Monday, 23 January 2017

38.திருப்புகழ் 36. திருநள்ளாறு


38.திருப்புகழ் 36.திருநள்ளாறு



திருநள்ளாறு - இங்குள்ள  சனிபகவான் கோயிலினால் இன்று நாடுமுழுவதிலும் ப்ரபலமாகிவிட்ட இடம். ஆனால் இது அரிய சிவஸ்தலம். மூவராலும் தேவாரப் பாடல் பெற்ற தலம். சம்பந்தர் சரித்திரத்துடன் நீங்காத சம்பந்தம் பெற்ற தலம். சம்பந்தர் மதுரையில் சமணர்களுடன் அனல் வாதம் புரிந்தபொழுது, இங்குள்ள அம்பாள்  போகமார்த்த பூண்முலையாள் என்ற பெயருள்ள பாடல்கொண்ட பதிகம்தான்  தீயில் கருகாது இருந்தது! அதனால் இதற்கு "பச்சைப் பதிகம்" என்ற பெயர் வந்தது. இங்கு ஸ்வாமி பெயர்  தர்பாரண்யேஶ்வரர். அம்பாளுக்கு பிராணாம்பிகை என்ற நாமமும் உண்டு. இது அருணகிரிநாதர் தரிசித்த 35வது தலம்.

தேவாரப் பாடல்கள்
சம்பந்தர்

போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண வாடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே.




இன்பத்துக்கு நிலைக்களனாயுள்ளனவும் அணிகள் பொருந்தியனவுமான தனங்களை உடைய உமையம்மையைத் தன் அழகிய திருமேனியின் இடப்பாகமாக  இருக்கச் செய்தவனும், பசிய கண்களையும் வெள்ளை நிறத்தையும் உடைய எருதைத் தனது ஊர்தியாகக் கொண்ட தலைவனும், மேலானவனும், திருமேனியின் மேல்  தோலாடை போர்த்தவனும், இடையில் கட்டிய கோவண ஆடையின் மேல் நாகத்தைக் கச்சாக அணிந்தவனுமான நம் பெருமான் எழுந்தருளி இருக்கும் தலம் திருநள்ளாறு ஆகும்.
[இத்தலத்துப் பதிகத்தை ஓதுவாருக்கு ப்ராரப்த கர்மத்தின் துன்பம் குறையும் என்பது நம்பிக்கை.]


பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக் காடிடம் பற்றிநின்று
நாடக மாடும்நள் ளாறுடைய நம்பெரு மானிது வென்கொல்சொல்லாய்
சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவ ரொடுந்தொழு தேத்திவாழ்த்த
ஆடகமாடம் நெருங்குகூடல் ஆலவா யின்க ணமர்ந்தவாறே.


(இந்தப் பாடலில் நள்ளாறும் மதுரையும் சேர்ந்தே வருகிறது.)

[முதல் திருமுறை,]

ஏடுமலி கொன்றையர விந்துவிள வன்னி
மாடவல செஞ்சடையெ மைந்தனிட மென்பர்
கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னை
நாடுமலி வாசமது வீசியநள் ளாறே.


[இரண்டாம் திருமுறை]



தளிரிள வளரொளி தனதெழி றருதிகழ் மலைமகள்
குளிரிள வளரொளி வனமுலை யிணையவை குலவலின்
நளிரிள வளரொளி மருவுநள் ளாறர்தந் நாமமே
மிளிரிள வளரெரி யிடிலிவை பழுதிலை மெய்ம்மையே.

