36.திருப்புகழ் 34.அம்பர்
ardhra.org
அருணகிரிநாதர் அடுத்து தரிசித்த 33வது தலம் அம்பர் என்னும் அம்பர் பெருந்திருக்கோயிலாகும். இதுவும் பேரளம்-பூந்தோட்டம் அருகில் உள்ளது. இது சோமாசிமாற நாயனார் பிறந்த தலமாகும்.
சோமாசி [சோமயாஜி] மாற நாயனார் சோமயாகம் புரிதல்.
ஸ்வாமிபெயர் ப்ரஹ்மபுரீஶர்,அம்பரீஶர், மாரபுரீஶ்வரர். அம்பாள் பெயர் சுகந்த குந்தளாம்பிகை, பூங்குழலம்மை, வண்டமர் பூங்குழலி. ஸ்வாமி ஸ்வயம்புவாகும்.
இக்கோயில் கோச்செங்கட்சோழன் கட்டிய கோயில்களுள் ஒன்று. யானை படியேறாத வண்ணம் கட்டப்பட்டுள்ளது, சம்பந்தர் பாடிய தலம். அவர் பாடலில் கோச்செங்கணான் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
எரிதர அனல்கையில் ஏந்தி எல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.
அழகரை யடிகளை அம்பர் மேவிய நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின் தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.
மாடக்கோயிலின் ஒரு தோற்றம். படத்திற்கு நன்றி.
இங்கு வந்த அருணகிரி நாதர், பிறவித்துன்பம் அறவேண்டும் என்று பாடுகிறார்.ஆதி மண்டலஞ் சேர வும்பரம சோம மண்டலங் கூட வும்பதும வாளன் மண்டலஞ் சார வுஞ்சுழிப டர்ந்ததோகை ஆழி மண்டலந் தாவி யண்டமுத லான மண்டலந் தேடி யொன்றதொழு கான மண்டலஞ் சேட னங்கணயில் கொண்டுலாவிச் சூதர் மண்டலந் தூளெ ழுந்துபொடி யாகி விண்பறந் தோட மண்டியொரு சூரி யன்திரண் டோட கண்டுநகை கொண்டவேலா சோடை கொண்டுளங் கான மங்கைமய லாடி இந்திரன் தேவர் வந்துதொழ சோழ மண்டலஞ் சாரு மம்பர்வளர் தம்பிரானே.
சோதி மந்திரம் போத கம்பரவு ஞான கம்பரந் தேயி ருந்தவெளி தோட லர்ந்தபொன் பூவி ருந்தஇட முங்கொளாமல் சூது பந்தயம் பேசி யஞ்சுவகை சாதி விண்பறிந் தோடு கண்டர்மிகு தோத கம்பரிந் தாடு சிந்துபரி கந்துபாயும்
வீதி மண்டலம் பூண மர்ந்துகழி கோல மண்டிநின் றாடி யின்பவகை வேணு மென்றுகண் சோர ஐம்புலனொ டுங்குபோதில் வேதி யன்புரிந் தேடு கண்டளவி லோடி வெஞ்சுடுங் காட ணைந்துசுட வீழ்கி வெந்துகுந் தீடு மிந்தஇட ரென்றுபோமோ
[சோதி மந்திரம் என்று பாடல் தொடங்கும். இங்கு வரிகளை மாற்றிக் கொடுத்திருக்கிறது.]
சூர்ய மண்டலங்கள் ஒன்று சேரவும். சிறந்த சந்திர மண்டலம் அதனுடன் கூடவும், தாமரையில் அமர்ந்த பிரம்மனின் மண்டலம் அங்கு சேரவும், கண்போன்ற வளைவுகளைக் காட்டும் தோகையுடைய மயில்,கடல் வட்டத்தைக் கடந்து, அங்கங்கே உள்ள அண்டங்களைத் தேடிப் பொருந்தியும், பாதாள உலகில் உள்ள ஆதிசேஷனைக் கொத்தி , உண்டு உலாவவும்,சூர்யர்களின் மண்டலங்கள் பொடியாகி, தூள்கள் விண்ணில் பறந்தோடவும், அவ்வாறு நெருங்கி வருவதைக்கண்டு, ஒவ்வொரு சூரியனும் உருண்டு புரண்டு ஓடுவதைக் கண்டு சிரித்து விளையாடிய வேலனே !
