Monday, 16 January 2017

27. திருப்புகழ். 25. வைத்தீச்சுரன் கோயில்


27. திருப்புகழ். 25.வைத்தீச்சுரன் கோயில்.





அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த தலம் (24வது) வைத்தீஶ்வரன் கோயில். இது தேவாரத்தில் புள்ளிருக்கு வேளூர் என வழங்கப்படும். ஸ்வாமி பெயர் வைத்தீஶ்வரன் என்னும் வைத்திய நாதப் பெருமான். அம்பாள் பெயர் தையல்நாயகி. இங்கு முருகனுக்கு விசேஷ சன்னதி. அவருக்கு முத்துக்குமரன் என்னும் திருநாமம். இத்தலம் மிகவும் பிரசித்தமான பரிகாரத்தலமாகத் திகழ்கிறது.

இத்தலத்தைச்  சம்பந்தரும் அப்பரும்  போற்றிப் பாடியிருக்கிறார்கள்.

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்
உள்ளார்ந்த சடைமுடியெம் பெருமானா ருறையுமிடந்
தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்
புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.

திறங்கொண்ட வடியார்மேற் றீவினைநோய் வாராமே
அறங்கொண்டு சிவதன்ம முரைத்தபிரா னமருமிடம்
மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்
புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.





இவை சம்பந்தர் பாடல்கள்.  இதில் முதல்பாடலில் சம்பாதியும் ஜடாயுவும்  பூஜித்த தலம் என்ற செய்தியைச் சொல்கிறார். இப் பறவைகளும் ருக் வேதமும் பூஜித்த தலமாதலால் இதற்கு 'புள்-இருக்கு-வேளூர் ' என்ற பெயர் அமைந்தது. இரண்டாவது பாடலில் ஜடாயு ராவணனுடன் சண்டையிட்ட செய்தியைச் சொல்கிறார். இங்கு வழிபட்டால் தீவினையினால் வரும் நோய் வராது  என்று சொல்கிறார். இதுவே இத்தலத்தின் விசேஷ சக்தியாகும்.





By Thiago Santos (Child Saint Sambandhar)
CC BY-SA 2.0 Creativecommons via Wikimedia Commons.











அப்பர் சுவாமிகள் , இத்தலத்திறைவனை வழிபட இடர்கள் நீங்கும், இன்பம் விளையும் எனப் பாடுகிறார்.







அரும றையனை ஆணொடு பெண்ணனைக்
கருவி டம்மிக வுண்டவெங் கண்டனைப்
புரிவெண் நூலனைப் புள்ளிருக்கு வேளூர்
உருகி நைபவ ருள்ளங் குளிருமே.

தன்னு ருவை யொருவர்க் கறிவொணா
மின்னு ருவனை மேனிவெண் நீற்றனைப்
பொன்னு ருவனைப் புள்ளிருக்கு வேளூர்
என்ன வல்லவர்க் கில்லை யிடர்களே.

இங்கு வந்த நம் அருணகிரிநாத ஸ்வாமிகள் 6 பாடல்கள் பாடுகிறார். பல அரிய செய்திகளைச் சொல்கிறார்.

இங்கு கோயிலில்  சிவன் பெயர் வைத்தியநாதர்.ஆனால் முருகனையே அதே பெயரில் பாடுகிறார் நம் ஸ்வாமிகள்.

உரத்துறை போதத்          தனியான
உனைச் சிறிதோதத்       தெரியாது;
மரத்துறை போலுற்        றடியேனும்
மலத்திருள் மூழ்கிக்      கெடலாமோ;
பரத்துறை சீலத்               தவர்வாழ்வே
பணித்தடி வாழ்வுற்        றருள்வோனே
வரத்துறை நீதற்              கொருசேயே
வயித்திய நாதப்               பெருமாளே

நாம் எத்தனையோ ஜன்மம் எடுத்து துன்பப்பட்டுவிட்டோம். இனி  முருகன் பாதம்  அடைந்து அருள் பெறவேணும் எனப் பாடுகிறார்.

எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
     யெத்தனை கோடி போன ...... தளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகி
     யிப்படி யாவ தேது ...... இனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயை
     சிக்கினி லாயு மாயு ...... மடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோது
     சித்திர ஞான பாத ...... மருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாக
     நிர்த்தம தாடு மாறு ...... முகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணு
     நெட்டிலை சூல பாணி ...... யருள்பாலா

பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறு
     பத்திர பாத நீல ...... மயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு வேளூர்
     பற்றிய மூவர் தேவர் ...... பெருமாளே.



[ எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர்ப் பிறவி அவதாரம் என்று  நாம் எடுத்த எண்ணற்ற பிறவிகளைப் பற்றி அலுத்துக் கொள்கிறார் இன்னொரு இடத்தில்.]

வைத்தீஶ்வரன் கோயிலில் முருகனுக்கு முத்துக்குமார சுவாமி என்பது பெயர். இது எப்படி வந்தது? ஒரு பாடலில் இதைச் சொல்கிறார்.