[மூன்றாம் திருமுறை]

அப்பர்


உள்ளா றாததோர் புண்டரி கத்திரள்
தெள்ளா றாச்சிவ சோதித் திரளினைக்
கள்ளா றாதபொற் கொன்றை கமழ்சடை

நள்ளா றாவென நம்வினை நாசமே.
[5ம் திருமுறை]
  
ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று
    அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
    சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை

மாதிமைய மாதொருகூ றாயி னானை
    மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
    நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே


[6ம் திருமுறை]

சுந்தரர்


செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக்
    கரிய கண்டனை மாலயன் காணாச்
சம்பு வைத்தழல் அங்கையி னானைச்
    சாம வேதனைத் தன்னொப்பி லானைக்
கும்ப மாகரி யின்னுரி யானைக்
    கோவின் மேல்வருங் கோவினை எங்கள்
நம்ப னைநள் ளாறனை அமுதை
    நாயி னேன்மறந் தென்நினைக் கேனே



[7ம் திருமுறை]


எத்தகைய அருமையான பாடல்கள் !




இங்கு வந்த நம் ஸ்வாமிகளுக்கு தன் நாதனாகிய  சம்பந்தர்  நிகழ்த்திய அனல் வாதம் நினைவுக்கு வருகிறது. அங்கு அவர்  தீயில் இட்ட ஏடு கருகாமல் "பச்சென்று" இருந்ததல்லவா! அந்தப் பதிகம் அம்பாள் நாமத்துடனல்லவா தொடங்கியது?  ! இதை வைத்தே பாடத்தொடங்குகிறார். !  அம்பாளின் துதியாகவே  அருமை வாக்கு வருகிறது.


பச்சை யொண்கிரி போலிரு மாதன
     முற்றி தம்பொறி சேர்குழல் வாளயில்
          பற்று புண்டரி காமென ஏய்கயல்            விழிஞான

பத்தி வெண்டர ளாமெனும் வாணகை
     வித்ரு மஞ்சிலை போல்நுத லாரிதழ்
          பத்ம செண்பக மாமநு பூதியி                   னழகாளென்


றிச்சை யந்தரி பார்வதி மோகினி
     தத்தை பொன்கவி னாலிலை போல்வயி
          றிற்ப சுங்கிளி யானமி னூலிடை           யபிராமி

எக்கு லங்குடி லோடுல கியாவையு
     மிற்ப திந்திரு நாழிநெ லாலற
          மெப்பொ தும்பகிர் வாள்கும ராஎன           வுருகேனோ

கச்சை யுந்திரு வாளுமி ராறுடை
     பொற்பு யங்களும் வேலுமி ராறுள
          கட்சி வங்கம லாமுக மாறுள                     முருகோனே

கற்ப கந்திரு நாடுயர் வாழ்வுற
     சித்தர் விஞ்சையர் மாகர்ச பாசென
          கட்ட வெங்கொடு சூர்கிளை வேரற          விடும்வேலா


நச்சு வெண்பட மீதணை வார்முகில்
     பச்சை வண்புய னார்கரு டாசனர்
          நற்க ரந்தநு கோல்வளை நேமியர்            மருகோனே

நற்பு னந்தனில் வாழ்வளி நாயகி
     யிச்சை கொண்டொரு வாரண மாதொடு
          நத்தி வந்துந ளாறுறை தேவர்கள்             பெருமாளே.


பச்சையானதும் ஒளிபொருந்தியதுமான இரு பெரிய மார்பகங்கள், வண்டுகள் மொய்த்து இன்பம் நுகரும் கூந்தல், ஒளிபொருந்திய வேலையும், தாமரையையும், மீனையும் ஒத்த கண்கள்,
வரிசையாக உள்ள வெண்முத்துக்களைப்போன்ற ஞானஒளிவீசும் பற்கள், வில்லைப் போன்ற நெற்றி, பவளத்தையும், தாமரையையும் செண்பகப் பூவையும் போன்ற இதழ்கள், இவையெல்லாம் கொண்ட ஞான அருட்பிரகாச அழகி எனப்படுபவள்,
இச்சையல்லாம் பூர்த்திசெய்யும் பராகாச வடிவினள். பார்வதி, பேரழகி, கிளிபோன்றவள். பொன்னின் அழகுவாய்ந்த ஆலிலை போன்ற வயிற்றினள், இல்லறம் நடத்தும் பசுங்கிளி போன்றவள், மின்னலும் நூலும் போன்ற இடையை உடைய அபிராமி,
எல்லாக் குலத்தாருக்கும், எல்லா உடலுக்கும், உலகங்கள் யாவைக்கும், இருந்த இடத்திலிருந்தே இரண்டு நாழி நெல்கொண்டு, முப்பத்திரண்டு அறங்களையும் எப்போதும் பங்கிட்டு அளிப்பவள்  ஆகிய பார்வதியின் குமரனே என்று கூறி உள்ளம் உருக மாட்டேனா !

