Saturday, 21 January 2017

34.திருப்புகழ் 32. கந்தன் குடி


34.திருப்புகழ் 32.கந்தன் குடி



picture: www.penmai.com.Thanks

கந்தன் குடி அருணகிரி நாதர் அடுத்து தரிசித்த 31வது தலம். பேரளம் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து  3 மைல் தூரம். இங்கு ஸ்வாமி விக்ரஹம் புற்றிலிருந்து கிடைத்ததாக ஐதீகம். கந்தனே விரும்பிக் குடிகொண்ட இடம்.

இங்கு தெய்வானை அம்மையார் தவமிருந்தார். அப்போது அவருக்குக் காவலாக ஐராவதத்தையும்  பைரவரையும் இந்த்ரன் அனுப்பிவைத்தான் என்பது ஸ்தல புராணம். அதனால் இங்கு யானையே வாகனமாக அமைந்திருக்கிறது. பைரவருக்கும் தனிச்  சன்னிதி இருக்கிறது. வள்ளி- தெய்வானையுடன்  ஸ்வாமி இருந்தாலும் , தவக்கோலத்தில் இருக்கும்  தெய்வானைக்கும் தனி விக்ரஹம் இருக்கிறது. விஶ்வநாதர்-விஶாலாக்ஷி என்ற பெயரில் சிவன்-அம்பாள் சன்னிதிகளும் இருக்கின்றன.

இங்கு அருணகிரி நாதர் பாடிய ஒரே பாடல் கிடைத்திருக்கிறது. 'கந்தன் குடி' என்ற சந்தத்துடன் பொருந்தும்படியே பாடியிருக்கிறார் !


தந்தந்தன திந்திந்திமி யென்றும்பல சஞ்சங்கொடு
     தஞ்சம்புரி கொஞ்சுஞ்சிறு               மணியாரம்

சந்தந்தொனி கண்டும்புய லங்கன்சிவ னம்பன்பதி
     சம்புந்தொழ நின்றுந்தினம்            விளையாடும்

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி
     கண்டுய்ந்திட அன்றன்பொடு         வருவோனே

கண்டின்கனி சிந்துஞ்சுவை பொங்கும்புனல் தங்குஞ்சுனை
     கந்தன்குடி யின்தங்கிய                   பெருமாளே.


எந்தன்சட லங்கம்பல பங்கம்படு தொந்தங்களை
     யென்றுந்துயர் பொன்றும்படி         யொருநாளே

இன்பந்தரு செம்பொன்கழ லுந்துங்கழல் தந்தும்பினை
     யென்றும்படி பந்தங்கெட                  மயிலேறி

வந்தும்பிர சண்டம்பகி ரண்டம்புவி யெங்குந்திசை
     மண்டும்படி நின்றுஞ்சுட                    ரொளிபோலும்

வஞ்சங்குடி கொண்டுந்திரி நெஞ்சன்துக ளென்றுங்கொளும்
     வண்டன்தமி யன்றன்பவம்                ஒழியாதோ



[எந்தன் சடலம் என்று பாடல் தொடங்கும். இங்கு மாற்றிக் கொடுத்திருக்கிறது.]



தந்தந்தன  திந்திந்திமி என்றும், சஞ் சஞ் என்றும் ஒலிக்கும் சிறிய மணிமாலைகள் அடைக்கலம் அளிக்கிறேன் என்று சொல்வது போல ஒலிக்கின்றன.
மேகநிற உடலை உடைய திருமாலும், சிவனாகிய பெரியோனும், படைப்புத் தலைவனாகிய பிரம்மா ஆகிய மூவரும் தொழ, விளங்கி  நின்று, அடியார் உள்ளத்தில் தினமும் விளையாடுகின்ற-
கந்தனே! குஹனே ! எந்தன் குருவே ! என்று தொழுத அன்பன் நக்கீரனுடைய பாடலைக்கேட்டு அவர்  பிழைத்து உய்யும்படி அன்று அன்புடன் வந்தவனே !
கற்கண்டுபோல் இனிக்கும் பழங்கள் சிந்துவதால் சுவைமிக்க நீர் உள்ள சுனைகள் விளங்கும் கந்தன் குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே !


என்னுடைய உடலின் அங்கங்கள் பல வகை இடர்களினால் படும் தொடர்புகள், என்றும் உள்ள துயரம் ஆகியவை ஒழியும்படியான ஒரு நாள் வாய்க்குமா !
இன்பத்தைத் தரும் செம்பொன்னாலாகிய கழல் என்னும் காலணிகள் பொருந்திய  உன் திருவடிகளைத் தந்து, பின்னர்  எப்போதும் போலப் பாசபந்தங்கள் அழிய நீ மயில்மீது ஏறி -
வீரத்துடன் வெளியே உள்ள அண்டங்கள், பூமி, திசைகள் எங்கும்  நிறையும்படி வந்து பெரும் ஜோதிபோல் தரிசனம் தந்து, அதனால்
வஞ்சகமே குடிகொண்டு திரிகின்ற  நெஞ்சனும் ,குற்றமே என்றும் செய்கின்ற  தீயோனுமாகிய   என்னுடைய  பிறப்பு (ஆகிய நோய் ) ஒழியாதோ?


