28. திருப்புகழ். 26. மாயூரம்
மாயூரநாதஸ்வாமி கோயில் கோபுரம்.
1920ல் எடுத்த ஃபோட்டோ. P.V.Jagadisa Iyer.
அருணகிரிநாதர் வைத்தீஶ்வரன் கோயிலிலிருந்து கிளாம்பி, குறுக்கை, தமனியப்பதி- பொன்னூர் (அன்னியூர்) ஆகிய இரு தலங்களைத் தரிசித்ததாகத் தெரிகிறது; ஆனால் இங்கு பாடியதாக எதுவும் கிடைக்கவில்லை. இவை வைப்புத் தலமாக வேறு பாடல்களில் குறிப்பிடப்படுகின்றன. அவர் அடுத்து தரிசித்துப் பாடிய தலம் (25 வது) மாயூரம். இன்று மயிலாடுதுறை என வழங்குகிறது.
அம்பாள் மயில் (மயூரம்) உருவில் ஈசனை வழிபட்ட இடமாதலால் இதற்கு மாயூரம் எனப் பெயர் வந்தது. ஸ்வாமி பெயர் மயூரநாதர். ஸ்வயம்பு லிங்கம். அம்பாள் நாமம் அபயப்ரதாம்பிகை, அபயாம்பிகை, அஞ்சல நாயகி, அஞ்சலை என்பன.
பார்வதி மயில் வடிவில் வழிபடும் சிற்பம்
Ssriram mt. Own work. CC BY-SA 4.0
இத்தலத்தைச் சம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள்.
ஊனத்து இருள் நீங்கிட வேண்டில்
ஞானப்பொருள் கொண்டு அடிபேணும்
தேன் ஒத்து இனியான் அமரும் சேர்
வானம் மயிலாடு துறையே.
அஞ்சுவொண் புலனும் அவைசெற்ற
மஞ்சன் மயிலாடு துறையை
நெஞ்சொன்றி நினைந்து எழுவார்மேல்
துஞ்சும் பிணியாயின தானே
என்று சம்பந்தர் முதல் திருமுறையில் பாடுகிறார். இவர் பாடிய பதிகம் மூன்றாம் திருமுறையிலும் இருக்கிறது.[ஏனஎயிறு ஆடு அரவொடு] இதை "மறை ஞான சம்பந்தன் மயிலாடுதுறையைப் புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவார் பொன்னுலகமே" என நிறைவு செய்கிறார் !
அப்பர் பாடிய ஐந்தாம் திருமுறையிலிருந்து இரு பாடல்கள்:
வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்
அஞ்சிறப்பும் பிறப்பும் அறுக்கலாம்
மஞ்சன் மாமயி லாடு துறையுறை
அஞ்சொலாள் உமை பங்கன் அருளிலே.
குறைவி லோம்கொடு மானுட வாழ்க்கையால்
கரைநி லாவிய கண்டனெண் தோளினன்
மறைவ லான்மயி லாடு துறையுறை
இறைவன் நீள்கழல் ஏத்தி இருக்கிலே.
இங்கு வந்த நம் அருணகிரி நாத ஸ்வாமிகள் பாடிய ஒரே திருப்புகழ் தான் கிடைத்திருக்கிறது [ அமுதினை மெத்தச் சொரிந்து] ஆனால் அதனுள் அரிய விஷயங்களைச் சொல்கிறார்.
வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு
மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன்
மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே
மறுவறு கற்பிற் சிறந்த சீதையை
விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன்
வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே
எமதும லத்தைக் களைந்து பாடென
அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய
இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே
எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய
பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய
இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே.
குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே
இங்கு முதல் இரண்டு அடிகளில் ராமாயண வரலாற்றைச் சொல்கிறார்.
தன் வம்சத்தினர் பெருகவும், உலகமெல்லாம் கலக்கம் அடையவும் கொடிய, இழிவான புத்தியுடன் அழிவுதரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த ராவணன்-
மதியாமல், குற்றமற்ற கற்பில் சிறந்த சீதைக்குத் துக்கம் விளைவித்தான். குரங்குகளின் உதவியுடன் அந்த ராவணனுடைய குலத்தை அறுத்து புகழ்கொண்ட திருமாலின் மருகனே!
அருணகிரிநாதர் வாக்கில் வரும் புராண-இதிஹாசச் செய்திகளின் மணமும் மஹிமையும் அலாதியானவை! இங்கு ராமாயணத்தை எவ்வளவு அருமையாகச் சொல்லியிருக்கிறார் !
அடுத்த அடியில் முருகன் தன்னைப் பாடுமாறு அருளிய பேற்றைச் சொல்கிறார்:
என்னுடைய மும்மலங்களையும் நீக்கி, 'பாடுவாயாக' என நீ எனக்கு அருள் செய்தாய். முருகா! அதன்படி அடியேன் உன்னைப் புகழ்ந்து பாட, அன்புடன் பாடிய அப்பாடல்களை நீ மெச்சினாய். பிரியத்துடன் மேலான பேற்றினை எனக்கு அருளினாய்!
அழகிய சங்குகள் நிறைந்து தவழும் காவிரி நதியின் தென் கரையில் விளங்கும் ஒப்பில்லாத ரத்ன மயமான மயிலாடுதுறையில் அமர்ந்த பெருமாளே!
ஒலிக்கும் கழல் அணிந்த உன் திருவடியைப் பற்றிப் புகழ்ந்து, நல்வாழ்வு அடைய நீ அருள்புரிவாயாக !
அருணகிரிநாதரின் கவித்துவம் வெறும் புலமையினால் வந்ததல்ல. அவருடைய பாடும் பணியும் பாணியும் [சந்தப் பாடல்கள் ] முருகனே அருளியது. அந்த நன்றியை மறவாமல் பல பாடல்களில் சொல்கிறார்.
No comments:
Post a Comment