்தரர்
கங்கை வார்சடை யாய்கண நாதா
கால காலனே காமனுக் கனலே
பொங்கு மாகடல் விடமிடற் றானே
பூத நாதனே புண்ணியா புனிதா
செங்கண் மால்விடை யாய்தெளி தேனே
தீர்த்த னேதிரு வாவடு துறையுள்
அங்க ணாஎனை அஞ்சல்என் றருளாய்
ஆர்எ னக்குற வமரர்கள் ஏறே
தமிழ்நாட்டுக் கோயில்களிலேயே மிகப்பெரிய நந்தி. தர்மதேவதையே நந்தியாக வந்தது என்பது ஐதீகம்.
படம் : தினமலர்.
இது அருணகிரி நாதர் தரிசித்த 53வது தலம். ஒரு பாடல் இருக்கிறது. பல அரிய விஷயங்களைச் சொல்கிறார்.
சொற்பிழைவ ராம லுனைக்கனக் கத்துதித்து
நிற்பதுவ ராத பவக்கடத் திற்சுழற்றி
சுக்கிலவ தார வழிக்கிணக் கிக்களித்து விலைமாதர்
துப்பிறைய தான இதழ்க்கனிக் குக்கருத்தை
வைத்துமய லாகி மனத்தைவிட் டுக்கடுத்த
துற்சனம காத கரைப்புவிக் குட்டழைத்த நிதிமேவு
கற்பகஇ ராச னெனப்படைக் குப்பெருத்த
அர்ச்சுனந ராதி யெனக்கவிக் குட்பதித்து
கற்றறிவி னாவை யெடுத்தடுத் துப்படித்து மிகையாகக்
கத்திடுமெ யாக வலிக்கலிப் பைத்தொலைத்து
கைப்பொருளி லாமை யெனைக்கலக் கப்படுத்து
கற்பனைவி டாம லலைத்திருக் கச்சலிக்க விடலாமோ
எற்பணிய ராவை மிதித்துவெட் டித்துவைத்து
பற்றியக ராவை யிழுத்துரக் கக்கிழித்து
எட்கரிப டாம லிதத்தபுத் திக்கதிக்கு நிலையோதி
எத்தியப சாசின் முலைக்குடத் தைக்குடித்து
முற்றுயிரி லாம லடக்கிவிட் டுச்சிரித்த
யிற்கணையி ராமர் சுகித்திருக் கச்சினத்த திறல்வீரா
வெற்பெனம தாணி நிறுத்துருக் கிச்சமைத்து
வர்க்கமணி யாக வடித்திருத் தித்தகட்டின்
மெய்க்குலம தாக மலைக்கமுத் தைப்பதித்து வெகுகோடி
விட்கதிர தாக நிகர்த்தொளிக் கச்சிவத்த
ரத்தினப டாக மயிற்பரிக் குத்தரித்து
மிக்கதிரு வாவ டுநற்றுறைக் குட்செழித்த பெருமாளே.
பிழை இல்லாத சொற்களால் உன்னைத் துதிப்பது என்பதே வராமல், பிறவியாகிய காட்டில் சுழன்று,இந்த்ரியம் மூலமாக பிறப்பு எடுக்கின்ற வழியில் சேர்ந்து, அதனால் மகிழ்ந்து,பொதுமாதர்களின் காமவலையில் மயங்கி விழுந்து,பொல்லாதவர்களான, துர்க்குணம் மிகுந்த மஹாகொடியவர்களை 'இந்த பூமியில் செல்வம் மிகுந்த கற்பக விருக்ஷம் நீ ' என்றும்,படையிலே மிகச்சிறந்த அர்ஜுன ராஜன் நீ என்றும் நான் கவிகள் பாடி,கற்று அறிந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து அந்த மனிதர்களை நெருங்கிப்போய் அவர்கள் மீது நான் இயற்றிய கவிதைகளை அளவுக்கு மிஞ்சி உரத்துப் பாடி, எனது பொலிவை இழந்து,கையில் பொருள் இல்லாததால் இவ்வாறு கலக்கமுறும் கற்பனைக் கவிதைகளைப்பாடி, ஓயாமல் அலைச்சல் பட்டு, சலிப்படையும்படி நீ என்னைக் கைவிடலாமோ ?