சேட னுக்கசண் டாள ரக்கர்குல
     மாள அட்டகுன் றேழ லைக்கடல்கள்
          சேர வற்றநின் றாட யிற்கரமி ...... ரறுதோள்மேல்

சேணி லத்தர்பொன் பூவை விட்டிருடி
     யோர்கள் கட்டியம் பாட எட்டரசர்
          சேசெ யொத்தசெந் தாம ரைக்கிழவி ...... புகழ்வேலா

நாட கப்புனங் காவ லுற்றசுக
     மோக னத்திமென் தோளி சித்ரவளி
          நாய கிக்கிதம் பாடி நித்தமணி ...... புனைவோனே


ஞான வெற்புகந் தாடு மத்தர்தையல்
     நாய கிக்குநன் பாக ரக்கணியும்
          நாதர் மெச்சவந் தாடு முத்தமருள் ...... பெருமாளே.

ஞானமாகிய மலையில் உகந்து ஆடுபவர்,  தையல் நாயகியை பாகத்தில் உடையவர், ருத்ராக்ஷ மாலையை அணிந்துள்ள நம் தலைவர்  மெச்ச வந்து விளையாடி முத்தம் தரும் பெருமாளே! முத்தம் தந்ததால் முத்துக் குமாரரானார்!

இங்கு வேளூரில் கோயில் கொண்டுள்ள இறைவன் "வினை தீர்த்த சங்கரர்" எனப் பாடுகிறார். தையல் நாயகியின் அருள் திறத்தையும் பாடுகிறார்.

சூலாள் மாதுமை தூர்த்த சம்பவி
     மாதா ராபகல் காத்த மைந்தனை
          சூடோ டீர்வினை வாட்டி மைந்தரெ ...... னெமையாளுந்

தூயாள் மூவரை நாட்டு மெந்தையர்
     வேளூர் வாழ்வினை தீர்த்த சங்கரர்
          தோய்சா ரூபரொ டேற்றி ருந்தவ ...... ளருள்பாலா

வேலா ஏழ்கடல் வீட்டி வஞ்சக
     மூடார் சூரரை வாட்டி யந்தகன்
          வீடூ டேவிய காத்தி ரம்பரி ...... மயில்வாழ்வே


வேதா நால்தலை சீக்கொ ளும்படி
     கோலா காலம தாட்டு மந்திர
          வேலா மால்மக ளார்க்கி ரங்கிய ...... பெருமாளே.

இங்கு ஸ்வாமிகள்  அம்பாளைப் பாடும் திறம் அற்புதமானது! 

" மாதா ரா பகல் காத்த மைந்தனை சூடோடீர் வினை வாட்டி 
மைந்தரென  எமை யாளும் தூயாள் "

இரவும் பகலும் காத்து அமைந்த அன்னை, நம்மைச் சுட்டு இழுத்துச் செல்கின்ற வினைகளைத் தொலைத்து, குழந்தையைக் காப்பதுபோல் நம்மைக் காத்து  அருளுகின்ற பரிசுத்த தேவதை- என்பது இதன் பொருள். என்ன அற்புதமான வாக்கு!

 நமது உடலுக்கு வரும் வியாதித் துன்பங்களைத் தீர்த்தருள்பவர்  வேளூரில் உள்ள வைத்திய நாதப் பெருமாள். ஆனால்  பிறவியே பெரிய நோய் : பவ ரோகம். இதையல்லவா நீக்கவேண்டும்? இதையும் பாடுகிறார் அருணகிரி நாதர்.

மாலி னாலெ டுத்த கந்தல் சோறி னால்வ ளர்த்த பொந்தி
     மாறி யாடெ டுத்தசி ந்தை ...... யநியாய

மாயை யாலெ டுத்து மங்கி னேனை யாஎ னக்கி ரங்கி
     வாரை யாயி னிப்பி றந்து ...... இறவாமல்

வேலி னால்வி னைக்க ணங்கள் தூள தாஎ ரித்து உன்றன்
     வீடு தாப ரித்த அன்பர் ...... கணமூடே

மேவி யானு னைப்பொல் சிந்தை யாக வேக ளித்து கந்த
     வேளெ யாமெ னப்ப ரிந்து ...... அருள்வாயே


காலி னாலெ னப்ப ரந்த சூரர் மாள வெற்றி கொண்ட
     கால பாநு சத்தி யங்கை ...... முருகோனே

'ஆசையினால் உருவெடுக்கும் கந்தலாகிய இந்த உடல், சோறு கொண்டு வளர்க்கப்படுகிறது. இதில் சதா மாறும் எண்ணங்களைக் கொண்ட மனது  இருக்கிறது. இப்படிப்பட்ட உடலையும் மனதையும் அநியாயமான  உலக மாயையால்  எடுத்து வாடுகிறோம். இனிப் பிறவாமல் இருக்கவேண்டும். பகவான் அதற்கு இரங்கி அருள் செய்யவேண்டும்.  திருக்கை வேலினால் (ஞானத்தினால்) வினைக் கூட்டங்கள்  தூளாக, மோக்ஷமாகிய வீட்டைத் தரவேணும். அன்பு நிறைந்த பக்தர் கூட்டத்தில் சேர்ந்து, பரிசுத்த உள்ளம் பெறவேண்டும்.  கந்தவேளே நமக்கு உற்ற துணை என்று மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.[ அல்லது  வேளே யாம் என்னும் சிவானுபூதி நிலையை அடையவேண்டும்.] காற்றுபோல்  பரவியிருந்த  சூராதியரை ஜயித்து யமன் போன்ற வலிமையையும் சூர்யன் போன்ற பேரொளியையும் உடைய முருகப் பெருமான்  அருள்புரிய வேண்டும் ' என
இவ்வாறு வேண்டுகிறார்  அருணகிரிநாதர்!



No comments:

Post a Comment