Saturday, 28 January 2017

45.திருப்புகழ் 43.நாகபட்டினம்


45.திருப்புகழ் 43. நாகபட்டினம்
படத்திற்கு நன்றி.

கடல் நாகைக் காரோணம் என்ற பெயர்பெற்ற தேவாரத்தலம். மூவரும் பாடிய தலம். புராதன க்ஷேத்ரம். ஸ்வாமி பெயர்  காயாரோகணேஶ்வரர், ஆதிபுராணேஶ்வரர். அம்பாள்  பெயர் நீலாயதாக்ஷி. இது 64 சக்தி  ஸ்தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.  அருணகிரிநாதர் தரிசித்த 42வது தலம் இது.

மூவர் தேவாரம்

சம்பந்தர்

புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி
வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக்
கனையுங் கடனாகைக் காரோ ணத்தானே.


கரையார் கடனாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன்
உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம்

கரையா வுருவாகிக் கலிவா னடைவாரே.

அப்பர்


வடிவுடை மாமலை மங்கைபங் காகங்கை வார்சடையாய்
கடிகமழ்சோலை சுலவு கடனாகைக் காரோணனே
பிடிமதவாரணம் பேணுந் துரகநிற் கப்பெரிய
இடிகுரல் வெள்ளெரு தேறுமி தென்னைகொ லெம்மிறையே.


பாணத் தால்மதின் மூன்று மெரித்தவன்
பூணத் தானர வாமை பொறுத்தவன்
காணத் தானினி யான்கடல் நாகைக்கா

ரோணத் தானென நம்வினை யோயுமே.


பாரார் பரவும் பழனத் தானைப்
    பருப்பதத் தானைப் பைஞ்ஞீலி யானைச்
சீரார் செழும்பவளக் குன்றொப் பானைத்
    திகழுந் திருமுடிமேல் திங்கள் சூடிப்
பேரா யிரமுடைய பெம்மான் தன்னைப்
    பிறர்தன்னைக் காட்சிக் கரியான் தன்னைக்
காரார் கடல்புடைசூழ் அந்தண் நாகைக்
    
    காரோணத் தெஞ்ஞான்றுங் காண லாமே


சுந்தரர்



பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப்
    பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்
செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர்
    செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநாள்  இரங்கீர்
முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை
    யவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறும்
கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும்
   

  கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே
இங்கு அருணகிரிநாதர் 3 பாடல்கள் பாடியிருக்கிறார்.








ஓல மிட்டி ரைத்தெ ழுந்த வேலை வட்ட மிட்ட இந்த
     ஊர்மு கிற்ற ருக்க ளொன்று                மவராரென்

றூம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச மர்த்த ரென்றும்
     ஊன ரைப்ர புக்க ளென்று                  மறியாமற்

கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த
     கோடி யிச்சை செப்பி வம்பி                லுழல்நாயேன்


கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ணிந்து
     கூடு தற்கு முத்தி யென்று                   தருவாயே


வாலை துர்க்கை சக்தி யம்பி லோக கத்தர் பித்தர் பங்கில்
     மாது பெற்றெ டுத்து கந்த                 சிறியோனே

வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த
     வாகை மற்பு யப்ர சண்ட                   மயில்வீரா


ஞால வட்ட முற்ற வுண்டு நாக மெத்தை யிற்று யின்ற
     நார ணற்க ருட்சு ரந்த                         மருகோனே

நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம னைக்க ளைந்த
     நாக பட்டி னத்த மர்ந்த                       பெருமாளே.


ஓலமிட்டு இரைத்தெழுந்த வேலை  வட்டமிட்ட இந்த வூர்
முகில் தருக்கள்  ஒன்றும் அவர் யார் என்று

ஊமரைப் ப்ரசித்த ரென்றும், மூடரைச் சமர்த்த ரென்றும்,
ஊனரைப் ப்ரபுக்களென்றும் அறியாமல்,

கோல முத்தமிழ் பிரபந்த மாலருக்கு உரைத்து
அனன்த கோடி இச்சை செப்பி வம்பில் உழல் நாயேன்.......

என்று இப்படிப் பதங்களைப் பிரித்துக் கொண்டால் அர்த்தம் எளிதில் புரியும்.

[வேலை வட்டமிட்ட ஊர் = கடல் சூழ்ந்த ஊர் ]
நல்ல புலவர்களும் கயவர்களைப் பாடிப்பிழைக்க வேண்டிய நிலை இருந்தது.  இதையே  சிக்கல் தலத்திலும் சொன்னார். இந்த நிலை தனக்கு வரக்கூடாது
என்கிறார்.

இப்படி உழலும் நாயேன்,

கோபத்தை ஒழித்தும், ஆசை எனப்பட்டதையும் ஒழித்தும், உன்னைப் பணிந்து  உன் திருவடியைச் சேரும் முக்தியை என்று அருள்வாய் !