ஒளி பொருந்திய படமுடைய (காளிங்கன் ) பாம்பின் தலையில் நடனமாடி, மிதித்துத் துகைத்துக் கலக்கி,
கஜேந்திரனைப் பற்றி இழுத்த முதலையை வெளியே இழுத்து பலமாகக் கிழித்தெறிந்து,
அவமதிப்பு பட்ட அந்த கஜேந்திரன் அந்த முதலையின் வாயில் பட்டு அழியாமல், இன்பம் தரக்கூடிய உறுதிப்பொருளை அதற்கு அறிவித்து,
வஞ்சனை எண்ணத்துடன் வந்த பிசாசின் முலையை உறிஞ்சிக் குடித்து, உயிர் போகும்படி அந்தப் பிசாசை அடக்கிச் சிரித்து,(க்ருஷ்ணனாகவும் ),
கூரிய அம்பைக்கொண்ட ராமராகவும் வந்த திருமால் சுகமாக இருக்கும்படி,சூராதியரைக் கோபித்த வலிமையுடைய வீரனே !
மலைபோல் பொன் பதக்கம் ஒன்றை எடை பார்த்து உருக்கி உருவு செய்து, அதில் பலவகையான ரத்தினங்கள் பொறுக்கி அமைத்து, பிரமிக்கும் படிச் செய்து, அதிலே முத்துக்களைப் பதித்து, விண்ணிலுள்ள சூரியன் போல ஒளி வீச, சிவந்த ரத்னப்போர்வை போர்த்தது போன்ற உடலினைக்கொண்ட மயில் வாகனத்தின் மீது அமர்ந்து மிகச்சிறந்த திருவாவடுதுறைப் பதியில் விளங்கும் பெருமாளே !
பிறவித்துன்பம்
எத்தகைய கருத்துக்களைச் சொல்லிக்கொண்டு போகிறார் !
மக்கள் பொதுவாக பிறவித்துன்பத்தைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை. இந்த வாழ்வில் மகிழ்ந்து சிற்றின்பங்களை நாடி, அதற்காகவே பொருள் சேர்க்கின்றனர். பொருள் போதாது போகவே, தம் கல்வித்திறமை யெல்லாம் கொண்டு தகாதவர்களைப் புகழ்ந்து பாடி வீணே உழன்று சலிப்படைகின்றனர். இந்த வரிசையில் தன்னைச் சேர்க்கக்கூடாது என்று வேண்டுகிறார்.
சொற்பிழை இல்லாமல் பாடவேண்டும்
சொல்லில் பிழை இல்லாமல் பாடவேண்டும் என்கிறார். இது இக்காலத்திற்கும் பொருந்தும் சொல்லாகும். கல்வியறிவு மிகுந்துவிட்டதாகச் சொல்லிக்கொள்ளும் தற்காலத்தில், பிழை இல்லாமல் படிப்பவர்கள் /பாடுபவர்கள் அருகியே வருகிறார்கள். " அயில் வேலன் கவியை அன்பால் எழுத்துப் பிழை அறக் கற்கின்றிலீர் " என்று கந்தரலங்காரத்திலும் சொன்னார். பள்ளி, கல்லூரிகள் மலிந்துவிட்ட இக்காலத்தில் தமிழ்ச் செய்யுளை சீர் கெடாமல் வாசிப்பவர்கள் அனேகமாக இல்லையென்றே சொல்லலாம். ஏறத்தாழ எழுத்துக்கூட்டிப் படிக்கும் நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள் ! உச்சரிப்பும் சரியாக இருப்பதில்லை.
பாகவத வரலாறுகள்
இங்கே அரா ( காளிங்கன் பாம்பு ) , கரா (முதலை ), கரி (கஜேந்திரனாகிய யானை ), பசாசு ( பேய் முலையாகிய பூதனை ) என்று பாகவத நிகழ்ச்சிகளை வெகு அழகாகச் சொல்கிறார்.
அழகிய மயில்
கடைசி இரண்டு அடிகளில் பக்கரை விசித்ரமணி பொற்கலணை யிட்ட நடைப் பக்ஷியாகிய மயிலை அருமையாக வர்ணிக்கிறார். பல இடங்களில் மயிலைப்பாடி இருக்கிறார், மயில் விருத்தம் என்றே அற்புதமாகப் பாடி இருக்கிறார். மாதிரிக்கு ஒரு பாடல்:
யுககோடி முடிவின் மண் டியசண்ட மாருதம்
உதித்ததென் றயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர்அண் டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்
வேலைசுவ றச்சுரர் நடுக்கங் கொளச்சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகன்உமை குமரன் அறு முகன்நடவு விகடதட
மூரிக் கலாப மயிலே.
இங்கும் திருமாலின் பெருமையைச் சொல்கிறார் !
அருமையான பாடல் !
No comments:
Post a Comment