கந்தன் குடி கோயில் படம் எதுவும் கிடைக்கவில்லை.
இந்தப் படம் "கல்கி " பத்திரிகையில் வந்தது. ஓவியர் 'தநுஸு ' வரைந்தது..
காப்பிரைட் சமாசாரம் தெரியவில்லை. நன்றி.

நக்கீரர்


இப்பாடலில் முக்கியமாக நக்கீரருடைய  வரலாற்றைச் சொல்கிறார்.  நக்கீரரின் கதை பொதுவாக எல்லோருக்கும் தெரிந்ததே. நக்கீரர் சிவனையே பாடும் கொள்கையுடையவர். சிவகுமாரனைப் பாடமாட்டார். ஒரு சமயம் கற்கிமுகி என்ற குதிரை முகமுடைய பெண்பூதத்தினால் அது காத்துவந்த குகையில் அடைக்கப்பட்டார். அங்கு ஏற்கெனவே 999 பேர் இவ்விதம் அடைக்கப்பட்டிருந்தனர்.ஆயிரமாவது நபருக்காகவே பூதம் காத்திருந்தது, நக்கீரர் ஆயிரமாவது ஆளாக வந்தவுடன் அனைவரும் பயந்து வருந்தினர். இனி பூதம் அவர்களை விழுங்கிவிடும். இந்த நிலையில் தாம் முருகனைப் பாடாமலிருந்தது தவறு என்று நக்கீரர் உணர்ந்தார். முருகனைத் துதித்து 'திருமுருகாற்றுப்படை'  பாடினார். முருகன் வந்து பூதத்தைக் கொன்று, குகையை அழித்து அனைவரையும் விடுதலை செய்தார்.

திருமுருகாற்றுப் படைதான் தமிழில்  சங்க இலக்கியத்தில் முதலாவதாக வைத்து எண்ணப்படுகிறது. இதில்தான் முதன் முதலாக ஆறு முக்கிய தலங்களைப் பற்றி வருகிறது. 'கந்தா, குஹனே, எந்தன் குருவே'' என்று  நக்கீரர்  தொழுததாகச் சொல்கிறார். திருமுருகாற்றுப்படையில்   நக்கீரர் தரும் முருக நாம மாலை ரசமானது.

திருமுருகாற்றுப்படையில் முருகன் நாமங்கள்

நெடும்பெருஞ் சிமையத்து நீலப்  பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப 
அறுவர் பயந்த ஆறமர் செல்வ
ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகள் மகனே  மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவில் தானைத் தலைவ
மாலை மார்ப நூலறி புலவ
செருவில் ஒருவ பொருவிறல் மள்ள 
அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை
மங்கையர் கணவ மைந்தர் ஏறே
வெல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ
குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ 
பலர் புகழ் நன்மொழிப் புலவர் ஏறே
அரும் பெறல் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுனர்க்கு ஆர்த்தும் இசைபேராள
அலந்தோர்க்கு அளிக்கும் பொலம்பூண் சேஎய்
மண்டமர் கடந்த நின்வென்றாடு அகலத்துப்
பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேஎள்
பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள்
சூர்மருங்கு அறுத்த மொய்ம்பின்  மதவலி
போர்மிகு  பொருந குரிசில்...........

இவ்வாறு முருகன் அவதாரம் தொடங்கி பலவற்றையும் சொன்னாலும் , இது தான் அறிந்த அளவினதே யாகும், அவன் பெருமையை முழுதும் யாரால் உணர்ந்து சொல்ல முடியும் என்கிறார்!

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது
நின் அளந்து அறிதல் மன்னுயிர்க்கு  அருமை.

அதனால் நாம் முருகன்  தரிசனத்திற்கு வந்து, கைகளைக்குவித்து, அஞ்சலி செய்து, தோத்திரம் பண்ணிக் காலில் விழுந்து கும்பிடவேண்டும்!

காண்தக
முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி....

இது அத்தனையும் விளங்குமாறு.

கந்தன்குக னென்றன்குரு வென்றுந்தொழு மன்பன்கவி

என்று சுருக்கமாகச் சொல்லிவிட்டார் நம் ஸ்வாமிகள் !

முருகன் அடியார்களுக்கு நக்கீரர் வரலாறு மிகவும் பிடித்தமானது. அருணகிரி நாதரும் பல இடங்களில் இதைச் சொல்கிறார்.

மலை முகம் சுமந்த புலவர்  செஞ்சொல் கொண்டு
வழிதிறந்த செங்கை வடிவேலா 

என்று  திருச்செந்தூர் திருப்புகழில் பாடுகிறார்.

எதிரில் புலவர்க்குதவு வெளிமுகடு முட்டவளர்
இவுளிமுகி யைப்பொருத  ராவுத்தன் ஆனவனும்

என்று வேடிச்சி காவலன் வகுப்பில் சொல்கிறார். 

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்கு மொரு
கவிப்புலவன் இசைக்குருகி  வரைக்குகையை
இடித்து வழி காணும்
திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் 

என்று வேல்வகுப்பில் பாடுகிறார்,

இவ்வாறு பல இடங்களில்  நக்கீரரைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

ஒரே ஒரு பாடலானாலும்  ரசமான பாடல்.
 



picture by senthilkumar.Thanks








No comments:

Post a Comment