என்றும் இளையவள், துர்க்கை, சக்தி, அம்பிகை, உலக கர்த்தா ஆகிய பித்தராம் சிவபிரானது இடது பாகத்தில் இருக்கும் தேவி பெற்றெடுத்து மகிழ்ந்த சிறியோனே !


கடல் வற்றிப் போக, க்ரவுஞ்சம் தூள்பட, நெடிய வேலைச் செலுத்திய வெற்றி   மயில் வீரனே  ! மற்போருக்குத்  தக்கதான வலிய புஜங்களை உடையவனே !


பூமி மண்டலம் முழுதையும் உண்டு, ஆதிசேஷன் என்னும் பாம்பு மெத்தையில் துயில் கொண்ட நாராயணருக்கு அருள் பாலித்த மருகனே !


நான்கு திக்கிலும் வெற்றி பெற்ற சூரபத்மனை அடக்கி ஒடுக்கிய  பெருமாளே ! நாகப்பட்டினத்தில் அமர்ந்த பெருமாளே !


முக்தி என்று அருள்வாயே !

பகவானை வேண்டிக்கொள்பவர்கள்  முதலில் கோபத்தையும் ஆசையையும் விடவேண்டும். " மாலாசை  கோபம் ஓயாத நாளும் மாயாவிகார  வழி " என்று வேறு ஒரு இடத்தில் சொல்வார். இதை விடவேண்டும்.
 "தடுங்கோள் மனத்தை, விடுங்கோள் வெகுளியை " என்று அலங்காரத்தில் சொல்வார்.

இப்படி இவர் சொல்வதால் இந்த குறைகள் எல்லாம் அருணகிரிநாதருக்கு இருந்தது என்று அர்த்தமில்லை. உலகில் காணும் குறைகளை தங்கள் மீது ஏற்றிச் சொல்வது பெரியோர்களின் முறை.









வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர
     சோடு பொன்பறைத தும்பவிதி யுஞ்சுரரும்
      வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ              டர்ந்தசூரன்

வீற டங்கமுவீகி லுங்கமற நஞ்சுடைய
     ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு
     மேகொ ளுந்தபல்சி ரந்தனையெ றிந்துநட            னங்கொள்வேலா


நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி
     யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி
      ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர்                 தந்தமூல

ஞான மங்கையமு தஞ்சொருபி யென்றனொரு
     தாய ணங்குகுற மங்கையைம ணந்தபுய
     நாகை யம்பதிய மர்ந்துவளர் நம்பர்புகழ்           தம்பிரானே.


  கழலு றுங்கழல்    மறந்திடேனே



வீர காலணி ஒலிக்க,, சங்கு, முரசு, பறை ஆகியவை வரிசையாய் பேரொலி எழுப்ப, ப்ரம்மாவும், தேவர்களும், வேதம் ஓதவல்ல ஞானம் உள்ளவர்களும்  கலந்து ஒலியெழுப்ப,


வெந்து அழிய நெருங்கி வந்த சூரனுடைய கொழுப்பு அடங்க, மேகமும் சூடேற, ஆயிரம் யானையின் பலமுடைய,  விஷத்தைக் கொண்ட ஆதிசேஷனின்  மலைபோன்ற உச்சிகள் வேக,  அசுரர்களின் தலைகளை அறுத்தெரிந்து  நடனம் செய்த வேலனே !


நரசிங்க வடிவம் கொண்டு, கடுமையான ஹிரண்யனை நடுங்கவைத்து நடனம் செய்து,  லங்கையில் வலிமைமிக்க ராவணனுடைய கூட்டம் அடங்கி அழிய, கோதண்டம் என்னும் வில்லை ஏந்திய கரங்களை உடைய  திருமால் பெற்ற -


ஞான மங்கை, அமுத உருவினள், எனது ஒப்பற்ற தாய், தெய்வப்பெண் ஆகிய குறப்பெண்ணை  மணந்த புயத்தை உடையவனே ! நாகப்பட்டினத்தில் அமர்ந்த சிவன் புகழும் தம்பிரானே !


உன் கழலை மறவேன் !

விழுதா தெனவே கருதா துடலை
     வினைசேர் வதுவே              புரிதாக

விருதா வினிலே யுலகா யதமே
     லிடவே மடவார்                   மயலாலே

அழுதா கெடவே அவமா கிடநா
     ளடைவே கழியா                துனையோதி

அலர்தா ளடியே னுறவாய் மருவோ

     ரழியா வரமே                         தருவாயே

தொழுதார் வினைவே ரடியோ டறவே
     துகள்தீர் பரமே                            தருதேவா

சுரர்பூபதியே கருணா லயனே
     சுகிர்தா வடியார்                         பெருவாழ்வே

எழுதா மறைமா முடிவே வடிவே

லிறைவா எனையா                          ளுடையோனே

இறைவா எதுதா வதுதா தனையே
     இணைநா கையில்வாழ்  பெருமாளே.