இடையில் கச்சை, அழகிய வாள், அழகிய பன்னிரு புஜங்கள், வேல், பன்னிரண்டு கண்கள், மங்களமான, தாமரைபோன்ற ஆறு  திருமுகங்கள்,இவை கொண்ட முருகனே !
கற்பக மரம் உள்ள செல்வம் நிறைந்த தேவர்களின் நாடு உயர்ந்த வாழ்வைப் பெறவும், சித்தர்களும், விஞ்சையர்களும். விண்ணுலகத் தேவர்களும் சபாஷ் என்று மெச்சவும், கஷ்டம் கொடுத்துவந்த மிகக்கொடிய சூரனது சுற்றத்தினர்  யாவரும் வேருடன் விழ வேல் செலுத்தியவனே !
விஷமுள்ள, வெண்ணிறப் படம்கொண்ட ஆதிசேஷன்மீது அணைபவரும், மேக நிறம், பச்சை நிறம் கொண்ட வளமான புஜத்தை உடையவரும், கருடவாஹனம் கொண்டவரும், நல்ல கரத்தில் வில், அம்பு, சங்கு சக்கரம்  ஏந்தியவரின் மருகனே !
நல்ல தினைப்புனத்தில் வாழ்ந்திருந்த வள்ளி நாயகியிடம் காதல் கொண்டவரும், ஒப்பற்ற யானை வளர்த்த தேவசேனையுடன் திருநள்ளாற்றில் விரும்பி வந்து உறையும் தேவர்கள் பெருமாளே ! குமரா என்று உருகமாட்டேனா !

எத்தனை அழகான பாடல் ! முதல் நான்கு வரிகளில் அம்பாளின் வர்ணனை ! பச்சை வண்ணப் பெருமாளையும் நினைவுகூறுகிறார். அருணகிரிநாதரின் அம்பாள் வர்ணனை சாக்தர்களாலும் பாடமுடியாதபடி இருக்கும். வேல் விருத்தத்தில் ஒர் இடம் பாருங்கள்:

கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
   கெளமாரி கமலாசனக்

கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
   கெளரிகா மாக்ஷி சைவ

சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
   த்ரியம்பகி 

 இன்னொரு பாடல்:

ஆல கந்தரி மோடா மோடிகு
     மாரி பிங்கலை நானா தேசிஅ
          மோகி மங்கலை லோகா லோகிஎ ...... வுயிர்பாலும்

ஆன சம்ப்ரமி மாதா மாதவி
     ஆதி யம்பிகை ஞாதா வானவர்
          ஆட மன்றினி லாடா நாடிய           ...... அபிராமி


கால சங்கரி சீலா சீலித்ரி
     சூலி மந்த்ரசு பாஷா பாஷணி
          காள கண்டிக பாலீ மாலினி         ...... கலியாணி

காம தந்திர லீலா லோகினி
     வாம தந்திர நூலாய் வாள்சிவ
          காம சுந்தரி 


[நாலிரண்டிதழாலே ]


இப்படிப் பல இடங்களில் பாடியிருக்கிறார் !

இங்கு ஒரு இடத்தில் " சபாஷ்" என்று வருகிறது. சலாம், ராவுத்தன் ஆகிய சொற்களும் இவர் பாடல்களில் வரும். இது அவர் காலத்தில் முகம்மதிய ஆதிக்கம் தொடங்கிவிட்டது என்பதைக் காட்டுகிறது.



No comments:

Post a Comment