52. திருப்புகழ் 46.வேதாரண்யம்.
பா.ஜம்புலிங்கம். சொந்த முயற்சி
CC BY-SA 4. Creativecommons via Wikimedia Commons..
அருணகிரிநாதர் அடுத்து வந்து பாடிய 45வது தலம் வேதாரண்யம் என்னும் திருமறைக்காடு, மிகவும் புகழ் பெற்ற புராதன ஸ்தலம். நான்கு வேதங்களும் மனித உருவில் சிவனை வழிபட்ட ஸ்தலம். ராவணனைக்கொன்ற வீரஹத்தி பாவம் தீர ஸ்ரீ ராமர் இங்குவந்து ஸ்வாமியை வழிபட்டார். ஆதி சேது என்ற பெயரும் உண்டு. வெகுகாலம் இக்கோயிலின் மூலக்கதவு மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பர் ஸ்வாமிகள் பதிகம் பாடி கதவைத் திறந்தார் ; சம்பந்தர் பதிகம் பாடி கதவை மூடினார் ! மூவரும் பாடிய அரிய தலங்களில் இதுவும் ஒன்று.
ஸ்வாமி பெயர் வேதாரண்யேஶ்வரர், திருமறைக்காடர்.
அம்பாள் பெயர் வேத நாயகி, யாழைப்பழித்த மென்பொழியம்மை
சம்பந்தர்
சதுரம் மறைதான் துதி செய்து வணங்கும்
மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தா
இதுநன் கிறைவைத் தருள்செய் கவெனக்குன்
கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடு செய் மாமறைக்காடா
உலகே ழுடையாய் கடைதோறு முன்னென்கொல்
தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
இந்தத் தலத்தில் இருக்கும்போது தான் மதுரைக்கு வரும்படி அழைப்பு வந்தது. அப்போது உடன் இருந்த அப்பர், நாளும் கோளும் சரியில்லை என்று சொல்ல, சம்பந்தர் கோளறு பதிகம் பாடினார்.
வேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே
ஆசறுநல்லநல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
அப்பர்
பண்ணின் நேர்மொழி யாளுமை பங்கரோ
மண்ணி னார்வலஞ் செய்ம்மறைக் காடரோ
கண்ணி னாலுமைக் காணக் கதவினைத்
திண்ண மாகத் திறந்தருள் செய்ம்மினே
தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் சூளா மணிதான் கண்டாய்
காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே
சுந்தரர்
யாழைப்பழித் தன்னமொழி
மங்கைஒரு பங்கன்
பேழைச்சடை முடிமேற்பிறை
வைத்தான்இடம் பேணில்
தாழைப்பொழி லூடேசென்று
பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்
குண்ணும்மறைக் காடே
Wikimapia
இந்த அரிய தலத்தில் அருணகிரிநாதர் பாடிய மூன்று முழுப்பாடல்களும் ஒரு பாட்டின் சில வரிகளும் கிடைத்திருக்கின்றன.
சூழும்வி னைக்கட் டுன்பநெ டும்பிணி கழிகாமஞ்
சோரமி தற்குச் சிந்தைநி னைந்துறு துணையாதே
ஏழையெ னித்துக் கங்களு டன்தின முழல்வேனோ
ஏதம கற்றிச் செம்பத சிந்தனை தருவாயே
ஆழிய டைத்துத் தங்கையி லங்கையை யெழுநாளே
ஆண்மைசெ லுத்திக் கொண்டக ரும்புயல் மருகோனே
வேழமு கற்கு தம்பியெ னுந்திரு முருகோனே
வேதவ னத்திற் சங்கரர் தந்தருள் பெருமாளே.
சூழும் வினைகள் துன்பம் நெடும்பிணி கழி காமம்
சோரம் இதற்குச் சிந்தை நினைந்து உறு துணை யாதே
ஏழை என் இத் துக்கங்களுடன் தினம் உழல்வேனோ
ஏதம் அகற்றிச் செம்பத சிந்தனை தருவாயே
ஆழி அடைத்துத் தன் கையில் லங்கையை எழு நாளே
ஆண்மை செலுத்திக் கொண்ட கரும்புயல் மருகோனே
வேழ முகற்குத் தம்பி எனும் திரு முருகோனே
வேத வனத்தில் சங்கரர் தந்தருள் பெருமாளே
என்று இப்படிப் பதம் பிரித்துக் கொண்டால் அர்த்தம் எளிதில் விளங்கும்.
பாலை வனத்தில்ந டந்து நீல அரக்கியை வென்று
பார மலைக்குள கன்று கணையாலேழ்
பார மரத்திரள் மங்க வாலி யுரத்தையி டந்து
பால்வ ருணத்தலை வன்சொல் வழியாலே
வேலை யடைத்துவ ரங்கள் சாடி யரக்கரி லங்கை
வீட ணருக்கருள் கொண்டல் மருகோனே
மேவு திருத்தணி செந்தில் நீள்பழ நிக்குளு கந்து
வேத வனத்தில மர்ந்த பெருமாளே.