விழு தாது எனவே கருதாது உடலை  வினை  சேர்வதுவே புரிதாக
விருதாவினிலே
உலகாயதமேலிடவே  மடவார் மயலாலே
அழுது ஆ கெடவே அவமாகிட நாளடைவே கழியாது உனை ஓதி,
அலர்தாள் அடியேன் உறவாய்  மருவோர்  அழியா வரமே தருவாயே !

அரிய கருத்துக்களை இங்கே சொல்கிறார்.
இந்த உடல் வினைவசப்பட்டு  விதியால் வருவது - தெய்வச்செயலாய் வருவது. இதை தாது விழுவதால் வருவது என்கிறார். இது தான் ப்ராரப்தம். [ விதி காணும் உடம்பு ]. இதைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் வினைகள் செய்து கர்மாவைச் சேர்த்துக் கொள்கிறோம். [ ப்ராரப்தத்தைக் கழிக்கும் போதே, புதிய ஆகாமி கர்மாவை  சம்பாதித்துக் கொள்கிறோம்.] வாழ்வை வீணடிக்கிறோம்.

உலகாயதம் போன்ற கருத்துக்கள் இதற்கு தூபமிடுகின்றன. உலகாயதமாவது, நாம் காணும் இந்த உலகமே நிஜம் அதனால்  தேகமே ஆத்மா, போகமே மோக்ஷம் என்னும் கருத்து. இதனால் உலக மயல்களைத் தேடிக்கெட்டு வாழ் நாள் வீணாகப் போகாமல், இறைவனைத் துதித்து, அவன் பாதமே உற்ற உறவாகக் கருதி, அதைக் கூட்டிவைக்கும்  ஒப்பற்றதும் அழியாததுமான வரமே வேண்டும்.

தொழுகின்ற அடியார்களுடைய வினையின் வேர் அடியோடு அற்றுப்போக, குற்றமில்லாத மேலான பதவியையே தருகின்ற தேவனே !


தேவர்களுக்கு அரசே ! கருணையின் இருப்பிடமே ! புண்ணியனே ! அடியார்களின் பெருவாழ்வே !


வேதத்தின் சிறந்த முடிவுப் பொருளே ! கூரிய வேலை ஏந்தும் இறைவனே ! என்னை  ஆட்கொண்டவனே !


ஆண்டவனே !  எது தா அது தா !
நீ எதைக்கொடுக்க வேண்டுமென்று நினைக்கிறாயோ  அதைக் கொடுத்தருள்வாய்  !
தனக்குத் தானே இணையாக  நாகப்பட்டினத்தில் வாழ்கின்ற பெருமாளே !

இது மிக உயர்ந்த நிலையில் இருந்து பாடியது.
முதலில் ஒரு வரம் கேட்டார். இங்கு எனக்கு என்று எதுவும் இல்லை; நீ கொடுப்பதைக்கொடு என்கிறார் !

இகபர சௌபாக்யம் அருள்வாயே, அடியவர் இச்சையில் எவை எவை உற்றன அவை தருவித்தருள் பெருமாளே என்றெல்லாம் பாடுவார், ஆனால் அவருக்காக எதுவும் தேவையில்லை. நீ கொடுப்பதைக் கொடு என்கிறார்!

இது ஞானிகளின் நிலை. வேண்டத் தக்கது அறிவோய் நீ என்பார் மாணிக்கவாசகர்.

நமக்கு என்ன கேட்பது என்று தெரியாது. கண்டதையும் கேட்டு சிக்கலில் மாட்டிக்கொள்வோம். இதையே புராணத்தில் பார்க்கிறோம். அதனால்  ஸ்ரீ த்யாகராஜஸ்வாமிகள் சொல்வார் : "ராமா, வரம் கேள் என்று சொல்லி என்னை வஞ்சனை செய்வது நியாயமா ?  [வராலெந்துகொம்மனி நாயந்து வஞ்சன சேயுட ஞாயமா ?] என்னால் வரம் கேட்க முடியாது.

ஶ்யாமா ஶாஸ்திரிகள் சொல்கிறார்:
"பிரான வராலீச்சி ப்ரோவு"  வரங்களைக் கொடு, ஆனால் அதனால் கெட்டுப் போகாமல் காப்பாற்று ! Built-in Safety Valve !

ஆனால் இங்கு சுந்தரர் அவருக்கே உரிய ஸ்வாதீனத்துடன் என்னென்ன கேட்கிறார் பாருங்கள் !

இப்படி அருமையான பாடல்கள் !



நன்றி: தினமலர்
  

No comments:

Post a Comment