காட்டு மங்கையாம் வள்ளியுடன் மோகத்தில் விளையாடி, இந்த்ராதி தேவர்கள் வந்து தொழ, சோழ மண்டலத்தில் அம்பர் தலத்தில் வாழ்ந்து வீற்றிருக்கும் தம்பிரானே !
யோகத்தால் அடையப்படும் ஜோதி உலகம், உபதேச அனுக்ரஹத்தால் அடையக்கூடிய ஞானாகாசமாகிய பெருவெளி, புண்ணியத்தால் அடையக்கூடிய தேவ உலகங்கள்- ஆகிய இத்தகைய மேலான உலகங்களை அடையும் முயற்சியைக் கொள்ளாமல்-
சூதாட்ட பந்தயங்கள் பேசி, ஐம்புலன்கள் மிக்க பரிவு காட்டுவதுபோல் வஞ்சனையைச் செய்ய, வடவாமுகாக்னி முழுவேகத்துடன் பாய்வதுபோல இன்ப நாட்டத்தில் சிக்கிக்கொண்டு, அவற்றை அனுபவித்து ஒடுங்குகின்ற அந்த நேரத்தில் -
பிரமன் தெரிந்து அனுப்பின சீட்டைப் பார்த்து, உயிர் பிரிந்து ஓட, கொடிய சுடுகாட்டைச் சேர்ந்து, உடலைச் சுட்டெரிக்க, சாம்பலாகச் சிதறிப்போகும் இந்த வருத்தம் என்று ஒழியுமோ !
அம்பர் கோயில் ப்ராகாரம். இந்தப் புராதனக் கோயில்களில் ஒரு தனி சூழ்நிலை
special atmosphere இருக்கிறது.
படம்: ardhra.org.
எப்படிப்பட்ட உலக இன்பமும் ஒரு நாள் முடிவுக்கு வந்தே தீரும்.
இந்த உலகில் நாம் பல விதத்திலும் விஷயங்களை அனுபவிப்பதாகத் தோன்றினாலும்,The boast of heraldry, the pomp of pow'r,And all that beauty, all that wealth e'er gave,Awaits alike th' inevitable hour.The paths of glory lead but to the grave.என்று எழுதினார் ஆங்கிலக் கவி தாமஸ் க்ரே.நடலை வாழ்வுகொண் டென்செய்தீர் நாணிலீர்சுடலை சேர்வது சொற்பிர மாணமேஎன்று கேட்கிறார் அப்பர்.
உண்மையில் எதிலும் நமக்கு பூரண சுதந்திரமோ, அதிகாரமோ இல்லை. ஏதோ பொம்மை
போன்று செயல்படுகிறோம். இதை வேறு ஒரு இடத்தில் சொல்கிறார்:
என்னால் பிறக்கவும் என்னா லிறக்கவும் என்னால் துதிக்கவும் ...... கண்களாலே
என்னா லழைக்கவும் என்னால் நடக்கவும் என்னா லிருக்கவும் ...... பெண்டிர்வீடு
என்னால் சுகிக்கவும் என்னால் முசிக்கவும் என்னால் சலிக்கவும் ...... தொந்தநோயை
என்னா லெரிக்கவும் என்னால் நினைக்கவும் என்னால் தரிக்கவும் ...... இங்குநானார்
கடவுளை நினைப்பது ஒன்றுதான் நம்மால் முடிந்தது. இந்த உடல் மறையும். இந்த உடல் உள்ளபோதே நல்ல கதியைத் தேடவேண்டும் என்று நமது பெரியவர்கள் இடைவிடாது வற்புறுத்துகிறார்கள். அருணகிரி நாதரும் இதையே பல பாடல்களில் சொல்கிறார்.நாட்டு ரோஜா. இதுவே வாசனையுள்ள உண்மையான ரோஜா.thooddam.blogspot.in
No comments:
Post a Comment