வால ரவிக்கிர ணங்க ளாமென வுற்றப தங்கள்
மாயை தொலைத்திட வுன்ற னருள்தாராய்
பாலை வனத்தில் நடந்து, கரிய நிறங்கொண்ட அரக்கி (தாடகை)யை வதைத்து, பெரிய சித்ரகூட பர்வதத்தினின்று நீங்கி, அப்பால் சென்று,
அம்புகொண்டு ஏழு மராமரங்களின் கூட்டத்தை அழித்து, வாலியினுடைய மார்பைப் பிளந்து அப்பால் சென்று, வருண ராஜன் சொன்ன வழியின்படி,
சமுத்திரத்தை அணைகட்டி அடைத்து, அரக்கர்கள் சார்ந்திருந்த இடத்தை அழித்து,லங்கை அரசை விபீஷணருக்கு அளித்து, அருள்புரிந்த மேக நிறத்து திருமாலின் மருகனே !
திருத்தணி, திருச்செந்தூர், பெரிய பழனி ஆகிய தலங்களை உகந்து, வேதாரண்யத்தில் வதியும் பெருமாளே !
இளம் சூரியனுடைய கிரணங்கள் போன்று ஒளி வீசும் உம்முடைய திருவடிகள் என்னுடைய அறிவின் மயக்கத்தைத் தொலைக்கும்படி உன் அருளைத் தருவாயாக !
வாலஇ ளப்பி றைதும்பை யாறுக டுக்கை கரந்தை
வாசுகி யைப்பு னைநம்பர் தருசேயே
மாவலி யைச்சி றைமண்ட ஓரடி யொட்டி யளந்து
வாளிப ரப்பி யிலங்கை யரசானோன்
மேல்முடி பத்து மரிந்து தோளிரு பத்து மரிந்து
வீரமி குத்த முகுந்தன் மருகோனே
மேவுதி ருத்த ணிசெந்தில் நீள்பழ நிக்கு ளுகந்து
வேதவ னத்தி லமர்ந்த பெருமாளே.
தேறுத வத்தை யிழந்து திரிவேனோ
பிறைச் சந்திரன், தும்பை, கங்கை, கொன்றை ,கரந்தை ஆகிய மலர்களையும், வாசுகி யாகிய பாம்பையும் அணிந்துள்ள சிவபெருமான் பெற்ற குழந்தையே !
மஹாபலிச் சக்ரவர்த்தி பாதாளத்தில் சிறையில் ஒடுங்கும்படி பேசிய பேச்சு தவறாமல் ஓரடியால் அளந்தும், அம்பை விட்டு,
லங்கை அரசனான ராவணன் தலை பத்தையும் அறுத்தும், அவன் தோள் இருபதையும் வெட்டியும், வீரம் விளங்கி நின்ற திருமாலின் மருகனே !
திருத்தணிகை, திருச்செந்தூர், பெரிய பழனி ஆகிய தலங்களில் விருப்பு கொண்டு, வேதாரண்யத்தில் அமர்ந்தருளும் பெருமாளே !
தேர்ந்து அடையத்தக்க தவத்தை இழந்து திரிவது தகுமோ! !
ராமர் வீரஹத்தி தோஷம் நீங்க வழிபட்ட இடமாதலால், மூன்று பாடல்களிலும் ராமரின் சரித்திரத்தைச் சொல்கிறார். எத்தனை அருமையான வாக்குகளினால் திருமாலின் பெருமையைச் சொல்கிறார் ! இந்த பெருந்தன்மை நம் அடிகளாருக்கே உரியது.
ஏனோ, இங்கு திருத்தணி, செந்தில், பழனி ஆகிய தலங்களையும் நினைக்கிறார்.
காதலுடைத் தாகி யன்று ஆரணியைத்தே நடந்து
கானவர் பொற் பாவை கொங்கை அணைவோனே
கோதில் தமிழ்க் கான கும்ப மாமுனிவர்க்கா மணஞ்செய்
கோல மளித்தாளும் உம்பர் முருகோனே
கோகனத்தான் வணங்கி ..........................
கோடி மறைக் காடமர்ந்த பெருமாளே !
இது கிடைத்துள்ள பாட்டின் ஒரு பகுதி. இங்கு அகஸ்திய முனிவருக்கு சிவபெருமான் இத்தலத்தில் தம் திருமணக் காட்சி அளித்த செய்தியைச் சொல்கிறார். இங்கு கோயிலில் கருவரையின் சுவற்றில் இக்காட்சி சித்திரமாக வரையப்பட்டுள்ளது.
பா.ஜம்புலிங்கம்
பூக்களின் படங்கள் இன்டர்னெட்டிலிருந்து எடுத்தவை. இவற்றைப் பகிர்ந்தவர்களுக்கு நன்றி.
No comments:
Post a Comment